வெள்ளி, மார்ச் 25, 2011

செந்தூர் கடலோர நினைவலைகள்...

செந்தூர் கடலோர நினைவலைகள்...

உன்
நனைந்த பாதங்களை
நாணச்செய்த
நாணத்தால்
திரும்பிய கடலலைகள்...

அருகில்
முடி இறக்கிய குழந்தையின்
அழுகையால்
உன் கண்களிலும்...

ஒருவர் மேலொருவர்
மண்ணெறியும் சிறுவர்களைக்
கண்டு
கைகொட்டி சிரித்தாய்...
அப்பாவியாய்
அருகில் நான்....

அன்னாசி பழம் விற்ற
அண்ணாச்சியை
அடிக்கவும் சென்று விட்டாய்..
பழம் சுவையற்ற காரணமா?
ஏக்கத்தோடு பார்த்த
ஏழைச்சிறுமியை
அவர் விரட்டிய காரணமா?

கிளி ஜோசியனைக்
கிலியடையச் செய்யும் கேள்வி...
"கிளிக்கு எப்போது விடுதலை?"
உனக்கு மட்டுமே
தோன்றுமோ
இதுபோன்ற கேள்விகள்..?

வசந்த மண்டபத்தின்
அசுத்தம் கண்டு
அகோரியானாய்...
இன்னமும் உன்னுடன்
பிரகாரம் சுற்ற
பயமாய்த்தான் இருக்கின்றது...

கருத்துகள் இல்லை: