செவ்வாய், அக்டோபர் 12, 2010

அபிராமி அந்தாதி 11 & 12

பாடல் பதினொன்று
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே

விளக்கம் :
அபிராமித்தாயே... நீயே என் ஆனந்தமாய்த் திகழ்கிறாய்... என் அறிவாய்த்திகழ்கிறாய்.... என்னுள் நிறைந்த அமுதமுமாய்த் திகழ்கிறாய்... வானமே எல்லையான வடிவானவளாய் விளங்குகிறாய்... ரிக், யசூர், சாம, அதர்வனமெனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக இருப்பது அனைவருக்கும் சரணாகதியை அளிக்கும் உனது பாதங்களே... அப்பாதங்கள் வெண்ணிறக் காட்டைத் தனது ஆடற்கலைக்கு அரங்கமாய்க் கொண்ட எங்கள் பிரான் சிவபெருமானது முடிமேல் இருக்கின்றன...
எங்கள் அபிராமித் தாயே... எனக்கு ஆனந்தம் அளிப்பவளும் நீயே... என் ஆனந்தமும் நீயே.. பாருங்கள் அபிராமிப் பட்டரின் பக்தியை....! தன் ஆனந்தமே அன்னைதான் என்று பகர்கிறார்... ஆனந்தமாகவும் தனது அறிவாகவும், நிறைந்த அமுதமாகவும் அம்மையே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும் வானந்தமான வடிவுடையாள்... வானமே அந்தமான வடிவுடையாள்... வானுக்கு அந்தமுண்டோ???? அதே போல் தாயே உன் வடிவழகிற்கு எல்லையுண்டோ..... அன்னையின் அழகிற்கெல்லையில்லை என்பதை எத்தனை அழகிய சொற்கள் கொண்டு பாடுகிறார்... தின்னத் தின்ன தெவிட்டாத தமிழமுது அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி... மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் .... ரிக், யசூர், சாம, அதர்வணம் எனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக , முடிவாக இருப்பது எல்லோருக்கும் சரணமளிக்கும் உன் பொற்பாதங்கள்.... இப்பாதங்கள்... தவள நிறக் கானம் .... வெண்மை நிறக் காடு... வெண்மை நிறக்காடு யாது??? அப்பன் சிவன் ஆடும் காடு எது??? பிணங்கள் எரியும் சுடுகாடு... பிணங்களின் சாம்பல்களாலான வெண்மை நிறமான சுடுகாட்டைத் தம் ஆடரங்காம் - தனது ஆடற்கலைக்கு அரங்கமாக்கிக் கொண்ட எங்கள் பிரான் சிவ பெருமானது தலைமுடி மேல் நின் பாதங்கள் உள்ளன.... அபிராமிப் பட்டர் ஒரு சக்தி வழிபாடு செய்யும் சித்தர் என்பார்கள்... இவ்விடத்து தமிழ் வார்த்தைகளால் விளையாடி தாம் ஒரு எழுத்துச் சித்தர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
மீண்டும் இவ்விடத்து ஈசனார் தலைமீது தேவியின் திருப்பாதங்களா? என வினவுவோர் உண்டு... அன்னையும் ஈசனும் ஒரே அம்சம் என்பதைக் கருத்திற் கொள்க,.... அன்னையில்லையேல் ஈசன் இல்லை... ஈசன் இல்லையேல் அன்னை இல்லை... சக்தி வழிபாடு புரிவோருக்கு அவளே தெய்வம்... சக்தியே உலகத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள்... முப்பெருந்தேவியராக அவதரித்தாள்.. (முன்னர் ஒருமுறை இதைப் பற்றி எழுதியிருக்கின்றேன்)... எனவே இவ்வடிகளில் வியப்பொன்றும் இல்லை....

பாடல் பன்னிரெண்டு
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!!

விளக்கம்.
ஏழுலகும் பெற்றெடுத்த என் அபிராமித்தாயே... என்றென்றும் நான் பாடுவது உன் புகழைத்தான்... நான் கற்பது உன் திருநாமமே... நான் மனங்கசிந்து பக்தி செய்வதோ, பக்தியால் பாடுவதோ... உனது இரு திருவடித் தாமரைகளைத்தான்... பகலும் இரவும் நான் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான். எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என் அபிராமித் தாயே....
கண்ணியது உன் புகழ்.... நான் என்றென்றும் பாடுவது உன் புகழைத்தான்... அபிராமிப் பட்டருக்கு அன்னையைத் தவிர வேறு நினைவு இருப்பதாகத் தெரியவில்லை... அவரது நினைவுகள் அன்னையைச்சுற்றியே வட்டமிடுகின்றன... எப்போதும் அன்னையின் நினைவாலேயே அவர் நின்றிருப்பதால் அவருக்கு வேறேதும் தோன்றவில்லை... அதனால்தான் பலர் அவரைப் பித்தனென்று இகழ்ந்தனர். காணும் பெண்டிரையெல்லாம் அவர் அன்னையாகவே கண்டார். அதனால் அவரைப் பெண்பித்தர் என்றும் இகழ்ந்தனர்... ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை... அன்னையின் புகழைப் பாடுவதிலேயேயும் அவளைத் தியானித்திருப்பதிலேயுமே தன் வாழ்நாளைக் கழித்தார்.. நான் கற்பதும் உனது திருநாமத்தைத் தான்... என்று பகர்கிறார்.. அன்னையின் திருநாமத்தைக் மீண்டும் மீண்டும் கற்பதில் உள்ள இன்பத்தை அனுபவித்து எழுதிய வரிகள் இவை.. கண்கள் மூடி அவள் திருநாமத்தைத் தியானித்துப்ப்பாருங்கள்.. உங்கள் மனத்துள் எழும் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. நான் மனங்கசிந்து பக்தி செய்து பாடுவது உன் இரு திருவடித் தாமரைகளைத்தான். நான் பகலும் இரவும் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான்... எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு என்ன காரணம் தாயே... நான் என்ன புண்ணியம் செய்தேன் ஏழுலகையும் பெற்றெடுத்த என் அபிராமித் தாயே...
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.... மீண்டும் சந்திப்போம் நன்றி...

கருத்துகள் இல்லை: