புதன், பிப்ரவரி 16, 2011

சுடலைமாடன் கதை

சுடலைமாடன் கதை
நண்பர்களுக்கு வணக்கம்... இசக்கியம்மனின் கதையை ஆவலுடன் படித்து வந்தீர்கள்..நேற்றைய தினம் எனது நண்பனும், எனக்கு சகோதரன் உறவினனுமான செந்தில் (எ) ஆறுமுக நயினாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "எல்லாம் எழுதுற. சரி... எங்க அய்யா சுடலைமாடன் கதைய எழுத மாட்டியா?" என்று... மிகவும் சிறுவயதில் கேட்ட வில்லுப்பாட்டின் கதையை நினைவு படுத்தி எழுதலாம் என்று எனக்குத் தெரிந்த கதையை அவனுக்குக் கூறினேன்.. அவனும் சரிதான் என்று ஒத்துக் கொண்டான்.. நீ எழுது... ஏதேனும் பிழைகள் எழும் பட்சத்தில் திருத்தங்களைத் தெரிவிப்பதாகவும் கூறினான். மேலும் தன்னிடத்தில் வில்லுப்பாட்டின் ஒலிவடிவம் இருப்பதாகவும் விரைவில் அனுப்பிவைப்பதாகவும் கூறினான். அவன் அதை அனுப்பி வைத்தபிறகு அதனைப் பதிவிடுகின்றேன்.. அதுவரை அடியேன் அறிந்த சுடலைமாடன் கதை உங்களுக்காக.... (வில்லுப்பாட்டுக் கதைதான்...)
உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் "பார்வதி... நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்." என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே ஈசனாரை சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தாள். எனவே குமிழ் ஒன்றை எடுத்து அதில் ஒரு சிற்றெரும்பைப் பிடித்துப் போட்டாள். அதனுள் காற்றும் புக இயலாது... எனவே இந்த எறும்புக்கு ஈசனார் எப்படிப் படியளப்பார் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் படியளந்த பரமன் கைலாயம் திரும்பினார்.
உமையவள் ஈசனாரிடம் "ஈசனே... தாங்கள் இன்றைக்கு அத்தனை ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டீர்களா?" என்று கேட்டாள்..
"ஆம் தேவி.. அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்பவும், இப்பிறவியில் அவர்கள் செய்து வருகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்பவும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டு வந்தேன்" என்றார் பரமன்.
"தங்களின் பணியில் ஒரு உயிரினம் கூட விடுபட்டிருக்காதா?" என்று வினவினாள் அம்மை..
"அதெப்படியாகும்? இந்த பணியில் தவறு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நானே நேரில் சென்று படியளந்து விட்டு வருகின்றேன்" என்றார் இறைவன்.
"இன்றைக்கு நீங்கள் படியளந்ததில் ஓர் உயிரினம் விடுபட்டுவிட்டது"
"ஒருக்காலும் இல்லை.. அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்துவிட்டேன்"
"இல்லை. ஒரு சிற்றெறும்பு விடுபட்டு விட்டது" என்று சொல்லி பார்வதியாள் அந்தக் குமிழைத் திறந்தாள்..
அங்கே அந்த சிற்றெறும்புவின் வாயில் ஓர் அரிசியைக் கவ்விக் கொண்டிருந்தது..
இதைக் கண்டதும் பார்வதியாளுக்குத் தன் தவறு புரிந்தது..
"இறைவா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நான் தவறு செய்து விட்டேன்... எல்லோருக்கும் படியளக்கும் பரம்பொருளை சோதனை செய்து விட்டேன்" என்று ஈசனாரின் பாதங்களில் வீழ்ந்தாள்..
ஈசனோ கடுங்கோபம் கொண்டார்..
"நீ என் மனைவியாக இருந்தாலும், என்னை சோதனை செய்த படியால், பூலோகம் போ... வனப்பேச்சியாக சுற்றித் திரி..." என்று சாபமிட்டார். (இந்த இடத்தில் வில்லுப்பாட்டு அருமையாக இருக்கும்... கணவனை சோதித்ததால் காட்டுப்பேச்சியாகப் போ.... மன்னனை சோதித்ததால் மயானப் பேச்சியாகப் போ...என்று அழகாகப் பாடுவார்கள்)
மனமுடைந்த அம்மை அழுது புலம்பினாள்..
"இந்த சாபத்திற்கு விமோசனம் எப்போது தருவீர்கள்?" என்று ஈசனைக் கேட்டாள்..
"நீ என்னை நினைத்து மயானத்தில் நின்று தவம் செய்.. உரியகாலத்தில் யாமே வந்து உன்னை மீட்போம்" என்று சொல்லி பார்வதியாளை பூலோகம் அனுப்பினார்..
மயான பூமியில் அம்மை பேச்சியம்மனாக அமர்ந்தாள்.. மனம் ஒன்றி ஈசனை எண்ணி மாதவம் புரிந்தாள்..
அம்மையின் தவத்தைக் கண்ட ஈசன் இரங்கினார்.. அம்மை முன் தோன்றினார்.  அவள் சாபத்தை நீக்கினார்...
"தேவி.. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொல்ல
தேவியும் "ஐயனே... தாங்கள் எனக்கு இரு புதல்வர்களை அளித்தீர்கள்.. அவர்களும் தங்கள் வயது வந்த பின்னே என்னை விட்டுப் போய்விட்டார்கள்.. தாங்களும் படியளக்கிறேன் என்று சொல்லி என்னைத் தனியே விட்டுப் போய்விடுகின்றீர்கள்.. எனவே எனக்கு ஓர் ஆண் குழந்தை வேண்டும். இப்பொழுதே வேண்டும்" என்று வேண்டினாள்..
ஈசனாரும், "தேவி..பார் அங்கே... மயானத்தில் பிணம் எரிகின்றதல்லவா.. அப்பிணம் கொடுஞ்சுடராக எரிகையில் நீ அங்கே நின்று என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்து...உனக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்கும். நீ குழந்தையை எடுத்துக் கொண்டு கைலாயம் வந்து சேர்வாயாக" என்று சொல்லி மறைந்து விட்டாள்.
பேச்சியம்மனும் அதைப்போல் பிணமொன்று கொடுஞ்சுடராக எரியும் வேளையில் அருகில் சென்று தன் முந்தானையை ஏந்த அவள் மடியில் சுடலை முத்துக்கள் தெரித்து விழுந்தன. அவை உறுப்புகள் ஏதுமற்ற ஓர் சதைப் பிண்டமாக பேச்சியம்மாளின் மடியில் இணைந்தன.. பிண்டத்திற்கு உயிர் உள்ளது.. ஆனால் எந்த உறுப்புகளும் இல்லையே என்று கலங்கிய பேச்சி மீண்டும் ஈசனை நினைத்து அழுதாள். "பிள்ளை வரங்கேட்ட எனக்கு இந்த முண்டத்தைத் தந்து விட்டீர்களே" என்று புலம்ப ஈசனார் தோன்றி அப்பிண்டத்திற்கு உறுப்புகளை அளித்து அழகியதோர் ஆண்குழந்தையாக மாற்றி அம்மையிடம் தந்தருளினார்...
அம்மையும் முண்டமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு முண்டனென்றும், சுடலைமுத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயர் கொடுத்தாள்...
பின்னர் அம்மயானத்திலேயே பிள்ளைக்கு அமுது ஊட்டினாள். பிறகு தன் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தாள்.
அன்னையுடன் கயிலாயம் வந்த சுடலை நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான்.
அன்னையின் அமுதுண்டு வளர்ந்துவந்த சுடலைக்கு வயிற்றுப்பசி தீரவில்லை..
ஓர் நாள்.. நடுசாமம்..
பார்வதியாள் சுடலைக்கு அமுதூட்டிவிட்டு படுக்கைக்கு சென்று விட்டாள்.
நடுசாமத்திலே சுடுகாட்டில் பிணமொன்று எரிந்து கொண்டிருந்தது... அந்த வாசனை கயிலாயத்தின் தொட்டிலில் படுத்திருந்த குழந்தைக்கு எட்டியது..
சுடலை நினைத்தான் "நம் அம்மா ஊட்டும் அமுது நமக்குப் போதாது.. நாம் சென்று எரியும் இப்பிணத்தைத் தின்று வருவோம்" என்று..
தொட்டிலில் இருந்து இறங்கிய சுடலை சுடுகாடு சென்று எரியும் பிணங்களைத் தின்றான். அங்கே சுற்றித் திரியும் பேய்களுக்கும் உணவளித்தான். பேய்களோடு பேயாக சுடலை அங்கே நடனமாடினான்...
தன் தாய் தன்னைத் தேடும் வேளை வந்த போது கயிலாயம் சென்று தொட்டிலில் குழந்தையாகப் படுத்து விட்டான்.
அதோடு மட்டுமல்ல... பசியில் அழும் குழந்தைபோல் சுடலை அழ ஆரம்பித்தான்..
தன் குழந்தையின் அழுகையைக் கேட்ட பார்வதியாளும் ஓடிவந்தாள்..
வந்தவள் குழந்தையை எடுத்து அணைத்தாள்... அப்போது குழந்தையின் மேல் பிணவாடை வீசியது... இதைக் கண்ட பார்வதியாள் திகைப்படைந்து அழுதாள்.. "உம்மிடம் குழந்தை வரம் கேட்டால், இப்படிப் பிணந்திண்ணும் பேயை எனக்குத் தந்து விட்டீரே" என்று ஈசனாரிடம் கதறினாள்..
ஈசனாரும் "பிணத்தைத் தின்று வந்து விட்டதால் சைவமான என் கயிலாயத்திற்கு இவன் ஆகமாட்டான். எனவே இவனை பூலோகம் அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லி சுடலையை அழைத்தார்.
"மகனே... நீ பூலோகம் செல்லும் காலம் வந்து விட்டது.. உனக்கு அங்கு பணிகள் பல உள்ளன.. எனவே நீ பூலோகம் செல்" என்று பணித்தார்.
சுடலையும் "ஐயனே.. என்னைப் பெற்றெடுத்த நீங்களே என்னை அனுப்பும்போது என்னால் என்ன செய்ய இயலும்.? நான் செல்கிறேன்.. ஆனால் என் பசிக்கு நான் என்ன செய்வேன்... நித்தம் நித்தம் பிணங்களை எதிர்பார்த்து வாழ இயலுமா?" என்றான்.
ஈசனாரும் "மாய உருக்கொண்டு பிறந்த மாயாண்டி சுடலையே...நீ பூலோகம் சென்றதும் நானே உன்னை வழி நடத்துவேன்.. பூலோகத்தார் உனக்குக் கொடை விழா கொடுக்க நான் ஏற்பாடு செய்கின்றேன்.. நீ போகலாம்" என்றார்.
இவ்வாறு உரைத்த ஈசனாரிடம் சுடலை ஓர் வித்தியாசமான வரத்தைக் கேட்டான்... அதைப் பற்றி அடுத்த மடலில்....

1 கருத்து:

Unknown சொன்னது…

இராமகிருஷ்ணாபுரம்.ந.வினோத்
ஐயா வணக்கம் இக்கதை விருந்தும் மிக அருமையாக இருந்தது ஆனால் வில்லுப்பாட்டு,மகுடம்-தெய்வக்கணியான் கூத்து கூறும் பாடல் வித்தியாசப்படும் சரி விசயத்திற்கு வருகிறேன் சிவன் பார்வதி உரையாடலில் என்னை சோதிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சியா பார்வதி? இதன் மூலம் உனது நோக்கம்தான் என்ன? ஒரு வேளை நான் உன் சோதனையில் வென்று விட்டால் நான் உனக்கு ஒரு சாபம் தருவேன் தோற்று விட்டால் வரம்
தருகிறேன் என்ன சரிதானே? சரி எனக்கும் உங்களை இந்த வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது சரி நான் தோற்றால் சாபமும் சாபவிமோசனமும் அதோடு வரமும்
எனக்கு வேண்டும்.இதன்பின் பார்வதியால் தோற்றுவிட அவள் ப்ராம்ஹி அம்சத்துடன்
வனபேச்சி என்ற அவதாரம் எடுக்கிறாள் இதன்பின் சில காலத்திற்கு பிறகு மயானத்தில் சிவபெருமான் சுடலையாடி ஆக வந்து வனபேச்சியாக இருக்கும் பார்வதியை ஏற்று
கொள்ளுகிறார் வனபேச்சி என்-கிற அவதாரத்தை விட்டு பிரிந்து பார்வதியாக சிவனுடன்
சேர்கிறாள் அப்போது வனபேச்சியானவள் சிவபார்வதி இருவரிடமும் எனக்கு வரங்கள் பல
வேண்டும் என்று கேட்க வனபேச்சிக்கு சிவன்பார்வதி இருவரும் சேர்ந்து வரங்களை தருகின்றனர் பேச்சி உனக்கு பூலோகத்தில் ஜீவராசிகளுக்கு காத்து இரட்சித்து வேண்டிய வரத்தைக் கொடுக்கும் தெய்வமாக வழிபடுவார்கள் ப்ரேத பூத பைசாச கணங்கள் உனக்கு
கட்டுப்பட்டு அடிமையாக இருக்கும் தவறுசெய்பவர்களுக்கு தண்டித்து திருத்துபவள் நீ
ஆவாய் அது மட்டுமல்ல அட்ட காளிகளில் முதலாமவள் நீ தான் இன்னும் சில காலங்கள் கழித்து நீ நாகலோகத்தில் நாககன்னி பிறந்து பராசக்திக்கு துணையாக இருந்து சும்ப-நிசும்பர் வதத்துக்கு பின் நீ தில்லை வனமான இம்மயானக்காட்டில் வந்து பிணம் எரிந்து கொண்டிருக்கும் வேளையில் என்னை வேண்டினால் உனக்கு என் அம்சத்தில் ஒரு மகன்
தருவேன் அவன் உன்னுடன் சேர்த்து மக்கள் வழிப்படுவார்கள் இக்குழந்தைக்கு
மயானச்சுடரில் பிறந்ததால் மாயாண்டி மாசானமூர்த்தி சுடலைமாடன் என்று பல
பெயர்களை உடையவனாவான் இவனுடன் என் சிவ கணங்களின் அம்சங்கள் துணையாக
108 வகை பந்திகள் இருக்கும் இவன் என்னுடைய ஆக்ரோச சக்தி ஆவான். நன்றி
வில்லும் மகுடமும் இதை விவரித்து பாடுவதில்லை ஐயா இது மட்டும் அல்ல இன்னும்
சில பகுதிகளை நமக்கு தெரிய படுத்துவதில்லை (சாஸ்தா பிறப்பு (அ) அழைப்பு)
சுடலைமாடசுவாமிக்கும் சாஸ்தாவிற்கும் உள்ள சம்மந்தம் வெளிப்படையாக
பாடுவதில்லை சாஸ்தாஅழைப்பின்போது அருளாடிகள் ஆடுகிறார்கள் மேலும் இதைப்பற்றி
உங்களுக்கு தெரிந்தால் பதிவிடுங்கள் பிழைகள் இருந்தால் மன்னிக்கும்படி வேண்டிக்
கொள்ளுகிறேன் நன்றி