ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

அன்பே வா அருகிலே...(4)

தனியாகத் துண்டிக்கப் பட்டு கிடந்த அந்தத் தலையைத் திருப்பிய தலையாரி
அதிர்ச்சியடைந்தார். நிலவு ஒளியில் அந்த முகம் தெள்ளத் தெளிவாக
தெரிந்தது..
"அண்ணாச்சி.. இங்க வாருங்க... " கி.மு வை அழைத்தார்..
கி.மு வும் அருகே வந்து பார்த்து விட்டு அதிர்ச்சியோடு பின்வாங்கினார்...
"இது எப்பிடி தலயாரி? என்னால நம்ப முடியல"
"அதான் அண்ணாச்சி எனக்கும் புரியல"
இதற்குள் ஊர் இளவட்டங்களும் அருகில் வந்து பார்த்தனர்.. அவர்களுக்கும் அதிர்ச்சி...
"எலேய்.. இது எப்பிடில...?"
அதிர்ச்சியில் யாருக்கும் பேச்சு வரவில்லை...
காவல்துறை வாகனம் வரும் ஒலி கேட்டது..
"எலேய்.. எல்லோரும் தூரப் போங்கல.. போலிஸ் வந்துட்டு... போ.. போ..."
சுற்றி நின்றிருந்த இளைஞர்களை விரட்டினார் தலையாரி.
வாகனத்திலிருந்து ஆய்வாளர் மலையாண்டியும், இரு காவலர்களும்  இறங்கினர்.
"வணக்கம் அண்ணாச்சி... என்ன விசியம்?"
"வணக்கம் ஐயா. வந்து பாருங்க... நீங்களே வந்துட்டிய?"  ஆய்வாளரைப்
பார்த்துக் கேட்டார் கி.மு.
"ஆமாண்ணாச்சி.. நம்ம எஸ்.ஐய ஒரு துப்புக்காக பேயங்காட்டுக்கு
அனுப்புனேன். இப்ப வந்துருவாரு.. விசயம் ரொம்ப சீரியசுன்னிதான் நானே
வந்தேன்.."
"ஆமா சீரியஸ்தான்... நீங்களே வந்து பாருங்க.."
மலையாண்டியை அழைத்துக் கொண்டு தலை கிடந்த இடத்துக்கு விரைந்தார் கி.மு.
"யாரும் எதையும் தொட்டு வைக்கலதான?"
"நம்ம தலயாரி தலயத் திருப்பிப் பாத்தாரு. அவ்ளோதான். வேற ஒண்ணுமில்ல.."
வந்து பார்த்த மலையாண்டிக்கு அது யாரென்று பிடி படவில்லை..
"யாரு அண்ணாச்சி இது.. இந்த ஊர்க்காரந்தானா?"
"ஓ உங்களுக்குத் தெரியாதின்னு நெனைக்கேன்.. நீங்க வந்து ரெண்டு வருசந்தானே ஆச்சி"
"ஆமா.. யாரு இது?"
"என்னால நம்பவே முடியல ஐயா.. இது இந்த ஊருக்குத் தலைவரா இருந்த
பொன்னுசாமி நாடார்.. ஆனா அவரு மூணு வருசத்துக்கு முந்தியே செத்துப்
போயிட்டாரு.. வயசான மனுசன்.. ஆனா இந்தத் தலயப் பாக்கும்போது ரொம்ப
இளவயசாத் தெரியுது. அதான் ஒண்ணுமே புரியல.."
தலையாரியும், "ஆமா ஐயா... அவர் செத்த பெறவு அத பதிவு ஆபிசுக்கு எழுதி
அனுப்புனதே நாந்தான்.. ஆனா.. பாருங்க.. அவரு வீட்டுல பாத்த படத்துல
இருக்குற மாதியே இருக்கு..." என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார்.
மலையாண்டியோ "அதெப்புடிய்யா... மூணு வருசத்துக்கு முந்தி வயசாகி செத்துப்
போன மனுசனோட தலை இப்போ.. அதுவும் ரெத்தத்தோட.. அதுவும் இள வயசா... நம்புற
மாதி சொல்லுங்க... அவருக்கு பிள்ளைல் எத்தன?" என்று கேட்டார்.
"ஐயா அவருக்குப் பிள்ளைல் யாரும் இல்ல.. அவரு சாவுறதுக்கு முந்தியே அவரு
பொண்டாட்டியும் செத்துப் போச்சி... "
"வேற தொடுப்பு எதுவும் உண்டோ?"
"ஆங்... மனுசன் ரொம்ப யோக்கியமானவரு ஐயா.. அந்த மாதில்லாம் இல்ல"
மலையாண்டி இதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க வந்த ஆய்வாளர்கள் தங்கள்
பணியைச் செய்து கொண்டிருந்தனர்..
அவர்களை தலையற்ற உடல் எதுவுக் கிடக்கின்றதா என்று சுற்றி உள்ள பகுதிகளில்
சென்று பார்த்து வரச்சொன்னார்..
அவர்களும் போய்ப் பார்த்துவிட்டு எதுவும் கிடைக்கவில்லை என்பதைச் சொன்னார்கள்.
"சரி.. அது யாரு... அந்த கெளவி?"
"அது இந்த் ஊரு கெளவிதான். அவளும் இன்னொரு பிள்ளையும் ஆடு மேச்சிட்டு வார
வழிலதான் இதக் கண்டுருக்காவ.. கெளவி அதிர்ச்சில இங்கெனயே செத்துட்டு.."
"அந்த பிள்ள எங்க இருக்கு?"
"வாங்க ஊருக்குப் போய் பாப்போம்"
காவலர்களுக்குத் தகுந்த உத்தரவு பிறப்பித்துவிட்டு ஊரை நோக்கி நடக்க
ஆரம்பித்தார் மலையாண்டி..
"ஆமா.. ரொம்ப நாளா ஒரு விசியம் கேக்கணும்னி இருந்தேன். உங்க ஊருல சாராயம்
காச்சுறது உண்டோ?"
"அது நடக்கத்தான் செய்து... என்ன பண்றது அவன எதுக்க யாராலயும் முடில"
"யோவ் நீரெல்லாம் கவருமெண்டு அதிகாரின்னு சொல்லாதீயும். எங்காதுக்கும்
நீசு வந்துச்சி.. நீரெல்லாம் இருக்கீறேன்னு நானும் அது பொய்யின்னி
நெனச்சிட்டேன்... இனிம பாரும் உம்மல என்ன பண்ணுதேன்னி குடிகாரப்
பயலுவளா.." மலையாண்டி கோபத்துடன் உரைத்து விட்டுத் தொடர்ந்து நடந்தார்.
அப்போதுதான் கி.மு.வும் கவனித்தார்.. பொன்னையா நாடாரின் வீட்டு கேட்
திறந்து கிடந்தது.
"ஐயா அங்க பாருங்க.. அந்த வீட்டுலதான் காச்சுறானுவ.."
மலையாண்டி தனது நடையைத் துரிதப் படுத்தினார்..
கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்..
அங்கே..
ஒரு பெரிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருந்தது.. அதன் மேல்
வைத்திருந்த பானைகள் உடைத்து எறியப் பட்டிருந்தன. ஆங்காங்கே ரத்தத்
துளிகள்..
"இங்கனதான் சண்ட நடந்திருக்கும்னி நெனக்கேன். முண்டம் இங்க கெடக்குதான்னு
பாக்கச் சொல்லனும்." என்றவாறே சுற்றிலும் பார்த்தார். பின்னர் கி.மு.வை
நோக்கி
"ஆமா. காச்சுறது யாரு? இந்த ஊர்க்காரந்தான?"
"இல்ல ஐயா. அவன் பொழப்புக்காக வந்தான். அப்படியே காச்ச ஆரம்பிச்சிட்டான்.
நாங்கூட சொல்லிப் பாத்தேன்..கேக்கல"
"நாங்கெல்லாம் மயிரப் புடுங்கவா போலிஸ்டேசன் கட்டி வச்சிருக்கோம்.. ?
வந்து சொல்ல வேண்டியதுதான?"
"சொல்லிருக்கலாம். என்ன பண்ணுறது?" என்று சொன்ன கி.முவை முறைத்தார் மலையாண்டி..
"சரி வாரும் அங்க போய் பாப்போம். அந்த பிள்ளக்கிட்ட கேக்கலாம்" நடக்க
ஆரம்பித்தார். நடந்து கொண்டே தனது வாக்கி டாக்கியில் கட்டுப்பாட்டு
அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தந்தார்.
இதற்குள் தன் பேத்தியை தங்க நாடாச்சியின் வீட்டிலிருந்து அழைத்துப்
போயிருந்தாள் பேச்சியம்மாள்.
தங்க நாடாச்சியிடம் கேட்டு விட்டு பேச்சியம்மாளின் வீட்டுக்கு
மலையாண்டியை அழைத்துப் போனார் கி.மு.
"ஏலா. சுப்பம்மா இங்க வா. இன்ஸ்பெக்டரு ஐயா வந்துருக்காங்க... "
பயந்து நடுங்கிக் கொண்டே வெளியே வந்தாள் சுப்பம்மா.. அருகில் அவளது
பாட்டி.. பாட்டியின் சேலையைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"ஏம்மா. நீதான் மொதல்ல பாத்தியா? என்ன நடந்துச்சி..?"
"நாங்க ஆட்ட பத்திட்டு வந்திட்டிருந்தோம்.. திடீர்னு யாரோ அலமறிக்கிற
சத்தம் கேட்டிச்சி. நாங்க பயந்து போய்ட்டோம். திடீர்னு அந்தத் தல வந்து
விழுந்துச்சி. பாட்டி அங்கயே விழுத்துட்டு.. நான் ஓடி வந்துட்டேன்."
விம்மி விம்மி அழுகையுடனே தெரிவித்தாள் சுப்பம்மா..
"சரிப்பு.. பயப்புடாத.. அங்க வேற யாராவது இருக்குற மாதி தெரிஞ்சுதா ஒனக்கு?"
"நாங்கண்ண மூடிட்டு ஓடி வந்துட்டேன். அங்க வேற என்னத்தையும் பாக்கல."
"என்ன சத்தம் கேட்டுச்சு?"
"யாரோ காப்பாத்துங்கன்னு கத்துற சத்தம் கேட்டுச்சி. ஓடுற சத்தம்
கேட்டுச்சு. அவ்ளோதான்.."
"சரிப்பு. நான் அப்புறம் வாறேன்." என்று சொல்லியபடி மலையாண்டி திரும்பினார்.
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இதென்ன கேஸ் என்று எண்ணியபடி
திரும்பவும் கரையடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இதற்குள் ஊருக்குள் ராசாங்கம் பாட்டி இறந்த செய்தி பரவியது.
அவளது மகன் வெளியூருக்கு வேலைக்குப் போயிருந்தான். அவனுக்குத் தகவல்
சொல்ல ஊர்க்குடிமகனை அனுப்பி வைத்தார் தலையாரி.
மலையாண்டி கரையடிக்குத் திரும்பியிருந்த போது, அங்கு அரசு மருத்துவமனை
வாகனம் நின்றிருந்தது.
ராசாங்கம் பாட்டியின் உடலையும், தனியாகக் கிடந்த அந்தத் தலையையும்
வாகனத்தில் ஏற்றித் தயாராக வைத்திருந்தனர்.
புகைப்படக்காரர் தனது கேமிராவில் அந்த இடங்களை கோணம் பார்த்துக் கொண்டிருந்தார்.
"சரிப்பா. எப்போ அறுப்பாங்க.. டாக்டரு யாரு இருக்கா?" மருத்துவமனை
பணியாளரிடம் கேட்டார் மலையாண்டி.
"போஸ்ட் மாட்டம் நாளைக்குக் காலைலதான் சார். நம்ம அஞ்சலியம்மாதான் டூட்டி"
"சரி.. நீ போ. அம்மாவுக்கு நான் போனப் போட்டு பேசிருதேன்" என்று அவர்களை
அனுப்பி வைத்தார்.
கையிலிருந்த டார்ச்சை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளைப்
பார்வையிடலாம் என்று எண்ணினார்.
அருகிலிருந்தது அந்தக் கோயில் மட்டும்தான். சற்று தள்ளி பொன்னுசாமி
நாடாரின் வீடு..
கொலை எங்கே நடந்திருக்கலாம் என்று அவரால் யூகிக்க முடியவில்லை.
அப்படியே கொலை நடந்திருந்தாலும், கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்டவன்
யார்? என்பதும் தலையைத் தின்னும் கேள்விகள். குழம்பிய மனதோடு
ஆற்றங்கரையில் ஏதேனும் தென்படுகின்றதா என்று பார்த்தார்.
இரண்டு ஜோடிக் காலடித் தடங்கள் தென்பட்டன.  கரையோரத்தில் நின்றிருந்த
அரசமரத்திற்கு சற்று தள்ளிக் காலடித் தடங்கள் முடிவுற்றிருந்தன.
அங்கேதான் ரத்தம் சிந்திக் கிடந்தது.. இங்கேதான் வெட்டுப் பட்டிருக்க
வேண்டும் என்று முடிவு செய்தார். இங்கே வெட்டிய தலை அங்கே சென்று
விழுந்திருக்குமானால் வெட்டியவனின் வேகத்தைக் கணக்கிட முடியவில்லை.
"ஏட்டையா.. இந்த ரத்த மண்ண கொஞ்சம் சாம்பிள் எடுத்துக்கிடுங்க... அதையும்
லேபுக்கு அனுப்பனும். அந்த போட்டோக்காரன இங்க வரச்சொல்லி இதையும், இந்த
காலடித் தடத்தயும் போட்டோ எடுக்கச் சொல்லுங்க..."
இந்தக் காலடித் தடங்களைப் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம் என்று
எண்ணியபடி தொடர்ந்தார்.
அவை அநேகமாக பொன்னுசாமி நாடாரின் வீட்டிலிருந்துதான் வந்திருக்கும்
என்பது மலையாண்டியின் எண்ணம்..
திடீரென்று யாரோ சிரிக்கும் குரல் கேட்டது.. மிகத் தெளிவாகக் கேட்டது.
"யாரது...?" உரத்தக் குரலோடு கேட்டார் மலையாண்டி..
பதிலில்லை... மீண்டும் அந்தக் குரல் கேட்கவில்லை..
நடந்து கொண்டிருந்தவரின் கண்களில் அது பட்டது.. அதைக் கண்டதும்
அதிர்ச்சியில் உறைந்து நின்றார்..
அது...

(தொடரும்)

கருத்துகள் இல்லை: