வியாழன், பிப்ரவரி 10, 2011

அன்பே வா அருகிலே...(3)

அத்தியாயம் (3)
திடீரென்று அது பறந்து வந்து அவர்கள் முன்னால் விழுந்ததும் இருவரும்
திடுக்கிட்டனர்.
அதைக் கண்ட பொழுதிலேயே மயங்கி விழுந்தாள் ராசாங்கம் பாட்டி..
சுப்பம்மாவுக்கோ நா எழவில்லை... கை கால்கள் நடுங்கத் தொடங்கின... கையில்
வைத்திருந்த குச்சியைக் கீழே போட்டு விட்டு ஓடத்துவங்கினாள்.. அவளின்
ஓட்டத்தைக் கண்ட ஆடுகளும் ஒவ்வொரு திசையில் ஓடத்தொடங்கின...
வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்த தங்க நாடாச்சி ஓடி
வந்துகொண்டிருந்த சுப்பம்மாவை வியப்புடன் பார்த்து நிறுத்தினாள்..
"ஏலா. என்ன ஓடிவார? ஆட்ட எல்லாம் எங்க? என்னாச்சி?"
"அது... வந்து... பாட்டி... பாட்டி..."
"எலா.. என்னாச்சி... சொல்லுலா? நம்ம ராசாங்கமும் உங்கூடத்தானே வந்தா? அவள எங்க?"
"அது... அந்த கரையடி பக்கத்துல...." சொல்ல இயலாமல் கண்ணீருடன் மயங்கி
விழுந்தாள் சுப்பம்மா...
"எலேய்... அந்த கரையடிப் பக்கம் போய் என்னன்னிதான் பாருங்கலே... இந்த
புள்ள எதுக்கு இப்பிடி படியாவந்து விழுந்துட்டாளோ தெரியலியே..."
இதற்குள் கூட்டம் கூடிவிட்டது..
"சின்னஞ்சிறுசுகள கருக்கலாய்ட்டுன்னா கரையடிப் பக்கம் போவாதியன்னா
கேக்குறதே இல்ல... " ஒவ்வொருவரும் ஒவ்வொன்று பேச, சில இளவட்டங்கள்
கரையடிப் பக்கம் போய்ப் பார்க்கலாமென்று தைரியத்துடன் சென்றனர்.
சுப்பம்மாவுடன் பள்ளியில் படிக்கும் ராமசாமி, பேச்சியம்மாளுக்குத் தகவல்
தர ஓடினான்..
"எலேய்.. என்னலே ஆயிருக்கும்?"
"ஏ.. அந்த கரையடி மாடஞ்சாமி குதுரைல வந்துருக்கும்னு நெனைக்கேன்.. அதக்
கண்டுதான் பயந்துட்டாளோ என்னமோ.. போய்ப் பாக்கலாம்.. அந்த ராசாங்கம்
கெளவிய வேறக் காணோமாம்.."
விதவிதமான பேச்சுக்களோடு சில இளைஞர்கள் கரையடியை நெருங்கினர்...
அங்கே...
ராசாங்கம் பாட்டி விழுந்து கிடந்தாள்... அவளுக்கு சற்று முன்னால் அது கிடந்தது..
அது... உடலற்ற ஓர் மனிதத்தலை... அருகே ரத்தம் மணலில் திட்டுத் திட்டாகக்
கட்டியிருந்தது...
"ஏல.. அங்க பாரு.. அங்க ஒரு தல கெடக்கு... யாருல அது?"
"ஏ தொடாதீங்கப்பா.. நாளைக்கி போலிசுப் பயலுவ வந்தானுவன்னா கைரேவ பாப்பானுவ..."
"அந்த கெளவி வேற அங்க விழுந்து கெடக்கால.. உசுரு இருக்கா இல்லியான்னி பாரு..."
கரையடி மாடன் கோவிலில் உடைத்த தேங்காய்ச் சிரட்டைகள் அங்கே சிதறிக் கிடந்தன்..
ஒருவன் ஓடிச்சென்று ஒரு சிரட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றில் சிறிது நீர்
மொண்டு வந்தான்..
"ஏ பாட்டி.. எழும்புங்க... " ராசாங்கம் பாட்டியின் முகத்தில் நீர் தளித்த
பின்னரும் சலனமில்லை...
தொட்டுப் பார்த்தால் சில்லென்றிருந்தது..
"ஏல.. போய் நம்ம வைத்தியரக் கூட்டியாங்க... கெளவி இருக்காலா..
போய்ட்டாலேன்னே தெரியல..."
ஒருவன் திரும்பவும் ஊருக்குள் ஓடினான்..
ஊரின் நிலைமை மாறி விட்டிருந்தது.. தங்க நாடாச்சியின் வீட்டு முன்னால்
ஊரே கூடியிருந்தது.. பேச்சியம்மாளும் வந்திருந்தாள்..
அவளால் கண்ணீரைக் கட்டுப் படுத்த இயலவில்லை..
"ஏ கரையடி மவராசா... எம்பேத்திக்கி என்னாய்ட்டு பாருமய்யா.... ஏ
நாடாச்சி.. கொஞ்சம் திருனீறு தாலா..." தங்கநாடாச்சியிடம் சிறிது திருநீறு
வாங்கி சுப்பம்மாவுக்குப் பூசினாள்.. இதற்குள் சுந்தர பாண்டி வைத்தியர்
வந்து விட்டிருந்தார்..
"ஏம் பேச்சியம்மா.. என்னாச்சி"
"தெரியல வைத்தியர... நீரே பாரும்"
நாடி பிடித்துப் பார்த்தார். "எதோ பயந்த அதிர்ச்சி... அவ்ளோதான்.. நம்ம
கரையடி மாடனப் பாத்திருப்பாளோ?" என்று சொல்லிக் கொண்டே மடியிலிருந்து ஓர்
மருந்தை எடுத்து சுப்பம்மாவின் வாயில் வைத்தார்...
"கொஞ்சம் தண்ணி தா பேச்சியம்மா" சிறிது நீரையும் அவள் வாயில் ஊற்றினார்.
சிறிது நேரத்தில் எழுந்தாள் சுப்பம்மா...
"ஏலா. என்னலா ஆச்சி" பேச்சியம்மா கேட்க, சுப்பம்மாவும் நடந்ததைக் கூறினாள்..
இதற்குள் கரையடியிலிருந்து திரும்பியவனும் வைத்தியரை அழைத்தான்..
"வைத்தியர... அங்க வந்து பாரும்.. அந்தக் கெளவி இருக்காளா போய்ட்டாளான்னியே தெரியல"
"வால.. போலாம்." வைத்தியர் கரையடியை நோக்கி நகர சிலர் பின் தொடர்ந்தனர்...
கரையடியின் காட்சியைக் கண்டதும் வைத்தியருக்கே படபடவென்றிருந்தது...
ராசாங்கம் பாட்டியின் நாடியைப் பிடித்துப் பார்த்த வைத்தியர் அவள்
இறந்ததை உறுதி செய்தார்...
"எலேய். போய் நம்ம கிராம்சக் கூட்டிவாங்க... அப்படியே தலயாரியையும்
கூட்டிட்டு வாங்க.." சொல்லி அனுப்பி அங்கிருந்த சுமைதாங்கியில்
அமர்ந்தார்..
அதே சமயம்..
மணிச்சத்தம் கேட்டது... தொடர்ந்து ஓர் குதிரை ஓடும் சத்தம்..
"எலேய்.. எல்லோரும் கண்ண மூடிக்கிடுங்க... நம்ம கரையடி மாடனக்
கும்பிட்டுக் கிடுங்க..." வைத்தியர் கத்தினார். கண்களை மூடி தரையில்
சாஷ்டாங்கமாய் விழுந்தார்..
அனைவரும் அதே போல் செய்தனர்.. சிறிது நேரத்தில் சத்தம் நின்று விட எழுந்தனர்...
"ஐயா.. கரையடி மவராசா.. உம் பதிக்குள்ள வரமுடியாது.. செத்தவளத்
தொட்டுட்டேன்.. ஊருக்குள்ள எதுவும் கெட்டது நடக்காம பாத்துக்கய்யா..."
கரையடி சுடலைமாடசாமியின் கோவிலை நோக்கி வணங்கினார் வைத்தியர்...
இதற்குள் தகவல் கிராம முன்சீப்புக்கும், தலையாரிக்கும் போய்
விட்டிருந்தது... தலையாரி செங்கோட்டான் மடம் காவல் நிலையத்திற்குத் தகவல்
தர ஒருவனை அனுப்பியிருந்தார்..
கி.மு.வும், தலையாரியும் மிதிவண்டியில் கரையடியை நெருங்கியிருந்தனர்..
"யோவ் தலயாரி.. போய் அங்க கெடக்குற தல யாருக்கன்னி பாரு" கி.மு
அதிகாரத்தொனியில் கூற,
"எந்தலையெழுத்து... செத்துக் கெடக்க பொணத்துக்கெல்லாம் காவ
கெடக்கனும்னி.." அலுத்துக் கொண்டே தலையாரி சென்று அந்தத் தலையைத்
திருப்பினார். அதிர்ச்சியடைந்தார்...
அது...


(தொடரும்)

கருத்துகள் இல்லை: