திங்கள், ஜனவரி 24, 2011

அய்யா வழி என்னும் அன்பு வழி

தென் தமிழ்நாட்டின் அன்றைய நிலை
இந்தியத் திருநாட்டிற்கு இயற்கையளித்த நற்கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டப் பகுதிதான் இன்றைய கேரளமும், நமது தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டமும்.  "கடவுள்களின் நாடு" என்று அழைக்கப்படும் பரசுராமரால் தோற்றுவிக்கப் பட்ட இக்கேரளம்தான் சுவாமி விவேகானந்தரால் "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்றும் அழைக்கப் பட்டது. பகுத்தறிவுப் பகலவன் என்று புகழப்படும் பெரியார் அவர்களும் இக்கேரளத்தின் வைக்கம் எனும் இடத்தில் நிகழ்த்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் மூலம் வைக்கம் வீரர் என்னும் பெயரைப் பெற்றார்.
நன்செய்நாடான நம் நாஞ்சில் நாட்டிலும் கேரளத்தின் தாக்கம் இருந்தது. சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டோர் எனக்கருதப்பட்ட அவருணர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்த நேரத்தில்தான் புத்தொளி ஒன்று பிறந்து சமத்துவத்துக்கு வழிகாட்டியது. திரளான மக்கள் கிறித்தவ சமயத்துக்கு மாறுவது மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணி கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில் மதமாற்றத்தை அந்த ஒளி தடுத்து நிறுத்தியது.. நமது தேசப்பிதாவான மகாத்மாகாந்திக்கு முன்னரே அகிம்சை வழியில் ஆன்மீகப்போராட்டத்தையும் அவ்வொளி நிகழ்த்திக் காட்டியது. அந்த ஒளியின் வரலாற்றையும், நம் நன்செய் நாட்டின் அன்றைய நிலை, அவர் ஏற்படுத்திய சமுதாய மறுமலர்ச்சி போன்றவற்றை நாம் இவ்விழையில் தொடர்ந்து காண்போம்...
அச்சமயத்தில் நன்செய் நாடானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அறிவியல் வளர்ச்சியில் அயல்நாடுகள் முன்னேறிக் கொண்டிருந்த அவ்வேளையில் நம் நாடு மிகவும் கேவலமான நிலையில் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகை வருண சாதிகளும், அவர்களுக்கும் கீழோராகக் கருதப்பட்ட அவருணர்கள் என்றழைக்கப் பட்ட சாதியினருமாக சமுதாய அமைப்பு முறை இருந்தது.. ஆதிக்க சாதியினர் பிற சாதியினரை அடக்கித் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அவர்களை சிறுமைப்படுத்தி மிகவும் கேவலமான நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர். தங்கள் இன்னல்களுக்கு ஓர் விடிவெள்ளி என்று தோன்றும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அய்யா வைகுண்டர் உதித்தார். தனது ஆன்மீக சமுதாய சீர்திருத்தப் போராட்டத்தால் கீழ்த்தட்டு மக்களை ஒன்றிணைத்துப் போராடினார். அவரைப் பற்றித்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம். அதற்கு முன்னால் கீழ்ச்சாதியினர் அனுபவித்த இன்னல்களை சிறிது பார்த்து விடலாம்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தன. நம்பூதீரிகள்தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக நாயர்களும், வேளாளர்களும் மற்ற சாதியினரும் இருந்தனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை.
இவர்கள் எல்லோரும் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப் பட்டன. அத்தனையும் கொடூரமானவை. அவற்றுள் சில.
1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் இவர்கள் நடமாடக் கூடாது
2. இவர்கள் காலணி அணியக் கூடாது
3. குடை பிடித்துக் கொள்ளக் கூடாது.
4. வேட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்துக் கொண்டுதான் நடமாட வேண்டும்.
5. உயர்சாதியினரை (சிறு குழந்தைகள் என்றாலும்) சாமி என்றோ, அய்யா என்றோதான் அழைக்க வேண்டும்.
6. இவர்களை உயர் சாதியினர் அடிமைகளாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் கூலி கிடையாது
7. இவர்கள் உயர் சாதியினரிடம் இத்தனை அடி தொலைவில் நின்றுதான் பேசவேண்டும். (சரியான தூரத்தினை விரைவில் சொல்கின்றேன்).
8. புலையர்கள் உயர்சாதியினரைப் பார்ப்பதே குற்றம். பிராமணர்களின் கண்ணில் இவர்கள் பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை. இதனால் அவர்கள் வெளியில் செல்லும் போது சத்தமிட்டுக் கொண்டே செல்லவேண்டும். பிராமணர் வருவதாக பதில் சத்தமிட்டால், மறைந்து கொள்ள வேண்டும்.
9. ஆதிக்க சாதியினரின் கோயில்களுக்குள் இவர்கள் செல்ல அனுமதி இல்லை. (கர்ம வீரர் காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இம்முறை ஒழிக்கப் பட்டது)
10. ஊரின் குளம், கிணறு மற்றும் பொதுச்சாலைகளை இவர்கள் பயன்படுத்தக் கூடாது
11. ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளக் கூடாது. பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக் கூடாது
12. தங்கள் குழந்தைகளுக்கு ஆதிக்க சாதியினர் வைத்துள்ள பெயர்களை வைத்துக் கொள்ள உரிமை இல்லை.
13. பசுமாடு வளர்க்கக் கூடாது
14. பெண்கள் நீர்க்குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும்.
15. பெண்கள் முலை வரி செலுத்த வேண்டும். செலுத்தாதோரின் முலைகள் அறுத்தெரியப் பட்டன.

இன்னும் இது போன்று பல அடக்குமுறைகள் கீழ் சாதியினர் மேல் திணிக்கப் பட்டன. மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாகினர்.  இச்சாதியினருள் சாணார் என்றழைக்கப் பட்ட நாடார் சாதியினர் பனையேறும் தொழில் புரிந்து வந்தனர். இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஏணி, தளைநார் போன்றவற்றிற்கு வரி செலுத்த வேண்டும். வீட்டின் கூரையை மாற்றினால் கூட அதற்கும் வரி செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஆதிக்க சாதியினரின் தெய்வங்களைத் தங்கள் இல்லத்தில் வைத்தும் வணங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது.
ஐவகைத் தொழில் புரிந்து வந்த பஞ்ச கம்மாளர்கள் தாங்கள்தான் உண்மையான பிராமணர்கள் என்று போராடி நீதிமன்ற வழக்கிலும் வென்றுள்ளனர். இவர்கள் தங்கள் இல்லத்துத் திருமணங்களை உயர்சாதியினரைப் போல் நடத்திக் கொள்ளும் உரிமையையும் போராடிப் பெற்றனர். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் இவர்களுக்கு ஓர் இன்னல் காத்திருந்தது. அன்றைய முதலமைச்சராக இருந்த ராஜாஜி இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் "ஆச்சாரி" என்று அடைமொழியை வைத்துக் கொள்வது தவறு என்று அறிவித்தார். இவர்கள் "ஆசாரி" என்றே அழைக்கப் படவேண்டும். ஆச்சாரி என்று அழைக்கப் படக்கூடாது என்றார். இந்த உரிமையையும் அவர்கள் போராடிப் பெற்றனர்.
இப்படி சாதிக்கொடுமை தலை விரித்தாடிய காலத்தில், அடிமைச் சாதியினராகக் கருதப்பட்ட சாணார் (நாடார்) குலத்தில் பொன்னுமாடன் என்பவருக்கும் வெயிலால்  அம்மாளுக்கும் மகனாக கி.பி. 1809ம் ஆண்டில் அய்யா என்று அழைக்கப்படும் வைகுண்டர் பிறந்தார். பொன்னுமாடன் நாடார் ஓர் பெருமாள் பக்தர். ஆதிக்க சக்தியினருக்குத் தெரியாமல் தன் இல்லத்தில் பெருமாளை வணங்கி வந்தார். எனவே பெருமாளின் அருளால் பிறந்த இக்குழந்தைக்கு "முடிசூடும் பெருமாள்" என்று பெயரிட்டார். இது ஆதிக்க சாதியினரால் எதிர்க்கப் பட்டது.  தண்டனைக்குப் பயந்து மகனுக்கு "முத்துக் குட்டி" என்று பெயர்மாற்றம் செய்தார்.
முத்துக் குட்டியும் இளம்பிராயம் முதலே பெருமாளை வணங்கும் பக்தனாக இருந்தார். சமுதாயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சாதிக்கொடுமைகள் அவரை மனம் வருந்தச் செய்தது. சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர அவர் என்ன செய்தார்.? சமுதாயம் மாறியதா? அய்யாவின் வரலாறு என்ன? தொடர்ந்து வரும் நாட்களில் காணலாம். மீண்டும் சந்திப்போம்.

4 கருத்துகள்:

நடைப்பாதையிலே... - மணி சொன்னது…

பெண் மேல் ஆடை அணியக்கூடாது என்று இருந்தது. இது போன்று ஆண் மேலாடை அணியக்கூடாது என்று இருந்ததா.

நடைப்பாதையிலே... - மணி சொன்னது…

பெண் மேல் ஆடை அணியக்கூடாது என்று இருந்தது. இது போன்று ஆண் மேலாடை அணியக்கூடாது என்று இருந்ததா? இருக்கிறதா?

எங்கு என்று சொன்னால் பயனாக இருக்கும்.
த.மணிமாறன்
9941210135
என் எண்ணிற்கு அழைத்து கூறுங்கள். மிக உதவியாக இருக்கும்.

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

ஆண் மேலாடை அணியக்கூடாது என்ற வழக்கம் இன்றும் உள்ளதே நமது கோவில்களில் ஐயா????? (அது பக்தியின் பொருட்டும்... இறைவனுக்கு நாமளிக்கும் மரியாதையின் பொருட்டுமே) ஆனாலும் இச்சம்பவம் நடைபெற்ற நாட்களில் ஆண்களுக்கும் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது..

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

ஆண் மேலாடை அணியக்கூடாது என்ற வழக்கம் இன்றும் உள்ளதே நமது கோவில்களில் ஐயா????? (அது பக்தியின் பொருட்டும்... இறைவனுக்கு நாமளிக்கும் மரியாதையின் பொருட்டுமே) ஆனாலும் இச்சம்பவம் நடைபெற்ற நாட்களில் ஆண்களுக்கும் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது..