திங்கள், ஜூன் 20, 2011

இரவின் மடியில்.......

7.
தென்னகத்துக் காதலர்களின் பேரெதிரி சாதித் தீயில் எங்கள் காதல் எரிந்து சாம்பலாகுமோ என்று அச்சங்கொண்டேன்.
சரி அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று எண்ணி, அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன்...
சொன்னாள்...
தூத்துக்குடி வ.உ.சி தெருவில் இருந்த அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்த போது என்னை மறந்து துள்ளினேன்....
நான் பிறந்ததாகச் சொல்லப் படும் சாதியில் பிறந்திருந்தாள் அவளும்....
என் தந்தையாரும் அவளது தந்தையாரும் ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்தனர்...
சாதியும் நமக்குத் தடை விதிக்கப் போவதில்லை. நம் குடும்பத்தாரும் நம் காதலை ஏற்பார்கள் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்...
மெதுவாக என் தாயார் மூலம் தந்தையாரிடம் பேசி அவள் தந்தையிடம் பேசச் சொன்னேன்...
இருவீட்டாரின் சம்மதமும், ஆசியும் எங்கள் காதலின் அடுத்த அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டது...
வைகாசி விசாகத்திருவிழா முடிந்த பின்னர் செந்தூரான் ஆலயத்தில் வைத்து திருமணம் என்று நிச்சயம் செய்யப் பட்டது..
வள்ளி மணாளனே எங்கள் வாழ்க்கைக்கு வழிகாடியதாக நம்பினோம்...
நாள் நிச்சயம் செய்யப் பட்டது...
முகூர்த்தப் பட்டோலை எழுதப்பட்டது...
திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது..
திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
எங்கள் அக வாழ்க்கைத் துவங்கப் போகும் மகிழ்ச்சியில் கனவில் மிதந்தோம்...

உயிருக்கு உயிரானவள்.... என்
கவிதைக்குக் கருவானவள்....
மாசறு பொன்னும் வலம்புரி முத்தும்
மண் நோக்கும் வடிவானவள்....
நெஞ்சத்தில் இனிக்கின்றவள்...மண
மஞ்சத்தில் மணக்கின்றவள்...
என்றென்றும் எனதானவள்...அவள்
எனக்கென்றென்றும் உறவானவள்..

திரும்பும் திசையெங்கும் திருமணக் கனவுகள்தான்.... கம்பனும் இளங்கோவும் எழுத மறந்த காவியம் எங்கள் காவியம்தான்... கம்பன் நம் காதலைக் கண்டிருந்தால் என்ன காவியம் பாடியிருப்பான்?? சிலம்புக்குப் போட்டியாக சிலம்பாட்டம் ஆடியிருப்ப்பான்...
அலுவல்களுக்கு மத்தியிலும் எங்கள் அகத்தைப் பற்றிய சிந்தனைதான்...
எங்கள் வாழ்வின் பொன்னாளை நோக்கி நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம்...
அந்த நாளும் வந்தது...
மங்களம் தரும் மஞ்சளாடை உடுத்தி, உற்றார் புடைசூழ செந்தூர் பயணித்தோம்....
மங்கையவளும் மஞ்சள் சேலையிலே மங்களம்புக வந்தாள்...
திருச்செந்தூரான் திருமுன்னில் திருமணம்....
மங்கள வாத்தியம் முழங்க, மங்கள நாணை மறையோன் எடுத்துத் தர, மணத்திற்கான முடிச்சுக்களை அவள் கழுத்தில் நான் கட்டினேன்...
அட்சதைகள் தூவி அனைவரும் வாழ்த்தினர்...
பொன்மகளின் பொற்கரம் பற்றி திருக்குமரன் ஆலயம் திருவலம் வந்தோம்.
வசந்த மண்டபத்தில் திருமண விருந்து....
திருமண விருந்து உண்டு பிரகாரம் சுற்றி நடந்தோம்....
அன்றைக்கு எங்களுக்கு அடைக்கலம் தந்த கடற்கரை நோக்கி நடந்தோம்...
கடலரசன் எங்களுக்கு வாழ்த்தலைகள் அனுப்பினான்...
மனமுவந்து அவன் அலைகளை ஏற்றோம்....
அன்றைக்கு எங்களைப் பொறாமையுடன் கண்ட கடலலைகள் இன்றைக்கு இன்சொல் தந்தன...
கடலில் பாதம் நனைத்துக் கரை வந்தோம்...
நண்பர்களின் கேலியலைகளின் மீண்டும் நனைந்தோம்....
இல்வாழ்க்கை இனிதே துவக்கம்.....
பொற்கரங்கள் பற்றி கடற்கரை தாண்டி பிரகார மண்டபத்தில் நடந்து வந்து வாகனம் ஏறி எங்கள் ஊருக்குச் செல்ல யத்தனித்தோம்...
வாகனத்தில் கால் வைத்த நொடி.....

ஞாயிறு, ஜூன் 19, 2011

இரவின் மடியில்.......

6.
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலத்துக்கு
வந்தோம்...இடைப்பட்ட நாட்களில் நடந்தவை இன்னமும் அழியாத காவியங்கள்....
என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தது.. அவளோ இன்னமும் படித்துக் கொண்டிருந்தாள்...
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் காவல்துறைப் பணிக்குச் செல்லவேண்டும் என்ற
என் பேராவலை அவளுக்குச் சொன்னேன்...
"காவலனே என் காதலனாகிவிடில் பெருமையே எனக்கு" என்றுரைத்தாள்..
"கவிஞன் காவலன் ஆவது காலம் செய்த திருக்கோலம்" என்றுரைத்தாள்..
காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்காக என்னைத் தயார் செய்து
கொண்டிருந்தேன்..
ஊக்கமளித்து உற்சாகப் படுத்தினாள்...
தினமும் அவளது திவ்ய திருக்காட்சி கிடைக்கவில்லை...
ஆனால் கனவில் தினமும் என்னைக் களிப்பூட்டிக் கொண்டிருந்தாள்...
மாதம் ஒருமுறை சந்திப்பு....
வாரம் ஒருமுறை கடிதப் பகிர்வு...
இவ்வாறாக எங்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்...
முதல்நிலைத் தேர்வில் தேறினேன்...
அகம் மகிழ்ந்தாள்... தன் தோழிகளிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்...
இடையில் ஓர் நாள் சந்திப்பில் நிகழ்ந்தது...
அன்றைக்குச் செந்தூரான் ஆலயம் சென்று வரலாம் என்று தீர்மானித்தோம்...
பேருந்திலிருந்து இறங்கி இளவெயிலில் அவளோடு நடந்த சுகம் இன்றைக்கும்
நெஞ்சத்தில் இனிக்கின்றது...
செந்தூரான் சேவடி பணிந்து எங்கள் காதல் வெல்ல வழி செய் என்று வேண்டினோம்..
கந்தனின் காதலை வெல்ல வைத்த வள்ளி குகை கண்டு மெய்சிலிர்த்தோம்... மெல்ல
நகைத்தோம்...
கடற்கரை மணலில் கால்புதைத்து நடந்தோம்..
காலை வெயில் இதம்தர அமர்ந்தோம்...
எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது..
"என்னை மறந்து விடுவீர்களா?"
"ஆம் மறப்பேன்... நீ வேறு என்பதை மறப்பேன்.. என்னுள் நீ நானாக இணைந்த
பிறகு, உன்னை நான் நினைப்பதென்பதேது? மறப்பதென்பதேது? என்னுள் நீ நானாகவே
வாழ்வதை என்றுமே மறப்பதில்லை"
ஆனந்தக் கண்ணீர் அரும்பித் துளிர்த்து...
என் தோளில் தலை சாய்த்து மௌனித்தாள்...
அவளது மௌனம் எனக்குச் சொன்ன செய்திகள் பல...
காதலில் மௌனத்தை விட சிறந்த செய்தி பரிமாற்றம் ஏதுமில்லை..
மஞ்சளாடை உடுத்தி கடலில் நீராடும் புதுமணத்தம்பதியரில் எங்களைக் கண்டோம்...
நமக்கும் மணமாகிய பின்னர் நாமும் இப்படித்தானே கடல் நீராடுவோம் என்று
பேசி மகிழ்ந்தோம்...
கடற்கரையில் விளையாடும் சிறு குழந்தைகளைக் கண்டு நகைத்தோம்...
அவளின் பஞ்சுப் பாதங்களைத் தொடமுயன்று தோற்ற கடலலைகள் என் மேல் கோபங்கொண்டன...
கோபத்தில் மீண்டும் மீண்டும் அலையம்புகளைத் தொடுத்தும் தோற்றன...
கடலலைகள் என் மீது கோபங்கொள்வதைக் கண்டு இரங்கிய என் தேவதை, தன்
பாதங்களைக் கடலில் நனைக்கச் சென்றாள்...
மகிழ்ந்த கடலலைகள் அவள் பாதங்களைத் தொட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன...
என் பாதங்களை நன்றியுடன் நனைத்துத் திரும்பின....
கடற்கரையில் காதலியின் கரம்பற்றி நடக்கும் இனிமை உலகில் பிறிதேது?
நம் ஆடைகள் நனைந்தாலும் ஆனந்தக் குறைவுண்டோ?
இனிமையாய் அன்றைய நாள் நிறைந்தது...
இன்னும் சில தினங்களில் இறுதித் தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...

இறுதித் தேர்விலும் தேறினேன்...
என் தேர்வினைக் கண்டு அவள் மகிழ்வுற்ற சமயம் அவளுக்கும் கல்லூரி இறுதியாண்டு...
தூத்துக்குடி மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பு...
துணை ஆய்வாளர் பணி என்பது அத்தனை எளிதல்ல...
துன்பங்கள் தோன்றும் வேளையில், அவள் முகம் என் கண்களில் தோன்றி இன்பத்தை
அளித்தது...
எங்கள் காவல் நிலைய ஆய்வாளர் எனக்கு உறுதுணையாய் இருந்தார்... மாவட்டக்
காவல்துறைக் கண்காணிப்பாளரும் இளைஞர்களுக்கு ஊக்கமாய் இருந்தார்.
இவர்களின் துணைகொண்டு சில சமூகவிரோதக் கும்பல்களைக் களை எடுத்தோம்..
தினசரியில் என் புகைப்படம் பார்த்து மகிழ்ந்த அவள் எனக்குத் திருஷ்டி கழித்தாள்...
இந்நிலையில் அவளது கல்லூரி படிப்பும் முடிந்தது...
கற்பியல் உலகம் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது...
இனி வீட்டில் காதலைப் பற்றிப் பேசி விட வேண்டும் என்று எண்ணிய
வேளையில்தான் தென்னகத்துக் காதலர்களின் சாபக் கேடு நினைவுக்கு வந்தது..
தென்னகத்துக் காதலர்களின் பரம எதிரி சாதிதான்...
அவளைக் கண்ட நாள் முதற்கொண்டு இன்று வரை அவள் என்ன சாதி என்பது எனக்குத்
தெரியாது...
இந்நிலையில் அவளை மணம் முடிப்பதென்பது சாத்தியம்தானா? என்ற வினா என்னைப்
பாடாய்ப் படுத்தியது...
சாதிகளில் நம்பிக்கையற்ற எனக்கு, அவளது பெற்றோரும், உற்றாரும் இதை எப்படி
ஏற்பார்கள் என்ற ஐயம்...
தென்தமிழகமோ சாதிக் கலவரங்களில் துடித்துக் கொண்டிருந்தது...
கலவரங்களை அடக்கும் கடமையுள்ள காவலனான நான் ஓர் கலவரத்துக்குக் காரணமாகி
விடுவேனோ?? என்று அஞ்சினேன்...
சாதியை வென்று அவளை மணங்கொண்டேனா? அல்லது சாதித் தீயில் மரணங்கொண்டேனா???

சனி, ஜூன் 18, 2011

இரவின் மடியில்.......

5.
தேவதை என்னிடம் மீண்ட அந்த பொன்னாளை என் வாழ்வின் ஏடுகளில் வைரங்களால் குறித்து வைத்திருக்கின்றேன்... என்றும், எப்பொழுதும் அவள் நினைப்பிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடிவந்தாள்...
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவினையொட்டி அவரது கட்சியினர் மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் நடைபெற்ற அந்தத் திருவிழாவிற்கு எங்கள் கல்லூரியின் சார்பில் நான் அனுப்பப்பட்டேன். பரிசுகள் வென்றேன்.
பரிசுகள் வென்று கல்லூரிக்குத் திரும்பியதும், அது ஓர் சுற்றறிக்கையாக அனைத்து வகுப்புகளுக்கும் அனுப்பப் பட்டது. அன்று மாலை நடைபெற்ற விழா ஒன்றில் நான் பெற்ற பரிசினை மீண்டும் எனக்களிக்க மேடையேற்றினார் கல்லூரி முதல்வர்...
தமிழக முதல்வர் அளித்த பரிசினை, கல்லூரி முதல்வரின் கரங்களால் பெற்றுத் திரும்பும் வழியில் மீண்டும் சந்தித்தேன் அப்பொன்விழிகளை...
முதல் சந்திப்பு நிகழ்ந்ததும் இது போன்றதொரு தருணத்தில்தான்... அச்சமயத்தில் என்னைக் கைது செய்த அவளது விழிகள் இன்றைக்கு ஏதோ ஒரு செய்தியை வைத்திருந்தது...
அவள் விழிகளின் ஓரத்தில் நீர்...
கண்ணீரே அவள் காதலை எனக்கு உணர்த்தியது...
கல்லூரியின் கரவொலிகள் என் செவிகளில் விழவில்லை.. அவளது மௌனம் எனக்குத் தெளிவாகக் கேட்டது...
அன்று நான் மீண்டும் பிறந்தேன்...
காதல் உலகம் எங்களை மீண்டும் கரம் நீட்டி அழைத்துக் கொண்டது...
காதல் வானம் நான் இழந்த சிறகுகளை மீண்டும் எனக்களித்து அவளைச் சுமந்து பறந்து வா என்றது...
காதல் மீண்டும் மலர்ந்தது....
என் பசலையும் நீங்கியது...
"காரணமேதுமின்றி என்னைத் தவிக்க விட்டது ஏன் தோழி?" வினவினேன்...
நீர் நிறைந்த கண்களுடன் என் காதலி பதிலுரைத்தாள்... என்னுடன் பயிலும் பெண்ணொருத்தியிடம் நான் காதல் கொண்டிருப்பதாக, என்னுடன் பயிலும் மற்றொரு பெண்ணுரைத்தாளாம்... நான் தற்செயலாக அவளிடம் பேசிக் கொண்டிருந்ததை இவளும் பார்த்தாளாம். நம்பினாளாம்... எனவேதான் என்னை விட்டு விலகினாளாம்... என்னை வெறுத்தாளாம்...
காரணங்களைச் சொல்லும் போது என் மடியில் முகம் புதைத்து அழுதாள்... "என்னை மன்னிப்பாயா?" என்று அவள் கேட்கும் முன்னரே என் மனது அச்சம்பவங்களை மறந்தே விட்டது...
காதலர்க்குப் பகை கர்வம்....
காதலை வாழ வைக்கும் தாரக மந்திரம் "மன்னிப்போம்! மறப்போம்!!" ..
"சரி பின்னர் என்னை எப்படி உணர்ந்தாய்?" இருந்த சந்தேகத்தைக் கேட்டேன்...
இதோ அவள் மொழி.....
"நான் வகை நுண்கணித நூலெடுக்க நூலகம் சென்றிருந்தேன்.. அந்த நூலகப் பணியாளர் என்னை வியப்புடன் பார்த்தார். "என்ன அண்ணா சேதி" என்றேன்... "நீ முன்னர் திருப்பிக் கொடுத்த புத்தகத்தை அவன் வாங்கிச் சென்றான். திருப்பித் தரவில்லை... புத்தகத்திற்கான அபராதம் செலுத்தினான்" என்றுரைத்தார்... உங்களுக்கு எதற்கு நான் பயன்படுத்திய நூல் என்று வியந்தேன்... நீங்கள் அறியாது உங்களைத் தொடர்ந்தேன்... கல்லூரி தோட்டத்தில் நீங்கள் தனியே அமர்ந்து அந்நூலுடன் பேசுவதைக் கண்டேன்.. மனமுடைந்தேன்... எட்டிப் பிடிக்கும் தொலைவில் எண்ணிலாப் பெண் தோழியர் உமக்கு.... ஆயினும் என்னை ஏன் சிந்திக்க வேண்டும்? இது ஓர் நடிப்பு என்று எண்ணிக் கொண்டேன்... மற்றொரு நாள் உங்களைக் காதலிக்கிறாள் என்று சொல்லப் பட்ட பெண் ஏற்கெனவே மணமானவள் என்றறிந்தேன்... அவளிடம் நேரடியாகவே கேட்டேன்.. அவளோ "போடி பைத்தியம்.. அன்றைக்கு நான் அவனிடம் வேறு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன்" என்றாள்... அன்றைக்கே என் மனம் மரித்துப் போனது.... இந்த வேளையில் நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் நீங்களோ என்னைத் தேடிவருவதை விடுத்தீர்கள்... எப்படி உங்கள் முகம் நோக்குவேன் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன்... தொலைவில் உங்களைக் காணும்போதெல்லாம் உங்கள் கைகளில் தவழும் அந்த நூலே உங்கள் காதலை எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... ஆயினும் உங்களைக் கண்டு பேச அச்சம்... கோபத்தில் ஏதேனும் சொல்லி விடுவீர்களோ என்று அஞ்சினேன்.... ஆனால் தமிழக முதல்வர் நம் காதலை சேர்த்து வைத்தார்..."
இருவரும் நகைத்தோம்... அத்துன்ப நாட்களை மறந்தோம்... இன்பத்தில் திளைத்தோம்...
இனிமேல் எங்களுக்குள் ஊடலே வாராது அல்லவா??
எங்கள் காதலை மீட்டுத்தந்த ஆறுமுகனாருக்கும், ஐசக் ஐயாவுக்கும், அவர்கள் தந்த வகைநுண்கணித நூலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதல்வருக்கும் வாழ்த்துப் பாக்கள் பாடினேன்...
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலம்.... அதைப் பற்றி....

வெள்ளி, ஜூன் 17, 2011

இரவின் மடியில்.......

4.
பசலை என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த வேளையில் ஓர் நாள் அவளை எம் கல்லூரி நூலகத்தில் கண்டேன்..
தானெடுத்த நூலொன்றை திருப்பிக் கொண்டிருந்தாள். மறைந்திருந்து கவனித்தேன்...
அவள்தான் என்னிடம் பேச மறுக்கின்றாள்.. அவள் படித்த நூலாவது என்னிடம் பேசுமா? ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
நூலைக் கொடுத்து விட்டு அவள் சென்றாள்..
மெதுவாக நூலகப் பணியாளரை அணுகினேன்... "அண்ணா... அவள் திருப்பிக் கொடுத்த நூல் எனக்கு வேண்டுமே!!" வேண்டினேன்...
என்னை விநோதமாகப் பார்த்த அவர், சற்று யோசித்தார்.. பின் எனக்கு அந்தக் காதல் பரிசையளித்தார்...
அது ஓர் கணித நூல்...
நெல்லை நகரப் பேராசிரியர்கள் ஆறுமுகமும் ஐசக்கும் எழுதிய வகைநுண்கணிதத்தின் ஆங்கிலப் பதிப்பு...
ஏ நூலே! நீ எத்தனை பாக்கியம் செய்து விட்டாய் என் தேவதையின் கைகளில் தவழ்ந்திடவே...
இதோ இந்தப் பக்கங்களை அவள் கண்கள் பார்த்திருக்கும் அல்லவா?? பக்கங்களே உங்களுக்குக் கோடி முத்தங்கள் கொடுத்தாலும் தகுமா???
நூலின் அனைத்துப் பக்கங்களிலும் அவளது விழிகளைக் கண்டேன்...
இதோ இந்த தேற்றத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா???
தேற்றமே என்னைத் தேற்றேன்....!!!!
இதோ இந்த வரையறுத்தலை அவள் படித்திருப்பாள் அல்லவா??? இதோ இந்த நிரூபணத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா??? என்று அந்த நூலின் பக்கங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
ஏற்கெனவே நாம் கற்றுணர்ந்த நூல்தான் ஆயினும், இந்நூல் என் தேவதையின் கரங்களில் தவழ்ந்து மீண்டதால் அது எனக்கு சொர்க்கத்தைக் காட்டியது...
"நண்பா உனக்குத்தான் எந்தப் பாடமும் நிலுவையில் இல்லையே.. பின்னர் ஏன் முதலாமாண்டு பாடநூலை சுமக்கின்றாய்?" வினவிய நண்பர்களுக்குப் புன்னகையைப் பரிசளித்தேன்...
அந்நூலை நான் ஆராய்ந்தேன்...
கணிதவியல் ஆராய்ச்சியல்ல...தடயவியல் ஆராய்ச்சி....
அந்நூலில் எங்கேனும் என் தேவதையின் தடங்கள் கிடைக்குமா என்ற ஆராய்ச்சி...
சில சமயங்களில் கணிதவியல் நூலில் குறிப்புகள் எடுப்போர் காகிதத்தை நூலின் மேல் வைத்து எழுதும் பழக்க்முண்டு...
அப்படி என் தேவதை இந்நூலின் மேல் வைத்து குறிப்பெடுத்திருந்தால் அவள் எழுத்தின் தடம் இந்நூலின் பக்கங்களின் மேல் விழுந்திருக்குமல்லவா என்ற ஆராய்ச்சி....
ஆயிரம் பெண்கள் சேர்ந்து வரும் வேளையில் அவள் காலடி ஓசையை மட்டும் தனியே கண்டுபிடித்துவிடும் எனக்கு இது அப்படி ஒன்றும் சிரமத்தைக் கொடுத்து விடவில்லை...
அந்நூலைப் படித்து ஆராய்ந்த கணித மேதைகளின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதோ இல்லையோ... என் ஆராய்ச்சி வெற்றி பெற்றது...
சில பக்கங்களில் அவளது கையெழுத்து நன்றாகப் பதிந்திருந்தது... அந்தப் பக்கங்களில் முத்தமிட்டேன்.. அவளையே முத்தமிடுவது போன்ற உணர்வு...
ஆனால் இது நூலகத்து புத்தகமல்லவா? திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் பாடாய்ப் படுத்தியது...
நூலகப் பணியாளரிடம் நூல் தொலைந்து போனதாகப் பொய்யுரைத்து அபராதம் செலுத்தினேன்...
இனி இந்நூல் எனக்கே எனக்கு... மகிழ்ச்சியில் கூத்தாடினேன்
தேவதையின் கைகள் தொட்டுப் புரட்டிய பக்கங்களைத் தொடும்போதெல்லாம் அவளின் மெல்லிய சிறு விரல்களைப் பற்றி நடப்பது போன்ற உணர்வு...
அவளைப் பற்றிய எண்ணங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
அவளைத் தேடிச்சென்றால் புறக்கணிக்கின்றாள்.... எனவே அவளைத் தேடிச்செல்வதை விடுத்து, ஆறுமுகனாரும், ஐசக் ஐயாவும் தந்த வகைநுண்கணித நூலில் என் காதல் இன்பத்தை நுகர்ந்தேன்....
எந்த ஒரு காதல் காவியத்தைப் படித்தாலும் பெற்றிராத மகிழ்வினை இக்கணித நூல் எனக்குத் தந்தது....
பசலையின் பாதிப்பிலிருந்து சற்றே மீண்டுக் கொண்டிருந்தேன்...
தொலைந்த என் புன்னகைகள் மீண்டும் என்னைத் தேடி வந்தன....
ஊடல் அப்படியே தொடர்ந்து விடுமா என்ன???
தேவதை திரும்பி வரும் நாளும் வந்தது...
என்னால் சபிக்கப் பட்ட தேவர்களும் தேவதைகளும் தங்கள் சாப விமோசனத்துக்காக அவள் மனத்தை மாற்றினர் போலும்....
காதல் உலகத்தில் தேவதையோடு நான் மகிழ்ந்துறவாட வேண்டும் என்று காதல் உலகம் என்னை நோக்கி அழைத்தது... "எங்கள் மேல் நீ தந்த சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்... வா... நீயும் எங்கள் காதல் உலகத்தில் ஐக்கியமாகு..." காதல் உலகம் கோடி இன்பத்தை என்னைக் கொள்ளை கொள்ள அழைத்தது...
ஆம்....
நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடி வந்தாள்....
அந்த நாள்.....

வியாழன், ஜூன் 16, 2011

இரவின் மடியில்.......

3
காதலியலில் ஊடலியல் ஓர் அனுபவப் பாடம்... ஊடலில்லாத கூடலில் சுகம் இல்லை....
எங்கள் காதலியலில், ஊடல் பாடம் கற்பிக்கும் ஆசிரியையாக அவள்.... தண்டனை ஏற்கும் மாணவனாக நான்...
திடீரென்று ஒரு நாள்...
அவள் என்னைக் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தாள்....
இதென்ன கொடுமை...?
கன்னியின் கடைப்பார்வையும் கடையேன் மேல் விழவில்லை..
நேற்றுவரை அன்பாயிருந்தவள், திடீரென்று முகம் மாறிச்செல்வதன் காரணம் புரியவில்லை...
பேருந்தில் வைத்து யாரோ மூன்றாம் நபரைக் காணும் போது செல்வது போல் சென்றதைக் கண்டு எனக்கு மூக்கு வியர்த்தது...
கோபம் பொங்கி எழுந்தது...
காரணம் புரியாமல் தவித்தேன்...
அவள் வகுப்பறை சன்னலில் எப்போதும் என் முகம் தேடும் அவள் கண்கள், அன்றைக்கு நான் நின்றிருந்ததையே கவனிக்கவில்லை... (கவனித்தாளாம்... பின்னர் நாங்கள் சேர்ந்தபோதுதான் இதை அறிந்தேன்)
என்ன ஆயிற்று என் தோழி..??
காரணம் பகர்ந்தால் கவிஞன் தவற்றைத் திருத்திக் கொள்வானில்லையா??
காரணமில்லாமல் காதல் நழுவிச்செல்லும் சூழலில் காளையர் மனது திண்டாடுவதைக் கன்னியர் ஏன் புரிந்து கொள்வதில்லை...?
என்னிடம் நீ பேச வேண்டாம்...
என்னை ஒரு பார்வை பார்த்தாலே போதுமே!!!
உன் கடைவிழிப் பார்வையில் ஓர் முகிழ்நகை தந்தால் காலமெல்லாம் நிம்மதியடைவேனே நான்...!!!
எங்கெல்லாம் அவளைத் தொடர்ந்தேனோ, அங்கெல்லாம் அவமானத்தைச் சந்தித்தேன்...
காண்போரிடமெல்லாம் என் காதல் தோல்வியின் காரணம் புரியாமல் அழுது வடித்தேன்..
தேற்றுவதற்கு யாருமில்லை...
சரி அவளை நெருங்க முடியவில்லை... அவள் தோழியரை நெருங்கிக் காரணம் கேட்கலாம் என்று முடிவு செய்து, அவள் தோழியொருத்தியை நாடினேன்... "என் தங்கம் என்னைத் தவிக்கவிடுவதன் காரணம் சொல் தோழி!!" என் கெஞ்சல் அவள் முகத்தில் கவலையை வரவழைத்தது... "அறியேன் அண்ணா! என்னை மன்னியுங்கள்" சொல்லிவிட்டு ஓடிப்போனாள்...
அட... இவளுக்கும் தெரியவில்லை.... அவளின் மனது அவளன்றி யாரும் அறிந்திருக்கவில்லை...
காதல் உலகம் என்னால் சபிக்கப் பட்டது...
தேவர்கள் அனைவரும் என்னைத் தேடிவந்து சாபமேற்றனர்...
பூவுலகே நீ எரிந்து போ....
காதலியின் கண்களைக் காணாத வாழ்வு இருந்து என்? இல்லாது என்?
பட்டினத்தாரின் பாடல்களின் பொருள் அனுபவத்தோடு புரிந்தது....
ஆயினும் என்னால் அவளை வெறுக்க இயலவில்லை...
வகுப்பில் பேராசிரியர் உரைப்பது கேட்கவில்லை...
வீட்டில் பெற்றோர் உரைப்பதும் கேட்கவில்லை...
கற்பனையுலகில் அவளோடு சுற்றித் திரிந்த நாட்களை மட்டுமே எண்ணி நின்றேன்...
கேட்பதெல்லாம் அவள் குரலாக, காண்பதெல்லாம் அவள் முகமாக....
பசலை நோயின் பக்குவம் அறிந்தேன்...
வார்த்தை தவறி விட்ட கண்ணம்மாவைப் பாடிய பாரதியைச் சரணடைந்தேன்...
உலகமெலாம் இன்புற்றிருக்கும் வேளையில் பிரிவென்னும் நரகில் நான் மட்டும் துன்புறுவது என்ன நியாயம்?
"நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?" என்ற கானமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது...
காதலில் தோல்வியுற்ற மற்ற காளையரின் மனது புரிந்தது...
"அவள் வருவாளா?" பாடினேன்... வரவில்லை...
காரணமில்லாமல் காதலைத் தொலைத்தவன் அழுது புரண்டேன்...
கன்னியரின் கண்ணீர் காளையரைக் கரைக்குமென்பார்கள்...
காளையரின் கண்ணீர் கன்னியரைக் கரைக்குமோ??
இல்லவே இல்லை...
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்...
ஆனால் பெண்ணாணவளோ என்றும் இரங்குவதே இல்லை... பேரிடர் தரும் பசலையில் முற்றிய நிலை...
என் உடல் நலம் குன்றியது...
என் மனம் வாடி உழன்றது...
உயிரோ அவளைத் தேடி அலைந்தது...
நண்பர்கள் காரணம் கேட்டனர்...
சொல்ல மறுத்தேன்...
பேராசிரியர்கள் தனியே அழைத்துக் கேட்டனர்..
அப்போதும் மறுத்தேன்...
பெற்றோரும் துன்பத்தில் உழன்றனர்... காரணம் புரியாது தவித்தனர்...
அவள் மனத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை... என் மனத்தை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை...
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் அன்றில்கள் எனக்குப் பொறாமையை மூட்டின... என்னால் சபிக்கப் பட்டன...
இரவில் அவள் முகத்தை எனக்குக் காட்டிய நிலவு இந்த இரவுகளில் என்னை எரித்துக் கொண்டிருந்தது...
அவள் உடுத்தும் ஆடைகளாகத் தெரிந்த விண்மீன்கள் எல்லாம் என் கண்களைத் தைக்கும் ஊசிகளாகக் குத்தின...
அவளோடு நடைபயின்ற மரத்தின் நிழல் எனக்கு அனல்மேல் நடக்கும் உணர்வைத் தந்தது...
அன்றைக்கு ஒருநாள்...
நூலகத்தில் அவளைக் கண்டேன்...
தானெடுத்த நூலொன்றை அவள் திருப்பிக் கொண்டிருந்தாள்...
மறைந்திருந்து அவளைக் கவனித்தேன்..
அப்பொழுது......

செவ்வாய், ஜூன் 14, 2011

இரவின் மடியில்.......

2.
என்றைக்கும் இல்லாதத் திருநாளாக அன்றைக்கு எங்கள் இல்லத்துக் கருப்புத்
தொலைபேசி இனிமையான இசையை ஒலித்தது... இதென்ன விந்தை என்று வியந்தபடியே
எடுத்துக் காதில் வைத்தால் அந்தக் காதல் தேவதை..... அந்த கருப்புத்
தொலைபேசி அவளது அழகிய குரலைச் சுமந்து வந்தது. அன்று அது தானொலித்ததும்
இசையே.... சுமந்து வந்த குரலும் தேனிசையே...
"நான் உங்கள் குரலுக்கு ரசிகை" என்று சொன்னவளின் குரலுக்கு நான்
ரசிகனாகிப் போனேன்..
இந்த பூவுலகம் படைக்கப் பட்டது எங்களுக்காகத்தான் என்றும் நாங்கள் இருவர்
மட்டுமே இறைவனால் படைக்கப் பட்ட காதலர்கள் என்றும் பேசி மகிழ்ந்தோம்.
காதல் என்னும் பேருலகில் காலடி எடுத்து வைக்கும் கவிதைகளானோம்....
விண்ணும் மண்ணும் எங்களுக்காகவே.... எங்கள் காதல் மொழிகளைக்
கேட்பதற்காகவே காத்திருப்பதாகத் தோன்றியது....
அவள் மொழி கேட்டபின் என் தாய்மொழியில் நான் பிதற்றியவை எல்லாம் கவிதைகளாயின...
வள்ளுவனின் காமத்துப் பாலைத் தீண்டத்தகாது என்று ஒதுக்கி வைத்த நான்,
அவள் மூலம் அன்றைக்கு மூன்றாம் பாலின் சுவையுணர்ந்தேன்....
வானவியல் கற்றுத் தந்த பேராசிரியையால் தினமும் இரவில் வான் நோக்கி
கணக்குப் போடும் நண்பர்களுடன் அன்றைக்கு அமர்ந்திருந்தேன்... இன்றைக்கு
இந்த நட்சத்திரம் இந்தத் திசையில் தெரியும்... நிலவிலிருந்து இத்தனைத்
தொலைவில் கண்டால் குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காணலாம்... வானவியல்
கற்கும் ஆவலோடு இரவில் மொட்டைமாடியில் வாசம்....
அன்றைக்கென்னவோ பேராசிரியை கற்றுத் தந்த வானவியல் மறந்தேன்....
எனக்கென்னவோ நிலவு அவள் முகத்தைப் பிரதிபலித்தது.... எந்த ஒளியியலும்
கற்றுத்தராத புதிய பாடம் இது....
விண்மீன்களெல்லாம் அவள் உடுத்தியிருந்த ஆடையின்மேல் தீட்டப்பட்ட வண்ண
ஓவியங்களாகத் தெரிந்தன...
வானவியலுக்கும், ஒளியியலுக்கும் அப்பாற்பட்ட காதலியல் இது...
பார்க்குமிடங்களிலெல்லாம் அவளது தோற்றத்தையே கண்ட எனது கண்கள் தன்
பார்வைத்திறனை இழந்து விடவில்லை...
வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேச்சு....
தினமும் கல்லூரியில் கண்களால் பேச்சு....
அவள் செல்லும் வழியில் நின்று நோக்குவேன் யான்... என்னைக் கண்டதும் அவள்
முகத்தில் தோன்றும் குதூகலத்தைக் காண்பதற்காகவே.......
சிறுமுறுவல்.... பெருங்கவிதை அது....
விழிகளின் மொழிகளோ புதுக்கவிதை.....
நாட்கள் சென்றன....
காதல் வளர்ந்தது....
கவிதைகள் புதிது புதிதாய் பிறந்தன....
அவளின் வண்ணச்சீறடிகளைப் பற்றித் தாங்கும் மண்மகளைப் பாடினேன்....
அவளின் வண்ணக் கூந்தலை அழகு செய்யும் பூக்களைப் பாடினேன்....
அவளின்அழகுக் கரங்கள் அருமையாய் சுமக்கும் புத்தகங்களைப் பாடினேன்....
என்னோடு வந்தாள்...
எனக்காகவே வந்தாள்....
"வாழ்க்கை ஓடத்தில் பயணிக்க நீங்கள்தான் மாலுமி... நான் மட்டுமே பயணி..."
என்றாள்...
ஊடலே இல்லாத கூடலா???
எங்கள் காதலியலில் ஊடல் பாடம் கற்கும் வேளை வந்தது....

திங்கள், ஜூன் 13, 2011

இரவின் மடியில்.......

இரவு நீண்டு வெளிச்சத்தை முற்றும் இழந்து விட்டிருந்தாள் பூமித்தாய்...
இரவே உன் மடியில் நான் படுத்துறங்கும் வேளையில் மட்டும் அந்த நினைவுகள்
மீண்டும் முளைத்தெழுகின்றனவே.... உலகெங்கும் உல்லாசத்தைக் கொடுக்கும்
இரவுகள் எனக்கு மட்டும் வேதனையை அள்ளித் தரும் கொடுமையை
என்னவென்றுரைப்பது....
பூமாதா நீ வெளிச்சத்தை இழந்தாய்.... நான் நிம்மதி இழந்தேன்... உறக்கத்தை
இழந்தேன்....
பகலில் வெளிப்படாத அந்த நினைவுகள் உலகம் உறங்கும் இந்த இரவுகளில் மட்டும்
வெளிப்பட்டு என்னை வஞ்சிப்பதன் காரணம்???
நினைவுகளை சற்றே பின்னோக்கி நகர்த்தினேன் என் காதல் காலத்தைக் காண....
விளையாட்டுப் பருவம் அது...
வேடிக்கையே பொழுதாய் கழியும் தருணங்கள்....
பள்ளிக்குச் செல்லும்போது உடன் வரும் கல்லூரி அண்ணன்மார்கள், உடன்
பயிலும் பெண்களைப் பற்றி விசாரிக்கும் போது கேவலமாய் அவர்களைப் பார்த்த
காலமது...
ஆங்காங்கே நின்று கண்களாலேயே கடலை போடும் மாமேதைகளின் தனி உலகத்தைப்
பற்றி வியந்த நேரமது....
நாம் என்றைக்கும் இந்த பெண்களின் கண்வலைகளில் சிக்கி விடக்கூடாது
என்பதில் உறுதியாய் இருந்தது மனது.... (நம்மை எவள் ஏறெடுத்துப் பார்க்கப்
போகிறாள் என்ற எண்ணமும்...)
இந்த இதயத்தை உடைப்பதற்கும் புறப்பட்டு வந்தன இரு விழிகள்...
பள்ளி முடிந்து கல்லூரிப்பருவம்...
கலைகளின் திருவிழா....
கலைகளை ஊக்குவிக்கும் திறமைகள் திருவிழா....
கலைப்போட்டிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன....
ஓவியப்போட்டிக்கு நாம் கிறுக்கியிருந்த ஓர் ஓவியம் பரிசுக்குரியதாய் ஆனது
ஆச்சரியம்...
சொற்பொழிவுப் போட்டி.....
அனைத்துத் தரப்பினரும் தங்கள் சொற்பொழிவைப் பொழிய, நம்மை அழைத்தபோது மேடை
ஏறினேன்... என்னை மறந்தேன்... கொடுத்த தலைப்பு "வல்லரசை உருவாக்குவதில்
இளைஞர்களின் பங்களிப்பு"
"ஊழலை ஒழிப்பதில்தான் வல்லரசின் அடித்தளம்... ஊழலை ஒழிப்பதற்கு இளைஞர்கள்
முன்வந்தால் வல்லரசை உருவாக்கி விடலாம்" என்ற சாராம்சத்தில் மொழிந்தேன்..
வெடித்தேன்....
உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது... கரவொலிகள் ஒலித்தன... மேடையை
விட்டு இறங்கி எனது இருக்கைக்கு வரும் வழியில்தான் சந்தித்தேன் அந்த
இருவிழிகளை.... என்னைக் கொன்ற அந்த அம்புகளை.....
இதென்ன.......
எனக்குள் ஓர் மாற்றம்....
எனது விழிகளும் என்னையறியாது இடப்பக்கம் திரும்பி அவளைத் தேடின....
அவள் யார் அறியேன்... அவள் பேரென்ன அறியேன்.... ஆயினும் இவள் ஏன் என்னை
ஈர்க்கிறாள்... ? அதுவும் அறியேன்....
அவளும் நம்மை நோக்கிட விழியின் மொழிகள் புரிந்ததில், எனது மொழிகளை நான்
மறந்து போனேன்...
சற்று நேரத்திற்கெல்லாம் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப் பட்டன....
சிறுகதை, கட்டுரை, கவிதை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில்
பரிசுக்குத் தேர்வானோர் பட்டியலில் எனது பெயர் வாசிக்கப் பட, அவள் மிக
உற்சாகமாய் கரங்களைத் தட்டினாள்....
அரங்கத்தோரில் அத்தனைக் கரவொலிகளின் மத்தியிலும் அவளது கரங்களிலிருந்து
எழுந்த ஒலிகள் தனியாக என் செவிகளில் வந்து விழுந்தன....
கண்களாலேயே வாழ்த்து சொன்னாள்.... அந்த கவிதையின் பொருளும் புரிந்தது....
என்னை மறந்து நின்றேன்...
இதயத்தை உடைத்த இரும்பு விழிகளை, அவளது இனிக்கும் விழியின் மொழிகளை
அறிந்த மனது அவளையே பார்த்துக் கொண்டிருக்கத் துடித்தது.....
விழா முடிந்தது....
அவள் சென்று விட்டாள்....
இனி அவளை எங்கே காண்பது?
காதலிக்கும் தோழர்களின் மனத்தவிப்பு அன்றுதான் புரிந்தது...
நானும் அவளும் ஒரே கல்லூரியானாலும், காணும் பெண்டிரில் அவளை எப்படிக்
கண்டுபிடிப்பது??
சிரமமான காரியமல்லவா??
பூவையரைத் தேடிச்செல்லும் காளையரைக் கிண்டலடித்த மனது இன்று ஒரு
பூவைக்காகத் தவித்தது....
தவித்த மனதின் தாகத்தையும் அவளே தீர்த்தாள்..
நோயுமானாள் நோய்க்கு மருந்துமானாள் என்னும் பொருளில் வள்ளுவன் பாடிய
குறளுக்கு இலக்கணமானாள்... என் குரலுக்கு ரசிகையானாள்..
பசலை என்னைப் பற்றுதற்கு முன்னர், அவளது அழைப்பு வந்தது எங்கள்
இல்லத்துத் தொலைபேசிக்கு..

அன்பே வா அருகிலே...(6)

கதைக்குள் நுழைவதற்கு முன்னால்....
நண்பர்களே... கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அலுவலகத்தில் வேலைப்பளு
மிகுதியால் இணையப் பக்கம் வருவதற்கு இயலவில்லை... தாமதமாக அடுத்த
அத்தியாயத்தைத் தந்தற்கு அனைவரும் மன்னிக்க....
தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தாருங்கள்... இதற்கு முன்னரும் தொடராமல்
விட்டிருந்த இழைகளையும் அன்னையின் பேரருளுடன் தொடர்கின்றேன்.....
இனி கதையைத் தொடரலாம்...

அத்தியாயம் 6

பதற்றத்துடன் ஓடி வந்த அவனை ஏறெடுத்துப் பார்த்த மலையாண்டி, "என்னலே...
என்னாச்சி?" என்று வினவினார்.
"அங்க... நம்மூர்ல... "
"சொல்லுல..."
"ஆத்துல ரெண்டு முண்டம் கெடக்கு"
"என்ன?" வியப்புடன் எழுந்தார் மலையாண்டி...
"யோவ் ஏட்டு போய் ஜீப்ப ரெடி பண்ணு.. போய்ட்டு வந்துருவோம்.. ஏம்மா
நீயும் வாறியா?" என்று அகல்யாவைக் கேட்டார்.. அவளும் "சரிங்க சார்.
நானும் வர்றேன்" என்று ஒத்துக் கொண்டாள்.
காவல்துறை வாகனத்தில் அனைவரும் கரையடி நல்லூரை நோக்கிப் புறப்பட்டனர்..
அங்கே...
மணிமுத்தாற்றில் தலையற்ற இரண்டு உடல்கள் மிதந்து கொண்டிருந்தன... ஆற்றின்
பிரவாகம் குறைவாக இருந்ததாலும்,  அல்லிக் கொடிகள் மிகுதியாக
இருந்ததாலும், அல்லிக் கொடிகளில் சிக்கிக் கொண்டிருந்தன அந்த உடல்கள்...
கரையடியில் நின்று கொண்டிருந்த தலையாரியும் கிராம்சும் மலையாண்டியை
சோகமாக எதிர் கொண்டனர்..
"பாத்தீங்களா ஐயா நம்மூர்ல இப்பிடில்லாம் நடக்க ஆரம்பிச்சிட்டு... மொதல்ல
வெட்டுப்பட்ட ஒரு தல அங்கன கெடந்துச்சி.. இவ்ளோ நாள் கழிச்சி இன்னிக்கு
ரெண்டு முண்டம் நம்ம ஆத்துல மெதக்கு. என்னதான் நடக்கோ" தலையாரி
சோகப்பாட்டு பாட அவருக்குப் பதில் சொல்லாமல் ஆற்றினை நோக்கி நடந்தார்...
"யோவ் ஏட்டு... அந்த ரெண்டு பிரேதங்களையும் எடுத்து வெளிய போடச்சொல்லு...
அந்த சக்கிளியன்வ வந்துருக்கான்வல்லா... இங்கெயே அறுத்துப் போடச்சொல்லு..
பாடி டீகம்போஸ் ஆயிருக்கும்..." உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே
எஸ்.பிக்கும் தகவல் தந்தார்.
இதற்குள் ஊரின் துப்புரவுப் பணியாளர்கள் வந்து தலையற்ற அந்த இரு
உடல்களையும் எடுத்துக் கரையில் போட்டனர்..
வீச்சமடித்தது.
அனைவரும் மூக்கைப் பொத்திக் கொண்டனர்..
காவலர்கள் அங்கு கூடியிருந்த பொது மக்களை விரட்டிக் கொண்டிருந்தன்ர்.
இதற்குள் அரசு மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் வந்து விட அந்த
இடம் திரைகளால் சூழப்பட்டது.
....
அந்த இடத்திலிருந்து வரும் வாடை குமட்டிக் கொண்டு வந்தது தலையாரிக்கு...
"ஐயா கொஞ்சம் பாத்துக் கிடுங்க... நான் வீடு வரைக்கும் போய்ட்டு வாறேன்"
என்று கிராம்சிடம் சொல்லியபடி நகர்ந்தார்.
மலையாண்டி அந்த இடத்தைச் சுற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்..
திடீரென நினைவுக்கு வந்தவராய், "ஏம்மா அகல்யா இங்க வா" என்று அந்த
சென்னைப் பெண்ணை அழைத்தார்.
"சொல்லுங்க சார்"
"ஒங்க கைடுன்னு சொன்னால்லா... அந்தாளு பேரு என்ன? அவரு அட்ரசக் கொடு. "
"சார் அவர் பேரு மணிமாறன். எங்க காலேஜுல அவர் வேலை பாத்திட்டிருந்தார்.
இப்போ என்ன பண்றாருன்னு தெரியாது."
"சரி.. நான் வெசாரிக்கச் சொல்றேன்" என்று சொல்லியபடி கட்டுப்பாட்டு
அறைக்குத் தகவல் அனுப்பினார்.

இதற்குள் பிரேதப் பரிசோதனை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார்..
மலையாண்டி அவரை நெருங்கினார்..
"வணக்கம் டாக்டரம்மா"
"வணக்கம் சார். சொல்லுங்க..."
"ரிப்போட் என்ன சொல்லுது"
"என் கணிப்புப்படி சாவு நடந்து ஒரு மாசத்துக்கும் மேல இருக்கும்... மத்த
படி அந்த தலைக்குரிய உடம்பு எதுன்னு லேப் ரிப்போர்ட் வந்த பின்னாடிதான்
தெரியும்.. பார்க்கலாம். வேற பிரேதமாவும் இருக்கலாம்... சரி நான்
வாறேன்." என்று சொல்லியபடி நகர்ந்தார்.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு கேஸ். முதலில் வெட்டுப்பட்ட ஒரு
தலை... கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அழுகிய நிலையில் இரு உடல்கள....
அது யாரென்றும் தெரியவில்லை... அந்த ஊரிலிருந்து யாரும் காணாமலும்
போகவில்லை... பிறகெப்படி....?
சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஆறுமுகத்தைக் காணவில்லை என்றொரு தகவல்
கிடைத்திருந்தது... ஆனால் அவனுக்கோ குடும்பம் இல்லாததால் ஊரில் யாரும்
அதைப் பற்றிக் கவலைப் படவில்லை... மேலும் அவன் காணாமல் போன பிறகு சாராயம்
காய்ச்சுவது நின்று போன மகிழ்ச்சி ஊர் மக்களுக்கு...
ஒருவேளை அவனுடைய உடல்தானோ?? அப்படின்னா தலை எங்கே போனது?? கேள்விகள்
தலையைக் குடைந்தன...
இதற்குள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்தது.. சட்டக் கல்லூரிப்
பேராசிரியர் மணிமாறன் சென்னையில் இல்லை என்றும், அவர் கேரளாவில் உள்ள ஓர்
வெளிநாட்டுக் கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக பணியில் சேர்ந்து விட்டதாகவும்
தகவல். கேரள போலிசாருக்குத் தகவல் அனுப்பியிருந்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அந்த உடல்களை அருகிலிருந்த
இடுகாட்டிலேயே அடக்கம் செய்ய உத்தரவிட்டார். "அகல்யா... நீ மட்டும்
தனியாவா வந்துருக்கே.? நீ எங்க தங்குவா?" என்று அகல்யாவிடம் கேட்டார்
மலையாண்டி..
"இந்த கிராமத்துலேயே தங்கி விசாரிக்கலாம் இல்லியா? இங்க யார்
வீட்டிலயாவது சொல்லி விடுங்களேன்" என்று அவரிடம் கெஞ்சினாள்.
"சரி.. தலையாரிகிட்ட சொல்லிருதேன். அவர் வீட்டிலேயே தங்கிக்க.." என்று
சொல்லிவிட்டு கிராம்சிடம் விசயத்தைச் சொன்னார். அவரும் அகல்யாவை
அழைத்துப் போனார்.
"பத்திரமா இரும்மா" என்று அவளிடம் சொல்லியபடி தன் வாகனத்தை நோக்கிப் போனார்..
ஜீப் புறப்ப்பட்டு விட்டது...
கிராம்ஸ் அகல்யாவை தலையாரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தலையாரியின் மகளுக்கு அகல்யாவைப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது..
"எக்கா உங்க பேரன்ன?"
"ம்.. அகல்யா.. உம்பேரன்ன?"
"எம்பேரு வடிவம்மா..."
"சரி நீ என்ன படிக்கறே?"
"எட்டாப்பு படிக்கேன்" அவர்கள் உரையாடலை ரசித்தபடி அங்கிருந்து அகன்றார்
கிராம்ஸ்...
"சரி நாளைக்குக் காலையில் இந்த ஊருக்குள் சென்று இதைப்பற்றி ஆராயலாம்."
என்று எண்ணியபடியே உறங்குவதற்குத் தயாரானாள் அகல்யா...
வீட்டின் தார்சாவில் தலையாரி படுத்துக்கொள்ள உள்ளறையில் அவரது மனைவியும்,
மகளும், அகல்யாவும் படுத்துக் கொண்டனர்...
பயணக்களைப்பால் படுத்ததும் உறங்கிப் போனாள்...
நடுநிசி...
திடீரென ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள் அகல்யா...
சலங்கைச் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது...
குதிரையின் காலடி சத்தமும் கேட்டது...
"இதென்ன சத்தம். யார் இரவு நேரத்தில் குதிரையில் போவது?" என்று
எண்ணியபடியே படுக்கையிலிருந்து எழுந்தாள் அகல்யா..
மற்றவர்களின் உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக அடியெடுத்து
வைத்து வெளியே வந்தாள்... தார்சாவில் தன்னை மறந்து உறங்கிக்
கொண்டிருந்தார் தலையாரி..
ஓசைப்படாமல் நகர்ந்து கதவின் தாழ்ப்பாளை விலக்கிய நொடி.....

(தொடரும்)