வியாழன், பிப்ரவரி 17, 2011

அன்பே வா அருகிலே...(5)

அத்தியாயம் 5.

திடீரென யாரோ சிரிக்கும் குரலைக் கேட்ட அதிர்ச்சியில் நடந்து கொண்டிருந்த
மலையாண்டி அதைக் கண்டதும் அதிர்ச்சியானார்.
"கிராம்சு.. அங்க பாரும்... அது என்னான்னி தெரியுதா?"
"இதெப்படி ஐயா? நம்ம ஊருல?" என்று அதிர்ச்சியோடு அதை நோக்கிச் சென்றார் கி.மு.
மலையாண்டி தன் கையில் உள்ள டார்ச்சை அதை நோக்கி ஒளிரச்செய்தார்.
தெளிவாகத் தெரிந்தது. அதைக் குனிந்து எடுத்தார்..
"இந்த கேசுல இதுதான் முக்கியமான ஆதாரமா இருக்கப் போவுது" மனதுக்குள்
சொல்லிக் கொண்டார்.
அதைத் தெளிவாகக் கண்டதும் கி.மு.வுக்குள் நடுக்கம்.
அது ஒரு சலங்கை மணி.. தெறித்து விழுந்ததைப் போல் இருந்தது.
"இந்த ஊருல ஆட்டம் போடுறவங்க யாராவது இருக்காங்களா?"
"நம்ம ஊருல யாருமே கெடயாது. அதான் யோசிச்சிட்டிருக்கேன்"
"நல்லா யோசிச்சிச் சொல்லும்.." என்று சொல்லியபடி காலடித்தடங்களைக்
கூர்ந்து கவனித்தார்.
அந்த இடத்தில் குதிரையின் காலடித்தடங்களும் தெரிந்தன.. ஆனால் திடீரென்று
ஒரு இடத்தில் குதிரையின் காலடித்தடம் முடிந்திருந்தது...
"குதிர இங்கே இருந்து பறந்தா போயிருக்கும்?" மனத்தில் ஏகப்பட்ட கேள்விகள்..
குதிரையின் காலடித்தடங்கள் ஆற்றிலிருந்து வந்ததைப் போல் தெரிந்தது..
மனிதக் காலடித் தடங்கள் மலையாண்டி யூகம் செய்தது போல் பொன்னுசாமி
நாடாரின் வீட்டிலிருந்துதான் வந்திருந்தன..
"சரி. கிராம்சு... நாங்க போய்ட்டு வாரோம்.. ஊர்க்காவலுக்கு நம்ம
கான்ஸ்டேபிள் ஒருத்தர உட்டுட்டு போறேன். என்ன பிரச்சனைன்னாலும் சொல்லி
அனுப்புங்க.. நானோ இல்லாட்டி நம்ம எஸ்.ஐயோ வருவோம் விசாரணைக்கு" என்று
சொல்லியபடி காவலர் ஒருவரை அங்கிருக்கும்படி பணித்து விட்டு வாகனத்தில்
புறப்பட்டார்.
மறுநாள் அதிகாலை ராசாங்கம் பாட்டியின் மகன் தங்கவேலு வந்து சேர்ந்தான்.
தங்கவேலு திருமணம் செய்திருக்கவில்லை.. அவர்களுக்கு விளைநிலங்கள்
ஏராளமாய் இருந்தன. இதனால் ராசாங்கம் பாட்டி வரதட்சணை அதிகம் கேட்டுக்
கொண்டே ஒவ்வொரு பெண்ணாகக் கழித்துவந்தாள். ஒருகட்டத்தில் தங்கவேலுவின்
வயது அதிகமாகிவிட, யாரும் அவனுக்குப் பெண்தர முன்வரவில்லை..இந்நிலையில்
ராசாங்கம் பாட்டியின் கணவர் செல்லையா நாடார் இறந்து விட்டார்.
இறந்த பிறகுதான் அவர் வாங்கிவைத்திருந்த கடன் தொகைகளைப் பற்றித் தெரிந்தது..
அவர்களின் சொத்துக்கள் எல்லாம் பறிபோயிற்று. தங்கவேலுவும் திருமணத்தைப்
பற்றிய எண்ணத்தை மறந்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.
யாரைச் சென்று பார்ப்பது.. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்..
"கவலப்படாத தங்கேலு... எல்லாத்தையும் பாத்துக்கிடலாம். உங்க அம்மாவ
இன்னிக்கு மத்தியானம் வாங்கிட்டு வந்துறலாம்" தைரியம் சொன்னார் தலையாரி..
அவனது உறவினர்களும் கூடி அவனுக்குத் துணையாக இருந்தனர்.
சுப்பம்மாவோ பயத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை..
அவளின் ஆடுகள் காலையில் தாமாகவே அவளது வீட்டை நோக்கி வந்துவிட்டிருந்தன..
மதியம் ராசாங்கம் பாட்டியின் உடல் வந்து விட்டது..
ஊரே கூடி அழுதது.. பேச்சியம்மாள் சுப்பம்மாவைத் தனியே விட்டு விட்டு
எங்கேயும் செல்லவில்லை.
மாலை ராசாங்கம் பாட்டியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.
ஊர் முழுக்க முண்டமற்றுக் கிடந்த அந்தத் தலை யாருடைய தலை என்பது பற்றிய
பேச்சுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நாட்கள் கடந்துகொண்டிருந்தன..
சாராயம் காய்ச்சுக் கொண்டிருந்த ஆறுமுகத்தை அதற்குப் பிறகு காணவில்லை.
அவனுக்கும் குடும்பம் ஏதும் இல்லாததால் அவனைப் பற்றி யாரும் கவலைப்
படவிலை..
எந்த ஒரு பிடிமானமும் கிடைக்காமல் காவல்துறை திணறியது. அவ்வப்போது
வருவதும், சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிடுவதும், சுப்பம்மாவை
விசாரிப்பதுமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கைப் பொறுத்தவரையில்
எந்த முன்னேற்றமும் இல்லை..
சுப்பம்மாவும் மெதுவாக அதிர்ச்சியிலிருந்து விடுபட்டாள்.
பள்ளிக்குச் செல்வதும் வருவதும்... ஆடுகளைக் கொண்டு செல்வதும் வருவதும்
அவளது வழக்கங்களாயின...
ஆனால் பொன்னுசாமி நாடாரின் வீட்டைக் கடக்கும்போதும், கரையடியைத்
தாண்டும்போதும் சிறிது பயம் எட்டிப் பார்க்கும்.. ஆனால் கரையடி சுடலை மாட
சாமியின் திருநீற்றை மடியில் கட்டி வைத்திருந்ததால் எந்த அதிர்ச்சியும்
தன்னை நெருங்காது என்று நம்பினாள்..
கரையடி மாடனுக்கு வெள்ளியும் செவ்வாயும் வழக்கம் போல் பூசைகள் நடைபெற்று வந்தன..
கரையடி நல்லூரும் கிட்டத்தட்ட அந்த சம்பவத்தை மறந்துவிட்டிருந்தது..
அந்த சமயத்தில் ஓர் நாள்...
செங்கோட்டான் மடம் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளர்
மலையாண்டியைத் தேடி ஒரு பெண் வந்தாள்..
"சார். என் பேர் அகல்யா... ஒரு ஹெல்ப் வேணும்"
"சொல்லும்மா என்ன விசியம்? நீ எந்தூரு?"
"சார். நான் சென்னையிலிருந்து வர்றேன். சட்டம் படிச்சிட்டு இருக்கேன்.
வித்தியாசமான வழக்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்னு நினைத்தப்போ
முற்றுப் பெறாத சில வழக்குகளைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதுல தலையும்
புரியாம, வாலும் புரியாம தள்ளாடிட்டிருக்கிற சில கேஸ்களில க்ரையடி
நல்லூர் தலைகேசும் ஒண்ணுன்னு தெரிஞ்சது.. அதான் அதைப் பற்றி எழுதலாம்னு
வந்தேன்."
"ஓ. அப்படியா... அந்த ஃபைலை பாத்தாலே தல சுத்துது... யோவ் ஏட்டு அந்த
கரையடிநல்லூர் தலகேசு ஃபைல எடுத்துட்டு இங்க வாய்யா" என்று ஏட்டை அழைத்து
விட்டு, அகல்யாவிடம் திரும்பி, "அந்த ஃபைல படிச்சிப் பாரும்மா.. உனக்கும்
எதுவும் புரியாது... நாங்க எல்லா கோணத்துலயும் அலசிட்டோம். ஒண்ணும் பிடி
படல..." என்றார்.
இதற்குள் அந்த ஏட்டு அந்த கோப்பைக் கொண்டுவந்து நீட்டினார்..
அகல்யாவும் அதை வாங்கித் திறந்தாள்.. அதிர்ந்தாள்...
"சார்... இது..... இது....." அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை..
"ஏம்மா.. இது யாருன்னி உனக்குத் தெரியுமா?"
"ரொம்ப நல்லாத் தெரியும் சார். இவர் எங்க காலேஜிலதான் வேலைபாத்திட்டிருந்தார்"
"என்னது உங்க காலேஜில வேல பாத்திட்டிருந்தாரா? எந்த ஊரு இவருக்கு?"
"எந்த ஊருனு தெரியாது சார். போனவருசங்கூட எங்களுக்கு இவர்தான் கைட்"
என்று சொன்ன அகல்யாவை நோக்கி நிமிர்ந்தார் மலையாண்டி..
அதே சமயம்..
ஒருவன் அரக்க பரக்க ஓடிவந்தான்..
அவன் கரையடி நல்லூரைச் சேர்ந்தவன்.
"ஐயா... ஐயா.."
"என்னலே.. என்னாச்சி?"
"நம்ம தலயாரி ஐயா உங்கள வெரசா வரச்சொன்னாவ"
"என்னாச்சில...?"
 "அங்க.. நம்மூர்ல...."
அவன் சொல்லத் துவங்கினான்..

(தொடரும்)

கருத்துகள் இல்லை: