செவ்வாய், நவம்பர் 02, 2010

அபிராமி அந்தாதி 37 & 38

பாடல் முப்பத்தேழு


கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன

மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்

பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்

திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.



விளக்கம் : அபிராமி அன்னையே.. எட்டுத்திசைகளையும் ஆடைகளாக அணியும், எல்லா செல்வங்களையும் உள்ளடக்கிய சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே... நீ உன் திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர்களும்... தாமரை போன்ற உன் அழகிய திருமேனிக்கு நீ அணிவது வெண்ணிற முத்து மாலைகள். விஷம் நிறைந்த நாகத்தின் படம் போன்றிருக்கும் உன் இடையில் நீ அணிவது பல்வித மாணிக்கங்களால் ஆன மேகலையும், பட்டும்.

இந்த பாடலில் அன்னை அபிராமி அணியும் அணிகலன்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.. கன்னல் எனும் பதம் கரும்பினைக் குறிப்பதாகும். அன்னையே.. நீ உன் திருக்கரங்களில் அணிவது இனிமை தரும் கரும்பும் மணம் வீசும் மலர்களும்... கரும்பினாலான வில்லைத் தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள் இருவர்... அன்னை ஆதிபராசக்தியும், மன்மதனுமாகிய இவர்களே... அன்னையானவள் தனது கரத்தில் கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருப்பது எதற்காக??? அன்னையின் கையிலுள்ள கரும்பு வில் நம் மனத்தினைக் குறிக்கின்றது. மனித மனம் இனிமையானது. மேலும் இந்திரியங்களுக்காக எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது.. இப்படிப் பட்ட நமது மனது அது போன போக்கில் வளைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ஐம்புலன்களின் கட்டுபாட்டில் மனம் இயங்கத் தொடங்கிவிட்டால் சிற்றின்பத்தில் திளைத்து நாம் மானிடராய்ப் பிறந்ததற்கான காரணத்தை மறந்து போவோம்... அன்னையே... என் மனத்தை உன் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.. உன் இச்சைப்படி அதை வளைத்துக் கொள்... என் ஐம்புலன்களை ஐந்து மலர்க்கணைகளாக உனது கரத்திலேயே சமர்ப்பிக்கிறேன்.. நீயே அவற்றை உன் இச்சைப்படி ஏவு... என்ற வேண்டுதல்களுக்காகத்தான் அன்னை தனது கையில் கரும்பு வில்லையும், மலர்க்கணைகளையும் தரித்துள்ளாள். மாறாக நம் மனம் மன்மதனின் கைக் கரும்பாக மாறி விட்டால் என்னவாகும்?? மனம் இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு தன்னிலை மறந்து போகும்.. எனவே நம் மனத்தை அன்னையின் கையில் ஒப்படைப்போம்...

"கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை" அழகிய தாமரை போன்ற நின் திருமேனியில் நீ அணிவது வெண்ணிற முத்துமாலை... முத்துக்களால் ஆன மாலைகளை அன்னை அபிராமி தனது திருமேனியில் அணிவது எதற்காக? முத்துக்களைப் போன்ற உயர்ந்த மனத்தவனாக இரு என்று நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான்.

"விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்" விஷங்கொண்ட நாகத்தின் படத்தை ஒத்திருக்கும் உனது இடையில் நீ பல்வேறு மாணிக்கங்களாலான மேகலையையும் பட்டையும் அணிந்திருக்கின்றாய்...

"எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. " நீ விலைமதிப்பற்ற அணிகலண்களை அணிந்திருக்கிறாய்... ஆனால் எல்லா செல்வங்களையும் கொண்டிருக்கும் ஈசனோ எட்டுத்திக்குக்களையே தன் ஆடையாகக் கொண்டிருக்கின்றான்.. அந்த ஈசனது இடப்பாகத்தில் சேரும் என் அபிராமி அன்னையே.... நீயோ சகல ஐஸ்வர்யங்களையும் காண்பிக்கும் உயர்ந்த அணிகலன்களை அணிந்திருக்கின்றாய்.. ஆனால் எல்லா செல்வங்களையும் உடையவனான (உன்னையும் சேர்த்து) ஈசன் மிக எளிமையான தோற்றம் கொண்டவனாக இருக்கின்றான். நீ அவனது இடப்பாகத்தில் சேர்ந்திருக்கின்றாய்....



பாடல் முப்பத்தெட்டு

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்

தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே



விளக்கம் : எங்கள் அன்னை அபிராமி பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த வாயினை உடையவள். முத்து போன்ற பற்கள் தெரியும் படியான குளிர்ச்சி தரும் புன்னகை புரிபவள். தனது மெல்லிய இடை நோகும்படியான திருமுலைகளைக் கொண்டவள்.. இவற்றின் துணையாகக் கொண்டு எங்கள் ஈசனாம் சங்கரனைத் துவண்டு போகும்படி செய்தவள்... அவளைப் பணிந்தால் அமரலோகம் ஆளலாம்.. உலகத்தோரே... எங்கள் அன்னையைப் பணியுங்கள்...

அன்னையின் பேரழகினை இப்பாடலில் அழகுற வர்ணனை செய்கிறார் அபிராமிப் பட்டர். அன்னையின் பேரழகு சங்கரதேவனின் தவத்தைக் கலைத்ததாம்.. முன்னரொரு பாடலில் அபிராமிப் பட்டர் என்ன உரைத்தார்? எல்லாவிடத்தும் வெற்றி பெறும் மன்மதனின் வெற்றியெல்லாம் தோல்வியுற்ற சங்கரனும் உன்னிடத்துத் தோல்வியுற்றான் என்று அன்னையைத் துதித்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து... "எங்கள் சங்கரனைத் துவளப் பொருது" என்கிறார், எங்கள் தந்தையான சங்கரனைத் துவளச்செய்தாய்...அவன் தவத்தைக் கலைத்தாய்... எவற்றின் துணையைக் கொண்டு இதைச் செய்தாய்??? பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த இதழ்கள்."பனி முறுவல் தவளத் திருநகை" முத்து போன்ற பற்கள் தெரியும்படியான குளிர்ச்சியான புன்னகை.... "துடியிடை சாய்க்கும் துணை முலை" மெல்லிய இடையைக் கீழே விழச்செய்யும் பாரமான திருமுலைகள்... இவற்றின் துணையோடு எங்கள் ஈசனை துவண்டு போகச் செய்தாள் எங்கள் அன்னை அபிராமி... "அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே" அவளைத் தொழுங்கள் உலகத்தாரே.... ஏன் தெரியுமா அவளைத் தொழுதால் அமரலோகம் ஆளும் பேறு பெறலாம். எனவே... அனைவரும் எங்கள் அன்னை அபிராமியைத் தொழுங்கள்.....

என்று உலகத்தாருக்கு அன்புக் கட்டளையிடுகிறார் அபிராமிப் பட்டர்...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி...

அபிராமி அந்தாதி 23 & 24

எழுதிய தினம் 18.10.2010




அன்பர்களுக்கு வணக்கம்.. அன்பு மகள் பிறந்த மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.. நேற்றைய திருநாளைப் பற்றி உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கும் போது, எமது துணைவியாருக்கு பிரசவ வலி வந்தது. அச்சமயம் நானும் அவரது இல்லத்தில்தான் இருந்தேன். மருத்துவமனைக்கு விரைந்தோம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கழித்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டே கையெழுத்திட்டேன். உலகத்தைக் காத்து ரக்ஷிக்கும் அன்னையின் திருவருளால் இன்று அதிகாலை மணி 01.43 அளவில் எங்கள் திருமகள் பூவுலகில் உதித்தாள். பிரசவ சமயத்தில் என் மனைவி பட்ட பாட்டை அருகில் இருந்து கண்ட கலக்கம், மகளது திருமுகத்தைக் கண்டவுடன் உடனடியாக நீங்கியது. குட்டி முகம், பிஞ்சு விரல்கள்... அடடா... மழலைச்செல்வத்தின் இன்பத்தை எங்கனம் உரைப்பது... முன்னர் ஒருமுறை நமது பதிவில் தமிழ் இலக்கியத்தில் மழலையர் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தோம். அது இலக்கியங்களை ரசித்து எழுதியது.. அதன் உண்மையான இன்பத்தை இன்று அதிகாலை அடைந்தோம்.. இதைப் பற்றிய ஒரு நுகர்வை இன்னொரு பதிவில் தெளிவாக எழுதலாம். இப்போது அதே மகிழ்ச்சியுடன் அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்.



பாடல் இருபத்து மூன்று

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே



விளக்கம் : எளியேன் எனக்கு எந்தன் கண்மணியைப் போன்ற என் அபிராமித் தாயே....மூவுலகுக்கும் உள்ளே இருந்து அதனை இயக்குபவளே.. அம்மூவலகையும் தாண்டி வெளியிலும் இருப்பவளே... என் உள்ளத்துள் விளைந்த கள்ளே... அமுதமே... ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... என் மனத்தில் நின் திருவுருவையன்றி வேறொன்றும் நினைக்க மாட்டேன். உனக்கு அன்பான அடியவர் கூட்டத்தை விட்டு என்றும் விலக மாட்டேன். உனை விடுத்து வேறொரு தெய்வத்தை வணங்கும் பிற சமயங்களை நான் விரும்ப மாட்டேன்.

அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலை நிறுத்தி தியானத்தில் ஈடுபடத் துவங்கி விட்டால், அவளின் உருவமன்றி எந்த நினைவுகளும் மனத்தில் எழாது... இது அன்பர்களுக்கு அன்னை வழங்கும் திருவரம்.. அவ்வரத்தைத் தன் வாழ்க்கையாகப் பெற்ற அபிராமிப் பட்டர் தன் மனநிலையை இவ்விடத்துத் தெளிவு படுத்துகிறார். உன் உருவம் மட்டுமே என் மனத்தில் நிலை நிற்கிறது. வேறெந்த உருவும் அவ்விடத்து வர இடமில்லை... உன்னடியார்களை விட்டு நான் என்றும் விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின் அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம் உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்.. மகாபாரத்தின் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை தர்மன் உலகில் உள்ள கெட்டவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாரும் கெட்டவர்களாகத் தென்படவே இல்லையாம். துரியோதனன் உலகில் உள்ள நல்லவர்களைத் தேடிப் புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாருமே நல்லவர்களாகப் படவில்லையாம்... ஆக அவரவர் மனத்தில் எழும் எண்ணங்களாகவே இவ்வுலகம் தென்படுகிறது. இவ்விடத்து அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம் அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறது. அப்படிப்பட்ட அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று அன்னையிடம் தெரிவிக்கிறார். "பர சம்யம் விரும்பேன்" வேறு சமயங்களை நான் விரும்புவதில்லை.. .எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே... ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன். "வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன இது குழப்பம்.? ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன? என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின் இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன.. அவை பிரம்மனின் சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம். இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்... மேலும் அங்கு மட்டுமல்ல, அண்டசராசரங்கள் எல்லாவிடத்தும் நிறைந்து நிற்பவளே... என் உள்ளத்தே விளையும் கள்ளே... அமுதமே... "களிக்கும் களியே.." ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... நீ இன்பத்திற்கும் இன்பம்.. கள்ளை அருந்துவோருக்கு அது மயக்கத்தை இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்....



பாடல் இருபத்து நான்கு

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த

அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்

பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

விளக்கம் : மாணிக்கமாக விளங்குபவளே... அம்மாணிக்கம் உண்டாக்கும் ஒளியாக விளங்குபவளே.. ஒளிரும் மாணிக்கங்களால் ஆன அணிகலனாக விளங்குபவளே.. அவற்றை நீ அணிவதால் அவ்வணிகளுக்கே அழகு சேர்ப்பவளே.. உன்னை வணங்காது விலகி நிற்பவர்களுக்குப் பிணியானவளே... உன்னைத் தேடி ஓடிவரும் பக்தருக்கு அப்பிணிக்கான மருந்தைப் போன்றவளே.. அமரர்களுக்கும் மாபெரும் விருந்தாய் தோன்றி நிற்கும் என் அபிராமி அன்னையே... அழகிய தாமரை மலரைப் போல் விரிந்திருக்கும் உனது பாதங்களை வணங்கிய பின்னர், இன்னொருவரை நான் வணங்க மாட்டேன்..

இந்த பாடலைத்தான் ஆதிபராசக்தித் திரைக் காவியத்தில் திரு. சௌந்தரராஜன் பாடுவார். இப்பாடலைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய "சொல்லடி அபிராமி" எனத் துவங்கும் பாடல் வரும். கண்ணதாசனுக்கு மிகவும் பிரியமான பாடல் இது... (அபிராமி அந்தாதிக்கு, கவியரசர் அவர்கள் உரை எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது). ஆனால் அப்பாடலில் மணியே... என்று தனது சிம்மக் குரலில் சௌந்தர ராஜன் துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி ஒலி கேட்கும்... அபிராமி அந்தாதியைக் கற்பதற்கு முன்னர் நான் அம்மணியொலியைத்தான் மணியே... மணியின் ஒலியே... என்று பாடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. பின்னர் அபிராமி அந்தாதியைக் கற்ற பின்னர் அவ்வெண்ணம் நகைச்சுவையாகி விட்டது..

மணியே - மாணிக்கமே... மணியின் ஒளியே... மாணிக்கம் சிந்தும் ஒளியைப் போன்றவளே... அவ்வொளிதரும் மாணிக்கங்களால் செய்யப் பட்ட அணிகலனைப் போன்றவளே... "அணியும் அணிக்கு அழகே" அவ்வணிகலன் அணிவதால் அணிகலனுக்கு அழகு சேர்ப்பவளே... உன்னை அழகு செய்ய மாந்தரெல்லாம் உனக்கு மாணிக்கத்தால் அணிகலன் செய்தார்.. ஆனால் தாயே... அவ்வணிகலன்களால் உனக்கு அழகு அல்ல... உன்னால் அணியப் பட்டதால்தான் அவ்வணிகலனே அழகு பெற்றது.... எத்தனை அழகிய உண்மை..... அன்னையை மட்டுமே எண்ணும் கண்களுக்கு அவளை விடுத்து வேறெந்த ஒன்றும் திருப்தியைத் தராது.. அன்னை.. அன்னையின் திருநாமம்... அவளது புகழ்... இவை மட்டுமே அபிராமிப் பட்டருக்கு அழகாய்த் தோன்றுகிறது.. ஆகையால்தான் அம்மையால் அவ்வணிகலன் அழகு பெற்றதாய்ப் பாடுகிறார். "அணுகாதவர்க்குப் பிணியே" உன்னை அணுகாதவர்க்கு, உன்னைத் தொழாதவர்களுக்கு, அவர்களது கர்மவினைப் பயனால் ஏற்படும் பிணி நீதான்... நம் கிராமப் பகுதிகளில் வெப்பு நோயை "அம்மை நோய்" என்றழைப்பது வழக்கு... "ஆத்தா வந்திருக்காப்பா..." என்றுதான் குறிப்பிடுவார்களே விடுத்து அதற்கு வேரொரு பெயரைத் தருவதில்லை... இவ்வாறு உன்னை அணுகாதவர்களுக்கு ஏற்படும் பிணியானவளே... அப்பிணிக்கும் மருந்தானவளே... வெப்பு நோயினால் ஏற்படும் துன்பத்தைத் தீர்க்க அனைவரும் மீண்டும் அன்னையையே நாடி வருகின்றனர். இதனால் பிணியுமானாள்... அப்பிணிக்கு மருந்துமானாள் அன்னை அபிராமி... அமரர்களுக்கெல்லாம் பெரும் விருந்தாக விளங்கக் கூடியவளே... அழகிய தாமரை மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர் இன்னொருவரை நான் பணிவது இல்லை... எத்தனை வைராக்கியம் அபிராமிப் பட்டருக்கு... அன்னை அபிராமி மட்டுமே தன் தெய்வம் .. அவள் விடுத்து வேறொரு தெய்வத்தை அவரால் கற்பனை கூட செய்ய இயலாது... அப்படிப்பட்ட வைராக்கிய பக்தி நிலையில் நின்றிருந்தார் அபிராமிப் பட்டர்... பிற தெய்வங்களை மட்டுமல்ல... யாரையுமே வணங்க மாட்டேன்... உலகில் பிறங்கு உலக இன்பங்களால் துன்புற்றிருக்கும் மாந்தர், தம் இன்பங்களுக்காக மாந்தரை வணங்குகின்றனர்.. பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.. ஆனால் நான் உன்னைத் தவிர வேறொருவரையும் வணங்குவதில்லை ... என்று தன் உறுதிநிலையைத் தெளிவு படுத்துகிறார் அபிராமிப் பட்டர்..

தொடரும் பாடல்களுக்கான விளக்கம் அடுத்த மடலில்... அன்பர்கள் நமது விளக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து, அவற்றை திருத்தித் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி...

நண்பர்கள் இவ்விளக்கங்களை www.chithiram.blogspot.com என்ற வலைப்பதிவிலும் படிக்கலாம்..

அபிராமி அந்தாதி 35 & 36

பாடல் முப்பத்தைந்து


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்

வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே



விளக்கம் : அபிராமி அன்னையே... திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்களையுடைய பாம்புப் படுக்கையின்மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே... பிறைச் சந்திரனின் மணம் வீசும் உனது சிறிய பாதங்களை எந்தன் தலைமேல் வைக்க நாங்கள் என்ன தவம் செய்தோம்...? எண்ணுதற்கியலாத அமரர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமோ?

"திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி" பிறைச் சந்திரனின் மணம் வீசும் சிறிய பாதங்கள்... அன்னை அபிராமியைக் குழந்தையாகக் காண்கிறார் அபிராமிப் பட்டர். அபிராமிப் பெண்ணின் சிறிய திருப்பாதங்கள் பிறைச் சந்திரனின் மணம் வீசும் தன்மை படைத்தவை.. (எங்கள் சுப்பிரமணியபுரத்தில் அருளாட்சி செய்யும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் பலருக்கும் சிறு குழந்தை வடிவில் காட்சியளித்துள்ளாள்.) பெருமை பெற்றுள்ள அன்னையின் சிறிய திருப்பாதங்கள் என்ன செய்கின்றனவாம்?? "சென்னி வைக்க" எந்தன் தலைமீது வைக்கின்றாள்.. உனது அழகிய திருப்பாதங்களை எங்கள் தலைமீது வைக்க நாங்கள் என்ன தவம் செய்து விட்டோம்?? என்று வியந்து பாடுகிறார்... அவளைத் தன் தலைமேல் ஏற்பது... ஆனால் அபிராமிப் பட்டரைப் பொறுத்தவரையில் அன்னையே அவரைத் தேடிவந்தாள்... அன்னையவள் தானே வலியவந்து தனது பொற்பாதங்களை அபிராமிப் பட்டரின் தலைமீது வைத்ததாக முன்னரொரு பாடலில் குறிப்பிட்டார் அல்லவா?? இவ்விடத்து அவள்தனது திருவடிகளைத் தன் தலைமீது வைக்க என்ன தவம் செய்தேன் என்று வியந்து பாடுகிறார்.. எண்ணிக்கையிலடங்காத அமரர்களுக்கும் இவ்வரிய பாக்கியம் கிட்டியதில்லை... ஆனால் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் என்ன தவம் செய்தேன்!... "தரங்கக் கடலுள் வெண் கண் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே " திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்கள் படைத்த ஆதிசேடன் என்னும் பாம்பையே படுக்கையாகக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் பரம்பொருளே.... இதென்ன விந்தை.... ? திருப்பாற்கடலுள் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருப்பவன் அந்தத் திருமகளைத் தன் திருமார்பில் கொண்ட திருமால் அல்லவா?? ஆனால் ஏன் பட்டர் அன்னையை அவ்வண்ணம் விளிக்கின்றார்? என்ற வினா எழுகின்றது... அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள்..என்னும் விடையை அன்னை நமக்குத் தந்தருளுகின்றாள்...அன்னை தானே திருமாலாகவும் காட்சியளிக்கின்றாள்..

பாடல் முப்பத்தாறு

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்

அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே



விளக்கம் : அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையே... அபிராமி அன்னையே... நீயே பொருளாகவும் இருக்கிறாய். அப்பொருளால் மாந்தர் பெறும் போகங்களாகவும் இருக்கின்றாய்.. அப்போகத்தால் அவர் மயங்கும் மயக்கமாகவும் இருக்கின்றாய். அம்மயக்கத்தின்பின் உண்டாகும் தெளிவாகவும் இருக்கின்றாய். என் மனத்தில் வஞ்சகம் எனும் இருளை இல்லாது நீக்கிய பேரொளியான உனது பேரருள் என்னவென்று என்னால் அறியமுடியவில்லை...

அன்னையின் பேரருள் அளப்பறியது... உலக மாந்தர்க்கு வேண்டிய பொருட்செல்வத்தை அன்னைத் தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம் அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள். போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம் அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது... அம்மையே அத்தெளிவாகவும் இருக்கின்றாள்... நோயும் அவளே.. நோய்க்கு மருந்தும் அவளே... இதென்ன விந்தை...! பொருட்செல்வத்தைக் கொடுத்து, போகத்தைக் கொடுத்து, மாயையில் சிக்கவைத்துப் பின்னர் தெளிவினைத் தருவதற்கு, முதலிலேயே அவள் தெளிவினைத் தந்தால் என்ன? எனும் வினா இவ்விடத்து எழுகின்றது.. பட்ட பின்னர் வரும் ஞானமே சிறந்த ஞானம் என்பது ஆன்றோர் வாக்கு... எனவே பொருளைக் கொடுத்து இறுதியில் அருளைக் கொடுத்துத் தெளிவாக்குபவள் அன்னை அபிராமியாக நிற்கும் பராசக்தி... .

"என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன்" உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில் இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும் இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பது எனக்குப் புரியவில்லையே அம்மா... மனித மனம் பல்வேறு நிலைகளில் மாற்றமடைகின்றது. பொருளிருக்கும் மாந்தரிடத்து அதைத் தக்கோர்ர்குத் தரவேண்டுமென்ற அருள் இருப்பதில்லை... இன்னின்னாருக்கு இதைத் தந்தருள வேண்டும் என்ற மனம் படைத்த மாந்தரிடம் அதற்குத் தகுந்த பொருள் இருப்பதில்லை... எவ்விடத்து பொருட்செல்வமும், அருட்செல்வமும் கூடி வருகின்றதோ... அவ்விடத்து அன்னையின் பேரருள் உள்ளதென்று உலகம் அறியும்... மனத்தை அடக்க வழி கற்றோரே பெரியோர் ஆவர்... மனம் அடங்குவதில்லை... ஆனால் அது அன்னையின் பேரொளியால் நிரம்பும்போது அவ்விடத்திருந்த மாயை என்னும் இருள் அகன்று போகின்றது. அன்னையே நம்மை அருளாட்சி செய்கின்றாள்... அன்னை நம்மை ஆண்டு கொண்ட பின்னர் மாயை நம்மை அண்டிடுமோ?? என் மனத்தை உனது அருளெனும் பேரொளியால் நிரப்பிய அன்னையே... உந்தன் அருள்யாது??? பொருளா?? பொருள் தந்திடும் போகமா?? அப்போகத்தால் விளையும் மருளா?? மருளழியும் வேளை வரும் தெளிவா?? என்னால் அறியமுடியவில்லையே..... அழகிய தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அம்பிகையே... என் அபிராமி அன்னையே.....

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்... அம்மையார் கீதா அவர்களுக்கு... தாங்கள் லலிதாம்பிகையை பற்றி எழுதியுள்ளதாக உரைத்தார்கள்..எனவே அபிராமி அந்தாதியிலும் தங்களுக்கு மிகச்சிறந்த தெளிவு உண்டென நம்புகிறேன்... நான் மீண்டும் உரைப்பது இது ஒன்றேதான்... அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியவரை மட்டுமே விளக்கங்கள் தருகின்றேன்... இவற்றில் பிழையிருந்தால் மன்னித்து அவற்றைத் திருத்தி வழிநடத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்று நம்புகின்றேன்... நன்றி....

அபிராமி அந்தாதி 35 & 36

அபிராமி அந்தாதி 31 & 32

அன்பர்களுக்கு அடியேனின் வணக்கங்கள்.. இன்று பதினாறாவது நாள். கடந்த பதினைந்து நாட்களாக அபிராமி அந்தாதியைக் கவனத்துடன் படித்து வரும் அன்பர்களுக்கு அன்னையின் பேரருள் என்றும் துணை நிற்க அவள் தாள் பணிந்து வேண்டுகிறேன். அன்பர் தமிழன் வேணு அவர்கள் பணித்த போது இத்தனை அரிய கருத்துக்கள் வெளிப்படும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை ஆழமாக நானும் அபிராமி அந்தாதியைக் கற்கின்றேன். அவற்றையே தங்களுக்கு வெளிப்படுத்துகின்றேன். என்னையும் கற்கவைத்த அவள் பேரன்பை எண்ணி வியக்கின்றேன்... தொடர்ந்து பாடல்களைக் கவனிப்போம்.

பாடல் முப்பத்தொன்று.

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

விளக்கம் : அன்னை அபிராமியும் அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஒரே உருவில் வந்து கீழோனான என்னையும் தங்கள்மேல் அன்பு செய்ய வைத்து அருள் புரிந்தார்கள். ஆகவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்களும் இல்லை.. என்னைப் பெற்றெடுக்க வேறு தாயும் இல்லை.. அழகிய தோள்களுடைய பெண்கள் மேல்வைத்த காம ஆசையும் இல்லாமல் போனது.

"உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து " உமையவளாகிய அன்னை அபிராமியும், அவளின் ஒரு பாகமாய் விளங்கும் ஈசனும் ஓர் உருவில் வந்து... சிவசக்தி சொரூபமாய், அர்த்த நாரீஸ்வரராய் எனக்குக் காட்சியளித்தார்கள். கிடைத்தற்கரிய பேறு அல்லவா? முன்னர் ஒரு பாடலில் இவ்வுருவைத்தான் அதிசயம் என்று பாடினார் அபிராமிப் பட்டர். அன்னையையும் அப்பனையும் ஏகவுருவில் காணும் பேறு பெற்றது அபிராமிப் பட்டர் செய்த பாக்கியம் அல்லவா...? அவர்கள் வந்து என்ன செய்தார்கள் தெரியுமா? "இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்" அவர்கள் இருவரும் ஓருருவாக இங்கு வந்து, எம்மையும் - இவ்விடத்து அழுத்தம் கொடுக்கிறார் அபிராமிப் பட்டர். கீழோனான என்னையும் தம் மேல் அன்பு செய்ய வைத்தார்கள். எந்தவிதக் கெட்ட எண்ணங்களும் இன்றி, அன்னையின் மேல் முழு பக்தியாக இருந்த அபிராமிப் பட்டர், தன்னை மிகக் கீழோன் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது. "இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை" இனி நான் வேறு சமயங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கில்லை... அன்னையின் பேரன்பு கிடைத்த பின்னர் வேறெந்த சமயங்கள் வேண்டும்? இந்த பூஜையை செய்தால் இறையருளைப் பெறலாம்.. இந்த மந்திரங்களைப் படித்தால் இறையருளைப் பெறலாம். இந்த வழியில் நின்றால் இறையருளைப் பெறலாம். என்று பல்வேறு சம்யங்கள் உரைக்கின்றன.. ஆனால் உங்கள் மேல்வைத்த அன்பு ஒன்றே எனக்கு உங்கள் பேரருளைப் பெற்றுத்தந்து விட்டது. இனி நான் சிந்தித்துப் பார்ப்பதற்கு வேறு சமயங்கள் இல்லை.. "ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை" இனி என்னை ஈன்றெடுக்க ஒரு தாய் இல்லை.. இதன் பொருள் நான் பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்டேன். இனி எனக்கு மறுபிறப்பு இல்லை என்பது.. பலமுறை பிறப்பறுப்பைப் பற்றி அபிராமிப் பட்டர் பாடுவது குறிப்பிடத்தக்கது. இனி என்னை ஓர் தாய் ஈன்றெடுப்பாளோ? இல்லவே இல்லை.. இத்துடன் என்பிறவி முடிந்தது.. ஏனெனில் என் அன்னை அபிராமியின் பேரன்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது என தனக்கு மீண்டும் பிறவி இல்லை என அபிராமிப் பட்டர் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அது அவரது பரிபூரண நம்பிக்கையைக் காட்டுகிறது. "அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே" அழகிய தோளுடைய பெண்டிரின் மேல்வைத்த காம ஆசையும் அமைதியுற்றது. மனிதரைப் பின் தொடர்ந்து துன்பமளிக்கும் ஓர் நோய் இக்காம நோய்.. அவற்றிலிருந்து எவ்வண்ணம் வெளிவருவது என்பதே இன்றைக்குப் பலருடைய கேள்வி.. அன்னையின் அன்பு நமக்குக் கிட்டி விட்டால் அக்காம ஆசை தானே அமைதியாகிவிடும். அன்னையே நீ உன் தரிசனத்தை எனக்குக் காட்டி என்னை உன்பால் அன்பு செய்ய வைத்து விட்டாய். இனி என் மனத்தில் நான் பெண்டிரின் மேல் கொண்ட ஆசை அப்படியே அமைதி பெற்றுவிடும்...



பாடல் முப்பத்திரண்டு

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே

விளக்கம் : அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என் அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன். என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான் என்னவென்று சொல்லுவேன்?

இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள ஆசையே.. ஆசையை ஒழித்தார் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என் துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வயமம் எனக்கு அதைப் பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு... என்றே போய்க்கொண்டிருந்தேன்... ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத் தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும் நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்.. நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம்.. நன்றி...

திங்கள், நவம்பர் 01, 2010

அபிராமி அந்தாதி 33 & 34

பாடல் முப்பத்து மூன்று


இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே

உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச் செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான் நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய்.

முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும் அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார்.

"இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது" யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம். நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும் போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய். "அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின் சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித் தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என் வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.

மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள். வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும் இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக் கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில் கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும் வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவ்ர்களுக்கு எப்பேர்ப்பட்ட புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும் பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும் வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான் அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன் கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.

பாடல் முப்பத்து நான்கு

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்

தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்

பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே



விளக்கம் : தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன... நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக... தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..

எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத் தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில் நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச் சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும் மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன் பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...? "சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்... அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற் செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்... "அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே... "திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,.. உனது கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..