வெள்ளி, மார்ச் 20, 2009

மனோன்மணீயம் கதைச்சுருக்கம். (நண்பர்களுக்காக...)


ஜீவகவழுதி மதுரையில் இருந்து பாண்டிய நாட்டின் தலைநகரத்தினை நெல்லையம்பதிக்கு கொடிய அமைச்சன் குடிலனின் சூழ்ச்சியால் மாற்றியமைப்பதில் இருந்து இந்நாடகம் துவங்குகிறது..குடிலன் கொடியவன் என்று அனைவரும் அறிந்திருந்தும், மன்னனுக்கு எடுத்துரைத்தும் அவன் அதனை அறியவில்லை... ஆயினும் துன்பத்தில் காப்பது குருவின் கடமையல்லவா..? தன் கடமை செய்ய வருகிறார் அரச குரு சுந்தர முனிவர். தனக்கென்று ஒரு அறை மட்டும் பெற்றுக் கொண்டு அது தனது ரகசிய அறை என்று திறவுகோலைத் தன் வசம் வைத்துக் கொள்கிறார்..மன்னன் மகள் மனோன்மணி இந்நாடகத்தின் தலைவி. சிறுவயதிலேயே தன் தாயை இழந்து விட்ட அவளுக்குத் தன் தந்தையின் மீது அலாதி அன்பு. சிவ பக்தி கொண்ட அவள் சிவநெறியிலேயே வாழ்க்கை நடத்துகிறாள். அரண்மனையில் இருந்தும் அவள் மனது துறவையே நாடுகிறது.. அவள் தோழி வாணி, நடராசன் என்பவனைக் காதலிக்கிறாள். நடராசன் ஒரு கவிஞன். ஒரு மறவன். பலருக்கு அவனைப் புரியவில்லை. ஒரு நாங்கூழ் புழுவைக் கண்டாலும் அதனிடம் பேசுவான், கூழாங்கற்களோடும் பேசுவான். இவ்விருவர் காதலும் மென்மேலும் வளர்கிறது. தனது காதலைத் தன் தலைவியிடம் சொல்லி அகம் மகிழ்கிறாள் வாணி. மனோன்மணியோ அவளுக்கு சிவநெறியில் ஈடுபடச்சொல்லி அறிவுறுத்துகிறாள். அப்போது அவளது செவிலி வந்து "அம்மா நீ வளர்த்த புன்னை மரம் பூத்துள்ளது" என்கிறாள். வாணியோ "உனக்குக் கண்டிப்பாகக் காதல் மலரும்." என்று உறுதியளிக்கிறாள்.. மறுத்துப் பேசும் மனோன்மணிக்கு அன்றிரவு ஒரு கனவு வருகிறது. கனவில் அவள் ஒரு கட்டிளம் வாலிபனோடு காதல் கொள்கிறாள். வாணியின் கூற்று பலிக்கிறது. கனவில் கண்டாள் ஆயினும் அவ்வாலிபனோடு நனவிலும் வாழத் துடிக்கின்றாள்... சுரத்தில் விழுகின்றாள்..செவிலி உடனே மருத்துவச்சியை அழைத்து வருகிறாள். சுரம் தணிந்தபாடில்லை. ஜீவகனோ மனம் வருந்துகின்றான். அச்சமயத்தில் அவ்விடம் வரும் சுந்தர முனிவர் சுரத்தின் தன்மை அறிகிறார். மன்னவனிடம் மகளுக்கு மாலை சூடும் வேளை வந்துவிட்டதாகக் கூறுகிறார். "என் மகளுக்கு ஏற்ற துணையை எங்கு தேடுவேன்?" என்று ஜீவகன் வினவ, சேர நாட்டு மன்னன் புருடோத்தமன், மனோன்மணிக்குத் தகுந்த இணை என்று புகல்கின்றார். அரசனும், அமைச்சரிடம் இது பற்றி விவாதிப்பதாகக் கூறுகிறான். இவ்வேளையில் வாணியின் தந்தை சகடர் அரசனிடம் வந்து தன் மகள் வாணிக்கு குடிலன் மகன் பலதேவனுக்குத் திருமணம் செய்ய இருப்பதாகவும், அவள் நடராசன் என்பவனைக் காதல் செய்வதாகவும், நடராசன் ஒரு வீணன் என்றும் தன் மகள் திருமணம் செய்ய மன்னவன் அருள் புரிய வேண்டும் எனவும் வேண்டுகிறான்.
மன்னவனும் அதற்கு வாக்குறுதி அளிக்கிறான். வாணியை அழைத்து அறிவுரை செய்கிறேன். அவளோ மரணதேவனுக்கு மாலை சூடினாலும், பலதேவனை மணவேன் என்று சொல்கிறாள்.. மன்னவன் தனது மகள் திருமணம் பற்றி குடிலனுடன் ஆலோசனை செய்கிறான். குடிலன் இவ்விடத்தும் தன் சதியை மன்னனிடம் செயல் படுத்த நினைக்கிறான். மணம் பேசுவதற்குத் தன் மகன் பலதேவனை அனுப்புவதற்கு அனுமதி கோருகிறான். மன்னனும் சம்மதிக்கிறான்.சேர நாட்டுடன் பாண்டிய நாட்டுக்குச் சொந்தமான நன்செய் நாட்டினையும் (இன்றைய நாஞ்சில் நாடு அதாங்க நம்ம குமரி மாவட்டம்) அவனே ஆட்சி செய்து வருவதால், தன் மகளை மணந்து கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியினை அவனுக்கே தந்து விடுவதாகக் கூறும் ஓலையினை எழுதித் தன் மகனிடம் கொடுத்து அனுப்புகிறான். அதன் மூலம் போர் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறான். தற்சமய சூழ்நிலை பாண்டியனுக்குத் தக்கதாக இல்லை. எனவே போரில் நிச்சயம் அவன் தோற்று விடுவான். சேரனிடம் பேசி எப்படியாவது பாண்டிய நாட்டுக்குரிய சேர மன்னனின் பிரதிநிதியாகி விட வேண்டும் என்று எண்ணிக் கொள்கிறான். அவன் விருப்பம் போலவே பலதேவனும் அனந்தை (அதாங்க திருவனந்த புரம்) செல்கிறான். அங்கே....சேர மன்னன் புருடோத்தமன் கனவிலே ஒரு காரிகையைக் கண்டு காமுறுகிறான். அவள் யாரென்று அறியாது தவிக்கிறான். அவ்வமயத்தில் பலராமன் ஓலை கொண்டு வருகிறான். நன்செய் நாடு பாண்டியனுக்கு என்று சொல்லப் பட்ட செய்தியைக் கேட்டு மனம் பதைக்கிறான். முறைப் படி மணமகனே, மணமகளை நாடிச் செல்ல வேண்டும் என்றும், "உமது ஊரின் வண்டினைத் தேடி மலரினை அனுப்புவரோ" என்று ஏளனம் செய்கின்றான். இத் தவறுக்காக, பாண்டியன் மன்னிப்பு கேட்கும் விதமாக வேப்பம் பூ மாலையும், ஒரு குடம் தாமிர பரணி நீரும் தர வேண்டும். இல்லாத பட்சத்தில் நெல்லை நோக்கி படை எடுத்து வருவதாக சொல்லி அனுப்புகிறான். வந்த காரியம் சுலபமானதில் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புகிறான் பலதேவன்.போர் மூள்கிறது..மனோன்மணியின் நலம் விரும்பியும், படைத் தலைவனுமான நாராயணன் உள்ளம் கொதிக்கிறான். மன்னனுக்கு அறிவுறுத்துகிறான். ஆயினும் மன்னன் குடிலனின் மாயையில் இருந்து விடுபடாததல், நாராயணனை அவமானப் படுத்துகிறான்.போர்க்களத்தில் நாராயணன் இருந்தால் பாண்டியன் வெல்லக்கூடிய வாய்ப்பு வந்து விடும் என்று அஞ்சி அவனைக் கோட்டைக் காவல் செய்யப் பணிக்கிறான் குடிலன்.மனம் நொந்த நாராயணன் அதையும் ஏற்றுக்கொள்கிறான்
போர்க்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மன்னனுக்கு ஆபத்து என்ற செய்தி வர நாராயணன் களத்துக்கு விரைந்து மன்னனைக் காக்கிறான். ஆயினும் காயமடைந்த மன்னன் மயக்கமுறுகிறான்.விழித்ததும் குடிலனை சந்திக்கிறான் மன்னன். குடிலனின் வஞ்சகப் பேச்சால் நாராயணனுக்கு மரண தண்டனை என்று ஆணையிடுகிறான். போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றதும் தன்னையே மாய்த்துக் கொள்ள விழையும் மன்னனுக்கு மகள் நினைவு வாட்டுகிறது. இவ்விடம் விட்டுப் போவது எவ்வாறு என்று யோசிக்கிறான். அப்போது சுந்தர முனிவர் வருகிறார். தான் வாங்கிய்ருந்த அறையின் உள்ளே சுரங்கப் பாதை நடராசனின் உதவியுடன் அமைத்திருப்பதாகவும், அதன் வழியாக அனைவரும் தப்பிச்சென்று விடலாம் என்றும் அறிவுறுத்துகிறார்.இதையும் மன்னன், குடிலனுக்கு சொல்ல, குடிலனோ, மணமுடியாத பெண் இந்நேரத்தில் செல்வது தகாது என்றும், அவளுக்கு மணமுடித்துப் பின்னர் அழைத்துச் செல்லலாம் என்றும் சொல்கிறான். தகுந்த மணமகனாக குடிலன் மகன் பலதேவனையே தேர்வு செய்கிறான் மன்னன். சுரங்கமே மணவரங்கமாக அலங்கரிக்கப் படுகிறது. மனோன்மணியும் மறுப்பேதும் சொல்லவில்லை. தந்தையின் சொல்லினை ஏற்கிறாள். அச்சமயத்தில் மன்னனிடம் இரு வாக்குறுதிகள் பெறுகிறாள். வாணி மற்றும் நடராசனின் திருமணத்தை நடத்துவது, நாராயணனை விடுதலை செய்வது என்பவைதான் அது.வாணியோ பலதேவனை மனோன்மணி மணம் புரிந்தால், தானும் நடராசனும் மணம்செய்யப் போவதில்லை என்றுரைக்கிறாள்.சுரங்கத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வாணி பாடுகிறாள். இச்சமயத்தில் குடிலன் சுரங்கத்தின் முடிவுப்பாதையைத் தேடிச் செல்கிறான்.அங்கே புருடோத்தமன் தன் காதலியின் நினைவாகத் தனிமையில் இருக்கிறான். குடிலன் அவனைக் கண்டதும், வஞ்சகப் பேச்சினை ஆரம்பிக்கிறான். வஞ்சி நாட்டரசனோ அவன் வஞ்சனையை ஏற்கவில்லை. குடிலனைக் கைது செய்து சுரங்கப் பாதை வழியே வருகிறான். அங்கே மணவறையில் தன் ஆருயிர்க் காதலியைக் காண்கிறான். உடனே வெளிப்பட்டு அவளை நோக்கிச் செல்ல, அவளும் தான் கனவில் கண்டு இன்புற்றது இவனே என்றுணர்ந்து அவனுக்கு மாலையிட்டு மயங்குகிறாள். பாண்டிய வீரர்கள் அவனைத் தாக்க முயல, சேர நாட்டு வீரர்கள் அவ்விடம் சுற்றி வளைக்கிறார்கள்.புருடோத்தமன் குடிலனின் வஞ்சனையை ஜீவகனுக்குத் தெரிவிக்கிறான். ஜீவகனும் தெளிவடைய கதை இனிதே நிறைவடைகிறது............அப்பாடா...ஒரே மூச்சில சொல்லி முடிச்சிட்டேம்பா...தயவு செய்து யாராவது பின்னூட்டம் எழுதுங்க....../

13 கருத்துகள்:

அன்பு நிலையம் சொன்னது…

நாவலை படித்ததில்லை... ஆனால் கதைச் சுருக்கத்தை யாவது தங்கள் பதிவால் படிக்க முடிந்தமைக்கு மகிழ்கின்றேன்...

பாராட்டுகள்...

Unknown சொன்னது…

கதைசொன்னதுக்குமிக்கநன்றி

Sk சொன்னது…

நன்றி 🙂

Unknown சொன்னது…

மிக நன்று ரத்தினச் சுருக்கம்

Unknown சொன்னது…

மிக்க நன்றி ஐயா👌👌👌

பெயரில்லா சொன்னது…

Nice but its really big

பெயரில்லா சொன்னது…

நன்று . நாவல் படித்த உணர்வு

விஜிகவிதைகள் சொன்னது…

அருமை ...

Ravi சொன்னது…

அருமை, கதைச் சுருக்கம் நன்றாக புரிந்தது

பெயரில்லா சொன்னது…

அருமை அருமை

நல்ல நூல்...நற்கருதுக்கள் பல பல

அழகுற வெளிப்பாடு.......

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு தானா கதை தொடக்கம் எங்கே.. தலையும் இல்லை வாலும் இல்லை.. மொட்ட தாத்தா குட்டை யில் விழுந்தான்.. என்று. இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்நாட்டிலேயே மடியும் மாற்றான் கைப்படாத மாசற்ற கற்பின் நீர் எங்கள் தாமிரபரணி ஆறு என்று பாண்டிய மன்னர் கூறுவதாக வசனம் வரும் ஆனால் அந்த வசனம் எங்குமே இப்பொழுது காண முடியவில்லை.

பெயரில்லா சொன்னது…

கதை சுருக்கம் மிக அருமையாக இருந்தது. ✨