சனி, ஆகஸ்ட் 15, 2009

குடிமக்கள் காப்பியம்.

குடிமக்கள் காப்பியம்.
தமிழின் முதற் காப்பியம் என்னும் பெருமை பெற்று, குடிமக்கள் வரலாற்றைப் பதிவு செய்த முதல் நூல் என்னும் பெருமையையும் ஒருங்கே பெற்ற நூல் சிலப்பதிகாரம். எமது பேராசிரியர் கூறுவார் "கன்னித் தமிழின் பெருமையைக் காத்து வருவன கல்லும் சொல்லுமே" என்று.. இளவலால் சொல்லோவியத்தாலும், அண்ணலால் கல்லோவியத்தாலும் பெருமை பெற்றாள் தமிழ் நங்கை கண்ணகி. கால வெள்ளத்தில் கல்லோவியம் அழிந்தது. ஆயினும் கற்றோர் நினைவில் இன்றும் நின்று இனிமை தருகிறது சிலப்பதிகாரம் எனும் சொல்லோவியம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையப் பெற்றது சிலம்புக் காவியம். தொடர் நிலைச் செய்யுளை முதன் முதலில் அமைத்த பெருமை, குடிமக்களை நாயகராகக் கொண்ட பெருமை என்று புரட்சி செய்தார் இளங்கோவடிகள். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிராத காலத்தில், பெண்ணுக்கு ஏற்றம் கொடுத்து அவளையே நாயகியாக்கி, பெண்ணால் இயலாதது ஏதுமில்லை என்றுணர்த்தினார் அவர்.
உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினியாகக் கண்ணகியை வடித்தார். அவளையே காவியத் தலைமைப் பாத்திரமாக, தன்னிகரில்லாத் தலைவியாக அமைத்துக் காவியம் அமைத்த புதுமையும் கவர்ச்சியானதே... காவியத்தின் துவக்கத்தில் பேசப்படுவது கண்ணகியின் திறம்தான்.
"போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ"
என்று கண்ணகியின் அறிமுகம் காணப்படுகிறது.
பத்தினித் தன்மை என்பது தூய்மை என்பதன் மறுபெயர். மனமாசற்ற நிலையே அவ்வறம். அவ்வற வழிபாட்டை வலியுறுத்த வேண்டி அறவடிவான கண்ணகியின் வரலாற்றைக் கருவியாகக் கொண்டார் இளங்கோ. மேலும் கணிகையர் குலத்துதித்த மாதவியையும் கற்புக்கரசியாக்கித் துறவறத்தின் முடிமணியாகச் சிறக்க வைக்கும் சிறப்பையும் அவர் மேற்கொண்டுள்ளார். இங்கனம் மங்கையரின் மாட்சியைத் தெரிவிப்பதே சிலம்பின் உள்ளுறையாக அமைந்துள்ளது..
பொதுவாக ஒரு நாடகக் காவியம் சிறப்பது அதன் கதாபாத்திரப் படைப்பின் திறத்தாலும் அவர்தம் பண்பு வளர்ச்சி தெளிவுறக் காட்டப் பெறுதலாலுமே அமையும். கண்ணகியின் அமைதியான வாழ்க்கையைப் புகார்க் காண்டத்திலும், அவளே அநீதியை எதிர்த்துப் போராடும் தமிழ் மறத்தியாக மதுரைக் காண்டத்திலும், இன்னார் இனியார் என்று பாராது எல்லார்க்கும் அருள்செய்யும் உயர்நிலையாளாக தெய்வமாக வஞ்சிக் காண்டத்திலும் நாம் காண்கிறோம்.
"கொங்கச் செல்வி குடமலையாட்டி
தெந்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணி" என்று சாலினியால் போற்றப் படுகிறாள் நாயகி கண்ணகி.
"கற்புக்கடம் பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண்டிலமால்" என்று கவுந்தி அடிகள் மூலம் இளங்கோ தன் பாராட்டுதலைத் தெரிவிக்கின்றான். தன் கணவனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்" என்று எடுத்துரைக்கும் போதும் அவள் பண்பு வெளிப்படுகிறது. பின்னர் அவள் கணவன் கொலைப் பட்ட செய்தி கேட்டு வீறு கொண்டு மதுரை வீதிகளிலே அவள் புயலெனப் புறப்படுதல் கண்டு "சிலம்பொடு வம்பப் பெருந்தெய்வம் வந்தது" என்று நகரமாந்தரெல்லாம் அஞ்சும் வண்ணம் அவள் கோபம் வெளிப்படுகின்றது. நகரின் காவல் தெய்வங்களெல்லாம் அவள் கற்புக்கு முன்னர் அடிபணிகின்றன. மன்னன் முன்சென்று தன் கணவன் நிலை உரைத்து "தேரா மன்னா.. " என்று தன் கணவன் கள்வனல்ல என்று நிரூபித்து அவன் தன் மனையாட்டியோடு உயிர் நீத்த பின்னும் அவள் சினம் தணிந்தபாடில்லை. தன் கற்புக் கனலால் மதுரை மாநகரையும் சுட்டெரிக்கிறாள். இத்தகையக கோப மனங்கொண்ட கண்ணகிதான் பின்னர் எல்லாருக்கும் அருள்செய்யும் தெய்வமாக வஞ்சிக் காண்டத்தில் காணப்படுகிறாள்.
கதையைத் துவக்கம் முதல் தொடர்ந்து நாம் படித்துவருங்காலை, கோவலன் கொலைப்படும் வேளையில் நம் அன்புக்குரியோனை நாமே இழந்தது போன்றதொரு துக்கம் நெஞ்சை அடைக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளை ஒருங்கே ஏற்படுத்தி நயமுறக் கதை சொல்லும் இளங்கோவின் நுணுக்கம் வியக்கத்தக்கது.
சிலம்பின் இடையிடையே கானல் வரியிலும், வேட்டுவ வரியிலும், ஆய்ச்சியர் குரவையிலும், துன்பமாலை ஊர்சூழ்வரியிலும் பின்னர் குன்றக் குரவையிலும் இனிய இசைப் பாடல்கள் நாடகப் பாங்கோடு அமைக்கப் பட்டுள்ளன.
"பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி"
இக்கானல் வரியில் சோழவேந்தன் திறத்தால் காவேரிப் பெண் இயற்கைக் கோலக் காட்சியின் இடையே ஒதுங்கிச்செல்லும் காட்சி கண் முன் தோற்றமளிக்கிறது.

"நாகம் நாறு நரந்தம் நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே"
இவ்வேட்டுவ வரி காளியம்மன் புகழ் பாடுகின்றது.

"அணிமுகங்களோராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே"
குன்றக் குரவையில் குமரன் புகழ் பாடும் குறமக்கள் கவி இது. கண் முன்னர் முருகனின் காட்சி தந்து அவன் ஆற்றலையும், அவன் கைவேற் சிறப்பினையும் ஏத்திப் பரப்பும் குறமக்கள் மாண்பு நம் உள்ளம் கொள்ளை கொள்கின்றது.

இளகோவின் காப்பிய நடை தனிச்சிறப்புடையது. சீரிய கூரிய தீஞ்சொற்களால் தெளிவும் ஒளியும் பொருந்த அமைந்த தன்மையது. தாம் கருதிய கருத்தின் தன்மையை தம் நடையிலேயே விளங்க வைத்து விடுவது அவன் சிறப்பு.

புகார் நகரே வியக்கும் வண்ணம் நடந்தேரிய கோவலன் - கண்ணகி மணவிழாவினை
"நீலவிதானத்து நித்திலப்பூம் பந்தர் கீழ்
வானூர் மதியம் சகடணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்பென்னை"
என்று எளிய ஓவியமாகத் தீட்டிக் காட்டும் திறம் இளங்கோவால் மட்டுமே இயலும்.
கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகளோடு பலநாள் பகலும் இரவும் நடந்து மூதுர் வந்தடைகின்றனர். மதுரை நெருங்குகையில் தென்றலின் இனிமையைத்தான் அவர்கள் உணர்கின்றனர். அது தந்த நறுமணங்கள் நுகர்கின்றனர். பின்னர் ஓசைகளும் முழக்கங்களும் கேட்கின்றன. பின்னரே காட்சி. முதலில் அவகட்குத் தோற்றமளிப்பது வையை நதி..
அவளும்
"தையற் குறுவது தானறிந்தனன் போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிச்..."
செல்கின்றாளாம். ஆற்றுக்கு இங்கனம் பரிவு எவ்வாறு வந்தது? அது புனல் ஆறு அன்று என்று அவர்களும் கருதியதாக அமைக்கின்றார் இளங்கோ. அது பொய்யாக் குலக் கொடி. அதன் இயல்பு அத்தகையது என்பார் அவர்.
"மண்ணக மடந்தையை மயக்கொழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்"
கண்ணகி கோவலனுக்கு மாதரி இல்லத்தில் தங்கிய காலத்தில் அமுது படைத்ததாகக் கூறுகின்றார். இவள் வாழ் நாளில் பின் நிகழவிருக்கும் அவலத்தை நிலமகளும் அறிந்து மயங்கினாளாம். அம்மயக்கம் களையக் கண்ணகி நீர் தெளித்தாளாம்.. எத்தகைய அருமையான கற்பனை இது...!
மனையறம் படுத்த காதையில் கயமலர்க்க்ண்ணி கண்ணகியும் காதற்கொழுநனும் நறும்பூஞ்சேக்கையில் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலராக இன்பம் துய்த்தனரென உணர்த்தும் திறம் இளங்கோவிற்கே இயலும். இதனால்தான் இவர்போல் புலவரைக் கண்டதில்லை என்பான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.
மதுரை மாதரசி இறந்ததும் அறியாது அரசவையில் கண்ணகியின் வஞ்சினம்
"பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையும் காண்குறுவாய் நீ"
என்று வெளிப்படுகிறது. இவ்வாறே சுவைக்கேற்ற நடையழகை சிலம்பில் பல்வேறு இடங்களில் காணலாம்.
"தஞ்சமோ தோழீ! தலைவன் வரக் காணேன்
வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே?
வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்? வாழியோ தோழி!"
என்று கண்ணகி கலக்கத்தோடு கூவும்போது நம் உளம் கலங்குகின்றது. கொலைச்செய்தி கண்ணகியிடம் கூறப்படும்போது, கூறும் மாந்தரது உள்ளத்துற் தோன்றும் தயக்கம், தடுமாற்றம், அச்சம், பரிவு எல்லாமும் பேச்சிலேயும் புலப்படுமாறு அமைகின்றது பாடல்.
"அரசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரை கழல் மாக்கள் கொலை குறித்தன்ரே"
இரண்டாம் வரி திரும்பவும் அமைதலும், கொலைக் குறித்தனர் என்று நம்பிக்கைக்கு இடம் இருப்பது போன்று அமைதலும் சிறப்பு. பின் கண்ணகி பொங்கி எழுந்தாள். திங்கள் முகிலொடு வீழ்ந்தென வீழ்ந்தாள். கண் சிவப்ப அழுதாள். கணவனை "எங்கணாய்: என்று இனைந்து ஏங்கி மாழ்ந்தாள் என்று வீரமும் அவலமும் கலந்த கலவையாகக் காட்டப் படும் பாடல் உணர்வுக் கொப்பளிப்பு. ஊர்சூழ்வரியில் அவள் அரற்றுரையால் அவள் வீரமும், மக்கள் உரையால் அவலமும் புலப்பெடுத்தப் படுகின்றன. மாலைப் பொழுதில் கொலைப்பட்ட கோவலனைக் காண்கின்றாள். இவள் துன்பம் காணாதானாய்க் கதிரவன் மலைமேற் சென்று ஒளிந்தானாம். கால நிலையோடு மாலை நிலையைக் காட்டி அவலத்தை அதிகரிக்கின்றார் இளங்கோ. காலைவாய்க் கொழுநன் குஞ்சியில் அணியும் மாலையைத் தன் வார்குழலில் கொண்டு, அவனைத் தழுவிக்கொண்டாள். மாலையிலோ புண்தாழ் குருதி புறஞ்சோர அவன் தன்னைக் காணாத கடுந்துயரம் கண்டாள் என்கின்றார். "காய் சினந்தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்" என்று வேந்தன்பால் செல்கின்றாள். காளி போல் சென்று வீரவுரை பேசி சிலம்புடைத்டு மன்னன் உயிர்போக வஞ்சினம் கூறி மீள்கின்றாள்.
"மறுகிடை மறுகும் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞர் உற்ற வீர பத்தினி"
எனும் வரிகள் அவள் மயக்க நிலையைக் காட்டும்.
மதுராபதித் தெய்வம் வந்து பழங்கதை உணர்த்தி நிகழ்வது கூறியது பின் தன் கைவளைகளைக் கொற்றவை கோயில் வாயிலில் தகர்க்கின்றாள். மதுரை நகர் விட்டுச்செல்லும்போது அவள் மனதில் ஒன்றே ஒன்று தான் நிற்கின்றது.
"கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு"
என மயங்கிக் கையற்று வைகைக் கரைபற்றி நடக்கின்றாள் என்று அவலம் விளங்க ஆசிரியர் அவளை நடத்திச்செல்கின்றார். அவலத்தை மிகுவிக்கக் கையாளும் உத்திகளுல் முன்னிலையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு நோக்குவது வாசகர் நெஞ்சைக் கரைப்பதற்காகவன்றோ...?
கண்ணகிபால் மட்டுமன்றித் தன்செயல் தவறு என்று உணர்ந்ததும் "யானோ அரசன் யானே கள்வன்" எனக் கூறி உயிர் நீக்கும் பாண்டியன் செயலிலும், அவனைப் பின்பற்றும் கோதேவியின் விரைவிலும் ஆழமான அவலச்சுவை மிகைப் படுகிறது.
முடியுடைவேந்தர் மூவரும் தமிழர் என ஓரினமாகக் காட்டி அவர்தம்முள் ஒற்றுமை உணர்வை விளைக்க எழுந்தது சிலம்ப என்றால் அது மிகையல்ல. சேர இளவலாயினும் இளங்கோ மூவேந்தர்தம் பெருமையை ஒக்கப் புகழும் திறம் இன்புறத்தக்கது. பண்டைத்தமிழர் நாகரிகம் பற்றிய பல குறிப்புகள் சிலம்பின் கண் நயம்பட அமைந்துள்ளன. பல்வேறு சமயக் கடவுள்களையும் அவர்தம் மாண்பையும் புகழ்ந்துரைப்பதன் மூலம் இக்காப்பியம் சமயப் பொதுமையைக் கனிய வைக்கின்றது.
தமிழின் முதற்காப்பிய்ம், உலகின் முதற் குடிமக்கள் காப்பியம் நம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமல்லவா???

ஈழத்துப் போர் ஒரு மோசமான முடிவுக்கு வந்தது கண்டு நெஞ்சம் பதைத்து, ஏதும் எழுதுவற்கு அறியாது மனங்குன்றினேன். இன்னமும் எமது மன அழுத்தம் ஆறியபாடில்லை. இந்திய சுதந்திர நாளான இன்று எமது பணியை மீண்டும் துவக்கியுள்ளேன். இனித் தொடர்ந்து எமது பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். மிக நீண்ட இடைவெளிக்கு நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். படித்துப் பார்த்து விட்டுத் தங்கள் பின்னூட்டங்களை எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.
நன்றி..