ஞாயிறு, ஜூன் 19, 2011

இரவின் மடியில்.......

6.
காமத்துப் பாலில், களவியல் முடிந்து கற்பியல் துவங்கும் காலத்துக்கு
வந்தோம்...இடைப்பட்ட நாட்களில் நடந்தவை இன்னமும் அழியாத காவியங்கள்....
என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தது.. அவளோ இன்னமும் படித்துக் கொண்டிருந்தாள்...
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் காவல்துறைப் பணிக்குச் செல்லவேண்டும் என்ற
என் பேராவலை அவளுக்குச் சொன்னேன்...
"காவலனே என் காதலனாகிவிடில் பெருமையே எனக்கு" என்றுரைத்தாள்..
"கவிஞன் காவலன் ஆவது காலம் செய்த திருக்கோலம்" என்றுரைத்தாள்..
காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்காக என்னைத் தயார் செய்து
கொண்டிருந்தேன்..
ஊக்கமளித்து உற்சாகப் படுத்தினாள்...
தினமும் அவளது திவ்ய திருக்காட்சி கிடைக்கவில்லை...
ஆனால் கனவில் தினமும் என்னைக் களிப்பூட்டிக் கொண்டிருந்தாள்...
மாதம் ஒருமுறை சந்திப்பு....
வாரம் ஒருமுறை கடிதப் பகிர்வு...
இவ்வாறாக எங்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்...
முதல்நிலைத் தேர்வில் தேறினேன்...
அகம் மகிழ்ந்தாள்... தன் தோழிகளிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்...
இடையில் ஓர் நாள் சந்திப்பில் நிகழ்ந்தது...
அன்றைக்குச் செந்தூரான் ஆலயம் சென்று வரலாம் என்று தீர்மானித்தோம்...
பேருந்திலிருந்து இறங்கி இளவெயிலில் அவளோடு நடந்த சுகம் இன்றைக்கும்
நெஞ்சத்தில் இனிக்கின்றது...
செந்தூரான் சேவடி பணிந்து எங்கள் காதல் வெல்ல வழி செய் என்று வேண்டினோம்..
கந்தனின் காதலை வெல்ல வைத்த வள்ளி குகை கண்டு மெய்சிலிர்த்தோம்... மெல்ல
நகைத்தோம்...
கடற்கரை மணலில் கால்புதைத்து நடந்தோம்..
காலை வெயில் இதம்தர அமர்ந்தோம்...
எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது..
"என்னை மறந்து விடுவீர்களா?"
"ஆம் மறப்பேன்... நீ வேறு என்பதை மறப்பேன்.. என்னுள் நீ நானாக இணைந்த
பிறகு, உன்னை நான் நினைப்பதென்பதேது? மறப்பதென்பதேது? என்னுள் நீ நானாகவே
வாழ்வதை என்றுமே மறப்பதில்லை"
ஆனந்தக் கண்ணீர் அரும்பித் துளிர்த்து...
என் தோளில் தலை சாய்த்து மௌனித்தாள்...
அவளது மௌனம் எனக்குச் சொன்ன செய்திகள் பல...
காதலில் மௌனத்தை விட சிறந்த செய்தி பரிமாற்றம் ஏதுமில்லை..
மஞ்சளாடை உடுத்தி கடலில் நீராடும் புதுமணத்தம்பதியரில் எங்களைக் கண்டோம்...
நமக்கும் மணமாகிய பின்னர் நாமும் இப்படித்தானே கடல் நீராடுவோம் என்று
பேசி மகிழ்ந்தோம்...
கடற்கரையில் விளையாடும் சிறு குழந்தைகளைக் கண்டு நகைத்தோம்...
அவளின் பஞ்சுப் பாதங்களைத் தொடமுயன்று தோற்ற கடலலைகள் என் மேல் கோபங்கொண்டன...
கோபத்தில் மீண்டும் மீண்டும் அலையம்புகளைத் தொடுத்தும் தோற்றன...
கடலலைகள் என் மீது கோபங்கொள்வதைக் கண்டு இரங்கிய என் தேவதை, தன்
பாதங்களைக் கடலில் நனைக்கச் சென்றாள்...
மகிழ்ந்த கடலலைகள் அவள் பாதங்களைத் தொட்டுத் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன...
என் பாதங்களை நன்றியுடன் நனைத்துத் திரும்பின....
கடற்கரையில் காதலியின் கரம்பற்றி நடக்கும் இனிமை உலகில் பிறிதேது?
நம் ஆடைகள் நனைந்தாலும் ஆனந்தக் குறைவுண்டோ?
இனிமையாய் அன்றைய நாள் நிறைந்தது...
இன்னும் சில தினங்களில் இறுதித் தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்...

இறுதித் தேர்விலும் தேறினேன்...
என் தேர்வினைக் கண்டு அவள் மகிழ்வுற்ற சமயம் அவளுக்கும் கல்லூரி இறுதியாண்டு...
தூத்துக்குடி மாவட்டத்திலேயே வேலை வாய்ப்பு...
துணை ஆய்வாளர் பணி என்பது அத்தனை எளிதல்ல...
துன்பங்கள் தோன்றும் வேளையில், அவள் முகம் என் கண்களில் தோன்றி இன்பத்தை
அளித்தது...
எங்கள் காவல் நிலைய ஆய்வாளர் எனக்கு உறுதுணையாய் இருந்தார்... மாவட்டக்
காவல்துறைக் கண்காணிப்பாளரும் இளைஞர்களுக்கு ஊக்கமாய் இருந்தார்.
இவர்களின் துணைகொண்டு சில சமூகவிரோதக் கும்பல்களைக் களை எடுத்தோம்..
தினசரியில் என் புகைப்படம் பார்த்து மகிழ்ந்த அவள் எனக்குத் திருஷ்டி கழித்தாள்...
இந்நிலையில் அவளது கல்லூரி படிப்பும் முடிந்தது...
கற்பியல் உலகம் எங்களை அழைத்துக் கொண்டிருந்தது...
இனி வீட்டில் காதலைப் பற்றிப் பேசி விட வேண்டும் என்று எண்ணிய
வேளையில்தான் தென்னகத்துக் காதலர்களின் சாபக் கேடு நினைவுக்கு வந்தது..
தென்னகத்துக் காதலர்களின் பரம எதிரி சாதிதான்...
அவளைக் கண்ட நாள் முதற்கொண்டு இன்று வரை அவள் என்ன சாதி என்பது எனக்குத்
தெரியாது...
இந்நிலையில் அவளை மணம் முடிப்பதென்பது சாத்தியம்தானா? என்ற வினா என்னைப்
பாடாய்ப் படுத்தியது...
சாதிகளில் நம்பிக்கையற்ற எனக்கு, அவளது பெற்றோரும், உற்றாரும் இதை எப்படி
ஏற்பார்கள் என்ற ஐயம்...
தென்தமிழகமோ சாதிக் கலவரங்களில் துடித்துக் கொண்டிருந்தது...
கலவரங்களை அடக்கும் கடமையுள்ள காவலனான நான் ஓர் கலவரத்துக்குக் காரணமாகி
விடுவேனோ?? என்று அஞ்சினேன்...
சாதியை வென்று அவளை மணங்கொண்டேனா? அல்லது சாதித் தீயில் மரணங்கொண்டேனா???

கருத்துகள் இல்லை: