வியாழன், அக்டோபர் 14, 2010

அபிராமி அந்தாதி 15 & 16

பாடல் பதினைந்து
தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
விளக்கம் : இன்பமான பாடல்களைத்தரும் சொற்களின் பிறப்பிடமாகிய எங்கள் அபிராமித் தாயே.... நறுமணம் வீசும் தன்மை கொண்டவளே... ஈசனின் தோழியான பசுங்கிளியே... மலைமகளே... உனது குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்களைச் செய்ய்யும் தவமுனிகள், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? அறிவுடைய அமரர்கள் வாழும் விண்ணுலகம் தன்னில் வாழக்கூடிய செல்வத்தையும், என்றும் அழியாத முக்தியையும், வீடுபேற்றையும் அல்லவா பெறுவார்...
இவ்விடத்து அன்னையின் திருவருளை தண்ணளிக்கும் என்று அபிராமிப் பட்டர் மொழிவது சிறப்பு... அன்னை என்றென்றும் தாம் வெப்பமுடன், ஆங்காரத்தோடு இருந்தாலும், அவள் தன் மக்களான உலகின் மாந்தருக்கு அருளும் அருளோ குளிர்ச்சியானது... மிக மிக குளிர்ச்சியானது... இதனால்தான் அவள் தமிழகத்தில் மழையின் பெயரால் மாரியம்மன் என்றழைக்கப் பட்டாள்.. வெம்மை நோயை நீக்கி குளிர்ச்சியான இன்பத்தைத் தருபவள் அன்னை அல்லவா? அதனால்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவளது திருவருளை மிகக் குளிர்ச்சியானது என்று குறிப்பிடுகிறார். அக்குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்கள் செய்யும் மாமுனிகள் இவ்வுலகத்தின் இன்பத்திற்காக அத்தவங்களை இயற்றுகின்றனரா??? அவர்களது எண்ணமெல்லாம் வீடு பேற்றை அடைவதென்னாளோ என்பதல்லவா?? ஆயினும் மண்ணுலகில் தன் மைந்தர் படும் துயரங்கள் கண்டு அன்னை பொறுத்திடுவாளோ??? அவர்களுக்கு இவ்வுலகில் தேவையான செல்வங்களையும் ஈந்திடுவாள்... அறிவுடைய அமரர் வாழும் விண்ணுலகில் அவர்கள் வாழக்கூடிய தகுதியையும் அதற்கான செல்வங்களையும் வழங்கிடுவாள்.. அவர்கட்கு முக்தியை அளித்து வீடுபேற்றையும் அளித்திடுவாள் எங்கள் அபிராமி அன்னை... மேலும் இவ்விடத்து அன்னையைக் குறிப்பிடும் சொல் "பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே" என்பது... இச்சொற்களை இவ்விடத்து ஆய்ந்து நோக்குவோம்... பண்ணளிக்கும் சொல்.... பண் + அளிக்கும் சொல்... இனிமையான பாடல்களைத் தரும் சொல்லே.... சொல்லின் பிறப்பிடமே... என்று அன்னையைத் தமிழாக வடிக்கிறார்... பரிமள யாமளைப் பைங்கிளியே... என்பதை நோக்கினால்.... யாமளை என்பதற்கு பச்சை நிறங்கொண்ட இளமையான ஈசனின் தோழி என்று பொருள் கூறுவர்... நறுமணங்கொண்டவள்... பச்சை நிறங்கொண்ட மலைமகள் (மீனாட்சி), சிவனின் தோழி, என்றும் பைங்கிளியே.. என்றும் அன்னையை வர்ணனை செய்கிறார் அபிராமிப் பட்டர்....

பாடல் பதினாறு
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

விளக்கம் : கிளியைப் போன்ற நிறங்கொண்ட (பச்சை நிறங்கொண்ட) எங்கள் அபிராமி அன்னையே... உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அன்பர்கள் மனத்தில் எப்போதும் ஞானமாய் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் ஒளியும் நீயே... அவ்வொளிக்கான இடமும் நீயே... (ஆன்மாவும் நீயே) எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லாத சூன்யமாய் இருக்கும் வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் விரிந்து நின்ற எங்கள் அபிராமித் தாயே! எளியவனான என் அறிவுக்கும் எட்டும் அளவிற்கு நீ நின்றது அதிசயமே!
அன்னையின் திருஅவதாரங்கள் பலவற்றை இவ்வந்தாதியில் நினைவூட்டுகிறார் அபிராமிப் பட்டர்... கருமை நிறக் காளி, நீல நிறத் துர்க்கை, பச்சை நிற மீனாட்சி என்று பல்வேறு அவதாரங்களையும் நினைவூட்டுகிறார். இவ்விடத்து பச்சை நிறங்கொண்ட மீனாட்சியே... என்கிறார். அவளும் அபிராமியும் ஒருவளே... சக்தியின் அம்சங்களே... அதனால்தான் அன்னையைக் கிளியே என்று விளித்தார்.. கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்த்தொளிரும் ஒளியே... இவ்விடத்து கிளைஞர் என்றால் என்னவென்று முதலில் எமக்குப் புரியவில்லை... இளைஞர் என்ற பதம் உண்டு, இதென்ன கிளைஞர் என்று ஒரு பெரியவரைக் கேட்ட சமயம் அவர் சொன்ன பதில் இது... இவ்விடத்துக் கிளைஞர் என்பது அன்னையின் அடியவரைக் குறிக்கும். அன்னை ஒரு மரமெனில் அதன் கிளைகளாக அவளது அன்பர்கள் உள்ளனர்... எனவே அவளது அடியவரை கிளைஞர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிட்டிருப்பதாக விளக்கம் அளித்தார்... அப்படிப் பட்ட அடியவர் மனத்தில் என்றும் சுடர்விடும் ஞான ஒளியாக இருப்பவளே... என்று அபிராமி அன்னையை வர்ணணை செய்கிறார் அபிராமிப் பட்டர்... அவ்வொளி ஒளிரும் இடமான அத்தனை உள்ளங்களின் ஆன்மாவும் நீயேதான்...... உன்னை என்னதான் சொல்லி வர்ணணை செய்தாலும், உன்னை நான் தியானம் செய்யும் செய்ய எண்ணும் போது நீ ஒன்றும் இல்லாதவளாக அரூபியாக அல்லவா காட்சியளிக்கிறாய்... மனிதர்கள் தங்கள் மனத்திற்கேற்ப பற்பல வடிவங்களில் அன்னையைக் கண்டாலும், ஆன்மீகத்தில் நாம் முன்னேறிச் செல்லச் செல்ல இறைவடிவம் என்பது ஒன்றுமில்லாததாக வெளியாகத் தென்படுவதை நாம் அறிய இயலும்... இதனை ஏற்கெனவேக் கண்டவர் அல்லவா அபிராமிப் பட்டர் ஆகையால்தான் அன்னைய் "எண்ணில் ஒன்றுமில்லா வெளி" என்கிறார். இவ்விடத்து இரு பெரும் மகான்களின் கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.. இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகர் இறைவனைக் காண்பி என்று கேட்ட பொழுது அவர் இறைவனைக் காற்றுக்குவமையாக்கினார். காற்றுக்கு வடிவமில்லை... ஆனால் அது எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது. அதனை நம்மால் உணர முடிகிறது... அதையே நாம் வெவ்வேறு வடிவ பலூன்களில் அடைக்கும் பொழுது, காற்றின் வெவ்வேறு வடிவ நிலைகளைக் காண இயலுகிறது... இறைத் தன்மை என்பது இதுதான். அதுவே எல்லாமானது... எல்லாவிடத்தும் உள்ளது... ஆனால் அதற்கென்று குறிப்பிட்ட வடிவமில்லை... வடிவங்களில் காண்பதும் இறைத்தன்மையே.... என்பதுதான்... காஞ்சி மகா பெரியவர் மின்சாரத்தை தன் உவமையாக்கினார். மின்சாரத்துக்கு வடிவமில்லை... ஆனால் அதன் சக்தி பல்வேறு வடிவங்களில் நமக்குத் தென்படுகிறது.. விளக்காக, விசிறியாக, இன்னும் பல சாதனங்கள் வடிவில்... இவ்விடத்தும் அதேதான் அபிராமிப் பட்டரின் கருத்து...
"வெளி முதல் பூதங்களாகி விரிந்த அம்மே.." வெளி முதலான ஐம்பூதங்களாகி விரிந்து நிற்கும் என் தாயே... அண்டசராசரங்களையெல்லாம் படைத்த அகிலாண்ட கோடி நாயகி அன்னை அபிராமியே ஐம்பூதங்களாகவும் அருள்பாலிக்கிறாள்.. விண், மண், நீர், காற்று, தீ என்று விரிந்து நிற்கின்றாயே... என் தாயே.. அப்படி விரிந்த பெரும் பரம்பொருளான் நீ.... நிற்க... இவ்விடத்து அன்னையின் பெருங்கருணையை ஓர் அதிசயம் என்று குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... "அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே" என்கிறார். என்னைப் போன்ற எளியவன், சிறியவன் அறிவுக்கும் எட்டுமளவுக்கு நீ உன்னைக் குறுக்கி என்னை உன்பால் ஈர்த்தாயே... பஞ்சபூதங்களாகி விரிந்த அன்னை, இந்த எளியவன் அறிவுக்கும் எட்டுமளவிற்கு சிறியவளானது ஓர் அதிசயம் என்று வியக்கும் அபிராமிப் பட்டர் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அன்னையின் பெருங்கருணையைப் பெற பக்தி மட்டுமே போதுமானது... பக்தி வந்திடில் மற்றன எல்லாம் தொடரும்... அன்னை நம்க்கு அருளிச்செய்த அருமறைகள் எல்லாம் தாமே புலப்படும்... இதுதான் அன்னையின் கருணை... அன்னை அபிராமி நம் அறிவுக்கும் எட்டுவாள் என்பதை இப்பாடல் நமக்கு புலப்படுத்துகிறது... அன்னையின் மீது பக்தி கொள்ளுங்கள்.. அவள் அருள் நம்மெல்லாருக்கும் கிட்டட்டும்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..

கருத்துகள் இல்லை: