வியாழன், பிப்ரவரி 10, 2011

இசக்கியம்மன் கதை

இசக்கி அம்மன் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கிராமங்களில் பரவலாக வணங்கப் படும் கிராமத் தெய்வங்களில் ஒன்றாகும்.. இங்கு மட்டுமன்றி தமிழகத்தின் பிறபகுதிகளிலும், இதே பெயரிலும், வேறு பெயர்களிலும்  இவள் வணங்கப்படுகின்றாள்.. இவளின் வரலாறு ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொருவிதமாக வழங்கப் படுகின்றது.. எங்கள் சுப்பிரமணியபுரத்திலும் இரண்டு இசக்கியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரு கோயில் குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே பாத்தியப் பட்டதாயினும், கொடைவிழாவின்போது ஊரார் அனைவரும் சென்று சீதனவரி செலுத்தி சிறப்பிக்கின்றனர். இன்னொரு கோயில் சிறியது.. அது என் அக்காவின் மாமனார் கட்டியது (முன்பும் அந்த இடத்தில் கோயில் இருந்தது.. இவர் அதை எடுத்துக் கட்டினார்) இங்கும் கொடைவிழாவின் போது அவர் குடும்பமும், எங்கள் குடும்பமும், அந்த அம்மனால் பலன் பெற்ற சில குடும்பத்தாரும் வந்து கலந்து கொள்கின்றனர்..
இந்த இடத்தில் நான் பகிர்ந்து கொள்ளப் போகும் கதையானது, முதலில் குறிப்பிட்ட கோயிலின் கொடைவிழாவின்போது வில்லிசையில் கேட்டது... ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக வழங்கப்படும் கதையினை எங்கள் ஊரில் நான் கேட்டவிதமாக இவ்விடத்துப் பகர்கின்றேன்.. இனி இசக்கியின் கதையைக் காண்போம்...

பழகை நல்லூர் என்ற ஊரில் சிவகாமி என்னும் தாசி இருந்தாள்.. அவளுக்கு திருகண்ட நட்டுவன் என்றொரு மகன் இருந்தான். அவன் நன்றாகப் பாடுவான். பழகை நல்லூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் பாடிக்கொண்டிருந்தான்.. தாசிக்குப் பெண்குழந்தை வேண்டுமென்று ஆசை. அவளும் ஈசனாரை வேண்டினாள்.. ஈசனும் அருள் புரிய அருமையான பெண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள்.
தன் பெண்ணிற்கு லெட்சுமி என்று பெயரிட்டாள். மகளும் சர்வ லெட்சணங்களும் பொருந்திய மஹாலெட்சுமியைப் போன்றே இருந்தாள். நாட்டியக் கலையைத் திறம்படக் கற்றறிந்தாள் லெட்சுமி..
தாயின் தாசி வாழ்க்கை மகளுக்குப் பிடிக்க வில்லை.. கற்பு நெறியில் வாழவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தாயோ பணத்தாசை பிடித்தவள்.. தன் மகளையும் எப்படியாவது தாசியாக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்..
அந்த ஊரின் சிவாலயத்தில் வேலவன் என்னும் வேதியன் பூசை செய்யும் பணியில் இருந்தான்.
ஓர் நாள் மாலை லெட்சுமியின் நடன அரங்கேற்றம் ஈசனார் ஆலயத்தில் நிறைவேறியது.. அவளைக் கண்ட நாள் முதல் வேலவனுக்கு உறக்கமில்லை..
அவளைக் காண வேண்டும்.. அவளோடு உரையாட வேண்டும்.. சுகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அதிகமாகிக் கொண்டே இருந்தது.. (அட.. இதைத்தான் காதல் என்போம்யா...)
அதே நிலைதான் லெட்சுமிக்கும்...
வேலவன் ஆவல் அதிகமாகி ஓர் நாள் சிவகாமி தாசியின் வீட்டுக் கதவைத் தட்டினான்.
வேறு யாரையோ எதிர்பார்த்திருந்த சிவகாமி, வேலவனைக் கண்டு மலைத்தாள்.. யாராக இருந்தாலும், தாசியின் இல்லம் தேடி வந்து விட்டால், மரியாதை கொடுத்தே தீரவேண்டும் இல்லையா...
"வாங்க. வாங்க..."
"இன்று தங்கள் மகளின் நடனம் கண்டேன். அற்புதம்."
"ஓ அப்படியா.. அமருங்கள். என் மகளை அனுப்பி வைக்கின்றேன்..
வேலவனை அமரவைத்துத் தன் மகளின் கையில் தாம்பூலம் கொடுத்து அனுப்பினாள்.. அதில் வசிய மருந்தையும் கலந்திருந்தாள்..
மகளும் இதை அறியவில்லை... தான் எண்ணியபடி காதலனே தன் மனையேகி வந்ததை எண்ணி மகிழ்ந்தாள்...
"அத்தான்... தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்.."
"இதோ அன்பே"
இவ்வாறாக இவர்கள் தொடர்பு வளர்ந்தது..
இப்படி இருந்தால் தன் மகள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று எண்ணிய சிவகாமி, தனது மகளை வேலவனிடமிருந்து பணம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாள்.
"மகளே... இதைப் பார்... உன்னைக் காண வரும் வேலவனிடமிருந்து நீ பணத்தைப் பெற வேண்டும்.."
"அம்மா.. நான் உன்னைப் போன்ற தாசி அல்ல... அவரிடம் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன்.. தாசி வாழ்க்கை வாழ நான் தயாரில்லை... அவரை மணம்புரிந்து வாழ்வேன்.."
"நீ திருமணம் செய்தால் உன் கணவனிடமிருந்து வாங்குவாய் இல்லையா... எனவே இவனிடமும் வாங்கு" என்றுரைத்தாள் தாய்.
"சரி அம்மா. அப்படியே செய்கிறேன்" மகளும் சம்மதித்தாள்..
தினமும் மாலை ஆலய நடை சாத்தியபின் தாசியின் இல்லமே கதியெனக் கிடந்தான் வேலவன்..
அவளது அழகிலும், நடனக் கலையிலும், தாய் கொடுத்த வசிய மருந்திலும் அடிமையாகி விட்டிருந்தான்..
தினம் தினம் அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் கைப் பொருட்களையெல்லாம் இழந்தான்..
ஓர் நாள்..
லெட்சுமி குளித்துக் கொண்டிருந்தாள்.
வேலவன் வீட்டுக்குள் நுழைந்தான்..
"வாங்க.. வாங்க..."
"ம்.."
"உட்காருங்க... லெட்சுமி குளிச்சிட்டிருக்கா..."
"அப்படியா... சரி நான் அப்புறம் வரட்டுமா?"
"இல்லை.. உட்காருங்க.." உபசரித்தாள்..
"அப்புறம்.. லெட்சுமி நன்றாக நடனமாடுகின்றாள் இல்லையா?"
"ஆமாம் அத்தை... அதனால்தான் அவளை எனக்குப் பிடித்திருக்கின்றது.."
"அப்படியானால் அவள் அழகுக்கேற்ற ஆபரணங்களால் அவளை அலங்கரித்தால் எப்படியிருக்கும்,?"
"ஆஹா... அருமையாக இருக்கும்... இப்போதே சென்று நகைகள் வாங்கி வருகின்றேன்.."
எழுந்தான் சென்றான். நகைகள் வாங்கி வந்தான்.. லெட்சுமிக்குப் பரிசளித்தான்..
நாளாக நாளாக வேலவனின் கையிருப்பு தேய்ந்து கொண்டே வந்தது...
ஓர் நாள் ஆலயத்தில் இறைவனுக்கு அணிவிக்கும் நகைகளைக் கொண்டு வரவேண்டும் என்றுரைத்தாள் தாசி..
மயக்கத்திலிருந்த வேலவனும் அப்படியே செய்தான்..
இவ்வாறாக முழு அடிமையாகி விட்டான்...
அன்று..
அவன் கைகளில் ஏதுமில்லை...
தாசியின் இல்லம் நோக்கி நடந்தான்.. உள்ளே நுழைந்தான்.. வீட்டுத் திண்ணையில் தாய்க்கிழவி...
"வாங்க... என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள்?"
"அத்தை... இன்று கொண்டு வருவதற்கு எதுவுமில்லை... என் லெட்சுமியைக் காண வந்தேன்.."
"அதெல்லாம் பார்க்க முடியாது... ஏதும் கொண்டு வராவிட்டால் என்னைக் காண அனுமதிக்காதே என்று சொல்லிவிட்டாள்"
"லெட்சுமியா அப்படிச் சொன்னாள்?"
"ஆம் அவள்தான் சொன்னாள்"
இதனால் மனமுடைந்த வேலவன் வந்த பாதையே திரும்பி நடந்தான்.. என்னவெல்லாமோ செய்தேனே... தாசிக் குலத்தில் பிறந்தவள் தன் புத்தியைக் காட்டி விட்டாளே... இவளுக்காக ஆலயத்தின் நகைகளையும் கொண்டு வந்தேனே... இனி ஆலயத்துள் எப்படி நுழைவேன்.. என்று புலம்பிக் கொண்டே நடந்தான்...
அதே சமயம் லெட்சுமி வெளியே வந்தாள்.
"அம்மா அவர் எங்கே?"
"எவர்?"
"அவர்தானம்மா. நம்ம வேதியர்.."
"ஓ அவனா... போய் விட்டான்.."
"போய் விட்டாரா? ஏன்?"
"ஏனென்று என்னைக் கேட்டால்? அவன் கொடுத்த நகைகளையெல்லாம் திருப்பிக் கேட்டான்..முடியாது என்றேன். போய் விட்டான்.."
"அடியே தாய்க் கிழவி.. அவரை விட இந்த நகைகளா பெரிய விசயம்? அவரில்லாமல் இந்த நகைகள் எதற்கு.. இப்போதே போய்க் கொடுத்து வந்து விடுகின்றேன்.."
லெட்சுமி வீட்டிலுள்ள நகைகளையெல்லாம் ஓர் துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு வேலவனைப் பின் தொடர்ந்தாள்..
லெட்சுமி பின் தொடர்வதைக் கண்ட வேலவன் தன் வேகத்தைக் கூட்டினான்.. லெட்சுமியும் அழைத்து அழைத்துப் பார்த்து சோர்ந்தாள்.. ஒரு கட்டத்தில் வேலவன் என்னதான் கேட்கிறாள் பார்க்கலாமே என்று நின்றான்..
"என்னை விட்டு எங்கே போகின்றீர்கள் அத்தான்?"
"ம்ம்ம்.. அத்தானா? யாரடி அத்தான்? தாசிக் குலத்தில் பிறந்த நீ உன் புத்தியைக் காட்டி விட்டாயல்லவா? உனக்காக ஆலயத்திலும் திருடினேனே?"
"அத்தான்.. இதோ நீங்கள் கொடுத்த நகைகள் எல்லாம் இதில் உள்ளன.. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. என்னை விட்டு மட்டும் போய் விடாதீர்கள் அத்தான்"
"சரி அன்பே.. நாம் மீண்டும் இந்த ஊருக்கு வரவேண்டாம்.. வேறு எங்காவது போய் விடலாம்.."
இருவரும் முடிவு செய்து நகைகளுடன் மலையாள தேசம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்..
கானகத்தில் சென்று கொண்டிருக்கும் போது பயங்கர வெயில்..
"அத்தான்.. மிகவும் சோர்வாக இருக்கின்றது.. உறங்க வேண்டும் போல் இருக்கின்றது"
"அன்பே.. இந்த இடத்தில் நிழலே இல்லையே.. என்ன செய்வது?" என்று சுற்றிலும் பார்த்த வேலவன் ஓர் கள்ளிச் செடியைக் கண்டான்.
"வா அன்பே.. நாம் அந்த கள்ளிச்செடியின் நிழலில் இளைப்பாறலாம்."
லெட்சுமியை அழைத்துச் சென்று தன் தொடைமீது படுக்கவைத்தான்..
களைப்பில் தன்னை மறந்து உறங்கினாள் லெட்சுமி..
இந்த சமயத்தில்தான் வேலவனின் மனம் பல்வேறு விசயங்களை அசைபோடத் தொடங்கியது..
இதனால் பாதகமும் நிகழ்ந்தது...
அதைப் பற்றி... அடுத்த மடலில்...

(தொடரும்)

கருத்துகள் இல்லை: