சனி, ஜூன் 18, 2011

இரவின் மடியில்.......

5.
தேவதை என்னிடம் மீண்ட அந்த பொன்னாளை என் வாழ்வின் ஏடுகளில் வைரங்களால் குறித்து வைத்திருக்கின்றேன்... என்றும், எப்பொழுதும் அவள் நினைப்பிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் எதிர்பாராத தருணமொன்றில் அவளே என்னைத் தேடிவந்தாள்...
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவினையொட்டி அவரது கட்சியினர் மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் நடைபெற்ற அந்தத் திருவிழாவிற்கு எங்கள் கல்லூரியின் சார்பில் நான் அனுப்பப்பட்டேன். பரிசுகள் வென்றேன்.
பரிசுகள் வென்று கல்லூரிக்குத் திரும்பியதும், அது ஓர் சுற்றறிக்கையாக அனைத்து வகுப்புகளுக்கும் அனுப்பப் பட்டது. அன்று மாலை நடைபெற்ற விழா ஒன்றில் நான் பெற்ற பரிசினை மீண்டும் எனக்களிக்க மேடையேற்றினார் கல்லூரி முதல்வர்...
தமிழக முதல்வர் அளித்த பரிசினை, கல்லூரி முதல்வரின் கரங்களால் பெற்றுத் திரும்பும் வழியில் மீண்டும் சந்தித்தேன் அப்பொன்விழிகளை...
முதல் சந்திப்பு நிகழ்ந்ததும் இது போன்றதொரு தருணத்தில்தான்... அச்சமயத்தில் என்னைக் கைது செய்த அவளது விழிகள் இன்றைக்கு ஏதோ ஒரு செய்தியை வைத்திருந்தது...
அவள் விழிகளின் ஓரத்தில் நீர்...
கண்ணீரே அவள் காதலை எனக்கு உணர்த்தியது...
கல்லூரியின் கரவொலிகள் என் செவிகளில் விழவில்லை.. அவளது மௌனம் எனக்குத் தெளிவாகக் கேட்டது...
அன்று நான் மீண்டும் பிறந்தேன்...
காதல் உலகம் எங்களை மீண்டும் கரம் நீட்டி அழைத்துக் கொண்டது...
காதல் வானம் நான் இழந்த சிறகுகளை மீண்டும் எனக்களித்து அவளைச் சுமந்து பறந்து வா என்றது...
காதல் மீண்டும் மலர்ந்தது....
என் பசலையும் நீங்கியது...
"காரணமேதுமின்றி என்னைத் தவிக்க விட்டது ஏன் தோழி?" வினவினேன்...
நீர் நிறைந்த கண்களுடன் என் காதலி பதிலுரைத்தாள்... என்னுடன் பயிலும் பெண்ணொருத்தியிடம் நான் காதல் கொண்டிருப்பதாக, என்னுடன் பயிலும் மற்றொரு பெண்ணுரைத்தாளாம்... நான் தற்செயலாக அவளிடம் பேசிக் கொண்டிருந்ததை இவளும் பார்த்தாளாம். நம்பினாளாம்... எனவேதான் என்னை விட்டு விலகினாளாம்... என்னை வெறுத்தாளாம்...
காரணங்களைச் சொல்லும் போது என் மடியில் முகம் புதைத்து அழுதாள்... "என்னை மன்னிப்பாயா?" என்று அவள் கேட்கும் முன்னரே என் மனது அச்சம்பவங்களை மறந்தே விட்டது...
காதலர்க்குப் பகை கர்வம்....
காதலை வாழ வைக்கும் தாரக மந்திரம் "மன்னிப்போம்! மறப்போம்!!" ..
"சரி பின்னர் என்னை எப்படி உணர்ந்தாய்?" இருந்த சந்தேகத்தைக் கேட்டேன்...
இதோ அவள் மொழி.....
"நான் வகை நுண்கணித நூலெடுக்க நூலகம் சென்றிருந்தேன்.. அந்த நூலகப் பணியாளர் என்னை வியப்புடன் பார்த்தார். "என்ன அண்ணா சேதி" என்றேன்... "நீ முன்னர் திருப்பிக் கொடுத்த புத்தகத்தை அவன் வாங்கிச் சென்றான். திருப்பித் தரவில்லை... புத்தகத்திற்கான அபராதம் செலுத்தினான்" என்றுரைத்தார்... உங்களுக்கு எதற்கு நான் பயன்படுத்திய நூல் என்று வியந்தேன்... நீங்கள் அறியாது உங்களைத் தொடர்ந்தேன்... கல்லூரி தோட்டத்தில் நீங்கள் தனியே அமர்ந்து அந்நூலுடன் பேசுவதைக் கண்டேன்.. மனமுடைந்தேன்... எட்டிப் பிடிக்கும் தொலைவில் எண்ணிலாப் பெண் தோழியர் உமக்கு.... ஆயினும் என்னை ஏன் சிந்திக்க வேண்டும்? இது ஓர் நடிப்பு என்று எண்ணிக் கொண்டேன்... மற்றொரு நாள் உங்களைக் காதலிக்கிறாள் என்று சொல்லப் பட்ட பெண் ஏற்கெனவே மணமானவள் என்றறிந்தேன்... அவளிடம் நேரடியாகவே கேட்டேன்.. அவளோ "போடி பைத்தியம்.. அன்றைக்கு நான் அவனிடம் வேறு ஏதோ கேட்டுக் கொண்டிருந்தேன்" என்றாள்... அன்றைக்கே என் மனம் மரித்துப் போனது.... இந்த வேளையில் நீங்கள் என்னைத் தேடி வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் நீங்களோ என்னைத் தேடிவருவதை விடுத்தீர்கள்... எப்படி உங்கள் முகம் நோக்குவேன் என்று எண்ணி அழுது கொண்டிருந்தேன்... தொலைவில் உங்களைக் காணும்போதெல்லாம் உங்கள் கைகளில் தவழும் அந்த நூலே உங்கள் காதலை எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தது... ஆயினும் உங்களைக் கண்டு பேச அச்சம்... கோபத்தில் ஏதேனும் சொல்லி விடுவீர்களோ என்று அஞ்சினேன்.... ஆனால் தமிழக முதல்வர் நம் காதலை சேர்த்து வைத்தார்..."
இருவரும் நகைத்தோம்... அத்துன்ப நாட்களை மறந்தோம்... இன்பத்தில் திளைத்தோம்...
இனிமேல் எங்களுக்குள் ஊடலே வாராது அல்லவா??
எங்கள் காதலை மீட்டுத்தந்த ஆறுமுகனாருக்கும், ஐசக் ஐயாவுக்கும், அவர்கள் தந்த வகைநுண்கணித நூலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதல்வருக்கும் வாழ்த்துப் பாக்கள் பாடினேன்...
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலம்.... அதைப் பற்றி....

கருத்துகள் இல்லை: