சனி, செப்டம்பர் 04, 2010

எமது ஆசிரியர்கள்...

எனது திருமணத்தின்போது எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரிய, பேராசிரியர்களை அழைத்து மேன்மைப் படுத்த வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது.. ஆனால் மிகக் குறுகிய கால கட்டத்தில் திருமண தேதி நிச்சயிக்கப் பட்டதால் வெகுசிலரை மட்டுமே அழைக்க முடிந்தது.. அவ்வருத்தம் இன்னமும் நெஞ்சத்தில் உண்டு.. ஆசிரியர்கள் என்போர் பாரபட்சமின்றி எல்லா மாணவரிடத்தும் சமநோக்கோடு இருக்கவேண்டும் என்பது விதி
.. இவ்விதிகளுக்கு உட்பட்டு அன்பு செலுத்தி எம்மை அறநெறியில் வளர்த்த ஆசிரியர்களையும், விதிகளுக்கு அப்பாற்பட்டு நம்மை வெறுத்துப் புறந்தள்ளிய ஆசிரியர்களையும் கண்டுள்ளோம். கல்லூரி நாட்களில் ஆண் மாணவர்களில் நான் மட்டுமே இந்து.. இந்த காரணத்தால் என் மீது மிகுந்த அன்பு கொண்ட பேராசிரியர்களும் உண்டு. இதே காரணத்தாலேயே எம்மை வெறுத்த பேராசிரியர்களும் உண்டு. எம்மை நற்பாதையில் வழிநடத்திய அன்புப் பேராசிரியர்களை எண்ணி அகம் மகிழ்கின்றேன். நினைவில் வாழும் பேரா. ஞானதுரை, பேரா. திரவியம் ஜெபராஜ், பேரா. கென்னடி, பேரா. பாலசாந்தி கருணாகரம், பேரா. ஸ்வீட்லின், பேரா. ஸ்வீட் லில்லி, தமிழ் கற்றுத் தந்த பேரா. ரூத் பியூலா, பேரா. பெரிய நாயகம் ஜெயராஜ், பேரா. அந்தோனி, ஆங்கிலப் பேராசிரியர்கள் பேரா. கிருபலானி, பேரா. வசந்தி, பேரா. கிஃப்ட் ஜெயக்குமார், இவர்களெல்லாம் இன்னமும் என் நினைவில் நிற்கின்றனர்.
காலச்சக்கரம் பின்னோக்கி நகர்கின்றது
. முதன் முதலில் நாம் ஆசிரியராகக் கண்டது எமது பாலர் பள்ளி ஆசிரியர்தான். அவரது பெயர் சித்ரா.. நமக்கு அப்போது எழுதப் படிக்கத் தெரியாது. ஆயினும் எமது இல்லத்துக்கு வரும் "இயேசு விடுவிக்கிறார்" என்ற பத்திரிக்கையை எடுத்துப் பையில் வைத்துக் கொண்டு பள்ளி செல்வோம். ஆனந்தமோ ஆனந்தம். அழகிய தோட்டம். அங்கு வளரும் வான் கோழிகள். அருமையான ஆசிரியர். அவர் சொல்லும் கதைகள் மறந்து போய்விட்டாலும் அவர் சொல்லிய விதம் இன்னமும் கண்களில் வந்து போகிறது. சேட்டைக்காரப் பிள்ளைகளை அவர் அதட்டும் விதமும் பின்னர் அன்போடு அணைக்கும் நிகழ்வும் தினமும் உண்டு. இறைவணக்கப் பாடல்கள் மட்டும் தவறாது சொல்லித் தருவார். அந்தப் பாடல் கூட இன்னமும் நினைவில் உள்ளது.. "தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ்த்த.. வருவாயே திருநாயகா.. வரம் அருள்வாயே குருவானவா.." என்ற பாடல்தான் அது..
பின்னர் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்த போது முதலாம் வகுப்பு ஆசிரியர் கிறிஸ்துக் கனி
.. அவர் எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மிக மிக அன்பானவர். எளிமையானவர். ஆனா.... ஆவன்னா.. என்று அவர் கற்றுக் கொடுக்கும் விதமே தனி.. ஆற்று மணலில் விரல் பிடித்து எழுதப் பழக்கினார். பின்னர் தரையில் தமிழெழுத்துக்கள் எழுதுவார். நாங்கள் புளியமுத்துக்களால் அதனை நிரப்ப வேண்டும். பாண்டி முத்துக்களும் புளியமுத்துக்களும் கரங்களில் விளையாடிய அக்காலத்தை மறக்க இயலுமா?? தற்சமயம் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்கு ஒரே மகன். சற்றே புத்தி சுவாதீனம் குறைவானவன். அவனுக்குச்சேர வேண்டிய சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி எடுத்துக் கொண்டுவிட்டதால் முதலூர் வீதிகளில் உள்ள கடைகளில் எடுபிடி வேலை செய்து வருகிறான். இன்றும் அவனைக் காணும்போதெல்லாம் எங்கள் ஆசிரியர் கிறிஸ்துக் கனி அவர்களின் நினைவுகள் மேலோங்கும்.. முதலாம் வகுப்பு படிக்கும் போதே இரண்டாம் வகுப்பு ஆசிரியரைக் கண்டால் பயம். அவரது பெயர் வயலட். அவரது பார்வையைக் கண்டாலே மாணவர்களுக்குப் பீதி.. தவறுகளைக் கண்டுபிடித்தால் அவர் கொடுக்கும் வைத்தியமே தனி.. ஆனால் மனக் கணக்கு செய்வதற்கு எம்மைப் பழக்கியவர் அவர். மேலும் அவர்தான் தையல் பயிற்சி ஆசிரியர். அவருக்கு ஒரு பேத்தி உண்டு. என்றாவது ஒருநாள் அவளை அழைத்து வருவார். அவள் பெயர் கண்மணி. அவள் வந்துவிட்டாலே நான் எனது உடைமைகளின் மேல் அதிகக் கவனம் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் சரியான சேட்டைக்காரி.. இரண்டாம் வகுப்பில்தால் எனது தந்தையார் எனக்கு கல் சிலேட் வாங்கித் தந்தார். எனது முதல் சிலேட்டை உடைத்தது அந்தக் கண்மணிதான். எனவே அவளைக் கண்டால் சற்று பயமெனக்கு.
மூன்றாம் வகுப்பு ஆசிரியர்தான் ஆங்கிலம் கற்றுத் தந்தார். கடிகாரத்தில் நேரம் பார்க்கவும் கற்றுத் தந்தார். அவ்வகுப்புளில் கற்ற மனப்பாடச்செய்யுள்களும் அவர்கள் கற்றுத் தந்த உதாரணங்களும் இன்னமும் நினைவில் உள்ளன.. நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். இவர் நம் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஜாண் ஆசிரியர் என்றால் தெரியாதவர்களே கிடையாது. எனது தாத்தா, எனது அப்பா மற்றும் எனக்குப் பாடம் எடுத்த பொதுவான ஆசிரியர் இவரே.. என்னை எனது தந்தையாரின் பெயரைச்சொல்லித்தான் அழைப்பார். எனது தந்தையாரைப் பாட்டனார் பெயர் கொண்டு அழைப்பார். தமிழ்ச்செய்யுள்களை இசையோடு சொல்லித் தருவது இவரது சிறப்பம்சம். அடியும் விழும். அன்பாகவும் இருப்பார். அவர் கற்றுத் தந்த பாடல்களை அதே இசையோடு இன்றும் நான் பாடுகிறேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. அவரது நினைவுகள் மட்டுமே.. அவரது மகன் அவரது பெயரில் ஒரு இணையதளம் அமைத்துள்ளார்.. இவ்விடம் காண்க.... http://www.johntr.com/ இச்சமயத்தில்தான் மேடைப் பேச்சு பழக்கமானது. புலவர் சத்தியராசன் அவர்கள் எழுதிக் கொடுத்து நான் மனனம் செய்து வாசித்ததுதான் முதல் பேச்சு..
ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர்தான் எமது கையெழுத்தையே மாற்றியவர். அவர் எங்கள் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த பின்னர்தான் பள்ளியின் நிலையே மாறியது. சிறந்த ஒழுக்கம், நல்ல கல்வி என்று மாணவர்களை மாற்றியவர். அவரது பெயர் திருமதி. ஜூலியட் டெய்சி கஸ்தூரிபாய். நான் செய்த புண்ணியம் அவர் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்தியதுதான். மிகவும் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர்.
நடுநிலைப் பள்ளி கடந்து மேல்நிலைப் பள்ளி (தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி, முதலூர்) செல்லும்போதுதான் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. காரணம் முனைவர். கட்டளை கைலாசம் அவர்கள். தமிழாராய்ச்சி செய்து வந்த இவர்தாம் தமிழார்வத்தை என் மீது ஊட்டினார். தமிழ்ச் செய்யுள்களுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்களாலேயே தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. மேலும் மெர்சி என்றொரு தமிழாசிரியரும் தமது கல்லூரிப் பருவங்கள் பற்றிய வர்ணணைகளோடு தமிழ்க் கற்றுத் தருவார்.. "தம்பிகளா.. இந்தப் பாடலை நான் குற்றாலம் கல்லூரியில படிக்கும் போது படிச்சதுடா.. பாருங்க.. எவ்ளோ அழகா இருக்கு.." என்ற முன்னுரையோடு அவர் ஆரம்பிக்கும்போதே ஆர்வம் பிறக்கும். அச்சமயம் எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு. சௌந்தர் ராஜன் மறக்க இயலாதவர். அடிமுட்டாள்களும் அவரிடம் பயின்றால் நன்றாக பயிலும் மாணவனாகி விடுவான். ஆங்கில ஆசிரியரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவரது பெயர் திரு. ஜாண்சன் சுவாமிதாஸ். ஆனால் பெரும்பாலும் யாருக்கும் அவர் பெயரே தெரியாது. எல்லோரும் அவரை "இங்கிலிஷ் சார்" என்றுதான் அழைப்பார்கள். முதலூரில் அனைவருக்கும் பழக்கமானவர். பாடம் நடத்தும் போது அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை உதாரணம் கொடுப்பது அவரது தனித் தன்மை.. "ரீல் விடுறாரு" என்று நண்பர்கள் கிண்டல் செய்யும் போதும் அவரது பாணி அனைவருக்கும் பிடிக்கும். அவரது மனைவிதான் எங்களுக்குக் கணிதவியல் ஆசிரியர். கணித வகுப்பில் செய்யும் தவறுகளுக்கு, ஆங்கில வகுப்பில் தண்டனை உண்டு. எமது தந்தையாருக்கு நெருக்கமானவர் என்பதால், மிகுந்த பாசத்தோடு இருப்பார். ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒன்பதாவது வகுப்பு. முதல் மாதத் தேர்வு முடிந்தது. விடைத்தாள்கள் இன்னமும் திருத்தப் படவில்லை. ஆங்கில ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். " என்னப்பா.. எல்லோரும் அந்த பொயெம் கரெக்டா எழுதிருக்கீங்களா? யாராவது தப்பா எழுதியிருந்தா இப்பவே சொல்லிருங்க.. இல்லன்னா பேப்பர் தரும்போது அடி பயங்கரமா விழும்.." என்றார். யாரும் எழவில்லை.. நான் ஒரே ஒரு இடத்தில் மட்டும் எழுத்துப் பிழையாக எழுதியிருந்ததால் நான் எழுந்துவிட்டேன். அருகே அழைத்து குனியச்செய்து முதுகில் ஒரு அறை விட்டார். அமைதியாக இருந்துவிட்டேன்.. ஆனால் விடைத்தாள்கள் வழங்கும்போதுதான் தெரிந்தது. யாருமே சரியாக எழுதாதது. மற்ற மாணவர்கள் யாரும் முதலில் எழும்பாததற்குக் காரணம் அப்போதுதான் புரிந்தது. (இருமுறை அடி வாங்க வேண்டுமா என்ற எண்ணம்தான்) பல வருடங்கள் கழித்த பின்னர் நெல்லை ஊசிக்கோபுரம் அருகிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல்வராக மாறுதல் பெற்றார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த 9 மற்றும் 10ம் வகுப்பில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் இன்றும் மறக்க இயலாத வண்ணம் உள்ளன. அவற்றைப் பிந்தைய பதிவுகளில் எழுதுகிறேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போதுதான் புதிய தலைமை ஆசிரியர் வந்தார். திரு. நெல்சன் மாணிக்கராஜ் டேனியேல். பள்ளி முன்னேற்றத்திற்காகவும், மாணவர் நலனுக்காகவும் பல விடயங்களைச் செய்தவர். எங்களுக்கு ஆங்கிலப் பயிற்சிக்காக திருச்செந்தூரிலிருந்து பச்சை வேட்டி பால்சாமி என்ற சாமியாரை அழைத்து வந்து சிறப்புப் பயிற்சி அளித்தார். அந்த சாமியார் என்னைக் "கந்தசாமி .. நீதான் என் சொந்த சாமி.." என்று அழைத்த நிகழ்வு இன்னமும் நீங்காத நினைவாக உள்ளது.
பல்வேறு காரணங்களால் அந்தப் பள்ளியில் பத்தாவது வகுப்புக்கு மேல் தொடர இயலவில்லை. பதினொன்றாம் வகுப்பிற்காக நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். தமிழாசிரியர் ஸ்டீபன் என் தமிழார்வத்தை வள்ர்த்தார். புது மாணவன் என்பதால் கடைசி இருக்கையில்தான் இடம் கிடைத்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளையின்போது அதிகமான மாணவர்கள் வகுப்பில் இருப்பார்கள். கணிதவியல் பிரிவு மாணவர்களாகிய நாங்கள், அறிவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் விவசாய பிரிவு மாணவர்கள். கிட்டத்தட்ட 75 முதல் 80 மாணவர்கள் உண்டு. அனைவரையும் கண்டித்துப் பாடம் எடுப்பது என்பது சற்றே சிரமமான செயல்தான் என்றாலும் அவர் மிகச்சிறந்த முறையில் பாடம் எடுப்பார். உரைநடை பாடத்தின் போது யாரையாவது எழுந்து வாசிக்கச் சொல்வார். நான் அந்த வாய்ப்புக்காக ஏங்குவேன். முதல்முறை என்னை வாசிக்கச் சொல்லும்போது ஏற்ற இறக்கங்களோடு வாசித்ததால் வாரம் ஒருமுறையாவது எனக்கு வாய்ப்பு தருவார். மேலும் வெளியூர் பள்ளிகளில் நிகழும் போட்டிகளுக்கு எம்மை அழைத்துச்செல்வார். கடைசி இருக்கையில் இருப்பதால் மாணவர்கள் எம்மை வாசிக்க விடுவதே இல்லை.. கிச்சளம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும் நன்றாக வாசித்து விடுவேன். ஆங்கில ஆசிரியர் திரு. தனபால்.. நல்ல நண்பராகப் பழகும் எண்ணம் கொண்டவர்.. காதலித்து மணமுடித்தவர். ஆனால் பள்ளியிறுதி நாளில் அவர் தந்த அறிவுரை "தம்பிகளா.. லவ் மேரேஜ் மட்டும் வேண்டவே வேண்டாம்" என்பதுதான். இயற்பியல் ஆசிரியர் முனைவர். வில்லியம் தர்மராஜா மிகவும் கண்டிப்பானவர். ஆனால் நட்பாகப் பயிலக்கூடியவர். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று நினைத்து நாம் சிரித்து விட்டால் அடி விழும்.."என்னடா பாடம் நடத்தும் போது சிரிக்கறே" என்று.. கோபமாக இருக்கிறார் என்று நினைத்து அமைதியாக இருந்தால் "ஏம்ப்பா எங்கள எல்லாம் பார்த்தா கொரங்கு மாதி இருக்கா. கொஞ்சம் சிரிச்ச முகத்தோடு இருந்தா என்ன?" என்பார். வேதியியல் ஆசிரியர் திரு. ஜோசப் ஜெபராஜ் தற்சமயம் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். திருமணத்திற்கு நேரில் வரவில்லை. வாழ்த்து அனுப்பியிருந்தார். பதின்மர் வயது மாணவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து அவர்தான். தவறான வாழ்க்கை.. அதனால் ஏற்படும் சீரழிவுகள். ஒழுக்கமான வாழ்க்கை.. இவைதான் இவர் அதிகமாக கற்றுத்தரும் பாடங்கள். நீ நன்றாகப் படிக்கிறாயோ இல்லையோ.. ஒழுக்கமானவனாக இரு என்பதுதான் இவரது பாடம். தாவரவியல் ஆசிரியர் திரு. ஜெயதாஸ் விலங்கியல் ஆசிரியர் திரு. நித்தியானந்த ராஜ் இவர்களும் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர்.
கல்லூரிப் பேராசிரியர்களைப் பற்றிய பதிவு இன்னொருமுறை இடுகிறேன்.. கொஞ்சம் வழவழ கொழகொழதான் ஆனாலும் இதைப் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு நன்றி.. எனக்குக் கற்றுத்தந்து ஆளாக்கிய என் தெய்வங்களை நினைவு கூறச்செய்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.
குருவே பிரம்மா..
குருவே விஷ்ணு
குருவே மகேஸ்வரன்
குருவே பரப் பிரம்மா.
அந்த குருவை நான் வணங்குகிறேன்.....
நன்றி

கருத்துகள் இல்லை: