புதன், பிப்ரவரி 16, 2011

இசக்கியம்மன் கதை(4)

செவ்வாடை அணிந்து கையில் வெற்றிலைத்தாம்பூலம் எடுத்துக் கொண்டு நீலியானவன் ஆனந்த செட்டியை எதிர்கொண்டாள். அடர்ந்த வனத்தில் செவ்வாடை அணிந்த பெண்ணைக் கண்டதும் அதிர்ச்சியுற்றான் செட்டி. மனத்தில் சோசியனின் எச்சரிக்கை நிழலாடியது..
"காட்டு வழிப்போகும் வாணிபரே... வந்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள்." என்று அழைத்தாள்
அவளைத் தவிர்த்து விட்டு ஊருக்குள் நுழைந்தான் ஆனந்த செட்டி.. அவன் கையில் மந்திரக் கத்தி இருந்ததால் நீலியால் அவனை நெருங்க இயலவில்லை. இதற்குள் மாலை ஆகிவிட்டது. நீலியானவள் வனத்தில் அவள் சாட்சியாய் விட்டுச் சென்ற கள்ளி மரத்தைக் குழந்தையாக மாற்றி அவனைத் தொடர்ந்து ஊருக்குள் சென்றாள்..
"அத்தான்.. அத்தான்... என்னை விட்டு எங்கே செல்கின்றீர்கள்.?"
"யாரடி உனக்கு அத்தான்... போ அந்த பக்கம்" என்று சொல்லிவிட்டு சென்று கொண்டிருந்த அவனை நோக்கி கண்ணீருடன் ஓடிக்கொண்டிருந்தாள் நீலி.
இதற்குள் ஊரில் சிலர் பார்த்துவிட்டு என்ன செய்தி என்று வினவ..
"இவர் என் கணவர்.. இது என் குழந்தை.. குழந்தை பிறந்ததும் எங்களைத் தனியாக விட்டு விட்டு ஓடி வந்துவிட்டார்.. நானும் அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்றேன்" என்றாள் நீலி..
அவனைத் தடுத்த ஊரார் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
பஞ்சாயத்தாரின் விசாரணையில் அவள் தனது மனைவி என்று சொன்னதை மறுத்தான் ஆனந்த செட்டி. மனதுக்குள்ளோ சோசியன் சொன்ன செய்திகள் நிழலாடிக் கொண்டிருந்தன.
ஆனால் நீலியோ சத்தியம் செய்தாள்.. "இவர் என் கணவர் என்பது சத்தியம்.. வேண்டுமானால் என் பிள்ளையை இறக்கி விடுகின்றேன்.. அதனிடம் அப்பா யார் என்று கேளுங்கள் அது சொல்லும்" என்று சொல்லி தனது குழந்தையை இறக்கி விட்டாள்..
குழந்தையும் "அப்பா" என்று அழுதபடியே ஆனந்த செட்டியை நோக்கி ஓடியது..
அவன் மிரண்டான்.. மறுத்தான்.. ஊராரோ நம்பவில்லை...
"பெண்ணுக்கு அநீதி செய்யாதே" என்று அறிவுறுத்தினார்கள்..
அவனோ தன் தந்தை தாயை அழைத்து வருவதாகக் கூறினான்.. "மறுவிசாரணையைக் காலையில் வைத்துக் கொள்ளலாம். இருட்டி விட்டது. இன்று இரவு நீங்கள் இந்த ஊரில் தங்கியிருங்கள்.. காலையில் விசாரிக்கலாம்" என்றார்கள் பஞ்சாயத்தார்..
நீலியோ "என்னையும் குழந்தையையும் இவரிடம் தனியாக விட்டுச் செல்கின்றீர்களே... இவரிடம் ஒரு கத்தி உள்ளது. அதை வைத்து என்னைக் கொன்றுவிடுவார்" என்று சொல்லி மேலும் அழுதாள்.. அவனை சோதனை செய்த பஞ்சாயத்தார் அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்க அவர்கள் மூவருக்கும் ஒரு வீட்டைக் கொடுத்து அங்கு தங்கச் சொன்னார்கள்..
சோசியன் சொன்னதெல்லாம் நடந்ததை எண்ணிய ஆனந்த செட்டி பயந்து போனான். இன்றிரவு அவள் என்னைக் கொன்று விடுவாளே என்று பயந்த படியே அவளோடு சென்றான்..
நள்ளிரவு...
நீலி அவனை எழுப்பினாள்...
அவனது முன் ஜென்மத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.. அவன் கதறக் கதற அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றாள்... அவன் குடலை மாலையாக அணிந்து கொண்டு ஓலமிட்டாள்...
தான் சபதம் செய்தபடி முற்பிறவியில் தன்னைக்கொன்ற வேதியனை இப்பிறவியில் பலிவாங்கிய மகிழ்ச்சியில் திளைத்தாள்..
தன் அண்ணனைக் கொன்ற இந்த ஊரின் வேளாளர்களைத் தான் பழிவாங்க வேண்டும் என்று சபதம் செய்தது நினைவுக்கு வந்தது... அந்த ஊரையே எரித்து நாசம் செய்தாள்..
ஒரே ஒரு வேளாளர் மாத்திரம் தப்பி விட்டார்.
அவர் அதிகாலையிலேயே எழும்பி வயலுக்குச் சென்று விட்டதால் ஊரை எரித்த நெருப்பிலிருந்து தப்பி விட்டார்..
நீலி இதை அறிந்தாள்...
அவரைப் பழிவாங்க இடைச்சிறுமி உருவம் கொண்டாள்..
மதிய வேளையில் வயலுக்குச் சென்றாள்.. தலையில் மோர்ப்பானை வைத்திருந்தாள்.. அதில் விசத்தைக் கலந்திருந்தாள்..
"அய்யாவே... வெயிலு அதிகமாக இருக்கின்றது. கொஞ்சம் மோர் அருந்துங்கள்" என்று சொல்லி அவருக்குக் கொடுத்து அவரையும் கொன்றாள்..
இப்படியாக நீலியானவள் தான் செய்த சபதங்களை நிறைவேற்றி வனத்தில் இரத்த வெறியுடன் சுற்றித் திரிந்தாள்...
அதே வெறியுடனே அவள் முப்பந்தல் என்னும் இடத்திற்கு வந்து நிலைகொண்டாள்.. நீலியின் ஆவேசம் அதிகமாக இருந்ததால் சுற்றியுள்ள பகுதியின் மக்கள் தொந்தரவுக்கு ஆளானர்கள்.
அவளை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் அவள் ஈசனிடம் வரம் வாங்கியவள் அல்லவா.. ? எனவே அவளைப் பணிந்து அவளுக்குரிய சாந்திகளையெல்லாம் செய்து அவளைத் தெய்வமாக்கினர்..
அவளே இசக்கி என்னும் பெயரில் முப்பந்தலில் நிலை கொண்டாள்...
தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அவர்களுக்கு வேண்டியதை இறைவனிடம் வேண்டி வரமாகப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றாள்...
இசக்கி வனத்தில் ஓடாடிய இடங்களிலெல்லாம் அவளால் அருள் பெற்றோர் பலர் உண்டு... அவர்கள் அந்த இடங்களிலேயே அவளுக்கு ஆலயம் கட்டி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்... ஆயினும் மூலப்பதியாக முப்பந்தல் சென்று இசக்கியை வழிபடுகின்றனர்....

முப்பந்தலைப் பற்றி...
மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஔவைப் பாட்டி தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் செய்து வைத்தாள்.. அவர்கள் மூவரும் அமர்ந்து பேசிய இடம்தான் முப்பந்தல்...
இப்பதியானது வள்ளியூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ளது...
வாய்ப்பு கிடைக்கையில் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள்...
இசக்கியம்மனின் கதையைக் கேட்ட அனைவருக்கும் நன்றி...
(முற்றும்)

3 கருத்துகள்:

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

இராமகிருஷ்ணாபுரம்.ந.வினோத்(RKPN.N.VINOTH)
ஐயா வணக்கம் இக்கதைவிருந்து மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஆனால் இதற்கு பூர்வ
கதை ஒன்று உண்டு அதை தாங்கள் இப்பதிவில் பதிவிட வேண்டுகிறேன்

மு. கந்தசாமி நாகராஜன் சொன்னது…

எந்த கருத்து?