ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

இசக்கியம்மன் கதை (3)

ஈசனிடம் வரம் வாங்கிய லெட்சுமியானவளும் அவள் அண்ணனும் சோழராசனுக்குக்
குழந்தைகளாகப் பிறந்தனர். இருவரும் நீலன் நீலி எனப்பட்டனர்.
ஈசனது அருளால் பிறந்த குழந்தைகள் ஆதலால் இவர்கள் புறத்தோற்றத்திற்குக்
குழந்தைகளாகத் தென்பட்டனர். ஆனால் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் போது
இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர்..
தாயின் தாய்ப்பால் இக்குழந்தைகளின் பசியை ஆற்றுவதாக இல்லை..
"அண்ணா.. எனக்குப் பசி பொறுக்கவில்லை.. நீ பசியாறினாயா?"
"இல்லையம்மா. எனக்கும் பசிக்கின்றது... "
"கொஞ்சம் பொறு அண்ணா. இவர்கள் அனைவரும் உறங்கியபின் நாம் வெளியே சென்று
பசியாறி வரலாம்"
குழந்தைகள் பெரியவர்கள் உறங்கக் காத்திருந்தனர். அனைவரும் ஆழ்ந்த
உறக்கத்தில் ஆழ்ந்த பின்னர் இருவரும் வெளியேறி சென்று ஆடுகளையும்,
மாடுகளையும் கடித்து ரத்தம் குடித்துப் பசியாறித் திரும்பவும் வந்து
படுத்துக் கொண்டனர்.
மறுநாள் பார்த்த மகாராணி குழந்தைகள் மேல் ரத்த வாடை வீசுவதைக் கண்டு
அதிர்ச்சியடைந்தாள். அவளுக்குப் புரியவில்லை.. வாசனைத் திரவியங்களைக்
குழந்தைகளுக்குப் பூசினாள்.
இந்த சமயத்தில் சோழராசன் ஓர் சோசியனை வரவழைத்துக் குழந்தைகளுக்கு சாதகம்
கணிக்கச் சொன்னார்.
வந்த சோசியன் குழந்தைகள் பிறந்த நேரத்தைக் கேட்டு சாதகம் கணித்து விட்டு
"அரசே.. இக்குழந்தைகள் மானுடக் குழந்தைகள் அல்ல.. இவர்கள் பிறந்த
நேரத்தைப் பார்த்தால் பேய்க்குழந்தைகள் என்றே தோன்றுகிறது. இவர்களால்
கோட்டைக்கு ஆபத்து. எனவே இவர்களை காட்டில் விட்டு விடுங்கள்." என்று
சொன்னான்.
ஆனாலும் தான் பெற்ற மக்களைக் காட்டுக்குள் கொண்டு விட மன்னன் மனம்
ஒப்பவில்லை. எனவே அதை நிராகரித்து விட்டான்.
குழந்தைகள் தினமும் இரவில் ஆடுமாடுகளின் ரத்தத்தைக் குடிப்பதும், அவற்றை
அடித்துத் தின்பதுமாகத் தங்கள் பசியை ஆற்றிக் கொண்டிருந்தனர்.
மக்களிடமிருந்து மன்னனுக்கு இதைப் பற்றிய தகவல் வந்தது. திடீர்
திடீரென்று ஆடுமாடுகள் காணாமல் போவதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன்
இப்பாதகத்தைச் செய்வது யாரென்று கண்டுபிடிக்கச் சொன்னான்.
சேவகர்கள் இரவில் விழித்திருந்து பார்த்தனர். இரவில் இரு குழந்தைகள்
வந்து தின்று விட்டு திரும்பி அரண்மனைக்குச் செல்வதைக் கண்டனர். அப்படியே
மன்னனிடம் தெரிவித்தனர். இதனால் மன்னன் உண்மையைப் புரிந்து கொண்டான். பல
ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் தவித்த தமக்கு இப்படிப் பேய்க்குழந்தைகள்
பிறந்து விட்டனவே என வேதனை கொண்டான். சேவகர்களை அழைத்து இரு
குழந்தைகளையும் காட்டில் போய் விட்டு விட்டு வரச்சொன்னான்.
சேவகர்கள் இரு குழந்தைகளையும் காட்டில் விட்டு வந்தனர்.
இரு குழந்தைகளும் வனத்தில் ஓர் வேப்ப மரத்தில் குடியிருந்தன. வனத்தில்
விலங்குகளை வேட்டையாடி தின்று வாழ்ந்து வந்தன. அண்ணனை ஓய்வில் வைத்து
விட்டுத் தங்கை வேட்டையாடி வருவாள். இருவரும் உண்பார்கள். தங்கையை
ஓய்வில் வைத்து விட்டு அண்ணன் சென்று வருவான்.. இவ்வாறாக குழந்தைகள்
வளர்ந்தனர். பெரியவர்கள் ஆகினர்.
ஓர் நாள் ...
"அண்ணா இன்று நான் சென்று வேட்டையாடி வருகின்றேன்" என்று சொல்லிவிட்டு
நீலி புறப்பட்டுச் சென்றாள்.
அந்த சமயத்தில் அந்த ஊரில் வாழ்ந்து வந்த வேளாளர்கள் ஆலயத்தின் கதவுக்காக
மரம் தேடி காட்டுக்குள் வந்தனர்.
அவர்களின் கண்ணில் நீலன் குடியிருந்த வேப்ப மரம் பட்டது. உடனே அதை வெட்டி
எடுத்துச் சென்றனர். இதனால் அந்த மரத்தில் குடியிருந்த நீலன் மாண்டான்.
திரும்பி வந்த நீலி வேப்பமரத்தைக் காணாது தவித்தாள். மரத்தை வெட்டி தன்
அண்ணனைக் கொன்றது அந்த  ஊரின் வேளாளர்கள் என்பதை அறிந்தாள்..
இந்த ஊரில் உள்ள அத்தனை வேளாளர்களையும் அழித்து இந்த ஊரை நாசம் செய்வேன்
என சபதம் செய்தாள்..
தன் முற்பிறவியில் தன்னைக் கொன்றவனைப் பழிவாங்க அந்த வனத்திலேயே காத்திருந்தாள்.
இன்னொரு புறம்...
காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வாணிபச்செட்டி ஒருவனுக்கு வேதியன் மகனாகப்
பிறந்தான். அவனுக்கு முற்பிறவியைப் பற்றிய ஞானம் இல்லை.. அவனுக்கு ஆனந்த
செட்டி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
குழந்தைக்கு சாதகம் கணிக்கும் போது சோசியன் எச்சரிக்கைகளைக் கொடுத்தான்.
"எக்காரணம் கொண்டும் உன் மகன் வியாபார நிமித்தமாக தென் திசை நோக்கிச்
செல்லக் கூடாது. எந்த காரணம் கொண்டும் வெளியூரில் தங்கக் கூடாது. அவ்வாறு
தங்க நேர்ந்தால் ஏதேனும் சிவாலயத்தில் தங்க வேண்டும். ஒரு பெண்ணால் அவன்
உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று சொன்னான். இதனால் ஆனந்த செட்டியை தென்
திசை அனுப்பாமல், வெளியூரில் தங்க வைக்காமல் வளர்த்து வந்தார்கள். அவனும்
வளர்ந்து பெரியவனானான். வாணிபத்தைத் தானே நடத்தத் தொடங்கினான். சில
சமயங்களில் வெளியூரில் தங்க நேரும்போது தந்தை தடுத்துவிடுவதைக் கண்டு
துன்புற்றான். காரணம் அறிந்து வியந்தான். அவனால் அதை ஏற்றுக் கொள்ள
இயலவில்லை.
எனவே ஓர் மந்திரவாதியிடம் சென்று இதைப் பற்றிக் கூறினான். மந்திரவாதியும்
ஓர் மந்திரக் கத்தியைக் கொடுத்து, "இந்த கத்தி உன் இடுப்பில்
இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல இயலாது" என்று சொல்லி அனுப்பி
வைத்தான்.
இதனால் பல பகுதிகளுக்கும் சென்று வணிகத்தைப் பார்க்கலானான் ஆனந்த செட்டி..
அவனுக்கு எதுவும் நேரவில்லை.. எல்லாம் மந்திரக் கத்தியின் மகிமை என்று
எண்ணிக் கொண்டான்.. விதியும் சிரித்தது..
அன்று அவன் தென் திசை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் வந்தது.. தந்தை
தடுத்தார். ஆயினும் மந்திரக் கத்தியைக் காட்டி தந்தையிடம் அனுமதி
பெற்றான். தந்தையும் "எந்த பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காது சென்று வா"
என்று கூறி அனுப்பி வைத்தான்.
தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்...
அவன் வந்து கொண்டிருந்த திசையில்தான் அவனைப் பழிவாங்கக் காத்திருந்தாள் நீலி...
கானகத்தில் அவன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்பட்டாள் நீலி..
செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத் தாம்பூலம் வைத்துக் கொண்டு அவனருகே
வந்தாள்....
அப்போது....

கருத்துகள் இல்லை: