திங்கள், ஜனவரி 24, 2011

உங்களோடு சில நிமிடங்கள்...

26) தந்தவளெமக்குத் தன்னிணை அடிகளையே ஆதி
அந்தமென நின்ற அன்புடை அன்னையுமே. அன்று
கந்தனுக்கு வேலீந்த கற்பகமே கவினுலகிலென்
பந்தமறுக்கப் பற்றினேன் பரமென் றுனையே..

27) உனையே போற்றும் பித்தன் எமக்கு அமுதம்
தனையே ஈந்தாய் அன்றெந்தன் நாவில்  ஈடாய்
எனையே தந்தேன் கடவூர்ப்பதியில் என்றும் எந்தை
மனையே! மலையோன் பெற்ற மரகதக் கொழுந்தே!

28) கொழுவாய் எனைத்தாங்கும் கொடியே கோவைப்
பழவாய் தான் கொண்ட பிடியே - நெறி
வழுவா உள்ளத்தே நீங்காத நின் அடியை நானும்
தொழவே என் செய்தேன் அம்மே அகிலத்தரசியே...

29) அகிலத்தரசியை அன்பொடு அமுதீந்த அங்கயற்கண்ணியை
அகில்சேர் மலர்நாறும் அருந்தோள் வல்லியை என்றும்
அகிலத்தோர் ஏத்தும் ஆனந்த மல்லியை அடித்தொழுவார்
அகிலம் ஏழும் ஏத்தும் ஆனந்தம் பெறுவர் சத்தியமே...

30) சத்தியவடிவே சகலகலையேத்தும் சங்கரி உமையே
புத்தியிலாப் பித்தனுக்கும் முத்திதருநிலையைப் புவியில்
எத்திசையும் கண்டிலேன் கடவூரன்றி ! காளையரசொடு
அத்திசைக்கெமை யழைத்த அம்மே! அற்புத சுந்தரியே!

31) சுந்தரவடிவு கண்டோர் சுழல்பிணி உழலுவரோ வையைப்
பந்தலில் சொக்கர்தனைச் சோர்வுறச் செய்தவளே! எனை
அந்தகன் அழைக்குங்காலை அல்லலும் அயரும் தீர்க்க
வந்தருள் தாயே உன் திருவடிக்கே சரண் புகுந்தேன்.

32) சரணங்கள் செப்புவரே போதிலுதித்த பிரமனும்,
நாரணனும், நற்றமிழ்ச் சங்க சங்கரனும் வெண்
வாரணம் ஏறிடும் தேவர்தம் கோனும், இமையோருமே!
காரணம் கண்டேன் அம்ம நீயே அவர்தம் தாயே!

33) தாய் உதரத்துதித்த பொழுதே தன்னகத்தே ஈர்த்து
ஏய்க்கும் உலகத்தோர் பற்றறுத்தாய் பண்டொருநாள்
மாய்க்கும் பணிகொண்ட ஈசன் இடப்பாகம் கொண்டவன்
வாய்க்கும் அமுதீந்த அன்பினை என்சொல்வேன்?

34) சொல்தந்தாய் உனைப்பாடச் செந்தமிழில! உனைக்
கல்லென்னும் மடையருக்கும் கவிதந்தாய்! அவர்தம்மை
வெல்வதற்குக் கலைதந்த கலாமயிலே! கற்றோர்தம்
சொல்வாழும் கற்பகமே! கற்பனைக்கெட்டாத நின்னருளே!

35) அருள்தர வந்தாய் அன்பொடு எந்தன் மனத்
திருள் நீக்கிச் சென்றாய் அன்னையே மாய
மருளகற்றும் நின் கடைவிழியால் நஞ்சுண்ட
கருங்கண்டனுக்கு வாழ்வளித்தமை நின் பெருமையே!

36) பெருங்குறையோடு போற்றும் பித்தனுக்கன்று உந்தன்
அருட்குறையின்றி அளந்த அபிராமியே! உனையெண்ணி ஆயிரம்
திருநாமங்கள் செப்பிடுவோருள ராயினும் அன்பொடு
ஒருநாமம் செப்பும் அளியேனுக் கிரங்கிய நின்னெளிமையே!

37) எளிதிற் கிட்டிடும் நின் சேவடிக்கெந்தன் சென்னிதந்தேன்
ஒளிசேர் திருமுகமும் ஒன்பது கோள்களாளும் திருக்கரமும்
களிப்பூட்டும் திருநாமமும் கலைகள் தொழும் கண்ணிணைகளும்
வெளியெங்கும் விரியும் நின் திருவுருவும் என்றுமெனை ஆள்கவே

38) ஆளுகை செய்யும் அன்னைத் திருக்கோயில் அருகிருக்க
வாளுடன் வரும் கூற்றெனை என்செய்யும்? குறைசொல்லும்
கோள்களு மெம்மிடத்து நெருங்குமோ அபிராமியின்
தாளிணைக்கே சரணமென்று அன்றேயான் வீழ்ந்தபின்னும்?

39) வீழ்ந்திடும் பகைவர் கண்டேன் விந்தையெனத் திகைத்தவேளை
பாழுமவர் செய்த பாவம் பக்கத்தில் நிற்கக் கண்டேன். வெண்ணிற
ஆழியிற்றுயில் மாதவன் தங்கைதனை அன்பொடு தொழுதிடவே
ஏழேழ் பிறவி கேட்டேன் என்னம்மைத் திருவடிக்கே!

40) அடித்தொழும் அன்பர்தம் அல்லலெல்லாம் நீக்கும்
படியன்றே யுனைப் பாடிய பட்டன் வழி இன்றுயானும்
படித்தேனவன் அந்தாதியுன் திருமுன்னே அம்மே நின்
மடிக்கெனை யேற்பாய் என்றும் எந்தன் தாய் நீயே!

41) நீயே கதியென்று உனைத் தொழும் அன்பருக்கு
மாயே மாயாத வாழ்வளிப்பாய். மண்ணோர்க்குத்
தாயே மலையத்துவசன் பெற்ற மாணிக்கமே! இப்
பேயேனை மகனென்ற பெருமைதனைப் பாடிடவோ?

42) பாடிப் பரவசத்தில் ஆடிப் பற்றறுத்துப் பின்னுனை
நாடிவரும் அன்பர்குறை தீராயோ? என்றுமுனைத்
தேடி வாடும் ஏதிலியின் ஏக்கந்தனைப் பாராயோ? சடுதியில்
ஓடி வந்தணைத்து மகனே என்னும் நாள் எந்நாளோ?

43) எந்நாளும் பாடுவது எந்தன் அன்னைத் திருப்புகழே!
அந்நாளில் எந்தன் பாட்டன் பாடித் தந்த அந்தாதியே!
இந்நாளில் நான் கண்ட இன்னமுதுத் திருவுருவை
எந்நாளும் எங்கண்கள் ஏற்கும் அருமருந்தைத் தா!

44) மருந்தே இவள் மண்ணுலகின் துயருக்கெல்லாம்! மாசிலா
விருந்தே என்றும் எந்தை ஈசன் திருமனைக்கு! எந்நோய்க்கும்
பொருந்தும் நின் சேவடியைத் தொழும் அன்பரென்றும்
வருந்தா வகை செய்யும் வல்லமையைப் போற்றுதுமே!

45) போற்றிகளாயிரம் பாடுவார் பண்டையுனக்கு மாலை
மாற்றிய சங்கரனும் மாலும் அயனுமே! பக்தர் பிணி
ஆற்றும் ஆதிசக்தியே! அவனியில் உன்புகழ் மாலை
சாற்றிய பட்டனைச் சான்றோனாக்கிய சங்கரியே!

46) சங்கரி சகலகலா வல்லி நான்மறைகள் தொழும்
அங்கயற் கண்ணி அகிலமெல்லாம் பெற்றதாயே!
வெங்காலன் விடும் தூதென்னை  வேதனை செய்ய
இங்கே வரும் வேளை நின் இணையடிகள் தாராயோ?

47) தாராயோ நின்னருளைத் தரணியின் மாந்தருக்கு!
வாராயோ நின்மக்கள் துயர்களைய வல்லவளே!
பாராயோ பாடியழும் பாவலனின் பக்திதனை!
தீராயோ எங்குறைகள் தில்லையூரின் நாயகியே!

48) நாயகி யிவளெனக் கொண்ட எம் ஈசனார்தம்
தாயகம் தானெழில் கண்டிடச் செய்தவளே! இவ்
வையகமும் வானகமும் வளஞ்செய்யும் தாயிவளே
நாயகியாம் நான்மறைக்கும் நான் சொல்லும் சேதியிதே!

49) சேதிசொல்லும் நாரதனும் தேவியுனைப் பணிந்திடுவான்
பாதியுடல் ஈசனுக்குப் பாகந்தந்த பைங்கிளியே! நல்
வேதியரும் வேள்வி செய்வார் வேண்டியுந்தன் அருளினையே!
ஆதிசக்தி அம்பிகையின் அடியென்னைக் காத்திடுமே!

50) காத்திடுமே கற்பனைக் கெட்டாத் துயர் வரினும் நான்
காத்திருக்கும் கழலிணைகள் கற்பிக்ககுமே கவியெனக்கு!
சாத்திரங்கள் சொல்லி மாளும் சதிகாரர் சந்தையிலே
பாத்திறத்தால் வென்றிடுவேன் பக்தியெனும் சக்தியாலே!

கருத்துகள் இல்லை: