வெள்ளி, மார்ச் 20, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து...

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "மனோன்மணீயத்தின்" மொழி வாழ்த்துப் பாடலே...
அக்காலம் தொட்டுத் தமிழர்கள் பிற திராவிட மொழிகளையும் மதித்தே வந்துள்ளனர் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்ததோர் உதாரணம். ஆயினும் அன்றைய முதல்வரும் இன்றைய முதல்வருமான கலைஞர் அவர்கள் பிறமொழிகள் பற்றிய வரிகளை நீக்கியும், இசைக்காக சில வரிகளை வரிசை மாற்றம் செய்தும் அழகு செய்தார். மெல்லசை மன்னரின் இசையில் டி. எம். சௌந்தர் ராஜனும், பி. சுசீலாவும் பாட தமிழ்த்தாய் வாழ்த்து தயாரானது. இன்றளவும் அந்தப் பாடலைக் கேட்கும் போதும், பாடும் போதும், இனம் புரியாத உணர்வு மேலிடும். எங்கள் தமிழ் எந்தன் தாய் மொழி என்ற எண்ணத்தில் திளைப்பேன்.
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே... என்று உச்சக் குரலில் பாடும் போது, மனதில் ஏற்படும் துள்ளலோ சொல்லற்கரியது.
ஆனாலும் கல்லூரியில் மனோன்மணீயம் கற்கும் போதுதான் அந்தப் பாடலின் உண்மையான வரிகளைக் கண்டோம். தமிழன் மீது பெருமிதம் கொண்டோம்.
கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன் உதரத்தினின்றே உதித்து எழுந்தன. ஒன்றே பலவாயிடினும், ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாத உன் சீரிளமைத் திறமையைக் கண்டு செயல் மறந்து வாழ்த்துகிறேன் என்று பாடுவார்.
எத்தகைய பெருந்தன்மை. ... மாற்று மொழிகளை மதியாதவர்கள், மாற்று மொழியினரை மதியாதவர்களைக் கண்ட தேசத்தில் அவர்கள் மொழியும், எந்தாயின் சேய் மொழிகள் என்று கூறி, அதன் பெருமையைப் பாடும் தன்மை, தமிழனைத் தவிர யாருக்கும் வருவதில்லை.
பாரதியோ சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றான்.
கலைஞர் கைவண்ணத்தில் உருவான, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுக திரைக் காவியமான பராசக்தியிலும், "வாழ்த்துப் பாடல்" (அதாங்க வாழ்க வாழ்கவே... வாழ்கவே,,,, அப்படின்னு வருமே... அதேதான்....) பிற திராவிட மொழிகளையும் வாழ்த்துகிறது.
பிற திராவிட மொழிகளுக்கும் தமிழே தாய் என்பதற்கான ஆதாரங்களைக் காண்போமா?? (நாம் மொழி ஆராய்ச்சியாளன் அல்ல... ஆனபோதிலும் என் அறிவுக்கு எட்டியவரை... சிறு முயற்சி....)
இன்றைக்கு நாம் பேசிவரும் தமிழும், ஆதித் தமிழில் இருந்து முற்றிலும் மாறுபாடு கொண்டதாக அறிகிறோம். ஆயினும் தாய்த் தமிழின் பெரும்பான்மையான விடயங்களை நாமே காத்து வருவதால் நம்மைத் தமிழர் என்னலாம் (தப்பா இருந்தா மன்னிச்சிருங்க.... இதற்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் கோனார் தமிழ் உரையைப் பார்க்காமலேயே அல்லது தமிழ்ப் ஆசிரியராக இல்லாமலேயே சங்க இலக்கியப் பாடல்களுக்கெல்லாம் பொருள் உரைக்க வேண்டும்,,,,,,, முடியாது இல்லையா?? ஆனாலும் நாம தமிழர்தாம்யா.. என்ன விட்டுருங்க....)
தமிழகத்தில் வாழ்ந்தவரை அதன் பொருள் எமக்கும் விளங்கவில்லை. தமிழகம் தாண்டி வந்த பின்னர்தான் பிற மொழிகளோடு அறிமுகம் நேர்ந்தது. அச்சமயத்தில்தான் உண்மை உணர்ந்தோம்.
அதற்கும் மனோன்மணீயத்தில் இருந்தே சில எடுத்துக்காட்டுக்கள் வழங்குகிறேன். சில பதங்கள் வடமொழியாகவும் இருக்கக் கூடும். ஆசிரியப் பெருமக்கள் மன்னித்து அருள்க.
வதுவை - இதற்குத் திருமணம் என்று பொருள்... கன்னடத்தில் "மதுவே" என்று சொல்கின்றார்கள்...
ஓதுதல் - படித்தல். கன்னடத்திலும் இதற்கு அதுதான் பொருள்...
"ஓலை விளக்கியிட்டு" என்று பட்டினத்தார் பாடலொன்று தொடங்குறது... இவ்விடம் ஓலை என்பதற்கு காதணி (அதாங்க கம்மல்) என்று பொருள்.. கன்னடத்திலும் ஓலை என்பது காதணியையே குறிக்கின்றது..
நாம் செவி என்பதை அவர்கள் கிவி என்றழைக்கின்றனர்.
செப்புதல் என்ற பதம் அப்படியே தெலுங்கில் பயன் படுத்தப் படுகிறது.
"நென்னலே வாய் நேர்ந்தான்" என்பாள் கோதை நாச்சியார். நென்னலே என்ற சொல் நேற்றைய தினத்தைக் குறிக்கும் சொல்லாகக் கன்னடத்தில் பயன்படுகிறது. தமிழ் வழக்கில் இச்சொல் இப்போது பயன்பாட்டில் இல்லை.
"எல்லாரும் போந்தாரோ" என்பதும் திருப்பாவையே.. போந்தார் என்ற சொல் தமிழ் வழக்கில் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பயன்பாட்டில் உள்ளது.
முதலூரைச் சேர்ந்த புலவர் சத்திய ராசன் மலையாளிகளைப் புகழ்வார். தூய தமிழின் பல சொற்களை அவர்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளதாக சொல்வார். அவர் சொல்லும் சிறு உதாரணம்.
எழு ஞாயிறு, விழு ஞாயிறு என்பாதாகும். இத்தகைய தூய தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லையே என்ற வேதனை அவருக்குண்டு. நாம் இன்னமும் உதய சூரியன் என்றல்லவா பயன் படுத்துகிறோம்.. என்பார்.
இப்படி யோசித்து யோசித்துப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆன போதிலும் இவை எல்லாமே சொல்லுகின்ற ஒரே உண்மை "தமிழே திராவிட நாட்டின் தாய் மொழி.. மூத்த மொழி... முதல் மொழி...."
"சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் பெயரை "பரிதிமாற்கலைஞர்" என்று தமிழாக்கம் செய்து அதனையே பழக்கத்தில் வைத்திருந்த தமிழறிஞர் எங்கே.... ஊரெங்கும் தமிழ் முழக்கம் செய்து விட்டுத் தன் இல்லத்தில் தமிழுக்கு இடம் தர மறுக்கும் தமிழ்க்குடிதாங்கிகள் எங்கே.....

1 கருத்து:

selventhiran சொன்னது…

தமிழ்ப்பற்று, தமிழ்ப்பற்று என்கிறார்களே... பற்றினால் தமிழ் வாழுமா அல்லது ஏதேனும் வரவு செய்தால் வாழுமா...?!

இளங்கோவும், கம்பனும், பாரதியும் வரவு வைத்தார்கள். அவர்கள் வழியொற்றி வந்தவர்கள் வெறும் பற்றல்லவா வைத்தார்கள்.