திங்கள், ஜூன் 13, 2011

அன்பே வா அருகிலே...(6)

கதைக்குள் நுழைவதற்கு முன்னால்....
நண்பர்களே... கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அலுவலகத்தில் வேலைப்பளு
மிகுதியால் இணையப் பக்கம் வருவதற்கு இயலவில்லை... தாமதமாக அடுத்த
அத்தியாயத்தைத் தந்தற்கு அனைவரும் மன்னிக்க....
தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தாருங்கள்... இதற்கு முன்னரும் தொடராமல்
விட்டிருந்த இழைகளையும் அன்னையின் பேரருளுடன் தொடர்கின்றேன்.....
இனி கதையைத் தொடரலாம்...

அத்தியாயம் 6

பதற்றத்துடன் ஓடி வந்த அவனை ஏறெடுத்துப் பார்த்த மலையாண்டி, "என்னலே...
என்னாச்சி?" என்று வினவினார்.
"அங்க... நம்மூர்ல... "
"சொல்லுல..."
"ஆத்துல ரெண்டு முண்டம் கெடக்கு"
"என்ன?" வியப்புடன் எழுந்தார் மலையாண்டி...
"யோவ் ஏட்டு போய் ஜீப்ப ரெடி பண்ணு.. போய்ட்டு வந்துருவோம்.. ஏம்மா
நீயும் வாறியா?" என்று அகல்யாவைக் கேட்டார்.. அவளும் "சரிங்க சார்.
நானும் வர்றேன்" என்று ஒத்துக் கொண்டாள்.
காவல்துறை வாகனத்தில் அனைவரும் கரையடி நல்லூரை நோக்கிப் புறப்பட்டனர்..
அங்கே...
மணிமுத்தாற்றில் தலையற்ற இரண்டு உடல்கள் மிதந்து கொண்டிருந்தன... ஆற்றின்
பிரவாகம் குறைவாக இருந்ததாலும்,  அல்லிக் கொடிகள் மிகுதியாக
இருந்ததாலும், அல்லிக் கொடிகளில் சிக்கிக் கொண்டிருந்தன அந்த உடல்கள்...
கரையடியில் நின்று கொண்டிருந்த தலையாரியும் கிராம்சும் மலையாண்டியை
சோகமாக எதிர் கொண்டனர்..
"பாத்தீங்களா ஐயா நம்மூர்ல இப்பிடில்லாம் நடக்க ஆரம்பிச்சிட்டு... மொதல்ல
வெட்டுப்பட்ட ஒரு தல அங்கன கெடந்துச்சி.. இவ்ளோ நாள் கழிச்சி இன்னிக்கு
ரெண்டு முண்டம் நம்ம ஆத்துல மெதக்கு. என்னதான் நடக்கோ" தலையாரி
சோகப்பாட்டு பாட அவருக்குப் பதில் சொல்லாமல் ஆற்றினை நோக்கி நடந்தார்...
"யோவ் ஏட்டு... அந்த ரெண்டு பிரேதங்களையும் எடுத்து வெளிய போடச்சொல்லு...
அந்த சக்கிளியன்வ வந்துருக்கான்வல்லா... இங்கெயே அறுத்துப் போடச்சொல்லு..
பாடி டீகம்போஸ் ஆயிருக்கும்..." உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே
எஸ்.பிக்கும் தகவல் தந்தார்.
இதற்குள் ஊரின் துப்புரவுப் பணியாளர்கள் வந்து தலையற்ற அந்த இரு
உடல்களையும் எடுத்துக் கரையில் போட்டனர்..
வீச்சமடித்தது.
அனைவரும் மூக்கைப் பொத்திக் கொண்டனர்..
காவலர்கள் அங்கு கூடியிருந்த பொது மக்களை விரட்டிக் கொண்டிருந்தன்ர்.
இதற்குள் அரசு மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் வந்து விட அந்த
இடம் திரைகளால் சூழப்பட்டது.
....
அந்த இடத்திலிருந்து வரும் வாடை குமட்டிக் கொண்டு வந்தது தலையாரிக்கு...
"ஐயா கொஞ்சம் பாத்துக் கிடுங்க... நான் வீடு வரைக்கும் போய்ட்டு வாறேன்"
என்று கிராம்சிடம் சொல்லியபடி நகர்ந்தார்.
மலையாண்டி அந்த இடத்தைச் சுற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்..
திடீரென நினைவுக்கு வந்தவராய், "ஏம்மா அகல்யா இங்க வா" என்று அந்த
சென்னைப் பெண்ணை அழைத்தார்.
"சொல்லுங்க சார்"
"ஒங்க கைடுன்னு சொன்னால்லா... அந்தாளு பேரு என்ன? அவரு அட்ரசக் கொடு. "
"சார் அவர் பேரு மணிமாறன். எங்க காலேஜுல அவர் வேலை பாத்திட்டிருந்தார்.
இப்போ என்ன பண்றாருன்னு தெரியாது."
"சரி.. நான் வெசாரிக்கச் சொல்றேன்" என்று சொல்லியபடி கட்டுப்பாட்டு
அறைக்குத் தகவல் அனுப்பினார்.

இதற்குள் பிரேதப் பரிசோதனை முடிந்து மருத்துவர் வெளியே வந்தார்..
மலையாண்டி அவரை நெருங்கினார்..
"வணக்கம் டாக்டரம்மா"
"வணக்கம் சார். சொல்லுங்க..."
"ரிப்போட் என்ன சொல்லுது"
"என் கணிப்புப்படி சாவு நடந்து ஒரு மாசத்துக்கும் மேல இருக்கும்... மத்த
படி அந்த தலைக்குரிய உடம்பு எதுன்னு லேப் ரிப்போர்ட் வந்த பின்னாடிதான்
தெரியும்.. பார்க்கலாம். வேற பிரேதமாவும் இருக்கலாம்... சரி நான்
வாறேன்." என்று சொல்லியபடி நகர்ந்தார்.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு கேஸ். முதலில் வெட்டுப்பட்ட ஒரு
தலை... கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அழுகிய நிலையில் இரு உடல்கள....
அது யாரென்றும் தெரியவில்லை... அந்த ஊரிலிருந்து யாரும் காணாமலும்
போகவில்லை... பிறகெப்படி....?
சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஆறுமுகத்தைக் காணவில்லை என்றொரு தகவல்
கிடைத்திருந்தது... ஆனால் அவனுக்கோ குடும்பம் இல்லாததால் ஊரில் யாரும்
அதைப் பற்றிக் கவலைப் படவில்லை... மேலும் அவன் காணாமல் போன பிறகு சாராயம்
காய்ச்சுவது நின்று போன மகிழ்ச்சி ஊர் மக்களுக்கு...
ஒருவேளை அவனுடைய உடல்தானோ?? அப்படின்னா தலை எங்கே போனது?? கேள்விகள்
தலையைக் குடைந்தன...
இதற்குள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்தது.. சட்டக் கல்லூரிப்
பேராசிரியர் மணிமாறன் சென்னையில் இல்லை என்றும், அவர் கேரளாவில் உள்ள ஓர்
வெளிநாட்டுக் கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக பணியில் சேர்ந்து விட்டதாகவும்
தகவல். கேரள போலிசாருக்குத் தகவல் அனுப்பியிருந்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் அந்த உடல்களை அருகிலிருந்த
இடுகாட்டிலேயே அடக்கம் செய்ய உத்தரவிட்டார். "அகல்யா... நீ மட்டும்
தனியாவா வந்துருக்கே.? நீ எங்க தங்குவா?" என்று அகல்யாவிடம் கேட்டார்
மலையாண்டி..
"இந்த கிராமத்துலேயே தங்கி விசாரிக்கலாம் இல்லியா? இங்க யார்
வீட்டிலயாவது சொல்லி விடுங்களேன்" என்று அவரிடம் கெஞ்சினாள்.
"சரி.. தலையாரிகிட்ட சொல்லிருதேன். அவர் வீட்டிலேயே தங்கிக்க.." என்று
சொல்லிவிட்டு கிராம்சிடம் விசயத்தைச் சொன்னார். அவரும் அகல்யாவை
அழைத்துப் போனார்.
"பத்திரமா இரும்மா" என்று அவளிடம் சொல்லியபடி தன் வாகனத்தை நோக்கிப் போனார்..
ஜீப் புறப்ப்பட்டு விட்டது...
கிராம்ஸ் அகல்யாவை தலையாரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தலையாரியின் மகளுக்கு அகல்யாவைப் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது..
"எக்கா உங்க பேரன்ன?"
"ம்.. அகல்யா.. உம்பேரன்ன?"
"எம்பேரு வடிவம்மா..."
"சரி நீ என்ன படிக்கறே?"
"எட்டாப்பு படிக்கேன்" அவர்கள் உரையாடலை ரசித்தபடி அங்கிருந்து அகன்றார்
கிராம்ஸ்...
"சரி நாளைக்குக் காலையில் இந்த ஊருக்குள் சென்று இதைப்பற்றி ஆராயலாம்."
என்று எண்ணியபடியே உறங்குவதற்குத் தயாரானாள் அகல்யா...
வீட்டின் தார்சாவில் தலையாரி படுத்துக்கொள்ள உள்ளறையில் அவரது மனைவியும்,
மகளும், அகல்யாவும் படுத்துக் கொண்டனர்...
பயணக்களைப்பால் படுத்ததும் உறங்கிப் போனாள்...
நடுநிசி...
திடீரென ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள் அகல்யா...
சலங்கைச் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டது...
குதிரையின் காலடி சத்தமும் கேட்டது...
"இதென்ன சத்தம். யார் இரவு நேரத்தில் குதிரையில் போவது?" என்று
எண்ணியபடியே படுக்கையிலிருந்து எழுந்தாள் அகல்யா..
மற்றவர்களின் உறக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக அடியெடுத்து
வைத்து வெளியே வந்தாள்... தார்சாவில் தன்னை மறந்து உறங்கிக்
கொண்டிருந்தார் தலையாரி..
ஓசைப்படாமல் நகர்ந்து கதவின் தாழ்ப்பாளை விலக்கிய நொடி.....

(தொடரும்)

2 கருத்துகள்:

kamal சொன்னது…

அடுத்தேன்ன என்பதற்குள் இந்த கதையின் சூடு தொடரும்...

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

யாருக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காக இந்தக் கதை விரைவில் தொடரும்... நன்றி அய்யனே...