வெள்ளி, ஜூன் 17, 2011

இரவின் மடியில்.......

4.
பசலை என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த வேளையில் ஓர் நாள் அவளை எம் கல்லூரி நூலகத்தில் கண்டேன்..
தானெடுத்த நூலொன்றை திருப்பிக் கொண்டிருந்தாள். மறைந்திருந்து கவனித்தேன்...
அவள்தான் என்னிடம் பேச மறுக்கின்றாள்.. அவள் படித்த நூலாவது என்னிடம் பேசுமா? ஏக்கத்தோடு காத்திருந்தேன்..
நூலைக் கொடுத்து விட்டு அவள் சென்றாள்..
மெதுவாக நூலகப் பணியாளரை அணுகினேன்... "அண்ணா... அவள் திருப்பிக் கொடுத்த நூல் எனக்கு வேண்டுமே!!" வேண்டினேன்...
என்னை விநோதமாகப் பார்த்த அவர், சற்று யோசித்தார்.. பின் எனக்கு அந்தக் காதல் பரிசையளித்தார்...
அது ஓர் கணித நூல்...
நெல்லை நகரப் பேராசிரியர்கள் ஆறுமுகமும் ஐசக்கும் எழுதிய வகைநுண்கணிதத்தின் ஆங்கிலப் பதிப்பு...
ஏ நூலே! நீ எத்தனை பாக்கியம் செய்து விட்டாய் என் தேவதையின் கைகளில் தவழ்ந்திடவே...
இதோ இந்தப் பக்கங்களை அவள் கண்கள் பார்த்திருக்கும் அல்லவா?? பக்கங்களே உங்களுக்குக் கோடி முத்தங்கள் கொடுத்தாலும் தகுமா???
நூலின் அனைத்துப் பக்கங்களிலும் அவளது விழிகளைக் கண்டேன்...
இதோ இந்த தேற்றத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா???
தேற்றமே என்னைத் தேற்றேன்....!!!!
இதோ இந்த வரையறுத்தலை அவள் படித்திருப்பாள் அல்லவா??? இதோ இந்த நிரூபணத்தை அவள் படித்திருப்பாள் அல்லவா??? என்று அந்த நூலின் பக்கங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
ஏற்கெனவே நாம் கற்றுணர்ந்த நூல்தான் ஆயினும், இந்நூல் என் தேவதையின் கரங்களில் தவழ்ந்து மீண்டதால் அது எனக்கு சொர்க்கத்தைக் காட்டியது...
"நண்பா உனக்குத்தான் எந்தப் பாடமும் நிலுவையில் இல்லையே.. பின்னர் ஏன் முதலாமாண்டு பாடநூலை சுமக்கின்றாய்?" வினவிய நண்பர்களுக்குப் புன்னகையைப் பரிசளித்தேன்...
அந்நூலை நான் ஆராய்ந்தேன்...
கணிதவியல் ஆராய்ச்சியல்ல...தடயவியல் ஆராய்ச்சி....
அந்நூலில் எங்கேனும் என் தேவதையின் தடங்கள் கிடைக்குமா என்ற ஆராய்ச்சி...
சில சமயங்களில் கணிதவியல் நூலில் குறிப்புகள் எடுப்போர் காகிதத்தை நூலின் மேல் வைத்து எழுதும் பழக்க்முண்டு...
அப்படி என் தேவதை இந்நூலின் மேல் வைத்து குறிப்பெடுத்திருந்தால் அவள் எழுத்தின் தடம் இந்நூலின் பக்கங்களின் மேல் விழுந்திருக்குமல்லவா என்ற ஆராய்ச்சி....
ஆயிரம் பெண்கள் சேர்ந்து வரும் வேளையில் அவள் காலடி ஓசையை மட்டும் தனியே கண்டுபிடித்துவிடும் எனக்கு இது அப்படி ஒன்றும் சிரமத்தைக் கொடுத்து விடவில்லை...
அந்நூலைப் படித்து ஆராய்ந்த கணித மேதைகளின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதோ இல்லையோ... என் ஆராய்ச்சி வெற்றி பெற்றது...
சில பக்கங்களில் அவளது கையெழுத்து நன்றாகப் பதிந்திருந்தது... அந்தப் பக்கங்களில் முத்தமிட்டேன்.. அவளையே முத்தமிடுவது போன்ற உணர்வு...
ஆனால் இது நூலகத்து புத்தகமல்லவா? திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணம் பாடாய்ப் படுத்தியது...
நூலகப் பணியாளரிடம் நூல் தொலைந்து போனதாகப் பொய்யுரைத்து அபராதம் செலுத்தினேன்...
இனி இந்நூல் எனக்கே எனக்கு... மகிழ்ச்சியில் கூத்தாடினேன்
தேவதையின் கைகள் தொட்டுப் புரட்டிய பக்கங்களைத் தொடும்போதெல்லாம் அவளின் மெல்லிய சிறு விரல்களைப் பற்றி நடப்பது போன்ற உணர்வு...
அவளைப் பற்றிய எண்ணங்களில் திளைத்து மகிழ்ந்தேன்...
அவளைத் தேடிச்சென்றால் புறக்கணிக்கின்றாள்.... எனவே அவளைத் தேடிச்செல்வதை விடுத்து, ஆறுமுகனாரும், ஐசக் ஐயாவும் தந்த வகைநுண்கணித நூலில் என் காதல் இன்பத்தை நுகர்ந்தேன்....
எந்த ஒரு காதல் காவியத்தைப் படித்தாலும் பெற்றிராத மகிழ்வினை இக்கணித நூல் எனக்குத் தந்தது....
பசலையின் பாதிப்பிலிருந்து சற்றே மீண்டுக் கொண்டிருந்தேன்...
தொலைந்த என் புன்னகைகள் மீண்டும் என்னைத் தேடி வந்தன....
ஊடல் அப்படியே தொடர்ந்து விடுமா என்ன???
தேவதை திரும்பி வரும் நாளும் வந்தது...
என்னால் சபிக்கப் பட்ட தேவர்களும் தேவதைகளும் தங்கள் சாப விமோசனத்துக்காக அவள் மனத்தை மாற்றினர் போலும்....
காதல் உலகத்தில் தேவதையோடு நான் மகிழ்ந்துறவாட வேண்டும் என்று காதல் உலகம் என்னை நோக்கி அழைத்தது... "எங்கள் மேல் நீ தந்த சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்... வா... நீயும் எங்கள் காதல் உலகத்தில் ஐக்கியமாகு..." காதல் உலகம் கோடி இன்பத்தை என்னைக் கொள்ளை கொள்ள அழைத்தது...
ஆம்....
நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடி வந்தாள்....
அந்த நாள்.....

கருத்துகள் இல்லை: