புதன், மார்ச் 25, 2009

மௌனமே சாட்சி....

நீள்வானம்
மழை சொரிந்த
விழா நாள் அது...

புதிதாய்ப்
பறந்த
பட்டாம் பூச்சியாய்
கண்ணுக்கு
விருந்தளித்துப் போனாய்....

காரணம்
ஏதுமின்றி
கண்கள்
சந்தித்துக் கொண்டதால்
நீல வானுக்கு உபயம்
மின்னலும் மழையும்...

நீண்ட
பல இரவுகளில்
அந்நாளின் நினைவுகள்
என்னை.....
.................................
...............................


இந்நாளில்
வான் மழை தவறினாலும்...
உன் நினைவுகளால்
கண்களில் மட்டும்..
..............
..........
......................
...................................
பலத்த மௌனமே
நம் காதலின் சாட்சியாய்.....


உறங்காது விழித்த
இரவுகளில்
உன் நினைவுகள்
மட்டுமே......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வெள்ளி, மார்ச் 20, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து...

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "மனோன்மணீயத்தின்" மொழி வாழ்த்துப் பாடலே...
அக்காலம் தொட்டுத் தமிழர்கள் பிற திராவிட மொழிகளையும் மதித்தே வந்துள்ளனர் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்ததோர் உதாரணம். ஆயினும் அன்றைய முதல்வரும் இன்றைய முதல்வருமான கலைஞர் அவர்கள் பிறமொழிகள் பற்றிய வரிகளை நீக்கியும், இசைக்காக சில வரிகளை வரிசை மாற்றம் செய்தும் அழகு செய்தார். மெல்லசை மன்னரின் இசையில் டி. எம். சௌந்தர் ராஜனும், பி. சுசீலாவும் பாட தமிழ்த்தாய் வாழ்த்து தயாரானது. இன்றளவும் அந்தப் பாடலைக் கேட்கும் போதும், பாடும் போதும், இனம் புரியாத உணர்வு மேலிடும். எங்கள் தமிழ் எந்தன் தாய் மொழி என்ற எண்ணத்தில் திளைப்பேன்.
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே... என்று உச்சக் குரலில் பாடும் போது, மனதில் ஏற்படும் துள்ளலோ சொல்லற்கரியது.
ஆனாலும் கல்லூரியில் மனோன்மணீயம் கற்கும் போதுதான் அந்தப் பாடலின் உண்மையான வரிகளைக் கண்டோம். தமிழன் மீது பெருமிதம் கொண்டோம்.
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் உதரத்தினின்றே உதித்து எழுந்தன. ஒன்றே பலவாயிடினும், ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாத உன் சீரிளமைத் திறமையைக் கண்டு செயல் மறந்து வாழ்த்துகிறேன் என்று பாடுவார்.
எத்தகைய பெருந்தன்மை. ... மாற்று மொழிகளை மதியாதவர்கள், மாற்று மொழியினரை மதியாதவர்களைக் கண்ட தேசத்தில் அவர்கள் மொழியும், எந்தாயின் சேய் மொழிகள் என்று கூறி, அதன் பெருமையைப் பாடும் தன்மை, தமிழனைத் தவிர யாருக்கும் வருவதில்லை.
பாரதியோ சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றான்.
கலைஞர் கைவண்ணத்தில் உருவான, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுக திரைக் காவியமான பராசக்தியிலும், "வாழ்த்துப் பாடல்" (அதாங்க வாழ்க வாழ்கவே... வாழ்கவே,,,, அப்படின்னு வருமே... அதேதான்....) பிற திராவிட மொழிகளையும் வாழ்த்துகிறது.
பிற திராவிட மொழிகளுக்கும் தமிழே தாய் என்பதற்கான ஆதாரங்களைக் காண்போமா?? (நாம் மொழி ஆராய்ச்சியாளன் அல்ல... ஆனபோதிலும் என் அறிவுக்கு எட்டியவரை... சிறு முயற்சி....)
இன்றைக்கு நாம் பேசிவரும் தமிழும், ஆதித் தமிழில் இருந்து முற்றிலும் மாறுபாடு கொண்டதாக அறிகிறோம். ஆயினும் தாய்த் தமிழின் பெரும்பான்மையான விடயங்களை நாமே காத்து வருவதால் நம்மைத் தமிழர் என்னலாம் (தப்பா இருந்தா மன்னிச்சிருங்க.... இதற்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் கோனார் தமிழ் உரையைப் பார்க்காமலேயே அல்லது தமிழ்ப் ஆசிரியராக இல்லாமலேயே சங்க இலக்கியப் பாடல்களுக்கெல்லாம் பொருள் உரைக்க வேண்டும்,,,,,,, முடியாது இல்லையா?? ஆனாலும் நாம தமிழர்தாம்யா.. என்ன விட்டுருங்க....)
தமிழகத்தில் வாழ்ந்தவரை அதன் பொருள் எமக்கும் விளங்கவில்லை. தமிழகம் தாண்டி வந்த பின்னர்தான் பிற மொழிகளோடு அறிமுகம் நேர்ந்தது. அச்சமயத்தில்தான் உண்மை உணர்ந்தோம்.
அதற்கும் மனோன்மணீயத்தில் இருந்தே சில எடுத்துக்காட்டுக்கள் வழங்குகிறேன். சில பதங்கள் வடமொழியாகவும் இருக்கக் கூடும். ஆசிரியப் பெருமக்கள் மன்னித்து அருள்க.
வதுவை - இதற்குத் திருமணம் என்று பொருள்... கன்னடத்தில் "மதுவே" என்று சொல்கின்றார்கள்...
ஓதுதல் - படித்தல். கன்னடத்திலும் இதற்கு அதுதான் பொருள்...
"ஓலை விளக்கியிட்டு" என்று பட்டினத்தார் பாடலொன்று தொடங்குறது... இவ்விடம் ஓலை என்பதற்கு காதணி (அதாங்க கம்மல்) என்று பொருள்.. கன்னடத்திலும் ஓலை என்பது காதணியையே குறிக்கின்றது..
நாம் செவி என்பதை அவர்கள் கிவி என்றழைக்கின்றனர்.
செப்புதல் என்ற பதம் அப்படியே தெலுங்கில் பயன் படுத்தப் படுகிறது.
"நென்னலே வாய் நேர்ந்தான்" என்பாள் கோதை நாச்சியார். நென்னலே என்ற சொல் நேற்றைய தினத்தைக் குறிக்கும் சொல்லாகக் கன்னடத்தில் பயன்படுகிறது. தமிழ் வழக்கில் இச்சொல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
"எல்லாரும் போந்தாரோ" என்பதும் திருப்பாவையே.. போந்தார் என்ற சொல் தமிழ் வழக்கில் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பயன்பாட்டில் உள்ளது.
முதலூரைச் சேர்ந்த புலவர் சத்திய ராசன் மலையாளிகளைப் புகழ்வார். தூய தமிழின் பல சொற்களை அவர்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளதாக சொல்வார். அவர் சொல்லும் சிறு உதாரணம்.
எழு ஞாயிறு, விழு ஞாயிறு என்பாதாகும். இத்தகைய தூய தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லையே என்ற வேதனை அவருக்குண்டு. நாம் இன்னமும் உதய சூரியன் என்றல்லவா பயன் படுத்துகிறோம்.. என்பார்.
இப்படி யோசித்து யோசித்துப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆன போதிலும் இவை எல்லாமே சொல்லுகின்ற ஒரே உண்மை "தமிழே திராவிட நாட்டின் தாய் மொழி.. மூத்த மொழி... முதல் மொழி...."
"சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் பெயரை "பரிதிமாற்கலைஞர்" என்று தமிழாக்கம் செய்து அதனையே பழக்கத்தில் வைத்திருந்த தமிழறிஞர் எங்கே.... ஊரெங்கும் தமிழ் முழக்கம் செய்து விட்டுத் தன் இல்லத்தில் தமிழுக்கு இடம் தர மறுக்கும் தமிழ்க்குடிதாங்கிகள் எங்கே.....

இடைத் தேர்தல்

பளபளன்னு ரோடு போட்டாவ....!

படபடன்னு அமைச்சருவ வந்தாவ...!

எல்லா எம்.எல்.ஏக்களும்எங்கூருக்கு வந்துட்டாவ..!.

அமைச்சரைப் பாக்கையிலே மக்கஅழகழகா சிரிச்சாவ...!

அவிய போன பின்னாடி

அடங்கொப்புரானேன்னு மலைச்சாவ...!

ஆனாலும் செஞ்சாவய்யா..

அஞ்சு லெட்சம் எங்க கோயிலுக்கு...!

பெருமையாத்தான் இருக்கு

பக்கத்து தொகுதிக்காரன் பாவிப்பய சாவலியேன்னும் போது...!

(சாத்தான் குளம் இடைத்தேர்தலின்போது எழுதியது. நேற்றைய தினம் எனது புத்தகங்களை அடுக்கும் போது கிடைத்தது. உங்கள் பார்வைகாக.....)

மனோன்மணீயம் கதைச்சுருக்கம். (நண்பர்களுக்காக...)


ஜீவகவழுதி மதுரையில் இருந்து பாண்டிய நாட்டின் தலைநகரத்தினை நெல்லையம்பதிக்கு கொடிய அமைச்சன் குடிலனின் சூழ்ச்சியால் மாற்றியமைப்பதில் இருந்து இந்நாடகம் துவங்குகிறது..குடிலன் கொடியவன் என்று அனைவரும் அறிந்திருந்தும், மன்னனுக்கு எடுத்துரைத்தும் அவன் அதனை அறியவில்லை... ஆயினும் துன்பத்தில் காப்பது குருவின் கடமையல்லவா..? தன் கடமை செய்ய வருகிறார் அரச குரு சுந்தர முனிவர். தனக்கென்று ஒரு அறை மட்டும் பெற்றுக் கொண்டு அது தனது ரகசிய அறை என்று திறவுகோலைத் தன் வசம் வைத்துக் கொள்கிறார்..மன்னன் மகள் மனோன்மணி இந்நாடகத்தின் தலைவி. சிறுவயதிலேயே தன் தாயை இழந்து விட்ட அவளுக்குத் தன் தந்தையின் மீது அலாதி அன்பு. சிவ பக்தி கொண்ட அவள் சிவநெறியிலேயே வாழ்க்கை நடத்துகிறாள். அரண்மனையில் இருந்தும் அவள் மனது துறவையே நாடுகிறது.. அவள் தோழி வாணி, நடராசன் என்பவனைக் காதலிக்கிறாள். நடராசன் ஒரு கவிஞன். ஒரு மறவன். பலருக்கு அவனைப் புரியவில்லை. ஒரு நாங்கூழ் புழுவைக் கண்டாலும் அதனிடம் பேசுவான், கூழாங்கற்களோடும் பேசுவான். இவ்விருவர் காதலும் மென்மேலும் வளர்கிறது. தனது காதலைத் தன் தலைவியிடம் சொல்லி அகம் மகிழ்கிறாள் வாணி. மனோன்மணியோ அவளுக்கு சிவநெறியில் ஈடுபடச்சொல்லி அறிவுறுத்துகிறாள். அப்போது அவளது செவிலி வந்து "அம்மா நீ வளர்த்த புன்னை மரம் பூத்துள்ளது" என்கிறாள். வாணியோ "உனக்குக் கண்டிப்பாகக் காதல் மலரும்." என்று உறுதியளிக்கிறாள்.. மறுத்துப் பேசும் மனோன்மணிக்கு அன்றிரவு ஒரு கனவு வருகிறது. கனவில் அவள் ஒரு கட்டிளம் வாலிபனோடு காதல் கொள்கிறாள். வாணியின் கூற்று பலிக்கிறது. கனவில் கண்டாள் ஆயினும் அவ்வாலிபனோடு நனவிலும் வாழத் துடிக்கின்றாள்... சுரத்தில் விழுகின்றாள்..செவிலி உடனே மருத்துவச்சியை அழைத்து வருகிறாள். சுரம் தணிந்தபாடில்லை. ஜீவகனோ மனம் வருந்துகின்றான். அச்சமயத்தில் அவ்விடம் வரும் சுந்தர முனிவர் சுரத்தின் தன்மை அறிகிறார். மன்னவனிடம் மகளுக்கு மாலை சூடும் வேளை வந்துவிட்டதாகக் கூறுகிறார். "என் மகளுக்கு ஏற்ற துணையை எங்கு தேடுவேன்?" என்று ஜீவகன் வினவ, சேர நாட்டு மன்னன் புருடோத்தமன், மனோன்மணிக்குத் தகுந்த இணை என்று புகல்கின்றார். அரசனும், அமைச்சரிடம் இது பற்றி விவாதிப்பதாகக் கூறுகிறான். இவ்வேளையில் வாணியின் தந்தை சகடர் அரசனிடம் வந்து தன் மகள் வாணிக்கு குடிலன் மகன் பலதேவனுக்குத் திருமணம் செய்ய இருப்பதாகவும், அவள் நடராசன் என்பவனைக் காதல் செய்வதாகவும், நடராசன் ஒரு வீணன் என்றும் தன் மகள் திருமணம் செய்ய மன்னவன் அருள் புரிய வேண்டும் எனவும் வேண்டுகிறான்.
மன்னவனும் அதற்கு வாக்குறுதி அளிக்கிறான். வாணியை அழைத்து அறிவுரை செய்கிறேன். அவளோ மரணதேவனுக்கு மாலை சூடினாலும், பலதேவனை மணவேன் என்று சொல்கிறாள்.. மன்னவன் தனது மகள் திருமணம் பற்றி குடிலனுடன் ஆலோசனை செய்கிறான். குடிலன் இவ்விடத்தும் தன் சதியை மன்னனிடம் செயல் படுத்த நினைக்கிறான். மணம் பேசுவதற்குத் தன் மகன் பலதேவனை அனுப்புவதற்கு அனுமதி கோருகிறான். மன்னனும் சம்மதிக்கிறான்.சேர நாட்டுடன் பாண்டிய நாட்டுக்குச் சொந்தமான நன்செய் நாட்டினையும் (இன்றைய நாஞ்சில் நாடு அதாங்க நம்ம குமரி மாவட்டம்) அவனே ஆட்சி செய்து வருவதால், தன் மகளை மணந்து கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியினை அவனுக்கே தந்து விடுவதாகக் கூறும் ஓலையினை எழுதித் தன் மகனிடம் கொடுத்து அனுப்புகிறான். அதன் மூலம் போர் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறான். தற்சமய சூழ்நிலை பாண்டியனுக்குத் தக்கதாக இல்லை. எனவே போரில் நிச்சயம் அவன் தோற்று விடுவான். சேரனிடம் பேசி எப்படியாவது பாண்டிய நாட்டுக்குரிய சேர மன்னனின் பிரதிநிதியாகி விட வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறான். அவன் விருப்பம் போலவே பலதேவனும் அனந்தை (அதாங்க திருவனந்த புரம்) செல்கிறான். அங்கே....சேர மன்னன் புருடோத்தமன் கனவிலே ஒரு காரிகையைக் கண்டு காமுறுகிறான். அவள் யாரென்று அறியாது தவிக்கிறான். அவ்வமயத்தில் பலராமன் ஓலை கொண்டு வருகிறான். நன்செய் நாடு பாண்டியனுக்கு என்று சொல்லப் பட்ட செய்தியைக் கேட்டு மனம் பதைக்கிறான். முறைப் படி மணமகனே, மணமகளை நாடிச் செல்ல வேண்டும் என்றும், "உமது ஊரின் வண்டினைத் தேடி மலரினை அனுப்புவரோ" என்று ஏளனம் செய்கின்றான். இத் தவறுக்காக, பாண்டியன் மன்னிப்பு கேட்கும் விதமாக வேப்பம் பூ மாலையும், ஒரு குடம் தாமிர பரணி நீரும் தர வேண்டும். இல்லாத பட்சத்தில் நெல்லை நோக்கி படை எடுத்து வருவதாக சொல்லி அனுப்புகிறான். வந்த காரியம் சுலபமானதில் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புகிறான் பலதேவன்.போர் மூள்கிறது..மனோன்மணியின் நலம் விரும்பியும், படைத் தலைவனுமான நாராயணன் உள்ளம் கொதிக்கிறான். மன்னனுக்கு அறிவுறுத்துகிறான். ஆயினும் மன்னன் குடிலனின் மாயையில் இருந்து விடுபடாததல், நாராயணனை அவமானப் படுத்துகிறான்.போர்க்களத்தில் நாராயணன் இருந்தால் பாண்டியன் வெல்லக்கூடிய வாய்ப்பு வந்து விடும் என்று அஞ்சி அவனைக் கோட்டைக் காவல் செய்யப் பணிக்கிறான் குடிலன்.மனம் நொந்த நாராயணன் அதையும் ஏற்றுக்கொள்கிறான்
போர்க்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மன்னனுக்கு ஆபத்து என்ற செய்தி வர நாராயணன் களத்துக்கு விரைந்து மன்னனைக் காக்கிறான். ஆயினும் காயமடைந்த மன்னன் மயக்கமுறுகிறான்.விழித்ததும் குடிலனை சந்திக்கிறான் மன்னன். குடிலனின் வஞ்சகப் பேச்சால் நாராயணனுக்கு மரண தண்டனை என்று ஆணையிடுகிறான். போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றதும் தன்னையே மாய்த்துக் கொள்ள விழையும் மன்னனுக்கு மகள் நினைவு வாட்டுகிறது. இவ்விடம் விட்டுப் போவது எவ்வாறு என்று யோசிக்கிறான். அப்போது சுந்தர முனிவர் வருகிறார். தான் வாங்கிய்ருந்த அறையின் உள்ளே சுரங்கப் பாதை நடராசனின் உதவியுடன் அமைத்திருப்பதாகவும், அதன் வழியாக அனைவரும் தப்பிச்சென்று விடலாம் என்றும் அறிவுறுத்துகிறார்.இதையும் மன்னன், குடிலனுக்கு சொல்ல, குடிலனோ, மணமுடியாத பெண் இந்நேரத்தில் செல்வது தகாது என்றும், அவளுக்கு மணமுடித்துப் பின்னர் அழைத்துச் செல்லலாம் என்றும் சொல்கிறான். தகுந்த மணமகனாக குடிலன் மகன் பலதேவனையே தேர்வு செய்கிறான் மன்னன். சுரங்கமே மணவரங்கமாக அலங்கரிக்கப் படுகிறது. மனோன்மணியும் மறுப்பேதும் சொல்லவில்லை. தந்தையின் சொல்லினை ஏற்கிறாள். அச்சமயத்தில் மன்னனிடம் இரு வாக்குறுதிகள் பெறுகிறாள். வாணி மற்றும் நடராசனின் திருமணத்தை நடத்துவது, நாராயணனை விடுதலை செய்வது என்பவைதான் அது.வாணியோ பலதேவனை மனோன்மணி மணம் புரிந்தால், தானும் நடராசனும் மணம்செய்யப் போவதில்லை என்றுரைக்கிறாள்.சுரங்கத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வாணி பாடுகிறாள். இச்சமயத்தில் குடிலன் சுரங்கத்தின் முடிவுப்பாதையைத் தேடிச் செல்கிறான்.அங்கே புருடோத்தமன் தன் காதலியின் நினைவாகத் தனிமையில் இருக்கிறான். குடிலன் அவனைக் கண்டதும், வஞ்சகப் பேச்சினை ஆரம்பிக்கிறான். வஞ்சி நாட்டரசனோ அவன் வஞ்சனையை ஏற்கவில்லை. குடிலனைக் கைது செய்து சுரங்கப் பாதை வழியே வருகிறான். அங்கே மணவறையில் தன் ஆருயிர்க் காதலியைக் காண்கிறான். உடனே வெளிப்பட்டு அவளை நோக்கிச் செல்ல, அவளும் தான் கனவில் கண்டு இன்புற்றது இவனே என்றுணர்ந்து அவனுக்கு மாலையிட்டு மயங்குகிறாள். பாண்டிய வீரர்கள் அவனைத் தாக்க முயல, சேர நாட்டு வீரர்கள் அவ்விடம் சுற்றி வளைக்கிறார்கள்.புருடோத்தமன் குடிலனின் வஞ்சனையை ஜீவகனுக்குத் தெரிவிக்கிறான். ஜீவகனும் தெளிவடைய கதை இனிதே நிறைவடைகிறது............அப்பாடா...ஒரே மூச்சில சொல்லி முடிச்சிட்டேம்பா...தயவு செய்து யாராவது பின்னூட்டம் எழுதுங்க....../

மனோன்மணி

எம் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு நாடகப் பாத்திரம் பற்றி இவ்விடம் பேசுகிறேன். மனோன்மணீயம் நூலின் நாயகி மனோன்மணியினைப் பற்றிப் படித்தால் நீங்களும் அவளுக்கு விசிறிகள் ஆகிவிடுவீர்கள். தென்பாண்டி நாட்டில் பலரது வீடுகளில் குலதெய்வமாக வணங்கப் படும் மனோன்மணியும் இவளும் ஒன்றோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இந்நாடகத்தில் வரும் நற்கதாபாத்திரங்கள் அனைத்தும் "பாண்டிய நாட்டின் குலக் கொழுந்தான" மனோன்மணியைக் காப்பதற்கே முயற்சி மேற்கொள்ளும்போது எனக்கு வியப்பு ஏற்பட்டது.. அவளிடம் ஏன் இவர்களுக்கு ஈர்ப்பு என்று.. ஆனால் கதை செல்கின்ற போக்கில் நானும் அவளால் ஈர்க்கப் பட்டேன்.சிவ வழிபாடு செய்து, அவனை நாடியிருப்பதே இன்பம் என்று அரண்மனையிலும் துறவு வாழ்க்கை வாழ்கிறாள் நாயகி. பஞ்சு மெத்தை இருக்கும் போதும் அவள் துயில் கொள்வது வெறுந்தரையில்... அவளது தோழி வாணி தன் காதலைப் பற்றியும் காதலன் நடராசன் பற்றியும் பேசும் போது, காதலை இகழும் மனோன்மணிக்கு ஓரிரவில் காதல் சுரம் ஏற்படுகிறது. கனவில் கண்ட மறவன் மாமன்னன் பெயரென்ன என்று அறியாது துடிக்கும் இம்மானுக்கு சுரமேற்பட, காரணம் அறியாது அரசன் தவிக்கிறான். குல குரு சுந்தர முனிவர் சுரத்தின் தன்மையறிகிறார். இளவரசிக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறார். சேரநாட்டுத் தலைவன் புருடோத்தமனை முன் மொழிகிறார். திருமண ஏற்பாடு அமைச்சன் குடிலன் சதியால் போராக மாறுகிறது. போரில் பாண்டியன் தோற்றுவிட்ட தருணத்தில் அனைவரும் மனோன்மணியைக் காக்கவே முயல்கின்றனர். அமைச்சனும் தந்திரமாகத் தமது மகனுக்கு மனோன்மணியை மணமுடித்து வைக்க அரசனைத் தூண்டும் போது மதிகெட்ட மன்னவனும் மனமிசைந்து விடுகிறான். தன் மகளிடம் இதற்காக அவன் வேண்டும் போது, அவள் மன்னனிடம் கேட்ட இருவரங்களில்தான் மனோன்மணியின் தன்மை வெளிப்படுகிறது. தனக்கு ஆபத்து நேரிட்ட போதும், தன்னை அண்டியவருக்கு நல்லது செய்ய வேண்டியது தெய்வத் தன்மை. அத்தெய்வத் தன்மை பூண்டவளாக மனோன்மணி எனக்குக் காட்சியளித்தாள். அவளைத் தெய்வமெனவேக் கொண்டாடினேன் அக்கணத்தில்,....அவள் கேட்ட வரம் இதுதான். "தனது தோழி வாணி அவள் காதலனோடு சேர்த்து வைக்கப் பட வேண்டும். சூழ்ச்சியால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தன் தோழன் நாராயணன் விடுதலை செய்யப் பட வேண்டும்" இவ்விரு வரங்களையும் அவள் கேட்ட சூழலை நீங்கள் கண்டீர்களாலானால் கண் கலங்கி விடுவீர்கள். காதலை வெறுத்த அவளுக்கும் ஒரு அறியாத அழகனோடு காதல் பிறக்க, மன்னன் மகளாலானும், மங்கையரின் காதல் சுதந்திரம் பெற்றோர் கையில் என்றறியும் வேளையில் குமுறுகிறாள். தந்தையையும் நாட்டையும் காக்கவே தன் காதலை மறந்து விட்டு, தந்தை சுட்டிய அமைச்சன் மகன் பலதேவன் இழிவானவன் என்று தெரிந்தும் அவனை மணக்க இசைகிறாள்..
"நீ உன் காதலனோடு இணையாவிட்டால் நானும் நடராசனும் மணம் புரிவதில்லை" என்று அழும் தோழிக்கு ஆறுதல் கூறி அவர்கள் மணம் முடிக்கும் நல்வாய்ப்பினை வரமாகப் பெறுகிறாள். மறவர்களின் ஆதரவோடு புரட்சியில் ஈடுபட்டான் என்ற பழியியனை சுமந்த தன் தோழனுக்கு விடுதலை பெற்றுத் தருகிறாள்.இத்தன்மைகள் அவள் பெற்றிருந்த காரணத்தால்தான் அனைவரும் அவளைத் தெய்வமெனக் கொண்டாடினார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.. ஆயினும் வழக்கம்போல் இறுதிக் காட்சியில் தன் நாயகனைக் கண்டதும் காதல் பெருகிட ஓடி சென்று அவன் மார்பில் மயங்கி விழும்போது, அறியாத ஆனந்தத்தோடு நமது கண்களும் பனிக்கின்றன. சேரமன்னனும் முன்னரே இவளைக் கனவில் கண்டு காமுற்றவனாகையால், இருவரது காதலும் இறுதி வேளையில் கை கூடுகின்ற போது, சொல்லவொண்ணா ஆனந்தமேற்படுகிறது...வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் மனோன்மணீயம் படித்துப் பாருங்கள்..