வெள்ளி, மார்ச் 25, 2011

சுடலைமாடன் கதை (4)

யாரோ ஒரு கிழட்டுப் பண்டாரம் தன் வாசலில் பிச்சை கேட்டு வந்து பின்னர்
தன் மகளைக் கற்பழிக்க நாள் குறித்ததை எண்ணி வேதனையில் ஆழ்ந்தான்
காளிப்பெரும்புலையன். அஞ்சன மையெடுத்து யாரென்று பார்த்தால் அவனால்
எதையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.. மாந்திரீகத்தில் பெரியவன் என்று
பெயரெடுத்த என்னையே ஒருவன் ஏமாற்ருகிறான் என்றால், நாம் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும் என்று முடிவு செய்து மாவிசக்கிக்கு மந்திரக் காவல்
அமைத்தான்.
ஏழு அறைகளை அடுக்கடுக்காக அமைத்து நடுவறையிலே பெண்ணை அமரச்செய்தான்...
யாரும் அதனை நெருங்க இயலாத வண்ணம் தன் மாந்திரீகத்தால் வளையம்
அமைத்தான்...
ஆனாம் நம் சுடலைமாட சாமியை எந்தக் காவல்தான் தடுத்து நிறுத்தும்?
இரவிலே எறும்பு உருக்கொண்டு மாவிசக்கியின் அறையை அடைந்தார் சுடலைமாட சாமி...
அவள் அறியாமலேயே அவளைக் கற்பழித்தார். வந்த சுவடு இல்லாமல் வெளியேறினார்.
மறுநாள் காலையில் மகளை எழுப்ப வந்த புலக்கொடியாள் மகளில் நிலையக் கண்டு
அதிர்ந்தாள்..
மாவிசக்கியும் கண்ணாடியில் தன் கோலம் கண்டு அழத்துவங்கினாள்.
பெரும்புலையன் அதிர்ந்தான்... தன் மாந்திரீகம் பொய்த்ததை எண்ணி பயந்தான்.
வந்தவன் மிகப்பெரிய ஆள். தன்னால் அவனை எதிர்க்க இயலாது என்பதைப் புரிந்து
கொண்டான்.
ஆயினும் அவன் மனத்தில் வந்தவன் யாரென்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது...
மைபோட்டு பார்த்தான்.. ஏவல் தேவதைகளிடம் கேட்டான்.. யாராலும் சொல்ல முடியவில்லை...
மாவிசக்கி கர்ப்பமானாள்...
இத்தோடு விட்டாரா சுடலைமாடன்?
என் அன்னையின் ஆலயத்தில் புகுந்து திருடியவனைக் குடும்பத்தோடு
பழிதீர்ப்பேன் என்று சபதம் செய்தாரில்லையா? எனவே பெரும்புலையனைக்
குடும்பத்தோடு அழிக்க நாள் பார்த்துக் காத்திருந்தார்.
மாவிசக்கி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்...
ஆலடிப்புதூரிலே காக்காச்சி மலை தாண்டி பளியன்மார்கள் விவசாயம் செய்து
வந்தார்கள்.  அவர்கள் விவசாயம் செய்யும் சோலையை நாசம் செய்தால், புலையன்
நேரில் வருவான். அவனைப் பழிவாங்கலாம் என்று எண்ணிய சுடலைமாட சுவாமி,
பளியன்மார்கள் விவசாயம் செய்து வந்த ஓர் நாள் இரவு சோலைக்குள் புகுந்து
அதனை முற்றிலும் நாசம் செய்தார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த பளியன்மார்கள் அதிர்ச்சியில் புலையனிடம்
ஓடி வந்தார்கள்..
புலையனும் தானே நேரில் வந்து பார்ப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
புலையன் காக்காச்சி மலைக்கு செல்ல இருப்பதை அறிந்த புலக்கொடியாள் அவனைத் தடுத்தாள்.
"போகவேண்டாம் அன்பரே.. நான் பொல்லாத கனவு கண்டேன்." என்று சொன்னாள்.
"யாராலும் என்னை எதுவும் செய்ய இயலாது.. நீ என்னைத் தடுக்காதே" என்று
சொல்லிவிட்டு புலையன் புறப்பட்டுச் சென்றான்..
பளியர்களின் சோலையில் அமர்ந்து மை போட்டு பார்த்த போது அவனால் எதுவும்
கண்டு பிடிக்க முடியவில்லை.பிறகு சுடலைமாடன் தானே அவன் நேரில் பிரசன்னமானார்..
தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினார்.
"என் அன்னையின் ஆலயம் புகுந்து கொள்ளையடித்த பெரும்புலையா.... உன்னை
சந்திக்கவே நேரம் காத்திருந்தேன்..:" என்று அவன் கையிலிருந்த திரு
நீற்றுத் தாம்பூலத்தைப் பிடுங்கி அவன் சென்னியில் ஒரே அடி.
நடுங்கிப்போனான் காளிப்புலையன்.
"ஐயா உன் பலம் அறியாது உன் காவலில் இருந்த திரவியங்களைக் கொள்ளை கொண்டு
வந்து விட்டேன். என்னை மன்னித்து விடு... நாம் பங்காளிகளாக இருப்போம்"
என்று சுடலைமாடனிடம் பேரம் பேச ஆரம்பித்தான் காளிப்புலையன்.
"என்ன? என்னுடன் பங்காளியா? எனக்கு உன்னால் கொடை கொடுக்க இயலுமா?" என்று
கேட்டார் சுடலைமாடன்.
"என்ன வேண்டுமானாலும் தருகின்றேன்.." என்றான் புலையன்.
"ஏழு பரண்கள் போட்டு எட்டாத உயரத்தில், ஏணிவைத்து மாலைசாற்றி, கும்பம்
வைத்து, ஒருபரணில் சூல் ஆடுகளும், ஒரு பரணில் சூல் பன்றிகளும், ஒரு
பரணில் சூல் எருமைகளும், ஒரு பரணில் கருங்கிடாக்களும், ஒரு பரணில்
செங்கிடாக்களும், ஒரு பரணில் ஒரு கோட்டை புழுங்கலரிசி சோற்றை ஒரே
படைப்பாகவும் போட வேண்டும்"
"அப்படியே செய்கிறேன்.. என்னை விட்டு விடு. "
"அது மட்டுமல்ல... ஏழாவது பரணிலே ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை எனக்குப்
பலி கொடுக்க வேண்டும். அவளும் தன் தகப்பனுக்கு ஒரே பெண்ணாக இருக்க
வேண்டும். அவளுக்கு அது முதல் குழந்தையாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் "அப்படி நீ எனக்குப் பலி கொடுத்தால், மூன்றே முக்கால் நாழிகைக்கு
உன் சிமிழுக்குள் நான் அடைபடுவேன்" என்று வாக்கும் கொடுத்தார்.
இதில் மயங்கிய  பெரும்புலையன் பலி கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான்.
பரண்கள் அமைத்தான்.. ஆடுகளும், பன்றிகளும், எருமைகளும், கிடாக்களும்
கிடைத்தன... நிறைமாத கர்ப்பிணிக்கு எங்கு செல்வது என்று யோசனை செய்த போது
மாவிசக்கியின் நினைவு வந்தது... தனக்கு மகளை விட மாந்திரீகமே முக்கியம்
என்று எண்ணி அவளையே பலியிடத் தீர்மானித்தான் பெரும்புலையன்.
வீட்டுக்கு வந்தான். மகளை அழைத்தான்.
"மகளே மாவிசக்கி.. நம் குலதெய்வத்துக்குப் பலி கொடுக்கப் போகின்றேன்..
நீயும் வா.. நாம் செல்லலாம்" என்று அழைத்தான்.
"அப்பா.. நானோ நிறைமாத கர்ப்பிணி.. நான் அதைப் போன்ற பலி
கொடுப்பதையெல்லாம் காணக் கூடாதல்லவா? நான் வரவில்லை" என்று மறுத்தாள்.
அவளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றான்.
ஏழாவது பரணிலே அவளை ஏற்றி அவளது கைகளையும், கால்களையும் கட்டினான்.
மாவிசக்கியும் புரிந்து கொண்டாள்.
"அடேய் சண்டாளா.. பெற்ற மகளென்றும் பாராமல், என்னையும் கொலைசெய்து
பலியிடத் துணிந்து விட்டாயே.. நீ உருப்படுவியா.... நான் மரித்து ஏழு
நாட்களுக்குள் நீயும் செத்துப் போவாய்." என்று சாபமிட்டு அழுதாள்..
அதையெல்லாம் காதில் வாங்க வில்லை காளிப்புலையன்.
அத்தனை ஆடுகளையும், எருமைகளையும், பன்றிகளையும், கிடாக்களையும் பலி
கொடுத்தான்.. ஏற்றுக் கொண்டார் சுடலைமாட சுவாமி.. ஒரு கோட்டை
புழுங்கலரிசி சோற்றையும் ஏற்றார். இறுதியாகத் தனது மகளையும் நெஞ்சைக்
கிழித்துப் பலி கொடுத்தான். அதையும் ஏற்றார்.
பின்னர் தான் சொன்னது போல் அவனது சிமிழுக்குள் அடைபட்டார்...
சுடலைமாடனை அடைத்து விட்டோம். இனி பகவதி கோயிலில் உள்ள அனைத்துத்
தங்கங்களையும் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய புலையன், சுடலைமாடனை
அடைத்த சிமிழை அங்குள்ள குளத்தில் புதைத்து வைத்தான்.
குளத்திலிருந்து சுடலைமாடனால் மீள முடியாது என்று நம்பிவிட்டான்.
வீட்டுக்கு வந்தான்..
புலக்கொடியாள் தண்ணீர் எடுக்கக் குளத்துக்குச் சென்றாள். குடத்தில் நீரை
மொண்டாள்.. அந்த நீரில் சிமிழும் வந்து விட்டது. வீட்டுக்கு வந்தாள்..
புலையனுக்கு சாப்பாடு வைத்தாள்.
குடத்திலிருந்த நீரை ஒரு செம்பில் அவனுக்கு ஊற்றி வைத்தாள்.
நீரருந்த செம்பை எடுத்த புலையன் கண்களில் அந்த சிமில் பட்டது.
"ஐயோ... இந்த சிமில் இங்கு வந்து விட்டதே" என்று அவன் பரிதவித்த நொடியில்
மூன்றே முக்கால் நாழிகை முடிவடைந்து விட்டது.
சிமில் வெடித்தது..
ஆங்கார சொரூபமாக வெளிப்பட்டார் சுடலைமாட சுவாமி..
"அடேய் பெரும்புலையா... ! தங்கத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற மகளையே
பலிகொடுத்த சண்டாளா... உன்னைப் போன்ற பெரும்பாவிகள் உயிரோடு இருக்கலாமா?
என் அன்னையின் ஆலயம் புகுந்து திருடிய உன்னைக் குடும்பத்தோடு அழிப்பேன்
என்று சபதம் செய்தேன்.. இப்போது நிறைவேற்றுகிறேன்." என்று சொல்லி அவனை
அடித்தார்...
அருகே நின்றிருந்த புலக்கொடியாளையும் அடித்தார்..
தன் அன்னையின் ஆலயத்திலிருந்து புலையன் கொள்ளையடித்துச் சென்ற
திரவியங்களை மீட்டு கொட்டாரக்கரை திரும்பினார்..
அவற்றை மீண்டும் அன்னையிடமே சேர்ப்பித்தார்..
"அன்னையே... இப்போது புரிந்ததா உன் மகனின் பராக்கிரமம்?" என்று அன்னை
பகவதியை வணங்கி நின்றார்.
"மெச்சினோம். மகனே... ஆனால் நீ இப்படிப் பழிவாங்குவதெல்லாம் கூடாதப்பா...
தெய்வங்கள் எல்லோரும் மனிதர்களை ரட்சிக்கத்தான் வேண்டும்... நீயும்
வரங்கொடுக்கும் தெய்வமாக வேண்டும்" என்று அவனை ஆசீர்வதித்தாள்.
"அப்படியே செய்கின்றேன் அன்னையே.. எனக்கு விடை கொடு" என்று சொல்லி
அன்னையிடம் அனுமதி வாங்கிவிட்டு, கொட்டாரக்கரையை விட்டுப் புறப்பட்டார்.
நேராக குற்றாலம் வந்து சேர்ந்தார்.
குற்றால அருவியில் குளித்து விட்டு திருக்குற்றால நாதரையும்,
அம்பிகையையும் வணங்கினார்...
பின்னர் குற்றாலப்பதியிலேயே அருளும் தெய்வமாகி வரமருள ஆரம்பித்தார்...
அங்கு வருவோரும் போவோரும், குற்றாலத்திலிருந்து பிடிமண் எடுத்துக் கொண்டு
தங்கள் பதிகளில் கோயில் கட்டி சுடலைமாடனைத் தெய்வமாக வைத்து வழிபட
ஆரம்பித்தனர்..
இவ்வாறு தென்னாடு முழுமைக்கும், எல்லா கிராமங்களிலும் சுடலைமாடன்
விதவிதமான பெயர்களில் வணங்கப் படுகின்றார்.  சுடலைமாடன், பெரியசுவாமி,
புலமாடன், வேம்படி மாடன், கரடிமாடன் (கரையடிமாடன் என்பதைத்தான் கரடிமாடன்
என்று அழைக்கின்றார்கள்), கொம்பு மாடன் என்று விதவித பெயர்கள்
அவருக்கு... எங்கள் சுப்பிரமணியபுரத்தில் வடலடிசுவாமி என்ற பெயர்
சுடலைமாடனுக்கு..
குதிரையில் இரவில் ஊர்வலம் செல்வதும், ஊரைக்காப்பதுமான காவல் தெய்வம்
இவர்.. அவருக்குக் கொடை கொடுக்கும் நாளில் அவர் குதிரையைக் கட்டும்
குத்துக்கல்லுக்குப் பெண்களும், ஆண்களும் நீராட்டி வழிபடுவார்கள். மற்ற
இடங்களை விடச்சிறப்பு என்னவென்றால் எங்கள் கிராமத்தில் அவனுக்கு
உருவமில்லை... பீடமும் இல்லை...  வடக்கு மற்றும் தெற்காக இரண்டு
வாயில்கள்.. வடக்கு வாசலில் நின்றுதான் வழிபடுவார்கள்... அங்கிருந்து
பார்த்தால் தென் திசைக் கதவுதான் தெரியும்... உள்ளே சந்தனக்கல்லால் பீடம்
மட்டும் உள்ளதாக சொல்வார்கள்.. அடியேன் பார்த்ததில்லை.. தென் திசை வாசலை
ஒட்டித்தான் சாலை... சாலையில் செல்வோர்கள் வடலடியானை வணங்க
மறப்பதில்லை... யாருடைய வீட்டில் விசேடம் என்றாலும் வடலடியானுக்குத்
தேங்காய்ப் படையல் போட்டு பிறகுதான் விசேடங்கள் நடக்கும். அதனால்
"தேங்காய் உடைக்கிற கோயில்" என்றும் பெயர் உண்டு. கிழக்கத்தியார்
கோயிலில் இருந்து தேங்காய்களை வடலடியான் கோயிலுக்குக் கொண்டு சென்று
உடைத்து அந்த கோவிலின் படிகளில் படைப்பார்கள்.. பிறகு அவற்றை பாயில்
போட்டு பெரியவர்கள் அமர்ந்து கீறுவார்கள். பிறகு அனைவருக்கும்
கொடுப்பார்கள்.
நான் முதலூர் பள்ளியில் படிக்கும் போது தினமும் வணங்கிச்செல்வோம்.
அங்கிருந்த உண்டியலின் திருநீற்றுக் கொப்பரையில் திருநீறு
இல்லாவிட்டாலும் குனிந்து மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வோம்...
எதிர்ப்புறத்தில் ஓர் அழகிய ஆலமரம் இருந்தது... அருகே நல்ல கிணறு
ஒன்று... முன்னர் கொடைவிழாவின் போது அந்த கிணற்றிலிருந்து தோண்டி மூலம்
நீர் இறைத்துத்தான் பெண்கள் நீர் கொண்டு வந்து அந்த குத்துக்கல்லிற்கு
அபிசேகம் செய்வார்கள்.. ஒரு புயலின் போது ஆலமரம் சரிந்து விழுந்து
விட்டது...
கிணற்றிற்கும் செல்ல முடிவதில்லை... எனவே ஆலயத்திலேயே ஆழ்துளைக் கிணறு
அமைத்து விட்டார்கள்.. அங்கிருந்து மோட்டார் மூலம் நீர் பிடித்து தங்கள்
நேர்ச்சைகளை மக்கள் பூர்த்தி செய்கின்றார்கள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலின் அருகில் ஆறுமுகமங்கலம் என்றொரு ஊர்
இருக்கின்றது.. நமது பகுதியில் சுடலைமாடனைப் பற்றிய பிரசித்தம் இந்த
ஊர்தான். பேய்கள் ஆடுவதும், ஓடிப்போவதுமாக மெத்தப் பிரசித்தம். அங்கே
சுடலைமாடனை செல்லமாக "ஹைகோர்ட் மகராஜா" என்றழைக்கின்றார்கள்.. நம்முடைய
பகுதியில் நிறைய குழந்தைகளுக்கும் சுவாமியின் பெயரை வைத்து ஹைகோர்ட்
மகராஜா என்று பெயர் சூட்டி மக்கள் மகிழ்ந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி
அவருக்கு அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி அடுத்த மடலில் காணலாம்...

கருத்துகள் இல்லை: