ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கிறிஸ்துமஸ் கதை நண்பர்களுக்காக....

நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..
எமது பள்ளி நாட்களில் பகிரப்பட்ட கதையொன்றை நண்பர்களுக்காக இவ்விடத்துப் பகிர்கின்றேன்..
ஒரு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய நாடகத்துக்காக பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது..
இயேசுவின் பிறப்பு பற்றிய சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும் என்றாலும், என்றென்றும் தெவிட்டாத அவ்வின்பத் தேனை மீண்டும் ஒருமுறை சுவைப்போமே...
யோசேப்பு என்ற தச்சருக்கும், மரியாள் என்ற கன்னிகைக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது... இச்சமயத்தில் இறைவனுடைய திருவருளால் கன்னிமரியாள் கர்ப்பமுற்றாள். திருமணமாகாமல் தான் கர்ப்பமுற்ற காரணம் குறித்து பயந்த சமயத்தில் இறைத்தூதன் அவள் முன் தோன்றி அவளைத் தேற்றினார். தூய ஆவியானவரின் திருவருளால் அவள் கர்ப்பமுற்றதாகவும், இறைமைந்தனே அவளுக்குப் பிறக்கப் போகதாகவும் அறிவித்தார்.
இதை அறியாத யோசேப்பு, மரியாளைத் திருமணம் செய்யாமல் தள்ளிவிடலாம் என்று எண்ணுகையில் இறைத்தூதர் அவருக்கும் வெளிப்பட்டு அவரையும் தேற்றினார். யோசேப்பும் கன்னி மரியாளை ஏற்றுக் கொண்டார்.
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வேளையில் தங்கள் சொந்த ஊருக்கு அவர்கள் இருவரும் பயணப்பட்டனர்.
அந்த மார்கழி மாத பனியிரவில் அவர்கள் பயணம் செய்யும் போது மரியாளுக்கு பிரசவ வலி எடுத்தது... சத்திரங்கள் எதிலும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. கடைசியாக தேவ மைந்தன் ஓர் மாட்டுக் கொட்டிலில் மரியாளுக்கு மகனாகப் பிறந்தார்.... தேவதூதர்கள் அவர் பிறந்ததை அனைவருக்கும் அறிவிக்க, அனைவரும் கொண்டாடினர்..
இந்த சம்பவத்தை நாடகமாக அரங்கேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டிருந்தது... அந்த கிறிஸ்துமஸ் மாலை வேளையும் வந்தது...
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது...
மரியாள் கருவுற்றது, தேவதூதன் தேற்றியது.. யோசேப்பு அவளை ஏற்றுக் கொண்டது... இப்படி எல்லாம் நல்லபடியாக நடந்தது..
யோசேப்பு மரியாளை அழைத்துக்கொண்டு பயணம் செய்கையில் அவளுக்குப் பிரசவ வலி எடுத்தது...
யோசேப்பு அவளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சத்திரத்துக்குச் சென்றார்.. இடமில்லை என திருப்பி அனுப்பி விட்டனர்..
மீண்டும் இன்னொரு சத்திரத்துக்குச் சென்றார்.
"ஐயா.. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி.. அவளுக்குப் பிரசவ வலி வந்து விட்டது. தயவு செய்து இடம் தாருங்கள்"
"இடமில்லை ஐயா... "
"ஐயா.அவள் வலியில் துடிக்கிறாள். கொஞ்சம் கருணை காட்டுங்கள்... "
"உண்மையிலேயே இடமில்லை ஐயா...தயவு செய்து போய்விடுங்கள்"
"ஐயா நிறைமாத கர்ப்பிணி ஐயா.. பிரசவ நேரம் வேறு.. எங்கும் இடம் இல்லை.. எங்கே ஐயா போவோம் நாங்கள்... கொஞ்சம் இடம் தாருங்கள்.."
"இடம் இல்லை ஐயா.. போய்விடுங்கள்..."
"சரி ஐயா. நாங்கள் போகிறோம்.." என்று அவர்கள் திரும்பினார்கள்..
இந்த இடத்தில்தான் நம் கதை முக்கியத்துவம் பெறுகின்றது...
சத்திரக்காரனாக நடித்த மாணவன், யோசேப்பாக நடித்தவனையும், மரியாளாக நடித்தவனையும் கண்டு கலங்கி விட்டான்... மிகவும் உணர்ச்சிவசப் பட்டவனாய்....
"ஐயா கொஞ்சம் நில்லுங்க..."
"என்ன ஐயா..?"
"இந்த சத்திரத்தில் இடம் இல்லை.... ஆனால் எனக்கென்று கொடுக்கப் பட்ட அறையை நான் உங்களுக்குத் தருகின்றேன்.. வாருங்கள்" என்று அவன் அழைக்கவும், நாடகத்தில் நடித்தவர்களும், அங்கிருந்த அத்தனை பார்வையாளர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்....
யாருமே எதிர்பார்க்காத காட்சி அது...
எங்கள் ஆசிரியர் கூறியது இதுதான்.. "யாரும் எதிர்பாராத வேளையில் கதையில் அதைப் போன்ற முடிவெடுத்த மாணவன் முடிவு பார்வையாளர்களைப் பொறுத்தவரை தவறுதான்... ஆயினும், கிறிஸ்துவின் உண்மையான பிறப்பு என்பது அதைப் போன்ற நல்லிதயங்களில்தான் ஜொலிக்கின்றது... அவன் மனதில் இரக்கம் உண்டானது... கதையை மறந்தான்.. தன்னிலை மறந்தான்... அவர்களை அழைத்தான்... மனிதர்களுக்கு நல்வழி காட்டிட இரக்கம் கொண்டுதான் இறைமகன் பூமியில் அவதரித்தார்.... இதைப்போன்ற நல்லிதயங்கள் அனைத்திலும் அவர் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்... எளியோருக்கு இரங்குவதும், உண்மையுள்ளவர்களாக வாழ்வதும் மட்டுமே இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதன் பொருள்... எனவே.. அன்றைக்கு அந்த மாணவன் தன் அறையை இயேசுவின் பெற்றோருக்காகக் கொடுத்த சம்பவத்தைப் போல், நாமும் நம் மனத்தில் இயேசுவுக்கும் அவரது கொள்கைகளுக்கும் இடம் கொடுப்போம்"...
நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. நன்றி ..

1 கருத்து:

Unknown சொன்னது…

இராமகிருஷ்ணாபுரம்.ந.வினோத்(RKPN.VINOTH)
இக்கதையின் மூலம் மாணவன் கதையை உள் வாங்கி தன் அன்பை வெளிப்படுத்துகிறான் நன்றி