ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

இசக்கியம்மன் கதை (2)

தன் மடியில் களைப்போடு உறங்கிக் கொண்டிருந்த லெட்சுமியைப் பார்த்தான் வேலவன்.
அவன் மனதோ அவளின் தாயின் சொற்களையே எண்ணிக் கொண்டிருந்தது.. என்ன
இருந்தாலும் தாசிக்குலப் பெண்தானே.. இவள் என்னையே காதலிக்கிறாள் என்று
நான் எண்ணியது முட்டாள்த் தனம் அல்லவா? தாசியின் அன்பு பணத்தின் மேலல்லவா
இருந்து விட்டது..
இன்று என்னிடம் பணமில்லை என்று இவள் தாய் விரட்டி விட்டாள். இவளோ என்னைத்
தொடர்ந்தாள்.. எதிர்காலத்தில் இவளும் மாறமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?
விநோதமான விபரீத சிந்தனைகளோடு லெட்சுமியைப் பார்த்துக் கொண்டிருந்த
வேலவன் ஓர் முடிவெடுத்தான்.
அருகிலிருந்த மணலைத் தன் தொடை உயரத்துக்குக் கூட்டினான். லெட்சுமியின்
தலையை எடுத்து அதில் வைத்தான்.. சுற்றிலும் பார்த்தான். ஓர் பெரிய
பாறாங்கல் கிடந்தது...
எடுத்தான்... என்னை மயக்கி ஏமாற்றிய தாசியே... இன்றோடு இறந்து போ...
என்று எண்ணிக் கொண்டே அந்த கல்லை எடுத்து அவள் தலையில் போட்டான்...
துடிதுடித்தாள் லெட்சுமி...
"அடேய் வேதியா... உன்னை நம்பி என் தாயை விட்டு வந்தேனடா... என்னை
ஏமாற்றிக் கொலை செய்கிறாயே... இது நியாயமா? என்னை நீ கொன்றதற்கு சாட்சி
எதுவும் இல்லை என்று எண்ணிவிடாதே... நான் பத்தினியடா.. நீ என்னைக் கொலை
செய்ததற்கு இந்தக் கள்ளி மரமே சாட்சி... எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன்னை வாழ விடமாட்டேன்.. உன்னைப் பழிவாங்கியே தீருவேன்.. " என்று
சபதமிட்டு இறந்து போனாள் லெட்சுமி...
இதை சட்டை செய்யாத வேலவன், அந்த நகை மூட்டையை எடுத்துக் கொண்டு நடக்கத்
தொடங்கினான்.. அந்த நகைகளை விற்று புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்பது
அவன் எண்ணம்... ஆனால் விதி?
நடந்து கொண்டிருந்தவனுக்குத் தாகம் எடுத்தது.
அருகே ஓர் கிணற்றைக் கண்டான். கிணற்றில் இறங்கி நீரருந்தலாம் என்று எண்ணி
இறங்கியவனைக் கண்டு விதி சிரித்தது.
கிணற்றுப் படிக்குள் காத்திருந்த ஓர் நாகம் அவனைத் தீண்டியது.. கிணற்றுள்
விழுந்து மடிந்தான்.

அங்கே... வீட்டிற்குத் திரும்பிய திருகண்ட நட்டுவன் தன் தாயிடம்
தங்கையைப் பற்றிக் கேட்டான். தன்னை மதிக்காமல் அந்த வேதியன் பின்னாள்
லெட்சுமி சென்றுவிட்டாள் என்றுரைத்தாள் தாய்க்கிழவி..
அவளைத் திட்டிவிட்டுத் தங்கையைத் தேடிக் காட்டுக்குள் ஓடினான் திருகண்ட
நட்டுவன்.. அங்கே தன் தங்கை தலை சிதைக்கப்பட்டு இறந்திருந்த காட்சியைக்
கண்டு பதைத்தான்..
அழுதான். துவண்டான்... "என் அன்புத் தங்கையே... உன்னை இந்த நிலைக்கு
ஆளாக்கியது யார்? என்னிடம் சொல்லியிருந்தால் அந்த வேதியனோடு உன்னை
சேர்த்து வைத்திருப்பேனே... என்ன ஆனதோ உனக்கு?" என்றெல்லாம்
புலம்பினான்.. மனம் வெதும்பி அழுத அவனது ஆவி அப்படியே பிரிந்தது.. (வேறு
சிலர் பாடும்போது அவன் அங்கே தூக்குப் போட்டு இறந்ததாகப் பாடுவார்கள்)

இறந்தும் மனந்தளராத லெட்சுமியின் ஆவி ஈசனாரிடம் சென்றது.."ஐயனே...
தாசிக்குலத்தில் பிறந்தும் பத்தினியாய் வாழ நினைத்தது என் தவறோ? எனக்கு
ஏன் இந்தத் தண்டனை?" என்று ஈசனாரிடம் முறையிட்டாள் லெட்சுமி. ஈசனும்
புன்முறுவலோடு "விதியின் வழியை வெல்ல யாராலும் இயலாது..உனக்கு வேறு என்ன
வரம் வேண்டும் கேள்." என்றார்.
"என்னைக் கொன்ற அந்த வேதியனை நான் பழிவாங்க வேண்டும், அதற்கேற்ற வரம் தாருங்கள்."
"மகளே.. உன்னைக் கொன்ற பாவத்திற்கு அவனை உடனே தண்டித்தோம்.. பார் அவனும்
பாம்பு தீண்டி உயிர் நீத்து விட்டான்.."
"இல்லையில்லை.. என் கரங்களால் நான் அவனைக் கொல்ல வேண்டும்.. அந்த வரத்தை
எனக்குத் தாருங்கள்.."
"சரி.. அப்படியே தந்தோம். அடுத்த பிறவியில் நீ யார் என்ற உண்மை உனக்குத்
தெரிந்திருக்கும்.. நீ அவனைப் பழிவாங்குவாய்..." என்று ஈசனார்
வரமளித்தார்..

வரம் வாங்கிய லெட்சுமி எப்படி அந்த வேதியனைப் பழிவாங்கினாள்? அடுத்த
மடலில் காணலாம்...

கருத்துகள் இல்லை: