புதன், ஆகஸ்ட் 04, 2010

நாடோடிப் பயணங்கள்.

நாடோடிப் பயணங்கள்.
- மு. கந்தசாமி நாகராஜன்
"எலே. மாயாண்டி ... போயி நம்ம செல்லப்பா ஆசாரிய நான் வரச்சொன்னேன்னு சொல்லி கூட்டிட்டு வா. " உரத்த குரலில் மாயாண்டியை ஏவினார் அய்யாதுரை நாடார். அவர்தான் அந்தத் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர். அவர் வீட்டு முற்றத்தில் கைகட்டி ஒருவன் காத்திருந்தான். "என்னப்பா. நம்ம ஊருக்குள்ள வந்து குடிசைய போட்டுருக்கீங்க. ஒரு வார்த்த நம்ம கிட்ட சொல்லனும்ங்க்றது தெரியாத உனக்கு? உம பேரு என்ன?"
"அய்யா. எம்பேரு சொடலை... நாங்க செந்தியாத்தாரத்துல குடிசை போட்டு இருந்தொமுங்க.. நேத்து ராத்திரி அங்கன ஒரு பய குடிச்சிட்டு வந்து ஒரே சண்டை. பெண்டு பிள்ளையளோட எங்க போறதுன்னு தெரியாம அப்படியே இங்க வந்தோமுங்க.. மன்னிச்சிருங்க.. இன்னைக்கு காலி பன்னிர்றோம்.." அவன் குரல் உடைந்து போய் இருந்தது.
"பயப்படாதல.... நம்ம ஊருக்கு தஞ்சங்கேட்டு வந்த பயலுவள நாம ஆதரிச்சித்தான் அப்பியாசம். பயப்படாம இரு. நீங்க எல்லாம் என்ன வேலை பாக்கறீங்க..?" ஆறுதலோடு அவனைக் கேட்டார் அய்யாத்துரை
"அய்யா. நாங்க எந்த வேல குடுத்தாலும் செய்வோம்... " நம்பிக்கையோடும் கண்களில் எதிர்பார்ப்புகளோடும் நின்றான் சுடலை.
"சரி சரி.. நம்ம தோட்டத்துல நாளைல இருந்து வேலைக்கு வந்துருங்க... மொத்தம் எத்தன பேருப்பா இருக்கீங்க? " வினவினார் அய்யாத்துரை.
"அய்யா மொத்தம் அஞ்சி குடும்பம்."
"சரி சரி... நம்ம செல்லப்பா ஆசாரியா வேற வரச்சொல்லி இருக்கேன். அவரு கிட்டயும் யாரவது வேலைக்குப போகலாம். சரியா??"
உறுதியளித்த அய்யாத்துரை அதை நிறைவேற்றவும் செய்தார்.. ஊர் எல்லையிலுள்ள புறம்போக்கு நிலத்தில் அவர்கள் போட்டிருந்த குடிசைகளைப் பஞ்சாயத்தில் சொல்லி அவர்களுக்கே பட்டா போட்டுத தருவதாகவும் கூறினார்.
நாடோடிகளாய்த் திரிந்த அந்தக் கூட்டமும் அந்த கிராமத்திலேயே தங்கி விட்டது. யாசகம் பெற்று மட்டுமே உண்டு வந்த அவர்கள் மிகச்சிறந்த திறமைசாலிகளாக வந்து விட்டனர்.
சிலர் தச்சு வேலைக்கும் சிலர் தோட்ட வேலைகளுக்கும் பழக்கமாகி விட்டனர்.
குழந்தைகளும் அந்த ஊர் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டன.
திடிரென ஒரு நாள்..
"ஏட்டி நாடாச்சி எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதி இருக்கு.. நம்ம வைத்தியர வரச்சொல்றியா?" என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்தார் அய்யாத்துரை.
"அய்யய்யோ... நான் என்ன செய்வேன்... இருங்க.. கூட்டிட்டு வாறேன்" ஓடினாள் அவரது சக தரிமினி தங்க நாடாச்சி.
ஆனால் விதியின் கணக்கு வேறு விதமாக இருந்தது. வைத்தியர் சௌந்திரபாண்டி நாடார் வருவதற்குள் அய்யாத்துரை நாடாரின் உயிர் பிரிந்து விட்டிருந்தது..
ஊரே ஓன்று கூடி அழுதது.
சுடலையோ கிழே விழுந்து புரண்டான்.
அய்யாத்துரை நாடாரின் இறுதிச் சடங்கும் நிறைவேறி முடிந்தது...
இடைத் தேர்தலும் வந்தது..
வாக்கு கேட்க வந்த ஆளுங்கட்சி வேட்பாளர் வெள்ளையாவிடம் ஓடிச்சென்று அய்யாத்துரை நாடார் சொன்னது போல் தங்களுக்கு அந்த நிலத்தைப் பட்டா போட்டுத தர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான் சுடலை. "கண்டிப்பா செஞ்சிருவோம்..." சிரித்த படியே வாக்கு கொடுத்தார் வெள்ளையா.
தேர்தல் முடிந்தது. எதிர்பார்த்தபடியே ஆளுங்கட்சியே வென்றது. வெள்ளையா சட்டமன்ற உறுப்பினரானார்.
நன்றி தெரிவிக்க வந்தபோது ஏற்கெனவே கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்களித்தார்.
அடுத்த நாள்...
"ஏலே யாருலே இங்க இருக்கா... இந்த இடத்துல வெளாட்டு தெடல் கட்டணும்னு அரசாங்கம் உத்தரவு போட்டுருக்கு.. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள எல்லோரும் குடிசைய காலி பண்ணனும் சொல்லிட்டேன்" பஞ்சாயத்து கிளார்க் வந்து சொன்னபோது அங்கு ஆண்கள் யாரும் இருக்கவில்லை. சுடலையின் மனைவி மாடத்தி செய்தியைச சொல்ல தோட்டத்துக்கு ஓடினாள். விபரம் அறிந்து சுடலை அங்கே வருவதற்குள் கிளார்க் போய்விட்டிருந்தார்.
உடனே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நோக்கி ஓடினான் சுடலை.
"அய்யா. நம்ம பஞ்சயாது கிளார்க் வந்து இடத்த காலி பண்ணனும்னு சொல்றாங்கய்யா.. பட்டா போட்ட்டுத்தாறேன்னு சொன்னியளே..." அழாத குறையாக வெள்ளையா முன் நின்றான் சுடலை.
"சொன்னேன்பா. ஆனா பாரு... அந்த ஊரு பயலுவ எல்லாம் வெளாட்டு தெடல் வேணும்னு மனு கொடுத்தாணுவ ... அந்த ஊருல அந்த எடத்த விட்டா வேற எடத்துக்கு நான் எங்க போறது.. சொன்ன மாதிரி காலி பண்ணிட்டு போய்டு..." என்றபடியே வேறு பக்கம் திரும்பினார்.
"பிச்சக் காரப் பயலுவளுக்கு எடத்த குடுத்தா அந்த அய்யாத்துரைய சொல்லணும்.. இப்ப பாரு கண்ட கண்ட ________ பயலுவ எல்லாம் எம். எல். ஏ ஆபிசு வரைக்கும் வர்றானுவ. " தனது உதவியாளரிடம் அவர் பேசியது சுடலையின் காதுகளிலும் விழுந்தது..
அவரை எதிர்த்துப் போராடும் தெம்பு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்த படியே குடிசை நோக்கி நடந்தான் சுடலை..
"சரி நாளைக்கு விடிஞ்சா பாத்துக்கிடலாம் பிள்ள " என்று மாடத்தியிடம் கூறிவிட்டு தோட்டத்துக்குப போய்விட்டான். மாலை வந்த பின்னர் ஊருக்குள் சென்று யாராரிடமோ மன்றாடிப் பார்த்தான்.. ஆனால் யாருக்கும் வெள்ளையாவை எதிர்க்கத் துணிவில்லை. மேலும் அங்கு விளையாட்டுத திடல் வருவது அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் அளித்தது.
துணைக்கு யாருமில்லாது என்ன செய்வதென்று அறியாது உறங்கிப் போனான்.
அதிகாலையே குரல் கேட்டது..
"யாரப்பா அங்கே டெண்டுக்குள்ளே... சீக்கிரம் காலி பண்ணுங்க. இந்த இடத்த சமப் படுத்தனும்" ஒரு மிகப்பெரிய வாகனத்திலிருந்து ஒருவன் குரல் கொடுத்தான். சத்தம் கேட்டு வெளி வந்து பார்த்த சுடலை அதிர்ந்தான்.
என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதிர்க்கவும் பலமில்லை. "சரி. போய்டுவோம்.. நமக்கு ஊர் ஊராப போற அந்த வாழ்கைதான் சரி... இதெல்லாம் ரொம்ப பெரிய மனுசங்கலுக்கானதுதான்... வாங்க போவோம்..." என்று கூறியபடியே தனது கூட்டத்தாருடன் குடிசைகளை விட்டு வெளியே வந்து குடிசைகளைப பிரிக்கத் துவங்கினான்.
தள்ளு வண்டியில் தனது கூட்டத்தாரோடு "சரி போவோம் வாருங்க" என்றழைத்த படியே முன்சென்ற அவன் பின்னே தொடர்ந்தது அந்த நாடோடிக் கூட்டம்.
யார் வீட்டிலிருந்தோ அந்த வானொலிச் செய்தி சுடலையின் காதுகளில் விழுந்தது..
"இலங்கையில் போர் காரணமாக தமிழகத்துக்கு அகதிகள் மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு 40 பேர் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு மண்டபம் முகாமில் தகுந்த வசதிகள் செய்து தரப்படுமென்று தமிழக முதல்வர் உறுதியளித்தார்"
சுடலையை அந்த செய்தி நிமிரச் செய்தது.
"பாரு மாடத்தி.. எனகென இருந்து வாரவியளுக்கேல்லாம் எல்லாம் கொடுக்காவ. ஆனா இந்த மண்ணுல பொறந்த நமக்கு ஊர் ஊற சுத்துற பொழப்புதான். நாமளும் அங்க கொழும்புலையே பொறந்துருக்கலாம். அப்பயாச்சும் இந்த அரசாங்கம் நம்ம பாத்துருக்கும்" என்ற ஏக்கத்தோடு சொன்ன சுடலைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள் மாடத்தி..
என்ன நினைத்து என்ன பேசினாலும் அந்த நாடோடிக் கூட்டங்களின் பயனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகும் நாள் என்றும் வரப் போவதில்லை..

கருத்துகள் இல்லை: