செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பக்தியில் திளைப்போம் நவராத்திரியில்...

அடியேனை வரவேற்றருளிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற நடையில் இத்தொடரை, எளியேன் அளித்திட இயலுமா என்பது ஐயமே... ஆயினும் என்றென்றும் என்னுள்ளே இருந்து எம்மை வழிநடத்தும் அன்னையின் திருப்பாதங்களில் சரணடைந்து அவள் புகழ் பாடுகின்றேன்...

பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பலருடைய வாழ்வை உதாரணம் காட்டலாம்.

கடந்த ஆண்டு திருக்கடவூரில் அன்னை அபிராமியின் திருக்கோவிலில், ஐயா காளைராசன் அவர்களைச் சந்தித்த போது, அன்னார் பகிர்ந்த நிகழ்வொன்றை இவ்விடத்துத் தருகின்றேன்...

அபிராமிப் பட்டர் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதற்கொண்டு அன்னை அபிராமியையே தனக்குரிய உலகமாகக் கொண்டு வாழ்ந்தார்... அவளைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவர்க்கில்லை... அப்படிப் பட்ட பெரும்பக்திக்குத் அருட்செய்யவே அன்னை தானணிந்த தோடொன்றை வானில் வீசி அமாவாசை இரவை பௌர்ணமியாக்கிக் காட்டினாள்...

ஐயா அவர்கள் இன்னொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டினார்.

கண்ணப்பன் அதுவரை சிவலிங்கம் என்றால் என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து வந்தான்.. சிவலிங்கம் என்றால் என்ன? சிவம் என்றால் என்ன? என்று அவனுக்குத் தெரிந்த முதற்கொண்டு தன் மனத்தில் சிவசிந்தனையன்றி மற்ற சிந்தனைகள் இல்லாது வாழ்ந்தான்.. ஆகவேதான் சைவ சமய நாயகனுக்கு அசைவப் படையலிட்டும் அது ஏற்றுக் கொள்ளப் பட்டது.. அதைத் தொடர்ந்து வந்த சோதனைகளையும் அவன் எதிர்கொண்டு நாயன்மார்களில் ஒருவனாக ஆனான்...

இப்படியாகக் காணும் இடமெல்லாம் இறைவடிவைக் கண்டு தொழும் பக்திக்கு சோதனைகள் வந்தாலும், வலுமிக்க மெய்யான பக்தியால் அச்சோதனைகளே வரலாற்றில் நீடிக்கும் சாதனைகளாக ஆகின்றன..

தசராத் திருவிழாவின் முதல் நாளான இன்று, குலசேகரன் பட்டினத்தில் வீற்றிருந்து உலகாளும் நாயகியான அன்னை முத்தாரம்மன், துர்க்கையாக உற்சவம் வருகின்றாள்...

சும்ப நிசும்பர்களை வதைத்து, மகிடனை அழித்துத் தக்கோரைக் காக்க தேவி கொண்ட வடிவைக் கண்டு உலகமே நடுங்கியது... ஆனால் அன்பே உருவான அன்னை, அத்தகைய கொடிய மனம் படைத்தவளா என்ன? மக்களைக் காக்க அவள் கொண்ட கோலம், அசுரகுணம் கொண்டோரை விடுத்து, என்றென்றும் அவள் மேல் பக்தி கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நல்லதையே நல்கிடும்... இதனை அவள் மேல் அழியாத பக்தி கொண்ட அன்பர்கள் நன்கு உணர்வார்கள். ஆகவேதான், அன்னையின் திருக்கோலம் கண்டு அஞ்சாது அவளிடத்து வரங்கள் கேட்கும் தன்மையைக் கவிஞர்கள் பெற்றிருந்தனர்.

வரங்கள் கேட்பது கவிஞனின் உரிமை... தவறாது அளிப்பது அன்னையின் கடமை...

அப்படி அன்னையின் அருள் பெற்ற மகா கவிஞன் ஒருவனது கவிதையை இவ்விடத்துக் காண்போமா? அனைவருக்கும் தெரிந்த கவிதைதான்... அடிக்கடி படித்த கவிதைதான்... ஆனால் அன்னையின் திருவருளோடு, அவள் திருவடி நிழலில் நின்று பாடிய மகா கவிஞன் என்ன துணிச்சலோடு அவளிடத்து இந்த வினாவை எழுப்பியிருப்பான்??

என்றென்றும் உன் திருப்பாதங்களே சரணமென்றெண்ணி நான் செய்த பூசனைகளுக்கெல்லாம் என்ன பதில் தந்திட்டாயடி காளி? நான் கேட்கும் வரத்தினைத் தந்திட விரைந்து வந்திடுவாய்....இதனைக் கேட்டல் என்றன் உரிமை.... நீ தந்தே ஆள வேண்டும் என்ற மனவுறுதியோடு கேட்ட கவிஞனின் அழியாத மகா கவிதையொன்றைக் காண்போமா?



"விண்ணும் மண்ணும் தனியாளும் -- எங்கள்


வீரை சக்தி நினதருளே -- என்றன்


கண்ணும் கருத்தும் எனக் கொண்டு -- அன்பு


கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்


பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்


பாலை வனத்திலிட்ட நீரோ? -- உனக்கு


எண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி


வில்லாது அகிலம் அளிப்பாயோ?


நீயே சரணமென்று கூவி -- என்றன்


நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி


தாயே எனக்குமிக நிதியும் -- அறந்


தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு


வாயே என்று பணிந்தேத்திப் -- பல


வாறா நினது புகழ் பாடி -- வாய்


ஓயேனாவதுணராயோ?-நின


துண்மை தவறுவதோர் அழகோ?


காளீ வலிய சாமுண்டி -- ஓங்


காரத் தலைவி யென்னிராணி -- பல


நாள் இங்கெனையலைக்கலாமோ? -- உள்ளம்


நாடும் பொருளடைதற்கன்றோ -- மலர்த்


தாளில் விழுந்த பயங்கேட்டேன் -- அது


தாராய் எனில் உயிரைத் தீராய் -- துன்பம்


நீளில் உயிர் தரிக்க மாட்டேன் -- கரு


நீலி என் இயல்பறியாயோ?






தேடிச் சோறு நிதந்தின்று -- பல


சின்னஞ்சிறு கதைகள் பேசி -- மனம்


வாடித் துன்பமிக உழன்று -- பிறர்


வாடப் பல செயல்கள் செய்து -- நரை


கூடிக் கிழப்பருவம் எய்தி -- கொடுங்


கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல


வேடிக்கை மனிதரைப் போலே -- நான்


வீழ்வேன் என்று நினைததாயோ?






நின்னைச் சில வரங்கள் கேட்பேன் அவை


நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்


முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்


மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி


என்னைப் புதியவுயிராக்கி- எனக்


கேதுங்கவலையறச் செய்து -- மதி


தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்


சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.






தோளை வலியுடைய தாக்கி -- உடற்


சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி


வாளைக் கொண்டு பிளந்தாலும் -- கட்டு


மாறா உடலுறுதி தந்து -- சுடர்


நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி


நண்ணித் திகழுமுகந் தந்து -- மத


வேளை வெல்லுமுறை கூறித் -- தவ


மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.






எண்ணுங் காரியங்கள் எல்லாம் -- வெற்றி


யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்


பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்


பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை


நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக


நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல


பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்


பாடத் திறனடைதல் வேண்டும்.






கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்


கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்


புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றிப்


போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை


வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் -- என


விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்


தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி


சூழும் வீரமறி வாண்மை


கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்


கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை


நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த


நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்கக் -- கலி


சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி


தாயே உனக்கரியது உண்டோ? -- மதி


மூடும் பொய்ம்மையிருள் எல்லாம் -- எனை


முற்றும் விட்டகல வேண்டும்;






ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை


அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல


பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்


பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை


உய்யக் கொண்டருள வேண்டும்-அடி


உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி


வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை


வாழி, நின்னதருள் வாழி.


ஓம் காளி வலிசாமுண்டீ


ஓங்காரத் தலைவி என்இராணி"



மிக நீண்ட பாடல்... நாடி நரம்புகளில் எல்லாம் மறைந்திருக்கும் நம் சக்தியை தேடி இழுத்துத் திறனாக வெளியேற்றும் கவிதை இது... ஆம்... மறைந்தாலும் என்றைக்கும் தமிழ்த்தாயின் செல்லக் கவிஞனாய், தமிழ் கூறும் நல்லுலகின் கவி வேந்தனாய் நம் மனத்தை ஆளும் மகா கவிஞன் பாரதியின் கவிதை....கண்களை மூடி அன்னை பராசக்தியைத் தியானித்து இக்கவிதையைப் பாடும் வேளை நம்மை அறியாது புத்தொளியொன்று நம் மனத்தில் புகுவதைக் காணலாம்... இப்படி வரங்கேட்ட பாரதிதான் "தசையினைத் தீச்சுடினும் தாய் சிவசக்தியைப் பாடும் நல் வரம்" கேட்டான். அன்னையைப் போற்றி, எனக்குப் பொருள் வேண்டும், புகழ் வேண்டும், அழியாத மகா கவிதையை யான் அருளல் வேண்டும் என்று பாடியோன், அன்னையைப் பாடும் நல் வரங் கேட்கும் தன்மையும் பெற்றிருந்தான்... தான் கேட்ட வரங்களனைத்தும், தனக்கென்று மட்டுமல்லாது, தன்னையீன்ற அன்னை பூமியை வளங்கொள்ளச் செய்திடும் வரமெனக் கேட்டான்.... இவையெல்லாம் அன்னையின் பக்தர்களின் மனத்தன்மை.. காளியை, சாமுண்டியைக் கண்டு அஞ்சாது வரம் கேட்கும் தன்மை, அவள் பக்தர்களுக்குத் தாமே வந்து சேரும்....

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது நம் சொல் வழக்கு.. ஆனால் கம்பனோ அன்னையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவிபாடும் என்று பாடி விட்டான்... அதுதான் அன்னையின் பேரருள்.... அன்னை தானே நேரில் வந்து லீலை செய்து, சமையல் செய்யும் சாதாரண மானுடன் ஒருவனை பெருங்கவியாக்கிய கதையொன்றை நாளை பகிர்கின்றேன்.... (அறிந்தோர்கள் பலரிருக்கும் அவையில் அடியேனின் சொல் அவமாயினும் பொறுத்தருள வேண்டுகின்றேன்..)

"கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரோடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே"

- ஸ்ரீ அபிராமிப் பட்டர்...



"நிலையிலா நிழலுலகில்

நித்தம் உந்தன் பதம் தேடும்

பக்தனாய் வாழ்வளிப்பாய் எந்தன்

பகைவர்க்கும் வாழ்வளிப்பாய்..



நித்தம் நித்தம் உனைத்தொழுது

நினதருளே சொந்தமென்னும்

பித்தனாய் வாழும் தன்மை

எத்தனாம் எமக்கும் அருளேன்..."