வெள்ளி, பிப்ரவரி 04, 2011

தோள்சீலைப் போராட்டம்.

தோள்சீலைப் போராட்டம்.


இன்று தமிழகத்தின் முழு கல்வி அறிவு பெற்ற மாவட்டமாகத் திகழும் குமரி மாவட்டத்தின் அன்றைய நிலை வேறு. இயற்கை அள்ளிக்கொடுத்த செல்வங்கள் பல. ஆயினும் அன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

"பறையனைத் தொட்டால் தீட்டு. சாணானைப் பார்த்தாலே தீட்டு" என்று ஓர் வழக்குச் சொல் இருந்தது. இது சான்றோர் குலத்துக்கு மட்டுமல்ல.. அய்யா அவர்கள் பட்டியலிட்ட பதினெட்டு சாதியினருக்கும் பொருந்துவதாக இருந்தது.

கீழோராகக் கருதப் படுபவர்கள் மேலோருக்கு எதிர் நிற்கையில் வெற்று மார்புடன் நிற்கவேண்டும் என்ற கருத்து மக்களிடையே நிலவி வந்தது. ஆலயத்துள் நுழையும் உரிமை பெற்றோர் உயர்சாதி ஆண்கள் மட்டுமே. அவர்கள் இறைவனுக்கு முன்னால் வெற்று மார்புடன் நின்றனர்.. எனவே அவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் தங்கள் முன் வரும்போது வெற்று மார்புடனே வரவேண்டும் என்று உரைத்தனர். இது ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பொருந்தும் என்றனர். இதனால் தாழ்த்தப் பட்ட சாதியினைச் சார்ந்த பெண்கள் மேலாடை இன்றி நடமாடுவது சாதாரணமாக இருந்தது.

எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலும்.? தன்மானங்கொண்டோர்களால் இதைக் கண்டு பொறுக்க இயலவில்லை. எனவே பொங்கி எழுந்தனர். அய்யாவும் இந்தப் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தாழக்கிடப்போரைக் காப்பதே தலையாய தர்மம் என்று முழங்கிய அய்யாவால் பெண்கள் இதைப் போன்று கேவலப்படுத்தப் படுவதை விரும்ப வில்லை. எனவே தனது பதிக்கு வரும் பெண்கள் கண்டிப்பாக மார்புக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் கலவரங்கள் வெடித்தன. ஆதிக்க சாதியினர் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னனிடம் இதைப் பற்றிக் குறை கூறினார். இது மன்னவனுக்குக் கோபத்தைக் கிளப்பிவிட்டது. எனவே தாழ்த்தப் பட்டோர் கண்டிப்பாக மார்பை மறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். மார்பை மறைக்கும் தாழ்குலப் பெண்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப் பட்டன..

"பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்

போடாதே என்றடித்தானே சிவனே அய்யா..."

என்று இதைப் பற்றி அய்யா பாடுகின்றார்...

கிறித்தவப் பாதிரிகள் இதைப் பயன்படுத்தித் தேவாலயத்துக்கு வருவோர் மேலாடை அணிந்து வரலாம் என்று அறிவித்தனர். இதனால் மதம் மாறிய தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிந்து ஆலயம் சென்றனர்.

ஆனால் தேவாலயம் செல்லும் தாழ்த்தப் பட்ட சாதிப் பெண்களின் மார்பை மறைக்கும் உடைகள் கிழித்தெறியப் பட்டன. மீட் எனும் கிறித்தவ பாதிரியார் இந்நிகழ்வை பத்மநாபபுர நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார். நீதிமன்றமும் கிறித்தவப் பெண்கள் "குப்பாயம்" எனப்படும் ஆடையை மார்பை மறைத்துக்கொள்ள அணிந்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் மேல்சாதி இந்துப் பெண்களைப் போன்று சேலை அணிவதைத் தடை செய்தது.

மார்பை மறைத்துக் கொண்டால் போதும் என்றெண்ணி மக்கள் திரள்திரளாக கிறித்தவத்தைத் தழுவினர். இவர்களைக் கண்டு இந்துப் பெண்களும் மார்பை மறைக்கும் ஆடைகளை அணியத் தொடங்கினர். இவர்களை அய்யா ஆதரித்தார். மேலாடை இன்றித் தனது பதிக்கு வரவேண்டாம் என்றார். தன் மானத்தோடு வாழ்ந்தால் மட்டுமே கலி நீசனை அழிக்கலாம் என்றுரைத்த அவர், மேலாடை அணிந்தால்தான் தன்மானத்தோடு வாழ இயலும் என்று அறிவுறுத்தினார்.

இது உயர்சாதியினருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இதனால் அவர்கள் காணும் இடங்களிலெல்லாம் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சந்தைக்கு வரும் பெண்கள், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் என்று பெண்கள் தாக்கப் பட்டனர். பலர் உயிரும் இழந்தனர்..

திருவிதாங்கூர் அரசியின் முன்னால் ரவிக்கை அணிந்து வந்த குற்றத்துக்காக ஒரு பெண்ணின் மார்பகங்களை அறுத்தெரிய அரசாங்கம் உத்தரவிட்டது..

இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது..

காணுமிடங்கள் எல்லாம் நாயர்களும், நாடார்களும் மோதிக் கொண்டனர்.

நாடார் சாதியில் நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்த பணக்காரர்கள், தங்கள் நிலங்களில் வேலை செய்யும் மற்ற நாடார்களைத் துன்புறுத்தினர்.

இதைத்தான் அய்யா "துரியோதனனும், பஞ்சவரும் ஒரே வயிற்றில் பிறக்கக் கண்டேன் சிவனே அய்யா.." என்று பாடினார்.

நிலைமைத் தீவிரமடைவதைக் கண்ட சென்னை ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டார். கீழ்சாதிப் பெண்களும் மார்பை மறைத்துக்கொள்ளும் ஆடையை அணியலாம் என்றும் ஆனால் அது மேல்சாதிப் பெண்களின் ஆடையைப் போன்று ஆடம்பரமாக இருக்கக் கூடாது என்றும் ஆணையிட்டார்.

இப்படித் தோள்சீலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது..

தோள்சீலைப் போராட்டம் முடிவுக்கு வந்த போதும் அய்யாவின் சமுதாயப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது..

தன்னைத் திருமாலின் அவதார மகன் என்று அய்யா சொல்லிக் கொண்டதும், மேல் சாதிகளுக்கு எதிராக அவர் பரப்பும் கருத்துக்களும் ஆதிக்க சாதியினரிடையே அவரைப் பற்றிய வெறுப்பினை ஏற்படுத்தியது...

அவர்கள் திருவிதாங்கூர் மன்னனை நாடினர்.. மன்னனும் அய்யாவைக் கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டான். கைது செய்யப் பட்ட அய்யா நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி அடுத்த மடலில்...

3 கருத்துகள்:

Kalimiku Ganapathi சொன்னது…

It is nice to read about Ayya.

About thOL seelai kalavaram:

Kalvettu Ramachandran has written a wonderful book with authentic information about this issue. The book shows some unknown background of the problem.

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

Oh appadiyaa???

பெயரில்லா சொன்னது…

WAT IS THE BOOK NAME OF Kalvettu Ramachandran? IF YOU HAVE LINK PLS SEND