வியாழன், ஜூன் 16, 2011

இரவின் மடியில்.......

3
காதலியலில் ஊடலியல் ஓர் அனுபவப் பாடம்... ஊடலில்லாத கூடலில் சுகம் இல்லை....
எங்கள் காதலியலில், ஊடல் பாடம் கற்பிக்கும் ஆசிரியையாக அவள்.... தண்டனை ஏற்கும் மாணவனாக நான்...
திடீரென்று ஒரு நாள்...
அவள் என்னைக் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தாள்....
இதென்ன கொடுமை...?
கன்னியின் கடைப்பார்வையும் கடையேன் மேல் விழவில்லை..
நேற்றுவரை அன்பாயிருந்தவள், திடீரென்று முகம் மாறிச்செல்வதன் காரணம் புரியவில்லை...
பேருந்தில் வைத்து யாரோ மூன்றாம் நபரைக் காணும் போது செல்வது போல் சென்றதைக் கண்டு எனக்கு மூக்கு வியர்த்தது...
கோபம் பொங்கி எழுந்தது...
காரணம் புரியாமல் தவித்தேன்...
அவள் வகுப்பறை சன்னலில் எப்போதும் என் முகம் தேடும் அவள் கண்கள், அன்றைக்கு நான் நின்றிருந்ததையே கவனிக்கவில்லை... (கவனித்தாளாம்... பின்னர் நாங்கள் சேர்ந்தபோதுதான் இதை அறிந்தேன்)
என்ன ஆயிற்று என் தோழி..??
காரணம் பகர்ந்தால் கவிஞன் தவற்றைத் திருத்திக் கொள்வானில்லையா??
காரணமில்லாமல் காதல் நழுவிச்செல்லும் சூழலில் காளையர் மனது திண்டாடுவதைக் கன்னியர் ஏன் புரிந்து கொள்வதில்லை...?
என்னிடம் நீ பேச வேண்டாம்...
என்னை ஒரு பார்வை பார்த்தாலே போதுமே!!!
உன் கடைவிழிப் பார்வையில் ஓர் முகிழ்நகை தந்தால் காலமெல்லாம் நிம்மதியடைவேனே நான்...!!!
எங்கெல்லாம் அவளைத் தொடர்ந்தேனோ, அங்கெல்லாம் அவமானத்தைச் சந்தித்தேன்...
காண்போரிடமெல்லாம் என் காதல் தோல்வியின் காரணம் புரியாமல் அழுது வடித்தேன்..
தேற்றுவதற்கு யாருமில்லை...
சரி அவளை நெருங்க முடியவில்லை... அவள் தோழியரை நெருங்கிக் காரணம் கேட்கலாம் என்று முடிவு செய்து, அவள் தோழியொருத்தியை நாடினேன்... "என் தங்கம் என்னைத் தவிக்கவிடுவதன் காரணம் சொல் தோழி!!" என் கெஞ்சல் அவள் முகத்தில் கவலையை வரவழைத்தது... "அறியேன் அண்ணா! என்னை மன்னியுங்கள்" சொல்லிவிட்டு ஓடிப்போனாள்...
அட... இவளுக்கும் தெரியவில்லை.... அவளின் மனது அவளன்றி யாரும் அறிந்திருக்கவில்லை...
காதல் உலகம் என்னால் சபிக்கப் பட்டது...
தேவர்கள் அனைவரும் என்னைத் தேடிவந்து சாபமேற்றனர்...
பூவுலகே நீ எரிந்து போ....
காதலியின் கண்களைக் காணாத வாழ்வு இருந்து என்? இல்லாது என்?
பட்டினத்தாரின் பாடல்களின் பொருள் அனுபவத்தோடு புரிந்தது....
ஆயினும் என்னால் அவளை வெறுக்க இயலவில்லை...
வகுப்பில் பேராசிரியர் உரைப்பது கேட்கவில்லை...
வீட்டில் பெற்றோர் உரைப்பதும் கேட்கவில்லை...
கற்பனையுலகில் அவளோடு சுற்றித் திரிந்த நாட்களை மட்டுமே எண்ணி நின்றேன்...
கேட்பதெல்லாம் அவள் குரலாக, காண்பதெல்லாம் அவள் முகமாக....
பசலை நோயின் பக்குவம் அறிந்தேன்...
வார்த்தை தவறி விட்ட கண்ணம்மாவைப் பாடிய பாரதியைச் சரணடைந்தேன்...
உலகமெலாம் இன்புற்றிருக்கும் வேளையில் பிரிவென்னும் நரகில் நான் மட்டும் துன்புறுவது என்ன நியாயம்?
"நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?" என்ற கானமே செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது...
காதலில் தோல்வியுற்ற மற்ற காளையரின் மனது புரிந்தது...
"அவள் வருவாளா?" பாடினேன்... வரவில்லை...
காரணமில்லாமல் காதலைத் தொலைத்தவன் அழுது புரண்டேன்...
கன்னியரின் கண்ணீர் காளையரைக் கரைக்குமென்பார்கள்...
காளையரின் கண்ணீர் கன்னியரைக் கரைக்குமோ??
இல்லவே இல்லை...
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்...
ஆனால் பெண்ணாணவளோ என்றும் இரங்குவதே இல்லை... பேரிடர் தரும் பசலையில் முற்றிய நிலை...
என் உடல் நலம் குன்றியது...
என் மனம் வாடி உழன்றது...
உயிரோ அவளைத் தேடி அலைந்தது...
நண்பர்கள் காரணம் கேட்டனர்...
சொல்ல மறுத்தேன்...
பேராசிரியர்கள் தனியே அழைத்துக் கேட்டனர்..
அப்போதும் மறுத்தேன்...
பெற்றோரும் துன்பத்தில் உழன்றனர்... காரணம் புரியாது தவித்தனர்...
அவள் மனத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை... என் மனத்தை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை...
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் அன்றில்கள் எனக்குப் பொறாமையை மூட்டின... என்னால் சபிக்கப் பட்டன...
இரவில் அவள் முகத்தை எனக்குக் காட்டிய நிலவு இந்த இரவுகளில் என்னை எரித்துக் கொண்டிருந்தது...
அவள் உடுத்தும் ஆடைகளாகத் தெரிந்த விண்மீன்கள் எல்லாம் என் கண்களைத் தைக்கும் ஊசிகளாகக் குத்தின...
அவளோடு நடைபயின்ற மரத்தின் நிழல் எனக்கு அனல்மேல் நடக்கும் உணர்வைத் தந்தது...
அன்றைக்கு ஒருநாள்...
நூலகத்தில் அவளைக் கண்டேன்...
தானெடுத்த நூலொன்றை அவள் திருப்பிக் கொண்டிருந்தாள்...
மறைந்திருந்து அவளைக் கவனித்தேன்..
அப்பொழுது......

கருத்துகள் இல்லை: