செவ்வாய், மார்ச் 08, 2011

ஏனடா ரங்கா... என்றைக்குத் திருக்காட்சி..?

அம்மையே....
தமிழாண்ட கோதை
அம்மையே....!
உன்னை மாலை சூட
தன்னையே தந்த ரங்கன்
என்னையும் ஏற்பானா?
மன்னற் குலத்தினில் பிறந்தவனில்லை
பொன்னோராயிரம் கொண்டவனில்லை
சிந்தையில் அவன் நாமம் செப்புதல் தவிர
மந்திரங்கள் ஏதும் கற்றவனில்லை..
வேதியற்குலத்திற் கனுப்பாமல் என்னை
சாதிகள் ஒழிக்க அனுப்பி வைத்தான்..
ஆயினும் எந்தாயே! அரங்க மாநகரம் வந்து
தாயினும் சிறந்த என் தந்தையைக் காண
கடலன்னக் காதல் கொண்டேன் - அதனைக்
கடுகென்று எண்ணி விட்டானே!..
அன்னையை வணங்கிடில்
அரங்கன் இரங்குவானாம்!
ஆரோ மொழிந்தார் என் அம்மே
ஆரென்று என்னை ஏற்பாய்?
நெஞ்சம் வாடி நின்றழுதேன்.
கொஞ்சம் கருணைக் காட்டிடம்மா...
அரங்கனை என் முன்னே வந்திடச் செய்து
ஆறுதல் செய்திடு உன் மகவை... 
ஏனடா ரங்கா... என்றைக்குத் திருக்காட்சி..?

கருத்துகள் இல்லை: