திங்கள், ஜூன் 20, 2011

இரவின் மடியில்.......

7.
தென்னகத்துக் காதலர்களின் பேரெதிரி சாதித் தீயில் எங்கள் காதல் எரிந்து சாம்பலாகுமோ என்று அச்சங்கொண்டேன்.
சரி அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று எண்ணி, அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன்...
சொன்னாள்...
தூத்துக்குடி வ.உ.சி தெருவில் இருந்த அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்த போது என்னை மறந்து துள்ளினேன்....
நான் பிறந்ததாகச் சொல்லப் படும் சாதியில் பிறந்திருந்தாள் அவளும்....
என் தந்தையாரும் அவளது தந்தையாரும் ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்தனர்...
சாதியும் நமக்குத் தடை விதிக்கப் போவதில்லை. நம் குடும்பத்தாரும் நம் காதலை ஏற்பார்கள் என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்...
மெதுவாக என் தாயார் மூலம் தந்தையாரிடம் பேசி அவள் தந்தையிடம் பேசச் சொன்னேன்...
இருவீட்டாரின் சம்மதமும், ஆசியும் எங்கள் காதலின் அடுத்த அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டது...
வைகாசி விசாகத்திருவிழா முடிந்த பின்னர் செந்தூரான் ஆலயத்தில் வைத்து திருமணம் என்று நிச்சயம் செய்யப் பட்டது..
வள்ளி மணாளனே எங்கள் வாழ்க்கைக்கு வழிகாடியதாக நம்பினோம்...
நாள் நிச்சயம் செய்யப் பட்டது...
முகூர்த்தப் பட்டோலை எழுதப்பட்டது...
திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டது..
திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
எங்கள் அக வாழ்க்கைத் துவங்கப் போகும் மகிழ்ச்சியில் கனவில் மிதந்தோம்...

உயிருக்கு உயிரானவள்.... என்
கவிதைக்குக் கருவானவள்....
மாசறு பொன்னும் வலம்புரி முத்தும்
மண் நோக்கும் வடிவானவள்....
நெஞ்சத்தில் இனிக்கின்றவள்...மண
மஞ்சத்தில் மணக்கின்றவள்...
என்றென்றும் எனதானவள்...அவள்
எனக்கென்றென்றும் உறவானவள்..

திரும்பும் திசையெங்கும் திருமணக் கனவுகள்தான்.... கம்பனும் இளங்கோவும் எழுத மறந்த காவியம் எங்கள் காவியம்தான்... கம்பன் நம் காதலைக் கண்டிருந்தால் என்ன காவியம் பாடியிருப்பான்?? சிலம்புக்குப் போட்டியாக சிலம்பாட்டம் ஆடியிருப்ப்பான்...
அலுவல்களுக்கு மத்தியிலும் எங்கள் அகத்தைப் பற்றிய சிந்தனைதான்...
எங்கள் வாழ்வின் பொன்னாளை நோக்கி நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தோம்...
அந்த நாளும் வந்தது...
மங்களம் தரும் மஞ்சளாடை உடுத்தி, உற்றார் புடைசூழ செந்தூர் பயணித்தோம்....
மங்கையவளும் மஞ்சள் சேலையிலே மங்களம்புக வந்தாள்...
திருச்செந்தூரான் திருமுன்னில் திருமணம்....
மங்கள வாத்தியம் முழங்க, மங்கள நாணை மறையோன் எடுத்துத் தர, மணத்திற்கான முடிச்சுக்களை அவள் கழுத்தில் நான் கட்டினேன்...
அட்சதைகள் தூவி அனைவரும் வாழ்த்தினர்...
பொன்மகளின் பொற்கரம் பற்றி திருக்குமரன் ஆலயம் திருவலம் வந்தோம்.
வசந்த மண்டபத்தில் திருமண விருந்து....
திருமண விருந்து உண்டு பிரகாரம் சுற்றி நடந்தோம்....
அன்றைக்கு எங்களுக்கு அடைக்கலம் தந்த கடற்கரை நோக்கி நடந்தோம்...
கடலரசன் எங்களுக்கு வாழ்த்தலைகள் அனுப்பினான்...
மனமுவந்து அவன் அலைகளை ஏற்றோம்....
அன்றைக்கு எங்களைப் பொறாமையுடன் கண்ட கடலலைகள் இன்றைக்கு இன்சொல் தந்தன...
கடலில் பாதம் நனைத்துக் கரை வந்தோம்...
நண்பர்களின் கேலியலைகளின் மீண்டும் நனைந்தோம்....
இல்வாழ்க்கை இனிதே துவக்கம்.....
பொற்கரங்கள் பற்றி கடற்கரை தாண்டி பிரகார மண்டபத்தில் நடந்து வந்து வாகனம் ஏறி எங்கள் ஊருக்குச் செல்ல யத்தனித்தோம்...
வாகனத்தில் கால் வைத்த நொடி.....

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

பாதிதான் இருக்கு மிச்ச கதை காண்பிக்கவில்லை

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

அடுத்த பாகத்தைப் பாருங்கள் ஐயா....