வெள்ளி, மார்ச் 25, 2011

சுடலைமாடன் கதை (5)

தூத்துக்குடி மாவட்டம் ஏரலின் அருகே உள்ள ஊர் ஆறுமுக மங்கலம். இங்குள்ள
சுடலமாடசுவாமி மிகவும் பிரசித்தம். ஓடாத பேய்களையும் ஓடவைப்பதும், தீராத
வினைகளைத் தீர்ப்பதுமாக அவர் அருள்பாலிக்கின்றார். மேலும் செய்வினை என்று
சொல்லக் கூடிய பில்லி சூனிய விவகாரங்களுக்கும் தீர்வு இந்த ஊரில்
கிடைக்கும்.
நம்முடைய ஊர்களில் யாருக்காவது "மகராஜன்" என்று பெயர் வைத்தால் அது
சுடலைமாட சாமியின் பெயர்தான். அவரைத்தான் மகாராஜா என்று அழைப்பார்கள்.
ஆறுமுகமங்கலத்தின் சுடலைமாடனுக்கு ஹைகோர்ட் மகராஜா என்றும் ஓர் பெயர்.
எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்தப் பெயருடனேயே வாழ்கின்றனர். அவருக்கு
ஏன் அந்தப் பெயர் வந்தது.. அது ஒரு வரலாறு..
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அது..
ஆறுமுகமங்கலத்தைச் சார்ந்த ஒருவனை (பெயர்களெல்லாம் யாருக்கும்
தெரியவில்லை) ஓட ஓட விரட்டிக் கொலை செய்திருக்கின்றார்கள் பகைவர்கள்..
அவனை வெட்டும் போது அவன் தன்னை விட்டு விடும்படி கதறி இருக்கின்றான்..
அவர்களோ மறுத்து அவனை வெட்டினார்கள். "யாருமில்லாத காட்டில் உன்னைக் கொலை
செய்திருக்கின்றோம். எங்களுக்கு எதிராக யார் சாட்சி சொல்வார்கள்?" என்று
கொக்கரித்தார்கள். அவனோ "என்னைக் கொலைசெய்தால் அந்த சுடலைமாடசாமியே
உங்களைப் பழிவாங்குவார். அவர்தான் நீங்கள் என்னை வெட்டியதற்கு சாட்சி"
என்று சொல்லி சரிந்து விழுந்தான்...
கொலை செய்தவர்கள் போய்விட்டார்கள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று...
ஆனால் காட்டில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் இதை நேரில் பார்த்து
விட்டான்.. ஆனால் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல சற்றே பயம். ஆனால்
சுடலைமாட சாமியை நம்பி காவல்துறையினரிடம் கொலை செய்தவர்களின் பெயர்களைக்
கொடுத்து விட்டான். அவர்களும் பிடித்து விட்டார்கள்..
நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றது.
இவன் சாட்சி சொல்லப் போகவேண்டும்..
குற்றவாளிகளின் உறவினர்கள் இவனை அழைத்துச் சென்று அடித்து ஓர் இடத்தில்
கட்டி வைத்து விட்டார்கள்.. சாட்சி வரவில்லை என்றால் வழக்கு தள்ளுபடி
செய்யப் படும் என்று நம்பினார்கள்..
வழக்கு விசாரணைக்கு வந்தது..
நீதிபதி வந்தமர்ந்தார்..
குற்றவாளிகளை விசாரித்தார். மறுத்தார்கள்..
சாட்சியை அழைத்தார்...
சாட்சி வந்தான்... கம்பீரமாக... அவர்களைக் கை காட்டினான்.. கொலையைத் தானே
நேரில் கண்டதாகக் கூறினான்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது...
கட்டிவைக்கப் பட்ட சாட்சி தப்பி ஓடிவந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்..
ஆனால் கட்டி வைக்கப் பட்டவன் அங்கே அப்படியே கிடந்தான்..
அப்படியானால் வந்து சாட்சி சொன்னது யார்?
அப்போதுதான் இவன் சொன்னான்.. மரிக்கும் போது அவன் சுடலைமாடசாமியே சாட்சி
என்று சொன்னதாக...
நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னது நம் சுடலைமாடசாமியே என்பது தெளிவானது..
எனவே மகாராஜாவை நீதிமன்றத்தின் பெயரால் அழைக்க ஆரம்பித்தார்கள்.. அது
ஹைகோர்ட் அல்ல... ஆனாலும் நம் சுடலைமாடனுக்கு இன்னும் பெருமை சேர்க்க
வேண்டும் என்ற ஆவலிலும், அவன் மேல் கொண்ட பாசத்திலும் "ஹை கோர்ட் மகராஜா"
என்றழைக்க ஆரம்பித்தார்கள்.. அது இன்றும் தொடர்கின்றது...
சுடலைமாடசாமியின் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.. இன்றுடன்
முடிக்கின்றேன்.. பிழைகளைப் பெரியோர்கள் யாரேனும் காண்பீர்களேயாயின்
பொறுத்தருள்வீர்களாக...
தங்கள் பகுதி சுடலைமாடசாமியின் பெருமைகளை இந்த இழையில் பகிர்ந்து சுவை சேருங்கள்...
நன்றி வணக்கம்..

கருத்துகள் இல்லை: