செவ்வாய், செப்டம்பர் 07, 2010

சொல்லால் அடித்த சுந்தரி... (சிறுகதை)

சொல்லால் அடித்த சுந்தரி... (சிறுகதை)
- மு. கந்தசாமி நாகராஜன்.
"அய்யா உள்ள வரலாமா?" குரல் கேட்டு நிமிர்ந்ததும் அதிர்ந்தான் மோகன். அங்கே நின்று கொண்டிருந்தவளைப் பார்த்ததும் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
"வாங்க... உள்ளார வாங்க..." வாய் வார்த்தைகளை உதிர்த்தாலும் மனது பழைய நிகழ்வுகளை நோக்கி நகர்ந்தது..
"அய்யா. நான் செல்வராணி. இந்த சொக்கலிங்க புரத்தோட கவுன்சிலர். நேத்தைக்கு ஸ்கூல்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னாங்க.. அதான் என்னன்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்." அவள் வார்த்தைகள் மோகனை பழைய நினைவுகளுக்குள் போகவிடாமல் தடுத்தது.
'இன்னமும் நீ மாறலியா ராணி... அதே போராட்ட குணம் இன்னமும் உனக்குள்ள இருக்கா?' மனதுக்குள் துடித்த வார்த்தைகள் வாயைக் கடக்க மறுத்தன..
"ஆமாங்க.. நான் இங்க ஹெட்மாஸ்டரா சார்ஜ் எடுத்து ஒரு வாரம்தான் ஆச்சு. சில விசயங்கள இதுக்கு முன்னாடி இருந்தவங்க கண்டுக்காம விட்டுருக்காங்க.. ஆனா என்னால அதக் கண்டும் காணாம இருக்க முடியல. அதுக்காகத்தான் நடவடிக்கைகள் எடுத்தேன்." அவள் முகம் பார்க்காது வெளிவந்தன மோகனது வார்த்தைகள்.
"அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு செல விசயங்கள செஞ்சிர முடியாது சார். நம்ம மக்கள மாத்துறதுக்கு நாம கொஞ்ச நாள் காத்துதான் இருக்கனும். புரிஞ்சதா?"
"இல்லைங்க.. நம்ம பள்ளிக்கூடத்து பி.டி மாஸ்டர் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரரா இருக்குறதால அவர் பேச்சக் கேட்க மாட்டோம்னு சொல்றதும், அவர மரியாத இல்லாமப் பேசுறதும் ஏத்துக்கிடக் கூடிய விசயங்களா? நீங்களே சொல்லுங்க.. சாதி வேறுபாடு இல்லாம பழக வேண்டிய பள்ளிக்கூடத்துலயே இந்த வாத்தி அந்த சாதிக்காரன். அவன் பேச்ச நான் எப்படிக் கேட்க முடியும்னு ஒரு மாணவன் எப்படிச் சொல்லலாம்? இதுக்காகவே அந்த வகுப்புக்கு இதுவரைக்கும் அவர் டிரில் எடுத்ததே இல்ல.. என்னோட பிரியட்ல அப்படி நடக்க நான் விடமாட்டேன்.. இந்த ஊரு மொத்தமும் எதுத்து வந்தாலும் சரி. அவர் டிரில் எடுக்கனும். அந்த பையன் பணியணும். அவ்ளோதான். அதுக்காக கவுன்சிலர் வந்தாலும் சரி. பண்ணையார் வந்தாலும் சரி. நான் பயப்படப் போறதில்ல..." கொஞ்சம் உரக்கப் பேசினான் மோகன்.
"யாரு நீங்களா??? பயப்படப் போறதில்லன்னு பேசறது நீங்கதானா???" என்று சொல்லிவிட்டு அமைதியானாள் செல்வராணி.
மோகனின் மனது பின்னோக்கிப் போனது..

---
மோகனுக்கும் சொக்கலிங்கபுரம்தான் சொந்த ஊர். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படித்துப் பெரிய வாத்தியாராக வேண்டும் என்பது அவனது சிறுவயது ஆசை. அதற்காகவே முயற்சி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு புறம் ஏழ்மை மறுபுறம் தனது தணியாத ஆவல். ஆயினும் தனது விடா முயற்சியால் படித்துக் கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் அவர்களுக்குச் சொந்தமான வயல்கள் அந்த ஊர் பண்ணையாரிடம் விலைக்குப் போய்க்கொண்டிருந்தன. கல்லூரியில் படிக்கும்போதுதான் பண்ணையார் மகள் செல்வராணி அறிமுகம் ஆனாள். இருவரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்றாலும் அவளை அந்தக் கிராமத்தில் மோகன் பார்த்ததே இல்லை. அவள் நகரத்தில் உள்ள தனது சித்தியின் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு முறை கல்லூரி நிர்வாகம் தேர்வுக் கட்டணம் கட்டாத மாணவன் ஒருவனைக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்தது. அச்சமயம் அம்மாணவனுக்காகக் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி தானே கட்டணம் கட்டி மீண்டும் சேர்க்கச் செய்தபொழுதுதான் செல்வராணியை அவன் சந்தித்தான்.
"ரொம்பவும் போல்டான பொண்ணுடா இவ" என்று நண்பனிடம் சொன்னபோது அவன் சொன்ன செய்தி இவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
"டேய் அவளும் உங்க ஊர்க்காரிதாண்டா... :"
"என்னது . எங்க ஊர்க்காரியா?? சும்மா கதை விடாதடா. நான் எங்கூரில இதுக்கு முன்னாடி இவளப் பாத்ததே இல்ல?"
"அட ஆமாப்பா. என் கிளாஸ்மேட்தான் அவ.. முதல்நாள் அறிமுகத்திலேயே அவ சொன்னத எங்காதால கேட்டேன்.."
மனதுக்குள் பெருமிதம். நம்ம ஊர்ப் பெண் இங்கு வந்தும் ராஜாங்கம் செய்கிறாளே என்று.. அந்த வார இறுதியில்தான் அவளும் அவன் செல்லும் பேருந்திலேயே புறப்பட்டாள்.
"என்னங்க.. நீங்களும் சொக்கலிங்க புரமாமே?" வலிய சென்று பேசினான் மோகன்.
"ஆமாங்க.. நீங்க?"
"நானும் அதே ஊர்தான். இது நாள்வர உங்கள அங்கப் பாத்ததே இல்ல"
"இல்ல.. நான் எங்க சித்தி வீட்டுல இருந்து படிக்கிறேன்.. மாசம் ஒருவாட்டிதான் ஊருக்கு வருவேன். அதனால நீங்க பாத்திருக்க மாட்டிங்க.."
இப்படித்தான் ஆரம்பித்தது நட்பு.. பின்னர் அவள் சித்தி வீட்டுக்குச் செல்லும் போதும் ஒரே பேருந்தில்தான் பயணித்தனர். கல்லூரியிலும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டனர். அந்த நட்பும் ஒருநாள் காதலாக மாறியது. மோகனுக்கு ஆரம்பத்திலிருந்தே பயம் இந்தக் காதல் கை கூடுமோ கூடாதோ என்று.
"செல்வா.. நான் ஒண்ணு சொன்ன கோபப் பட மாட்டியே..."
"ஒண்ணும் பட மாட்டேன் சொல்லு"
"இல்ல.. நீ வேற சாதி.. நான் வேற சாதி.. எங்க நிலத்த எல்லாம் உங்க அப்பாகிட்ட வித்துதான் என் அப்பா என்னப் படிக்க வைக்கிறாரு.. அப்படி இருக்கையிலே நம்ம கல்யாணம் அப்படிங்கறது நெனச்சுப் பாக்கக் கூடிய விசயம்தானா?"
"அட இவன் ஒருத்தன்பா.. சாதிகளை எல்லாம் எடுத்துறலாம்னு சட்டம் போட அரசாங்கம் திட்டம் போட்டுட்டு இருக்கு. இன்னமும் அதப் பத்தியே பேசுறான்பா... அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. எங்க அப்பா என் விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்ய மாட்டார் போதுமா?"
செல்வராணியின் வார்த்தைகள் நம்பிக்கை தந்த போதும் மனதுக்குள் சிறு உதறல் இருந்து கொண்டே இருந்தது.
அவள் பட்டப் படிப்போடு நின்று விட, கல்வியியல் பயில்வதற்காகத் தொலை நகரத்துக்குப் போனான் மோகன். ஆயினும் அவர்கள் காதல் கடிதங்கள் மூலம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன..
ஆண்டுகள் ஓடின. மோகனின் படிப்பு முடிந்ததும் அரசுப் பணிக்காகக் காத்திருந்தான். இந்நிலையில்தான் அவர்களது காதல் செல்வராணியின் அண்ணன் மூலம் அவளது தந்தையாருக்குத் தெரிய வந்தது. மோகனை அழைத்து மிரட்டினார்.
"இங்க பாருப்பா.. நீ என்ன சாதின்னு உனக்குத் தெரியாதா? என்ன தைரியத்துல என் பொண்ண விரும்பலாம்னு நினச்சே..."
"சாதிய எடுத்துடறதுக்கு சட்டம் போடலாமான்னு அரசாங்கம் யோசிச்சிட்டிருக்கு.. நீங்க என்னய்யா முட்டாள்த்தனமா நீ என்ன சாதி அப்படி இப்படின்னு பேசறீங்க...."
"ம்ம்ம்ம் போடுவான்யா.. போடுவான்... கேக்குறவன் என்ன கேனப் பய பாத்தியா.." என்று கிண்டலோடு பேசியதோடு மட்டுமல்லாது மோகனது குடும்பத்தை அடித்தே அந்த ஊரை விட்டு விரட்டினார்.
மோகனும் தான் பயின்ற நகரத்துக்குச் சென்று அங்குள்ள தனியார் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தான். பின்னர் அவன் சொக்கலிங்கபுரம் ஊரைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. செல்வராணியின் நினைவுகளும் மெல்ல மெல்ல அவனது நினைவிலிருந்து அகன்றன. அவனுக்கும் அரசுப் பணி கிடைத்தது. அவன் பணிக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது மகளையே மோகனுக்கு மணம் முடித்து வைத்தார். அவன் மனைவி நிர்மலா, மிகவும் நல்லவள். அவளிடம் திருமணத்துக்கு முன்னரே தனது பழைய காதல் பற்றிய செய்தியைச் சொல்லிவிட்டிருந்தான். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
காலச்சக்கரம் சுழன்றது. நிர்மலா அழகியதொரு ஆண் மகவை ஈன்றெடுத்தாள். சொக்கலிங்கபுரத்திலிருந்து மோகன் விரட்டியடிக்கப் பட்டு எட்டாவது ஆண்டு, அவனுக்கு அந்த ஊர் மேல்நிலைப் பள்ளிக்கே மாற்றல் வந்தது. அதுவும் தலைமை ஆசிரியர் என்ற பதவி உயர்வோடு..
சொந்த ஊரைப் பார்க்கப் போகிற மகிழ்வு.. அந்த ஊர் தன்னை எப்படிப் பார்க்குமோ என்னும் எண்ணம். இப்படிப் பட்ட பல குழப்பமான மனநிலையோடு புறப்பட்டவனோடு அவனது பெற்றோர் வர மறுத்து விட்டனர். தனது பெற்றோரை நகரத்தில் குடிவைத்து விட்டு, மனைவி மற்றும் மகனோடு கிராமத்துக்குச் சென்றான் மோகன்...
அங்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று.. யாரிடமும் எதையும் விசாரிக்க முடியவில்லை.
ஆனால் பள்ளியில் இவனிடம் தண்டனை பெற்ற மாணவன் செல்வராணியின் அண்ணன் மகன் என்பது மட்டும் புரிந்தது..
இன்றுதான் செல்வராணியை நேரில் பார்க்கிறான்..
----
"என்ன பழைய நினைவுகள் போலிருக்கு??" கிண்டலாகக் கேட்ட செல்வராணியின் முகத்தை நோக்கினான். கழுத்தில் தாலியில்லை. ஆனால் வேறு ஆபரணங்கள் அணிந்திருந்தாள்.. ஒருவேளை இவளுக்கு மணமாகி, கணவன் இறந்திருப்பானோ...? என்ற எண்ணம் தோன்றியது..
" ஆமாங்க.. உங்களுக்குத் திருமணம் எப்போது நடந்தது? எத்தனைக் குழந்தைகள்?" அடுக்கடுக்காய் வினாக்களைத் தொடுத்தான்.
"கல்யாணமா?? எனக்கா??? வாழ்க்கையில நான் காதலிச்சது ஒருத்தரைத்தான். கல்யாணம் முடிக்கனும்னு நெனச்சது அவரோடதான். ஆனா என்ன பண்றது. அந்த ஆள் பயந்து இந்த ஊரை விட்டு ஓடிப் போய்ட்டார்... இன்னொருத்தனைக் கல்யாணம் செஞ்சிக்கறதுக்கு என் மனசு இடம் கொடுக்கல... எங்க அப்பாவும் அவர் திரும்பி வந்தா கல்யாணம் செஞ்சி வைக்கிறதா சொன்னாரு. ஆனா அவரும் வரல. எனக்குக் கல்யாணமும் நடக்கல..."
செல்வராணியின் வார்த்தைகள் சம்மட்டியாய் மோகனின் நெஞ்சில் பாய்ந்தது...
"நீ... நீங்க என்ன சொல்றீங்க..?" வார்த்தைகள் குழறின.
"நிஜத்தைத் தான் சொல்றேன்...அன்னைக்கு எங்க அப்பாவுக்குப் பயந்து இந்த ஊர விட்டுப் போனீங்க.. உங்க கிட்ட இருந்து தகவல் வருமின்னு காத்துக் காத்துக் கிடந்தேன்.. வரல... என் நிலையக் கண்டு என் அப்பாவும் அதிர்ச்சில கண்ண மூடிட்டாரு... நான் சமூக சேவகியா என்ன வளர்த்துக் கிட்டேன்.. இன்னைக்கு இந்த ஊரோட கவுன்சிலரா இருக்கேன்..."
".................."
"நீங்க தண்டன கொடுத்தது வேற யாருக்கும் இல்ல. என் அண்ணன் பையனுக்குத்தான்.. அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கிட்டு நான் உங்களோட பேசறதுக்கு வரல...இந்த ஊரு இப்படித்தான். நாமதான் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்குப் புரிய வைக்கனும். அது ஒரு நல்ல ஆசிரியரோட கைலதான் இருக்கு.. ஒரே நாளில் அவன மாத்திரணும்னு நெனச்சா அன்னைக்கு நம்ம காதலுக்கு ஏற்பட்ட தோல்விதான் இன்னைக்கு உங்க முயற்சிக்கும் ஏற்படும்.. அவனக் கூப்பிட்டு பேசுங்க... வீட்டுல நானும் சொல்றேன்.. இத்தன நாள யாரும் இந்த விசயத்தைப் பத்திப் பேசாததால எங்களுக்கும் தெரியல.. இனிமே நாங்களும் பேசறோம்... கையாள வேண்டிய வழில கையாண்டா எல்லாப் பிரச்சனைகளுக்கும் கண்டிப்பாத் தீர்வு உண்டாகும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. நான் வாறேன்..." என்றபடி எழுந்து போனவளைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.. திரு. மோகன்,. தலைமை ஆசிரியர்.....

1 கருத்து:

msa சொன்னது…

innum athigama yathir parkiren makka........