திங்கள், ஜனவரி 24, 2011

உங்களோடு சில நிமிடங்கள்...

51) சக்தியென்றும் சிவமென்றும் நின்றவளே உனையென்றும்
பக்தி செய்யும் பாமரர்தம் பற்றுப்பாய்! பாரில் என்றும்
முக்தி தரும் நின்னடியைத் தொழுவோர்தம் நெஞ்சினுக்கு
சக்தி கொடு சங்கரனார் சத்தியத்தின் திருவுருவே!

52) உருவாய் உனைக்கண்டு பக்தி செய்யினும் எங்கும்
அருவாய் நின்ற அம்மே! ஆழிசூழ் அவனியின் மேல்
பருவரைக ளெல்லாம் நின்புகழ் பாட எமக்கெலாம்
தரு தருவென நின்ற நின் அருளினைச் செப்புவதே!

53) செப்புவரே தோத்திரங்கள் சேவடியே சரணமென்று
முப்புரங்கள் தகனஞ்செய் நாதனொடு நாரணனும்
அப்புறத்தில் சிரமிழந்த அயன்வழியே அமரர்களும்
வெப்பு துயர் நீக்கியருள் வேப்பிலையின் ஆடையம்மே!

54)  அம்மே என்றுனையான் தொழுது அமுது செய்து
செம்மே யெங்கடன் தீர்ந்தழிந்து மீண்டும்
சும்மே யிருப்பது சுமையென்றுணர்ந்துனைக்
கொம்பே யெனப்பற்றிப் பற்றறுத்தேன் பண்டேயானும்!

55) பண்டேயுனைப் பாடு நல்பாட்டனின் பாடல்வழியின்று
கண்டேன் கடவூரில் கலைகளெலாம் கற்றோரைத் துணைக்
கொண்டே! கண்டதும் எனையாண்ட அம்மே உனக்கேயன்பு
பூண்டேன்! இனி வேறெதுவும் வேண்டேன் அம்பிகையே!

56) அம்பிகையே அண்டமெலாந்தொழும் ஆனந்த வல்லியே
தும்பியினைத் தூதுவிடு ஈசனுக்கு சமபாகம் ஈந்தவளே!
நம்பியுனைத் தொழுவோர் நாவில் நடமாடும் நாயகியே!
எம்பிறப்பறுத்து ஏற்றுக்கொள் ஏதிலியே நானுமிங்கே!

57) நானென்ற நினைப்பழிப்பாய்! நல்லோர்தம் துணையளிப்பாய்
தானென்ற கர்வங்கொண்ட மகிடனைச் சங்கரித்து இவ்
வானெலாம் விரிந்து நின்ற காளியே! வலுவிலா என்
ஊனெலாம் நிறைந்த நின் பேரருளுக் கிணையேனோ?

58) இணையிலாதாள் எங்கள் தாய் என்றும் எமக்குத்
துணை நிற்பாள்! பண்புடை வேதங்களும் அவைதம்
பணைகளும் தொழுதேத்தும் வடிவோ கருப்புச்சிலையும்
கணைகளோரைந்தும் ஏந்தும் எந்தாயின் கடைவிழியே!

59) விழியால் அருள்செய்யும், பக்தர்க்கருள் செய்தவர்
பழியெலாம் நீக்கும். பாரில் என்றும் பிறந்து அழுந்தும்
சுழியிடை மீளுதற்கு வழியாம் இவளைத் தொழுதிடில்
அழியா நிலை யருளும் எங்கள் அபிராமித் திருநாமமே!

60) திருநாமஞ்சொல்லி யழுதேன். தொழுதேன் என்னை
ஒருபோதும் பிரியாதே அபிராமி.! அன்றே என் அன்னைக்
கருப்பை யிருந்த காலத்தே யெனைத் தேடி வந்த நின்
உருவை இன்றன்றோ கண்டேன் நாராயணி!

61) நாராயணி நல்லோர் நாவில் நடமாடும் நங்கை நல்லாள்
ஓராறு முகங்கொண்ட வேலனுக்கு அம்மையாம் அவள்
வாராதிருப்பாளோ வல்வினைகள் களைந்திடவே.. பின்
ஆராவமுதளித்து அன்பொடு என்னை ஏற்றிடாளோ?

62) ஏற்றுயர்க் கொடியுடை ஈசனார் இல்லாளே
போற்றுதுமே நின்புகழ் புவியெலாம!  மலராரங்கள்
சாற்றுதுமே சங்கரனை நடனச் சமருக்கழைத்த நின்
பொற்றாமரை அடியிணைக்கே! பொல்லாப்பறுத்தவளே!

63) பொல்லாத பிள்ளைகட்கும் இரங்கு நல்லன்னையே நீ
இல்லாத இடமும் உண்டோ நீண்ட இவ்வுலகினிலே! கல்வி
கல்லாத கடையேன் என் உள்ளத்தே ஒளிரும் ஒளியே!  நெறி
நில்லாத சிறியோனை யேற்றமை அம்மே! நின் தண்ணளியே!

64) தண்ணளியும் தவநெறியும் தந்தே யெனையாண்ட
பெண்ணரசி பெருந்தவத்தாள் இவள்தன்னால் யான்
கண்ணிறைந்து கண்டேன் கலியுகத்து விந்தையெலாம்!
மண்ணாளும் அரசி மங்கைநல்லாள் மாதவன் நற்றங்கையே!

65) தங்கையால் தரணி காப்பாள் தவம் செய்வோர்க்கு
செங்கையால் சேடளிப்பாள். நாடோறும் தொழும்
மங்கையர்தம் மங்கலம் காத்து மாறா நிலைதந்து
அங்கையால் அமுதிடும் எந்தாய் அன்னபூரணியே!

66) அன்னமிடும் அடியவர்க்கு அன்பால் அருட்செய்யும்
கன்னஞ்சிவந்தாளைக் கண்டேனே கடவூரில்! நான்
பொன்னும் வேண்டிலேன்!. பொருளேதும் வேண்டிலேன்!
மன்னவரெலாந்தொழும் நின் இணையடிகள் சாலவே!

67) சாலவமுதீந்து சங்கரனைத் தானே காத்தாள்
ஆலகாலத்தை அமுதாக்கும் அதிசயத்தால்
நீல கண்டங்கொண்டான் நித்திய சோதியனே!
பாலருந்தும் பாலகந்தன் கண்ணீரழித்தவளே!

68) கண்ணீராறாகக் கண்டதும் வந்தே நின்றாள். என்
புண்ணியத்தால் கண்டேனிவளை? புவனத்தோரும்
விண்ணுலகத்தோரும் காணா விந்தையைக் கண்டதும்
பண்ணெழுவதும் விந்தையே பாமரன் என் நாவில்!

69) நாவில் நடம்புரியும் நாயகியே! ஆதி சங்கரனார்
ஆவியிற்கலந்த அருட்சோதியுனைத் தேடியே
காவில் தவமியற்றும் கமண்டலத்தார் தமைவிடுத்து
பாவியெனைத் தேடி வந்தமை யென் சிறப்போ?

70) சிறப்பே யிவள்தமைப் பாடும் பாட்டெல்லாம்! என்றும்
இறப்பேயிலாத நிலையருளும் இன்சொலாள்! தொழுமவர்
பிறப்பறுக்கும் குணம்பாடி பின்னுமொரு நிலையடைந்தேன்
அறம்செய்யும் அன்பே நின் அகத்துப் பிள்ளை யானே!

71) பிள்ளைபடும் பாடு கண்டு பொறுக்காது வந்து உந்தன்
வெள்ளை மனத்தால் கள்ளமழித்தாய்!. கலைகளின் முதல்
பிள்ளையாரைத் தந்து வேதங்காத்த நின் ஈரடிக்குப்
பிள்ளை பாடும் போற்றிகள் ஏற்பாய் பிணிதீர்ப்பவளே!

72) பிணியெலாம் போயொழிந்து புத்துயிரானேன் நின்னை
அணிசெய்தே பாடியென் துயரெலாமொழித்தேன்! அன்று
கணிசொன்ன சனியெந்தன் அகம் வந்தநாளில் நிந்தாள்
பணிந்தே யவன் செய்கை இல்லாமற்செய்தேன் என்னம்மே!

73) என்னம்மை என்றிவள்தாள் பணியும் நல்லோர்
இன்னலெலாம் தானேயழிவதைக் கண்டோர் தாமும்
கன்னமழித்துத் தேடிவந்தார் கண்டேன் அம்மே! அவர்
சின்னவரேயானாலும் சீர்தருமே நின்பெருஞ்சீர்!

74) சீர்தரும் இணைவிழிக்கே பண்ணிசைத்தான் என் பாட்டன்!
பேரெடுத்தான் தானேயவள் செல்லப் பிள்ளை என்றேயவன்!
பார்புகழும் பட்டன் சொன்ன செந்தமிழால் பாடுவோர்தம்
ஊரெலாம் செழிக்கும் வகை செய்திடுதல் அன்னைதன் கடனே!

75) கடனே யெங்கள் சங்கரியைப் பாடுதல் என்றும் எமக்கு! அன்று
இடபங் கொண்டானின் இடப்பாகம் பறித்த அன்னை
விடத்தை அமுதாக்கிக் காக்கும் அதிசயத்தால்தானே
படங்காட்டும் பாம்பும் இவள் தேராவது கண்டீர்!

கருத்துகள் இல்லை: