சனி, ஜூலை 16, 2011

இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)

இரவின் மடியில் (நிறைவுப் பகுதி)

மஞ்சளாடை உடுத்தி மங்கல நாண்பூட்டி செந்தூரான் ஆலயத்தில் மணம் முடித்து
இல்லம் செல்வதற்காக ஆலயத்திலிருந்து வெளியே வந்தோம்... எங்கள் வாகனம்
அருகில் வந்தது... வாகனத்தில் ஏறும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அது
நிகழ்ந்தது...
நான் காவல்துறையில் சேர்ந்த பின்னர் எடுத்த களைகளில் ஒன்று
எஞ்சியிருந்ததை மறந்ததன் விளைவு....
முடிகொடுக்கும் மண்டபத்திலிருந்து அவன் ஓடி வந்தான்.... கையில் ஓர் வெட்டரிவாள்...
என்னவென்று சுதாரிக்கும் முன்னராக அவனது கையிலிருந்த அரிவாளை ஓங்கி வீசினான்....
அது என் மீது பட்டு விடும் என்ற அச்சத்தில் என்னைத் தள்ளிய என்
தங்கத்தின் கழுத்தில் வீழ்ந்தது....
மஞ்சளாடை செவ்வாடையாகி மண்ணில் சாய்ந்தது என் உலகம்....
அரிவாளை வீசியவன் ஓட, அவனைத் துரத்தவா??, வீழ்ந்து கிடக்கும் என்
தங்கத்தைக் காணவா??
மனம் மதியற்றுப் போனது...
மண்ணில் சாய்ந்த என் மனையாளை மடிமீது சுமந்தேன்...
"உனக்கொன்றும் ஆகாது கண்ணே.... உன்னை நான் காப்பேன்..." உரைத்தேன்...
வெட்டு கழுத்தில் வீழ்ந்ததால், அவளால் பேச இயலவில்லை....
செய்கைகள் செய்தாள்....
அவளை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குச் செலுத்தச் சொன்னேன்...
துடித்தேன்...
கண்மணியே ... தைரியம் கொள்... உனக்கொன்றும் நேராது என்றுரைத்தேன்....
எனக்கு விரித்த வலையில் நீ வீழ்ந்தாயே.... ஐயோ என மனம் நொந்தேன்....
விதி எனக்கெதிராக சதி செய்தது....
மருத்துவமனையை நெருங்கிய நேரத்தில், தன்னறிவு மறந்து விழுந்தாள்...
உள்ளே எடுத்துச் சென்றால், அவளது ஆருயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்
உரைத்தார்....
நொடிந்து விழுந்தேன்....
என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது...
விதியே விதியே.... நீ ஏன் என் வாழ்வில் சதி செய்து போனாய்???
இல்லை... இது பொய்...
என் கண்மணி மரிக்கவில்லை.... அவள் என்னோடு இருக்கும்போது அவளால் எப்படி
மரிக்க இயலும்? இதோ என் தலை முதல் பாதம் வரை எங்கும் நிறைந்திருக்கும்
அவளால் எப்படி என்னைப் பிரிய இயலும்....?
செங்குருதியில் நனைந்த மஞ்சளாடையுடன் பிதற்றினேன்...
கைகளை சுவற்றில் அறைந்து அழுதேன்....
எதிர்ப்பட்டோரையெல்லாம் என் தங்கத்தை என்ன செய்தீர்கள் என்று கேட்டுத்
தாக்கினேன்...
என்னைப் பிணைத்தார்கள் சங்கிலியில் பித்தனென்று சொல்லி....
என் கண்ணெதிரே என் கணமணியைத் தகனம் செய்தார்கள்...
நெருப்பிலே விழுந்து அழுதேன்... என்னைப் பற்றி இழுத்து ஆறுதல் படுத்தினார்கள்....
என்னை யாரால் ஆறுதல் செய்ய இயலும்?? என் காயத்தை எந்த மருந்துதான் ஆற்றும்??
இதோ இதோ.. இந்த கடற்கரையில்தானே நீயும் நானும் உலவி மகிழ்ந்தோம்...
இன்றைக்கு என்னைப் பிரிந்து நீ மட்டும் எங்கு போனாய்???? என் கண்ணீர்
கடலை நிறைக்குமளவுக்கு அழுதேன்....
ஓடி விளையாடிய இடங்களிலெல்லாம் அவள் முகம் தோன்றி மறைந்தது...
பேசி மகிழ்ந்த இடங்களிலெல்லாம் அவள் குரல் எனக்குத் தெளிவாகக் கேட்டது....
அவளோடு நான் பேசும்போது என்னை உலகத்தோர் பைத்தியம் என்று இகழ்ந்தார்கள்..
ஒரே நிமிடத்தில் அழுகையும் சிரிப்பும் எனக்குள் மாறி மாறி எழுந்தது...
அவள் முகம் தோன்றும்போது சிரித்தேன்... அவள் இல்லாததை எண்ணி அழுதேன்...
அவள் குரல் கேட்கும்போது சிரித்தேன்.... அவள் என்னை விட்டு நீங்கியதை
எண்ணி அழுதேன்...
காதல் வானில் சிறகடித்துப் பறந்த வண்ணப் பறவைகளைப் பிரித்து வேடிக்கை
காட்டும் இறைவனே.... இதே மண்ணில்தானே நீயும் காதல் மணம் புரிந்தாய்.??
காதலின் வலியறியாதவனா நீ????
"கனவுக்குள் நீ வந்து போனாய்.... என்
கவிதைக்குக் கருவாக ஆனாய்...
தொடராதோ நம் காதல் மண்ணில்?
தொலையட்டும் அக்கடவுள் விண்ணில்..." என்று இறைவனை சபித்தேன்....
காணும் முகங்களிலெல்லாம் என் கண்மணியைத் தேடியலைந்தேன்....
தோன்றும் அலைகளிலெல்லாம் அவள் துள்ளலைத் தேடியலைந்தேன்...
அவளை அள்ளியணைத்திடச் செல்கையில் என் கைவிலங்கு என்னைத் தடுத்தது....
அவளை நோக்கி நான் ஓடுகையில் என் கால்விலங்கு என்னைத் தடுத்தது...
இடறி விழுகின்றேன்... மீண்டு எழுகின்றேன்....
என் வேதனை புரிந்தவர் யாருமிலர்...
என் சோதனை தீர்ப்பவர் யாருமிலர்...
காதல் புனிதமானது என்று மொழியும் காதலர்களும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுகின்றனர்...
காதலுக்குக் கவிபாடும் கவிஞர்களும் என்னைக் கண்டால் கலவரமடைகின்றனர்...
விளக்கின் ஒளியில், நிலவின் மடியில் அவள் முகம் தேடித் தேடி என் தேடல்
இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பகலவன் விளக்கில், பரிதியின் மடியில் அவளைத் தேடும் என் தேடலுக்கு விடை
தருவார் யாருமில்லை...
பசியுமில்லை... உணவுமில்லை...
பகலுமில்லை... இரவுமில்லை....
எங்கும், எப்பொழுதும் அவள் முகம் தேடுதல் அன்றி வேறு வேலை எனக்கில்லை.....
ஆறுதல் தேடி இரவின் மடியில் தலைசாய்த்துத் துயில்கின்றேன்.........
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் தேடல் நிறைவு பெறுமா?????

(முற்றும்)