சனி, செப்டம்பர் 04, 2010

எமது ஆசிரியர்கள்...

எதிர்மறையான நிகழ்வுகள் எம் வாழ்விலும் நிகழ்ந்தது உண்டு. உள்ளூரிலே செல்லப் பிள்ளையாக இருந்துவிட்டதால் ஆசிரியர்களிடமிருந்து எந்தவித தொந்தரவுகளும் ஏற்படவில்லை. பின்னர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமானது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமது சமூக அறிவியல் ஆசிரியர் மூலம். அவர்தான் ஆங்கிலம் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான ஆசிரியர். அவரது பெயரை நான் கடந்த பதிவிலும் குறிப்பிடவில்லை. இப்போதும் குறிப்பிடப் போவதில்லை. கிட்டத்தட்ட எனது கவனம் சிதறிப்போனதற்கானக் காரணமும் இவரையே சாரும். ஆங்கிலக் கட்டுரைகள் மற்றும் மனப்பாடக் கவிதைகளை நாங்களே பாராமல் எழுதி எங்களுக்குள்ளேயே திருத்திக் கொள்ள வேண்டும். ஒரு தவறுக்கு 50 பைசாவீதம் அபராதம். இச்சமயத்தில்தான் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. பெரும்பாலும் மாணவர்கள் அவர்களுக்குள்ளே பேசி வைத்துக்கொண்டு தவறுகளைக் காண்பிப்பது இல்லை. 10 தவறுகள் இருக்கும் நிலையில் ஒருதவறு என்றுதான் குறிப்பிடுவர். ஆனால் இவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. நேர்மை, நியாயம் என்று பேசிக்கொண்டு (ரொம்ப சின்னப் பையனுங்க அப்ப.. அதுனால ரொம்ப வெகுளியா இருந்துட்டேன்.) எனது கைக்கு வரும் மாணவர்களின் தாள்களில் இருக்கும் தவறுகளை அப்படியே குறிப்பிடுவேன். இதனால் மாணவர்களிடமும் சரிவர புரிதலில்லை. அவ்வாசிரியரோ நாம் நன்றாக படித்தாலும் நல்ல அழகிய வெள்ளை நிறங்கொண்ட மாணவர்களிடம் மட்டுமே அன்பாக இருப்பார். அருகிலே அழைத்து இருத்திக் கொள்வார். நாம் 95 விழுக்காடுகள் பெற்றாலும் பாராட்டு அவரிடமிருந்து வரவே வராது. இதற்கிடையில் அவரொன்று அழகிய மணவாளனாக இருக்கவில்லை. இவர்தான் ஆசிரியர்கள் பற்றிய என் எண்ணங்களில் முதல் கரும்புள்ளியாக விழுந்தவர். மாணவர்களோ எனது தாள்களைத் திருத்துவதில் வேண்டுமென்றே தவறுகள் கண்டுபிடிப்பார்கள். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே தவறுகளைக் கூட்டி எழுதி அபராதத்திற்கு வித்திடுவர். அந்த அபராதத் தொகைகளை எண்ணி எடுத்து ஆண்டு இறுதியில் அதனை எங்களுக்கென்றுதான் செலவிடுவார். புரோட்டா வாங்கி உண்டோம். மேலும் இரண்டு இருக்கைகள் வாங்கியளித்தோம். இந்த சமயத்தில் நடந்த பல நகைச்சுவை நிகழ்வுகளைப் பின்னர் பதிவிடுகிறேன்..

கல்லூரி பயிலும்போதும் ஒரு பேராசிரியையினால் தொந்தரவை அனுபவித்தேன். என்றைக்குமே நான் செய்த தவறுகளுக்கு என்னைத் தண்டித்தால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால் இவருக்கு என்மீது என்னதான் கோபமோ தெரியவில்லை. நான் செய்யாத தவறுகளுக்கும் அனைவர் முன்னிலையிலும் மிகக் கேவலமாகத் திட்டும் புத்தி. பின்னர்தான் அறிந்து கொண்டேன் அவர் மதமாறியவர் என்று. வகுப்பறையில் இருந்த ஆண் மாணவர்கள் எட்டு பேரில் நான் மட்டுமே இந்து மாணவன். இதனால்தான் அவர் அப்படி நடந்து கொண்டார் என்பது எனது கணிப்பு. ஏனெனில் வகுப்புத் தேர்வுகளில் ஒரே கணக்கைத் தவறாக செய்த இரு மாணவர்கள்களில் எனக்கு மட்டுமே அந்த ஏச்சும் பேச்சும் வந்ததென்றால் அதற்குக் காரணம் இதைத் தவிர ஏதுமில்லை. இந்த செய்திகளை எனது நண்பனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வேனேயன்றி அவரை எதிர்த்துப் பேசியதில்லை. கல்லூரியில் நடந்த பல நிகழ்வுகளில் போராட்டங்களை முன்னின்று நடத்தி ஆசிரியர்களை எதிர்த்து நின்ற போதும், இந்நிகழ்வுக்காக எந்த செயலையும் செய்ய மனம் வரவில்லை. ஒன்று ஆசிரியரிடம் ஏற்பட்ட என்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக மாணவர் கூட்டத்தை அழைப்பதை நான் விரும்பவில்லை. மற்றொன்று ஆசிரியர்களின் மற்ற செயல்களுக்காக அவரை எதிர்ப்பதில் தவறை நான் காணவில்லை. ஆனால் பாரபட்சம் காட்டும் செயலை குருவே செய்யும்போது அதனை அவரேதான் உணரவேண்டுமேயன்றி நான் சுட்டிக் காண்பிப்பது முறையல்ல என்றும் நினைத்ததுதான்.

இன்றைக்கும் சொல்கிறேன். ஆசிரியர் என்போர் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மாணவரின் சமயச்சார்புடைய சிந்தனைகளை மனதில் கொண்டு அவர்களை வெறுப்பதோ அல்லது தனிமைப் படுத்துவதோ அவர்களது மனதில் ஆறாப் புண்களை ஏற்படுத்தும். பள்ளி மற்றும் கல்லூரியை விட்டு வெளியே வந்து ஆண்டுகள் பல ஆன போதும் இந் நிகழ்வுகள் ஏற்படுத்திய ஆறாத வடுக்களை இன்னமும் அழிக்க இயலவில்லை...

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை: